சனி, 16 ஆகஸ்ட், 2014


வாக்களிப்பது ஏன்? யாருக்கு?

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த கால நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றும் கட்சிகளின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. உலகில் மிகப் பெரிய மக்கள் தொகை ஜனநாயக முறைப்படி, பல கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்புகிற உறுப்பினர்களின் செயல்பாடு அறிந்து கொள்ளப் பட வேண்டியுள்ளது. ஏராளமான இளம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். ஆனால் என்ன செய்தார்கள் என்ற கேள்விகள் நம்மை அரித்துக் கொண்டே இருக்கிறது. மிளகுப் பொடி ஸ்பிரே மாபெரும் செய்தியாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஏராளமான மசோதாக்கள் நிறைவேற்றப் படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளன. விலைவாசி உயர்வை விட, தங்கள் மக்கள் பிரச்சனைகளை விட, திசை திருப்பும் அரசியலில் தான் அதிக கவணம் செலுத்தியுள்ளனர், போன்ற விவரங்கள், நம்மை மேலும் சித்தித்து செயல் படுத்துவதாக அமையும்.

பேசாத உறுப்பினர்கள்:

எங்கள் உறுப்பினர் என்ன பேசினார் என்பதை பொது மக்கள் விவாதிப்பதில்லை. ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை மக்கள் ஊருக்குள் விடவில்லை என்பது செய்தி. ஆனால் எதற்காக அனுமதி மறுக்கப் பட்டனர், என்பதில் இருந்தே விவாதம் தேவை. 15வது நாடாளுமன்றத்தில் 60 எம்.பிக்கள் மக்களவையிலும், 35 எம்.பிக்கள் மாநிலங்களவையிலும் கடந்த 5 வருடங்களில், எந்த ஒரு விவாதத்திலும் பங்கேற்க வில்லை. ஒருவேளை அவர்களின் கட்சிகள் அவர்களுக்கு வாய்ப்பு தராமல் இருந்திருக்கலாம். ஆனாலும் தொகுதி பிரச்சனை குறித்த கேள்விகள் மூலம், வேறு விதமான தலையீடுகள் மூலம் கேள்வி எழுப்பி இருக்கலாம். 
ஏன் செய்யவில்லை? என்ற கேள்வியை பி.ஆர்.எஸ் என்ற ஆய்வு நிறுவனம் கேள்வி எழுப்பி உள்ளது.

10 சீனியர் உறுப்பினர்கள் உதடுகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உடகார்ந்துள்ளனர். எப்போதாவது பேசுவது என்ற பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களின் பெயர்களைப் பார்க்கிற போது, தங்களின் அந்தஸ்திற்கு இவ்வளவு பேசினால் போது என்ற முடிவெடுத்ததாக புரிந்து கொள்ள முடியும்.  ராகுல் காந்தி தொகுதி வளர்ச்சி குறித்து ஒரு கேள்வி கூட க்கட்டதில்லை. ஆனால் எப்போதாவது பேசி உள்ளார். சோனியா காந்தி சில வாழ்த்துக்களைப் தெரிவிக்கும் நேரங்களில் மட்டும் பேசியதுண்டு, 2004ல் தேசீய கிராமப் புற வேலை உறுதி சட்டம் உருவாக்கப் பட்டபோது பேசியிருக்கிறார். அதன் பின் அவருடைய பங்களிப்பு மசோதாக்கள் சார்ந்தோ, பிரச்சனைகள் சார்ந்தோ இருந்ததில்லை. எல்.கே அத்வானி மூத்த உறுப்பினர், இவரும் எப்போதாவது தான் பேசுவார். அவருடைய அனுபவத்திற்கான பிரதிபலிப்பு நாடாளுமன்றத்தில் இருந்ததில்லை, என்பதை பி.ஆர்.எஸ் ஆய்வு மையம் குறிப்பிடுகிறது.

நிறைவேற்றப் பட்ட மசோதாக்கள்:

நாடாளுமன்றம் பல மசோதாக்களை முன்மொழிந்து சட்டமாக்கும் பணியை செய்யும் அமைப்பு. 15வது நாடாளுமன்றம், 165 மசோதாக்கலைத் தாக்கல் செய்துள்ளது. இதில் 126 நிலுவையில் உள்ளது. தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல். இதில் 72 மக்களவையில் நிலுவையில் உள்ளது. காலம் முடிந்ததால் இனி பயனில்லை. 72க்கும் மரணமே கதி. மாநிலங்களவையில் 54 நிலுவையில் உள்ளது. மகளிருக்கு நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் 33 சத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேறியது.

தனியாருக்குத் தாரைவார்க்கும் மசோதாக்கள் விரைந்து அமலாகி உள்ளன. உதாரணத்திற்கு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, வங்கித்துறை, காப்பீட்டுத் துறைகளில் தனியார் பங்குகள் சதவீதம் உயர்வு. போன்றவை குறிப்பிடத்தக்கவை. 14வது மக்களவையில் இடது சாரிகள் வலுவான எண்ணிக்கையில் 64 ஆக இருந்த போது மேற்படி மசோதக்கள் சபைக்கு வரும் துணிச்சல் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் பெறப்பட்ட போது, எண்ணெய் விலையை, எண்ணெய் நிறுவனங்களே தீர்மாணித்துக் கொள்ளலாம் என்ற முடிவை, விலைக்கு வாங்கிய உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றினர். 1987 முதல் 27 வருடங்களாக இந்திய மருத்துவக் கவுன்சில் குறித்த மசோதா நிலுவையில் இருக்கிறது. இதுபற்றி அரசுகளுக்கும், உறுப்பினர்களுக்கும் கவலை இல்லை. மேலே குறீப்பிட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் என்பது ஆளும் வர்க்க நலனில் இருந்து பிரதிபலித்து இருப்பதை நன்கு உணர முடியும்.

கோடீஸ்வர உறுப்பினர்கள்:

இந்திய நாடாளுமன்றத்தில் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களில், 180 நபர்கள் பில்லியனர்ஸ் என்ற அழைக்கப் படுகிற மகா கோடீஸ்வரர்கள். உ.பி இந்தியாவின் மிக வறுமையான மாநிலமாக கருதப் படுகிறது. ஆனால் அங்கிருந்து 52 கோடீஸ்வரர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மகராஷ்ட்ராவில் இருந்து 37 நபர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்தும் திமுக உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இடம் பெற்று உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 138 கோடீஸ்வரர்களும், பாஜகவில் 58 கோடீஸ்வரர்களும் பகுஜன் சமாஜ் கட்சியில் 13, சமாஜ்வாடி 14 என்ற தன்மையில் கோடீஸ்வரர்களுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளன. சமீபத்தில் தேர்வு செய்யப் பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 நபர்கள் கோடீஸ்வரர்கள் என்பது கூடுதச் செய்தி.

இத்தகைய உறுப்பினர்கள் ஒருபோது மக்கள் பிரச்சனைகளைகளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. 14வது மக்களவையில் 2010 இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, கூட்டம் நடத்த முடியாத் சூழலில் 95 கோடி இழப்பு ஏற்பட்டது. 15 நாள்கள் கூட்டம் 10 நிமிடங்களுக்கு மேல் நடந்ததில்லை. 1.76 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு குறித்த பிரச்சனையில் அமைச்சர் ராஜா ராஜினாமா செய்த பின்னர் தான் ஓய்ந்தது. இதை அமைச்சரவை முன்னதாகவே முடிவெடுத்து இருக்க முடியும். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் தயவிற்காக நடைபெறவில்லை. மக்கள் பணம் வீனானது. பல லட்சம் கோடிகளுக்கு பெரு முதலாளிகளுக்கு வரி சலுகை அளிக்கும் ஆட்சியாளர்களுக்கு இந்த தொகை வீணாவது குறித்து எப்போது கவலை உருவாகப் போவதில்லை.

தெலுங்கானா பிரச்சனை குறித்து 2011, 2012, 2013, 2014 என பல கட்டங்களில் ஒரு நாளைக்கு 2 கோடி வீதம் 40க்கும் மேற்பட்ட நாட்கள் வீணடிக்கப் பட்டது. ஆனால் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதில் இத்தகைய வீரம் வெளிப்பட வில்லை. அரசு தன்னுடைய உறுதியை வெளிப்படுத்தியதில்லை. உதாரணத்திற்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப் பட்டதாகக் கூறப் படுகிறது. தெலுங்கானா மசோதாவின் போது மிளகுப் பொடி ஸ்பிரே செய்யும் அளவிற்கு எதிர்ப்பும், தரம் தாழ்ந்த அணுகுமுறையும் இருந்தாலும் காங்கிரஸ் அரசினால் மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக்க முடிந்தது. இந்த ஆளும் கட்சி உறுதியை ஏன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் வெளிப்படுத்த முடியவில்லை. மகளிருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது ஒட்டு மொத்த ஆளும் வர்க்க சிந்தனையின் வெளிப்பாடே.

இடதுசாரிகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்:

இப்போது உள்ள காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்று பாஜக கூட்டணி இருக்க முடியாது. 14 மற்றும் 15 ஆவது மக்களவைகளை எப்படி சரியாகக் காங்கிரஸ் பயன்படுத்தத் தவறியதோ அதே போல் 12 மற்றும் 13 வது மக்களவைகளை வீணடித்தது. குறிப்பாக 12 வது மக்களவையில் வெறும் 52 மசோதாக்கள் மாட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. அந்த அளவிற்கு வாஜ்பாய் தன் கூட்டணி கட்சிகளைத் தாஜா செய்து கொண்டிருந்தார். மேலும் பாஜகவின் கவணம் நாட்டை வகுப்புவாதமயமாக்குவது என்பதில் தான் இருந்தது. 13வது மக்களவையில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, குஜராத் கலவரம், ஒடிசாவில், பாதிரியார் மற்றும் குழந்தைகள் எரிக்கப்பட்டது. குஜராத்தில் தேவாலயங்கள் எரிக்கப்பட்டது. மத்தியப் பிரதெசத்தில் கன்னியாஸ்திரிகள், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியது. ஆகிய நிகழ்வுகள் ஏராளமான உதாரணங்கள் ஆகும்.

இந்தக் கலவரங்களுக்கு மத்தியில் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் துவக்கவும் நிலக்கரி தனியாருக்கு ஏலம் விடும் சட்டமும் அமைதியாக நிறைவேறியது. எனவே கொள்கை அளவில் பாஜக கூட்டணியோ அல்லது தனி ஆட்சியோ மாற்று மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு அணிகளையும் தோற்கடிப்பது தான், இன்று பிரதானக் கடமையாக இருக்க முடியும்.

அத்தகைய பொருத்தமான மாற்றாக இடது மற்றும் ஜனநாயக சக்திகளைத் தேர்வு செய்ய முடியும். ஒன்று நாடாளுமன்றத்தில், மகளிர் இட ஒதுக்கீடு நிறைவேற்றத்திற்காகத் தொடர் போராட்டத்தை நடத்துபவர்கள். இரண்டு, விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோ டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமை மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்காக முயற்சிப்பவர்கள். இந்திய நாடாளுமன்றப் பணிகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்ட பின்னரும், யாதொரு இடது சாரி உறுப்பினரும் ஊழல் குற்றச் சாட்டிற்கோ, சொத்து சேர்த்த குற்றச்சாட்டிற்கோ ஆளானதில்லை. இந்திய மக்களின் பொதுச் சொத்துக்களான, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்த உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில், இடது சாரிகளே ஈடுபட முடியும். எனவே இடது சாரிகளுக்கு வாக்களிப்பதே சாலப் பொருத்தம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக