வியாழன், 12 நவம்பர், 2015


வேலைநிறுத்தம் நோக்கி……

நம்பினார் கெடுவதில்லை மீண்டும் ஒருமுறை
பொய்த்துப் போனது.
மன்மோகன் பாராட்டிய வார்த்தைகளில்
மோடி உற்சாகம்…. முதலாளிகள் கொண்டாட்டம்….
காட்சி மாறாத ஆட்சி மாற்றம்.

சுதந்திர தின உரையில்
அடிமைகளின் வார்த்தைகளாய்..
நிலம் பறிப்பு.. தொழிலாளர் சட்டங்கள் முடக்கம்.
மேக் இன் இந்தியா கூடாரத்திற்குள்..
பரங்கியரின் ஆதிக்கம்.

நினைவில் வந்து போகும் வரலாறு…
ஒடுக்கப்பட்டது சிப்பாய் புரட்சி..
சிலமாதங்களில்..
சவக்குழியில் முடிந்தது
கோட்டைகளின் கலகம்..
தூக்கு மேடைகளில் முடிந்தது
பாளையக்காரர்களின் போர்….
ஆனாலும் அடங்கவில்லை விடுதலை வேட்கை.

ஆதிவாசிகளின் கலகம்..  விவசாயிகள் ஏந்திய ஆயுதம்..
தொழிலாளர்களின் கிளர்ச்சி… மாலுமிகளின் போர்…
இளைஞர்களின் எழுச்சி… எங்கும் .
ஒரே முழக்கம் விடுதலை.
அஸ்தமமானது சாம்ராஜ்ஜியம்.. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்.

போர்களில்லை இப்போது
காலனியாதிக்கம் இல்லை.
ஆனாலும் ஒப்படைக்கிறோம் நிலத்தை…
தாரைவார்க்கிறோம் தண்ணீரை…
பாதுகாப்பு, வங்கி, காப்பீடு, ரயில்வே
அனைத்தும் அந்நியர் கையில்
பெயர் …  மேக் இன் இந்தியா..

கேஸ் மான்யம் வேண்டாம் – நீ
சிறந்த குடிமகன்…
இடஒதுக்கீடு வேண்டாம் – நீ
இந்துத்துவாவின் தலைமகன்…
எதிர்த்து விட்டாலோ – நீ
பாகிஸ்தான் காரன்.
நவகாலனியாதிக்கத்திற்காக…
மோடியின் புதிய உற்பத்திகள்.

வளர்ச்சியின் வரப்பிரசாதம்..
விவசாயி தூக்குக் கயிறுடனும்..
டீ விற்றவர் 10 லட்சம் ரூபாய் சட்டையுடனும்…
எல்லாம் முதலாளிகளின் செயல்…
நம்புங்கள் வளர்ச்சி…. வளர்ச்சி…..

காந்தியும் இயேசுவும் சொன்னதாக
ஆசிரியர் சொன்னார்..
ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு – என
மாணவர் கேட்டார்..
அடித்த பின் சவப்பெட்டியைக் காட்டினால் என்ன செய்ய?
பொறுமையாய் சொன்னார்
புதிய ஆசிரியர்   போராடு…  என்று….
நடந்து சென்ற விவசாயி சொன்னார்
அது தான் உன் வரலாறு என்று..
தெருமுனையில் விளம்பரம் சொன்னது
தொழிற்சங்கம் வழிகாட்டுவதாக…
வெற்றிக்கான பயணம்…… வேலைநிறுத்தம் நோக்கி….

எஸ். கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக