ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சச்சார் பரிந்துரை அமலாக்கம் எப்போது?




                                                                                          இப்பூவுலகில் 130 கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கு எனக் கொள்ளலாம். இவர்களில் மூன்றில் ஒரு   பகுதியினர், தெற்கு ஆசியாவிலும், மேற்கு ஐரோப்பாவில் 60 லட்சம் இஸ்லாமியர்களும் இருப்பதாக அறியமுடிகிறது. அமெரிக்காவில் உள்ள 30 லட்சம் இஸ்லாமியர்களில், 10 ஆயிரம் பேர் அந்நாட்டு ராணுவத்தில் பணிபுரிகின்றனர். இந்தியாவில், 13 சதம் மக்கள் இஸ்லாமியர்கள். இத் தகவல்களுக்கான பொருள், தெற்காசியா, மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் மற்ற சமூக மக்களுடன் கலந்து, உறவாடித் தான், இஸ்லாமிய மக்கள்  வாழ்ந்து வருகின்றனர். அதே போல் இஸ்லாம் சட்டங்கள் அமலில் இருக்கும், மேற்கு ஆசியாப் பகுதியில், இஸ்லாமியர் அல்லாத இதர பகுதி மக்களுடன், உரிமைகளை பகிர்ந்து தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், ஒரு இஸ்லாமிய அடையாளம் கொண்ட இளைஞனைப் பார்க்கிற மனிதன், ஊடகங்கள் சித்தரித்த மன உணர்வுடன், ஒரு தீவிரவாதியாகவே பார்க்கிறோம். நியாயமா?

தி ரேஜ் ஆஃப் இஸ்லாம், தி குளோபல் இண்டிஃபடா, தி ரூட்ஸ் ஆஃப் முஸ்லீம் ரேஜ், தி டேகர் ஆஃப் இஸ்லாம், தி ஹோலி கில்லர்ஸ் ஆஃப் இஸ்லாம், ஆகிய நூல்களும், தி ஸ்வோர்ட் ஆஃப் இஸ்லாம் என்ற தொலைக் காட்சிப் படமும், இஸ்லாத்திற்கு எதிரான மேலோட்டமான, ஆய்ந்தறியப் படாத, கருத்துக்களைக் கொண்டுள்ளன. மேற்கு உலகம் அமெரிக்கா தலைமையில் மேற்கொண்டுள்ள இந்தப் பிரச்சாரம், இந்திய மண்ணிலும், பரவலாகக் காணப் படுகிறது. மற்றவர்களை விடவும், இந்தியாவில் கூடுதலாக இந்து வகுப்பு வாதம் வளர்ந்திருப்பதும், மேற்படி உணர்வை பாலூட்டி வளர்க்க உதவி வருகிறது, என்பதை ஏ.ஜி. நூரணி தெரிவிக்கிறார்.

2011ல், நடந்த உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலை விளக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் கே.எஸ். சுதர்சன், ஆர்கனைசர் இதழில் எழுதுகிற போது, இதுகாறும் வரலாறு நமக்கு உணர்த்துவது, என்னவெனில், இஸ்லாமியர்கள் சகிப்புத் தன்மைக்கு இடமற்ற சண்டைப் பாதையிலேயே, பயணித்ததால்தான், ரத்த ஆறுகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள், என்று குறிப்பிடுகிறார். இந்த விளக்கங்கள் தான் இன்று இந்தியாவில் உள்ள சாதாரண, நடுத்தர மக்களின் பொது புத்தியில் உறைந்திருக்கிறது. இதன் விளைவே, நாம் தீவிரவாதி கண்ணாடி அணிந்து இஸ்லாமியரை நோக்கிடக் காரணமாக அமைந்து விட்டது.
கடந்த காலங்களில் இந்துத்துவா அமைப்புகள், இஸ்லாமியர் குடும்பக் கட்டுபாடு செய்து கொள்வதில்லை, எனவே 10 ஆண்டுகளில் இஸ்லாமியர் எண்ணிக்கை தீவிரமாக உயர்ந்து, இந்துக்கள் பின்தங்குவர் என்றனர். 

இஸ்லாமியருக்கு, வேலை, கல்வி போன்றவற்றில் கொடுக்கிற முன்னுரிமை, ஆபத்தானதாக முடியும். வெளி நாடுகளில் இருந்து வரும் பண உதவிகளால், இஸ்லாமியர் வேகமான வளர்ச்சி பெற்று வருகின்றனர். என்றெல்லாம் பிரச்சாரம் மேற்கொண்டனர். 2006ம் ஆண்டு நவம்பர் 17 அன்று, நீதிபதி. ராஜேந்தர் சிங் சச்சார் தலைமையிலான 7 பேரைக் கொண்ட குழு, ஒன்னரை ஆண்டு காலம் ஆய்வு மேற்கொண்டு முன்வைத்த அறிக்கை மூலம் தான் மேற்படிப் பிரச்சாரம் தவறு என்று புரிந்து கொண்டோம்.
ஏற்கனவே இந்தியாவில் முஸ்லீம் மக்களின் மேம்பாடு குறித்து வழிகாட்ட பல குழுக்கள் அமைக்கப் பட்டன. 1870ம் ஆண்டில் வைசிராய் ஆக இருந்த, லார்ட் மியோ சர் வில்லியம் ஹண்டர் என்பவர் தலைமையில் குழு அமைத்து, பலபரிந்துரைகளை கண்டடைந்தனர். 1935ம் ஆண்டில், மான்ஸ் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் என்பவர், தலைமையில் அமைக்கப் பட்ட குழு, தாழ்த்தப் பட்ட ஏழை இந்துக்களுக்கு உள்ள சலுகை போல், இஸ்லாமியர்களில் பின்தங்கியவர்களுக்கும், இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கென சட்டம் வேண்டும் என குறிப்பிட்டார். பின்னர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போதும், நீதிபதி கோபால் சிங் என்பவர் தலைமையில் குழு அமைக்கப் பட்டு, சில பரிந்துரைகள் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்காக வழங்கப் பட்டது. அதன் பிறகே சச்சார் குழு 2005 ல் அமைக்கப் பட்டது.

மேற்படிக் குழுக்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள முஸ்லீம் மக்கள் மிகவும் சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின்  தங்கி உள்ளனர், என்பதை ஆணித் தரமாக தெரிவித்துள்ளது. சச்சார் குழு, இந்திய இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை நிலைபாடுகளை ஆய்வு செய்து மூன்று தளங்களாகப் பிரித்துள்ளது. 1. முஸ்லீம் மக்களின் அடையாளம் சம்மந்தப் பட்டது. 2. இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பு சம்மந்தப் பட்டது. 3. சமவாய்ப்பு பற்றியது
.
அடையாளத்தைப் பொருத்தளவில், இஸ்லாமியர்கள் ஒட்டு மொத்தமாகவே, தேச விரோதிகள் என்ற முத்திரை குத்தப் படுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி, உள்ளிட்டவை ஒருதலைப் பட்சமாக செய்தி வெளியிடுகின்றன. மறுபுறம் இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக, பல சலுகைகளையும், வாய்ப்புகளையும் வாரி, வாரி வழங்கி வருகிறது என்ற குற்றச்சாட்டும் சுமத்தப் படுகிறது.

இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்த வகையில், அவர்களின் குடியிருப்புப் பகுதியில், காவல் துறை அத்துமீறி நடந்து கொள்கிறது. தாங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப் பட்டு, அவமானப் படுத்தப் படுவோமோ, என்ற அச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையிலும் தான் இந்திய இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர், என சச்சார் கமிட்டி தெரிவிக்கிறது. இதை இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் புரிந்து கொள்ளலாம். மகராஷ்ட்ராவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 10.6% ஆனால், சிறையில் இருக்கும் முஸ்லீம்கள் 40.6%. குஜராத்தில் 9.6% முஸ்லீம்கள் வாழ்கின்றனர். ஆனால் சிறையில் 25% உள்ளனர். தமிழ் நாட்டிலோ 5.6% தான் வசிக்கின்றனர். ஆனால் சிறையிலோ 9.6% பேர் உள்ளனர். இவர்களில் பலர் எந்த விசாரணையும் செய்யப் படாமல் நீண்ட நாட்களாக உள்ளனர், என்பதையும் சச்சார் குழு தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் காவல் துறையில் பணி புரிவோர் குறித்த விவரம் சேகரித்ததில் இருந்து, அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமியருக்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. தமிழ் நாட்டு முஸ்லீம்களில் இருந்து, 0.11% நபர்கள் மட்டுமே காவலர்களாக உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகக் காவல்துறையில் 20% முஸ்லீம்கள் இருந்துள்ளனர், என்பதையும் தெரிவிக்கின்றனர். அரசுத் துறைகளில் இஸ்லாமியர்களின் பங்கேற்பு குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டியுள்ளது .ஐ.ஏ.எஸ் 3%, ஐ.எஃப்.எஸ் 1.8%, ஐ.பிஎஸ் 4%, நீதிதுறை 7.8, சுகாதாரத் துறை 4.4%, போக்குவரத்துத் துறை 6.5%, உள்துறை 7.3%, கல்வித்துறை 6.5%, பொதுத்துறை 7.2%. இது இஸ்லாமிய மக்களின் பங்கேற்பு, மக்கள் தொகை சதவீதத்தை விடவும் குறைவாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய அளவில் கல்வி அறிவு பெற்றோர் 74.5% என்றால், இஸ்லாமியர் எண்ணிக்கை 59.1%தான். ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி ஆகிய உயர்கல்வி பெறுவோர், மிகக் குறைவு.

மேற்படி விவரங்களை மத்திய அரசு நியமித்த சச்சார் குழு கண்டறிந்து தெளிவு படுத்தியுள்ளது. மேலும் அக் குழு தெரிவித்த சிபாரிசுகளை அமலாக்குவது குறித்து மத்திய அரசு தீவிர செயல் பாடுகளைத் துவக்க வேண்டும்.

அரசின் மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி, ஆந்திரா போல் உள்ளாட்சி மன்றங்களில் வாய்ப்பு, தனித் தொகுதி ஏற்பாடுகள், கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, மதரசா பட்டங்களை அங்கீகரித்து சிவில் தேர்வுகளுக்கான அனுமதி, உள்ளிட்ட பரிந்துறைகள் உடனடியாக அமலாக்கப் படவேண்டும்.

இது குறித்த விவாதம் நடைபெறுகிற போது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில் 25.25% மக்கள் இஸ்லாமியர்களாக இருந்த போதிலும், கல்வி, வேலை வாய்ப்பில் போதுமான நடவடிக்கை எடுக்க வில்லை, என குற்றம் சுமத்துகின்றனர். இதில் ஒரு பகுதி உண்மை என கம்யூனிஸ்டுகளே ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், நில விநியோகத்தில் 25.6% இஸ்லாமியர்கள் பலனடைந்துள்ளனர், என்பதைக் காணத் தவறுகின்றனர். 2009 டிசம்பரில், நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர், 2010 ஜனவரியில் கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு என அறிவித்த மாநிலம் அன்றைய கம்யூனிஸ்டுகள் தலைமையிலான இடது முன்னனி ஆட்சியே.

எனவே சச்சார் குழு பரிந்துரைகளைப் படிப்பதும், இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை குறித்து அறிவதும், இந்தியராய்ப் பிறந்த குடி மக்களின் கடமை. அப்போது தான் இந்து வகுப்பு வாதிகளின் பிரச்சாரத்தில் உள்ள விஷத்தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும்.   


பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களுக்கான துணைத்திட்டம் உண்மையில் பயணளிக்க!!


                                                                       உலகில் பல நாடுகளில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மட்டும் தான் உண்டு. ஆனால் இந்தியாவில் சமூக ரீதியான ஏற்றத் தாழ்வுகளும் இனைந்து தேசம் முழுவதும், நீக்கமற நிறைந்திருக்கிறது. இது பொருளாதார ஏற்றத் தாழ்வை நீட்டிக்கச் செய்யும் அளவிற்கு வலுவான, கருத்து ஆதிக்கத்தை கொண்டதாகவும் செயல் பட்டு வருகிறது. சமூக சமத்துவத்திற்காக, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்திற்கான  போராட்டம் தீவிரமாகி ஆங்கிலேய ஆட்சியாளர்களை நிர்பந்தித்ததால், 1950 வரையிலும் அமலானது. வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம், சரியல்ல என்ற நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, பிற்படுத்தப் பட்டவர், தலித் மற்றும் பழங்குடி என இட ஒதுக்கீடு முறை 1950 முதல் அமலாகி வருகிறது. வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், தாழ்த்தப் பட்டோர், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர், பிராமணர் அல்லாதார், என்ற பிரிவினர், இட ஒதுக்கீட்டுக்கு வரையறை செய்யப்பட்டு, பலன் பெற ஏற்பாடு இருந்தது. ஏனென்றால் அன்றைய தினம் தனியார் துறையின் ஆதிக்கம் குறைவு
.
இன்று இட ஒதுக்கீடு முறை அமலில் இருந்தும், தனியார் துறையின் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கும் தன்மையை, மத்திய அரசின் கொள்கைகள் உருவாக்கி விட்டதால், பலன் இல்லாது, ஏட்டளவிலான சட்டமாக மட்டும் இடஒதுக்கீடு இருக்கிறது. எனவே சமூக சமத்துவம் ஏற்பட வேண்டும், என்ற நோக்கத்தில் உருவாக்கப் பட்ட இடஒதுக்கீடு பலன் தரவில்லை. இந்திய ஆட்சியாளர்கள், இது போன்ற ஒதுக்கீடுகள் பலன் தராது என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் 1979 காலத்திலேயே, இடஒதுக்கீட்டுக்கும் மேலாக, தலித் மற்றும் பழங்குடி மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக, ஆட்சியாளர்கள், சிறப்பு உட்கூறுத் திட்டம் என்பதை அறிமுகம் செய்துள்ளனர். 1979ல் தனியார் மயம், உலகமயமாக்கல் தன்மையை எட்டியிருக்காத காலம். இருந்தபோதும், அரசு, உட்கூறுத் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும், சாதிய சுரண்டல் முறையினால் ஏற்பட்ட, பொருளாதார இடைவெளி, குறைவதற்காக அமலான இடஒதுக்கீடு  போதுமான பயனளிக்காத நிலையில் தான், உட்கூறுத் திட்டத்தின் மூலம், மேற்படி சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உட்கூறுத் திட்டத்தை, மத்திய அரசு முன் மொழிந்தது. இந்நோக்கம் நிறைவேற தலித் மற்றும் பழங்குடி மக்கள் எண்ணிக்கை சதத்திற்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்யப் படுவதன் மூலமே, மேற்படி இடைவெளியைக் குறைக்க முடியும் என்பதையும், அரசுக்கு பரிந்துறைத்த குழு தெளிவு படுத்தியிருந்தது. ஆனால் கடந்த 32 ஆண்டுகளில் ஒரு பட்ஜெட்டிலும் மக்கள் தொகை கணக்கின் படி  மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாநில அரசும்  2009 வரை மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதன் காரணமாக, மத்திய அரசு, சுமார் ரூ நாலரை லட்சம் கோடி ரூபாயை, 32 ஆண்டுகளில் குறைவாக ஒதுக்கியுள்ளது. அதேபோல் மாநில அரசு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக ஒதுகீடு செய்துள்ளது.

ஒதுக்கப் பட்ட நிதியும், வேறு காரணங்களுக்காக திருப்பி விடப் படுவது வெகு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. மிகச் சமீபத்திய உதாரணம், மத்திய அரசு ஒதுக்கிய நிதியை காமன் வெல்த் போட்டி ஏற்பாடுகளுக்கு திசை திருப்பினர். மாநில அரசு இலவச டிவி வழங்கிய வகையில் இத் துணைத்திட்ட நிதியை திருப்பி விட்டது. கடந்த காலங்களில் இது போல் எண்ணற்ற திசை திருப்பல்களுக்கு தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான துணைத் திட்ட நிதி ஆளாகியுள்ளது. இச்செயல்கள் காரணமாக அரசு தனது நோக்கம் எனக் குறிப்பிட்ட சமூக இடைவெளியைக் குறைக்க, திட்டமிட்டு மறுக்கிறது என்பது புலனாகும்.
நியாயமற்ற இந்த செயலைக் கேள்வி கேட்கிற போது, பிரித்துப் பார்க்க முடியாத (indivisible) இனங்களின் அடிப்படையில் மேற்படித்திட்ட நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டும் என ஆட்சியாளர் தரப்பு கூறுகிறது. பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டம், என்ற பெயருக்கும், அது உருவாக்கிய நெறிமுறைகளுக்கும் முரணாக அரசின் செயல் பாடு அமைந்துள்ளது. பிரித்துப் பார்க்க கூடாது என்றால் சிறப்பு உட்கூறு திட்டம் எதற்கு?. அதாவது ”துணைத்திட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கப் படும் நிதி, பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடி குடும்பங்கள் அல்லது தனிநபர்களின் முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அரசின் அனைத்துத் துறைகளிலும் இதற்கான திட்டங்கள் வகுக்கப் படவேண்டும்”, என்ற அடிப்படை நெறியை அரசு மீறுகிறது. அரசு உருவாக்கிய நெறிமுறைகளை அரசே மீறினால், யார் கேள்வி கேட்பது?

சில தனி நபர்களும், ஒரு சில இயக்கங்களும் இது குறித்து தெரிவித்து வந்த அதிருப்தியை, அரசு கண்டு கொள்ளாத நிலையில் தான், தீண்டாமை ஒழிப்பு முன்னனி தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது. கடந்த 2010 அக்டோபரில் துணைத்திட்ட நிதி ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற அதே நேரத்தில், ஒதுக்கப் பட்ட நிதி, நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் செயல் படுத்தப் பட வேண்டும், என்ற அறிவுறுத்தலுடன், தீண்டாமை ஒழிப்பு முன்னனி பயிலரங்கம் நடத்தியது. அதில் பல சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னனியில் அங்கம் வகிக்கின்ற சி.ஐ.டி.யு உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. அதிலிருந்து, கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயத்துறை, பண்பாட்டுத்துறை, அடிப்படைத் தேவைகள் ஆகிய ஐந்து தலைப்புகள் மீதான விவாதத்தினை உருவாக்கி, சில கோரிக்கைகளை உருவாக்கியது.

கல்வி பெற்றோர் கணக்குப் படி, ஆதிதிராவிடர், 63.19% என்றும், பழங்குடியினர் 41.5% என்றும் உள்ளது. ஆனால், மொத்த எழுத்தறிவு பெற்றோர் சதவிகிதம், 73.45%, இதனுடன் ஒப்பிடுகையில், தலித் மற்றும் பழங்குடி மக்கள் பின் தங்கி இருப்பதைத் தெளிவாகக் காணமுடியும். எனவே அரசு துணைத்திட்ட நிதியை, ஆதி திராவிட மாணவர்களுக்கான பிரத்யேக முன்பருவப் பள்ளிகளை உருவாக்கப் பயன் படுத்துவதன் மூலம் பள்ளி செல்லும் எண்ணிக்கையை உயர்த்தலாம். 75% ஆதி திராவிட மாணவர்கள் சேர்க்கப் படும் வகையில் புதிய நவோதயா, கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை மத்திய அரசு துவக்க வேண்டும். AIEEE, GATE, GRE போன்ற தேர்வுகளை தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள், எழுதி வெற்றி பெறுவதற்கு உதவியாக, மாவட்டம் தோறும் பயிற்சி மையங்களை உருவாக்க மேற்படி நிதியைப் பயன்படுத்த வேண்டும்.
சிட்கோ, டான்சிட்கோ போன்ற தொழிற்பேட்டைகளில் 20% தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்க வேண்டும். தலித் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில், தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோ கடன் வரம்பு காலநிலைக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வேலை வாய்ப்புத் துறை அமலாக்க வேண்டும்.

1980 களுக்குப் பின் நிலவுடைமை விகிதாச்சாரத்தில், பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களின் நிலவுடைமை விகிதாச்சாரம் குறைந்துள்ளது. பஞ்சமி நில உடமை போன்றவை கை மாறியது காரணமாக இருக்கலாம். எனவே அந்த நிலங்களை மீட்க வேண்டும். புதியதாக நிலம் வாங்கி தலித் மற்றும் பழங்குடி இன மக்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அறுவடை இயந்திரம், சிறு டிராக்டர்கள் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வாங்க மேற்படி நிதி ஒதுக்கீட்டைப் பயன் படுத்த வேண்டும்.

பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களின் வரலாறு சார்ந்த ஆய்வுகளுக்கு இந்நிதியைப் பயன்படுத்த வேண்டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டம், குடிமை உரிமைகள், துணைத் திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வைத், தலித் மற்றும் பழங்குடி மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை, கருத்தரங்குகளைத் திட்டமிட்டு நடத்த அரசு மேற்படி நிதியைப் பயன் படுத்த வேண்டும்.

தலித் மற்றும் பழங்குடி மக்கள் குடியிருப்புகளில் கழிவறை, குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். புதிய தொகுப்பு வீடுகள் கட்டப் படவெண்டும். குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய வீடுகளின் மராமத்துப் பணிகளுக்கு, மேற்படி நிதியை அரசு பயன் படுத்த வேண்டும்.

இத்தகைய செயல்களை மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொள்கிற போது, பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களுக்கும், இதர் பகுதி மக்களுக்குமான சமூக இடைவெளியைக் குறைக்க முடியும் என தீண்டாமை ஒழிப்பு முன்னனி பரிந்துறைக்கிறது. இந்த பரிந்துறைகளை முன்வைக்கிற விதத்தில் நடத்திய, சிறப்பு மாநாடு, கடந்த ஆகஸ்ட் 10, 2011 தேதியில் சிறப்புற நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தலைவர்கள், பி.வி. ராகவலு, அ. சவுந்தரராஜன், பி.சம்பத், உள்ளிட்ட தலைவர்களும், கிறிஸ்துதாஸ்காந்தி, சிவகாமி, மணிவண்ணன் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பங்கெடுத்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 26 ஆகஸ்ட் அன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டமும், தொடர் பிரச்சாரங்களும், செயல்களும் திட்டமிடப் பட்டுள்ளன.   

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தொழிற் சங்க உரிமை


 தொழிற்சங்க அங்கீகாரச்சட்டத்தின் அவசியம்
                                                                                         
தமிழகத்தில் தொழிற் சங்க அங்கீகாரம் குறித்த சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொழிற் சங்க இயக்கங்கள், குறிப்பாக சி.ஐ.டி.யு முன் வைத்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், இடது சாரிகள் தவிர, வேறு யாரும்  கவலை கொள்ள வில்லை. கடந்த தி.மு.க ஆட்சியில், தொழிற் சங்க அங்கீகாரச் சட்டம் கொணர வேண்டும், என்பதை வலியுறுத்தி சட்ட மன்றத்தில் இடது சாரிகள் கருப்பு பாட்ஜ் அணிந்து சென்றனர். விவாதத்திற்கு அனுமதி மறுக்கப் பட்ட போது, வெளிநடப்பும் செய்தனர். மேலும் அந்நேரத்தில் சி.ஐ.டி.யு தலைவர்கள் சிறையிலும் அடைக்கப் பட்டனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின், முதல்வர். ஜெ. ஜெயலலிதாவைச் சந்திந்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் தமிழக சமூக பொருளாதார முன்னேற்றம் குறித்து எழுத்து பூர்வமான அறிக்கையை அளித்த நேரத்திலும், தொழிற் சங்க அங்கீகார சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்
.
இப்போது அவசியம் என்ன?

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. இன்னும் வர இருக்கின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மூலதனம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் குவிக்கப் பட்டு வருகிறது. இதன் மூலம் சில லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்பதை மறுக்கவில்லை. ஆனால் உரிமைகளுடனான வேலை இல்லை. சுயமரியாதையை நேசிக்கும் எந்த ஒரு இளைஞனும், தொடர்ந்து மேற்படி பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய முடிவதில்லை. பணி நேரத்தில், விபத்துகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில், அம்பிகா என்ற பெண் நோக்கியா நிறுவனத்தில் இறந்ததும், போஸ் ஹூண்டாய் நிறுவனத்தில் தமிழ் செல்வன் என்ற இளைஞன் இறந்ததும், மிக சாதாரண செய்திகளாக சுருங்கிக் கொண்டு இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தில், கை துண்டிக்கப் பட்டு பணி செய்ய இயலாத இளைஞர்கள் பலர். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில், விஷ வாயு கசிவு ஏற்பட்டதில் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அநேகமாக அனைத்துத் தொழிற்சாலையிலும் கேண்டீனில் வழங்கப் படும் உணவு, ருசிப்பதில்லை என்பது கூட பரவாயில்லை. பூச்சிகள், புழுக்கள் உணவு பொருள்களில் மிதப்பது வாடிக்கை. அதனால் வாந்தி, பேதியாவது சகஜம்.

எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது எனச் சட்டம் இருந்தும், 12 மணி நேரம் வேலை வாங்கப் பட்ட கொடூரம் பி.ஒய்.டி என்ற நிறுவனத்தில் இருந்தது. தொழிலாளி ஒருவர் 240 நாள்கள் வேலை செய்தால், அவரை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். ஆனால் 4 ஆண்டுகள் கடந்த பிறகும், நிரந்தரம் செய்யப் படாமல், ஒப்பந்தம், பயிற்சி, என்ற பெயரில் வேலை வாங்கப் படும் தொழிலாளர்கள் ஏராளம். கப்பரோ என்ற தொழிற்சாலையில், தொழிலாளி ஏதேனும் ஒரு விபத்தை சந்தித்தால், உடணடியாக நிர்வாகம் தொழிலாளியினுடைய கவனக்குறைவே இதற்குக் காரணம், என்று தொழிலாளி மீதே பழி சுமத்தி, நோட்டீஸ் கொடுக்கப் படுகிறது. சிவசக்தி வுட் ஒர்க்ஸ் என்ற உள்நாட்டு முதலாளி நடத்தும் நிறுவனத்தில், பணி நேரத்தில் கைகள் பாதிப்படைவது இயல்பு. ஆனால் இ.எஸ்.ஐ இல்லை. பிடிக்கப் பட்ட பணம் இ.எஸ்.ஐ யில் செலுத்தப் படாததால், சிகிச்சைக்கு செல்ல முடிவதில்லை. பிராவிடண்ட் ஃபண்ட் பிடித்தம் செய்யப் படும். ஆனால் செலுத்தப் படாது. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை.

இதுபோன்ற பல்வேறு தொழிலாளர் விரோத அணுகு முறையை, வளர்ச்சி பெற்ற நாடுகள் என்று அழைக்கப் படும், அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டிஷ், தென் கொரியா, தைவான், பின்லாந்து, இத்தாலி என்று, மூன்று கண்டங்களில் இருந்து வருகை தந்துள்ள, நிறுவனங்கள் அமலாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியத் தொழிற்சங்க மையம் மேற்படித் தொழிலாளர்கள் மத்தியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல் பட்டதன் காரணமாகத் தான், தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள் அம்பலப்படுத்தப் பட்டது. மனித நாகரீக வளர்ச்சிக்கு அடையாளமாக, மனிதர்கள், புளூ கிராஸ் (வீட்டு விலங்குகளின் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்) அமைப்பை உருவாக்கியதையும், அரசுகள் இயற்றிய வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தையும், பெருமையாக கூறிக்கொள்வர். இது தவறில்லை. விலங்கிற்குக் கூட துன்பம் விளைவிக்கக் கூடாது, எனக் கருதும் சமூகத்தில், தொழிலாளர்களான மனிதர்களின் உரிமைகள் குறித்து பேச முன் வராதது ஏன்?. அப்படி பேசுகிற தொழிற் சங்கங்களை அங்கீகரித்துப் பேச மறுப்பது ஏன்?

கூட்டு பேர உரிமை எழுத்தளவில்தானா?

சென்னைத் தொழிலாளர் சங்கம் 1918 ஏப்ரல் 27 அன்று, திரு.வி.க, பி.பி.வாடியா போன்றோரால் உருவாக்கப்பட்டது. அன்று தேசிய போராட்டம் ஆங்கிலேயருக்கு எதிராக இருந்தது ஒரு காரணம். ஆனால் பிரதான காரணம் தொழிலாளர், மிகக் கொடிய அடக்கு முறையை எதிர் கொண்டனர். விலை உயர்வும், நோய் தாக்குதல்களும் அதிகரித்து இருந்த காலம். நிறுவனங்கள் சம்பள உயர்வுக்கும், உரிமைகளை வழங்குவதற்கும் தயாராக இல்லாததால், தொழிற் சங்கம் அமைப்பதும், அதன் கீழ் பல ஆயிரம் தொழிலாளர் அணிவகுப்பதும், தவிர்க்க இயலாததாகிப் போனது, என்று சென்னைப் பெரு நகர தொழிற்சங்க வரலாறு புத்தகம் தெரிவிக்கிறது.

இன்று நாம் விடுதலை பெற்ற நாட்டில் வாழ்ந்து வருகிறோம். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்ததை விடவும் பலமடங்கு அதிகமாக, எதிர்த்துப் போராட முடியும். அதற்கான சட்டங்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. ஆனாலும் அவைகள் பல்லில்லாத பிராணிகளைப் போல், பன்னாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட்டு நிற்பதைக் காணமுடியும். இது இந்திய சட்டத்திற்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல. இந்திய அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் இனைந்து சர்வ தேச சட்டங்களுக்கு செய்யும் துரோகமும் கூட. 1891லேயே தீவிரமாகப் பேசப்பட்ட கூட்டு பேர உரிமை, இன்று மறுக்கப் படுவது, இந்திய சமூகம், பன்னாட்டு நிறுவனங்களின், லாப வேட்கைக்காக, பின்னோக்கி பயணிப்பதற்கு சமமாகும். இப்படிப்பட்ட பின்னடைவை எதிர் கொண்டு, பன்னாட்டு முதலாளிகளை வரவேற்பது, தொழில் வளர்ச்சிக்கு அல்ல. மாறாக 2ஜி போன்ற முறைகேடுகளுக்கு, என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர், என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை..

சர்வ தேச மனித உரிமைகள் அமைப்பின் பிரிவு 23ன் படி, ஒரு தொழிலாளர், தான் வேலை செய்யும் நிறுவனத்தில், பணிபுரியும் தொழிலாளர்களுடன் இனைந்து சங்கம் அமைப்பதற்கும், அதன் மூலம் நிறுவன உரிமையாளருடன், கூட்டு பேர உரிமையின் அடிப்படையில், தனது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கும் உரிமை உண்டு.  பி.எம். டபுள்யு கார் கம்பெனி, தனது நாட்டில் தொழிற்சங்கத்தை நிராகரிக்கவில்லை. தொழிற் சங்கம் செயல்படுவது தவறில்லை, என்றும் அதன் தலைவர், அமெரிக்காவில் பேட்டி அளிக்கும் போது குறிப்பிட்டிருக்கிறார் (BMW defies union over America). அமெரிக்க கார்த் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் டான் ஸ்டில்மேன் பேசுகிற போது, அமெரிக்காவில் 95 சதமான கார் தொழிற்சாலைகளில் தொழிற் சங்கம் அமைக்கப் பட்டு, கூட்டு பேர உரிமைக்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது, என்று கூறுகிறார்.

நியூஸ் லெட்டர் ஃபார் அமெரிக்கன் ஆட்டோ ஒர்க்கர்ஸ் என்ற இனைய தளம், இரண்டாம் உலகப் போர் முடிந்த தருணத்தில், ஐரோப்பாக் கண்டத்தில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த, தொழிற் சங்க நடவடிக்கைகள் அங்கீகரிக்கப் படவேண்டும், என ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளை, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதற்காக, அமெரிக்க தொழிற் சங்கத் தலைவர்களை ஐரோப்பாக் கண்டத்திற்கு அனுப்பி, ஐரோப்பாவில் தொழிற் சஙக நடவடிக்கைகளை தீவிரப் படுத்த உதவியதாக, தெரிவிக்கிறது. அன்றைய கம்யூனிஸ்ட் அரசுகள் மீது அமெரிக்காவிற்கு இருந்த அச்சம் பிரதான காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று இந்தியாவில் உள்ள ஃபோர்டு நிறுவனம், தொழிற்சங்கம் கூடாது என்கிறது. கூடவே தனக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் காம்ஸ்டார் போன்ற நிறுவனங்களும், தொழிற் சங்கங்களை அங்கீகரிக்கக் கூடாது, என நிபந்தனை விதிக்கிறது. இப்போது தொழிற் சங்கங்கள் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் வளருவது, தனது மூலதனத்திற்கு ஆபத்து என அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகிறது.

நாடுகள்          கூட்டு பேர உரிமைக்கு ஆட்பட்ட      பொது சுகாதாரம்
                   தொழிலாளர்கள் சதம்                  அனுபவிக்கும் மக்கள்

ஆஸ்திரேலியா             50%                               100%
பிரேசில்                    36%                               80%
கனடா                      32.6%                             100%
ஃப்ரான்ஸ்                   95%                              99.9%
ஜப்பான்                     23.5%                             100%
தென் ஆப்பிரிக்கா            42%                              80%
ஸ்பெயின்                   81%                              99.8%
ஸ்வீடன்                    92%                              100%
பிரிட்டன்                    35%                              100%
அமெரிக்கா                  22%                               25%

இந்தியா குறித்து நாம் அறிந்தது, 8% தொழிலாளர் தான் அணிதிரட்டப் பட்டத் தொழிலில் உள்ளனர் என்பதாகும். அதிலும் கூட்டு பேர உரிமை உடையோர், 4% கூட இருக்காது என்பதும், நாம் அறிந்ததே. அதேபோல் அரசு பொது சுகாதாரத் திட்டத்தை அணுபவிக்கும் இந்தியர்கள், என்ற விவரத்தை பொருத்தளவில் 20%க்கு குறையாமல், 75% க்கு அதிகமாகாமல், இருக்கும் என காண கிடைக்கும் விவரம், அரசே சொல்வதற்கு வெட்கப்படுகிறதோ எனத் தோன்றுகிறது.

மேற்படி விவரம் மூலம், மருத்துவச் செலவிற்கே இந்தியாவில் பெரும் தொகையை செலவிட வேண்டியவர்களாகத் தொழிலாளர்கள் உள்ளனர். தனியார் துறையில் அணிதிரட்டப் பட்டத் தொழிலாளர்கள், மாதச் சம்பளம் பெறுவோர் எனக் கருதப் பட்டாலும், வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருப்பதில்லை. அதேபோல் வீட்டு வாடகைக்கும், குழந்தைகளின் கல்விக்கும், பெரும் தொகையை செலவிட வேண்டியவர்களாகவும், மேற்படித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த அடிப்படைத் தேவைகளை கூட்டு பேர உரிமை மூலமே பெறமுடியும். அதற்கு தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்தை கேரளத்தில் உள்ளதை முன் மாதிரியாகக் கொண்டு, மாநில அரசு நடப்புக் கூட்டத் தொடரிலேயே இயற்ற வேண்டும்.   

நன்றி: தீக்கதிர்