செவ்வாய், 2 மே, 2023

மே தின கட்டுரைகள் 2


சவால்களை முறியடிக்க முடியும்

 ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. அது பௌதீக சக்தியாக ஆட்கொண்டு, எளியோரை வழி நடத்துவது, கருத்தியல் தளத்தில் அடையும் முன்னேற்றம் சார்ந்ததாகும். காரல் மார்க்ஸ் அத்தகைய கருத்தியல் பலத்தை, பாட்டாளி வர்க்கத்திற்கு அளித்துள்ளார். 1808 ல், பிலடெல்பியா நகரில் கட்டுமானத் தொழிலாளர்கள், தங்களின் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது, மார்க்ஸ் பிறந்திருக்கவில்லை. ஆனால் தாங்க முடியா பளுவை இறக்கி வைக்கும், ஆறுதலாக வேலை நேர குறைப்பை கருதுவதற்கும், சுரண்டலை தடுத்து, சமத்துவத்தை நோக்கி பயணிப்பதற்கான வழியாக வேலை நேரம் குறைக்கப்படுவதை பார்க்க வேண்டும். அவசிய உழைப்பு நேரம், தனக்காகவும், உபரி உழைப்பு நேரம் சமுதாயத்திற்காகவும் இருப்பதை, உறுதி செய்வது, உபரி உழைப்பு நேரத்தை தனியார் வசம் அல்லது, ஏகபோக பெருமுதலாளிகள் வசம் குவிப்பதற்கும் வேறு பாடு நிறைய இருக்கிறது, என்பதை காரல் மார்க்ஸ் தெளிவு படுத்துகிறார்.


1886 ல் சிக்காகோ வீதிகளில் போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது காவல்துறை கொடிய அடக்கு முறையை ஏவிவிட்டது. பலர் கொல்லப்பட்டனர். தலைவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி, 4 பேர், தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைசஸ், சாமுவேல், ஜார்ஜ் எங்கெல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அன்றைய ஜனநாயக சக்திகள் இந்த போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்திய அடிப்படையில், கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. மேற்படி தியாகிகளுக்கு தொழிலாளர்கள் நினைவுச்சின்னம் அமைக்கும் முன்னரே, காவல் துறை 1888 ல் மேற்படி சிக்காகோ வீதியில், ஹே மார்க்கட்டில் காவல் துறையினருக்கு, சிக்காகோ காவல்துறையினர்,  நினைவுச்சின்னம் வைத்தனர். 1889 ல் தான் தொழிலாளர்கள் இறந்த தொழிலாளர் நினைவாக நினைவு சின்னம் அமைத்தனர். மே தின தியாகிகளின் வரலாறு பேச,பேச, 1960 ல் ஹே மார்க்கட்டில் இருந்த காவலர்களுக்கான நினைவு சின்னம், அமெரிக்க மாணவர்களால் இடிக்கப்பட்டது, இப்போது அது காவல் அலுவலகத்திற்குள்ளேயே வைக்கபட்டுள்ளது. எனவே வரலாறு பேசப்படுவது, ஏதாவது ஒரு கட்டத்தில் பயன்படும்.


இன்றைய தலைமுறை அல்லது நவீன பாட்டாளி வர்க்கம், எட்டு மணிநேரம் வேலை நேரம் என்பதை, அரசு சட்டங்களால் நிலை நாட்டியது என புரிந்து கொள்கின்றனர். சட்டங்கள் உருவாக நடந்த போராட்டங்களையும், அடக்குமுறைகளையும், சிறை, சித்திரவதைகளையும், புரிந்து வினையாற்றுவதில்லை. அதையே முதலாளித்துவம் விரும்புகிறது. இந்த முதலாளித்துவ விருப்பதின் விளைவே, அன்மையில், பாஜக ஆட்சி வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்ததாகும். ஏற்கனவே உருவான எட்டு மணி நேரத்திற்கான சட்ட வழிகாட்டுதலின் வரலாற்றை அறிந்திருக்கும் தலைமுறையாக இன்றைய தலைமுறை இல்லாதது, முதலாளித்துவத்திற்கு சாதகமாக உள்ளது. டிரோன் கேமராக்கள் விரட்டும், விளையாட்டு வீரர்களை, நக்கலாக சித்தரிக்கும் ஊடகங்கள், 12 மணிநேரமாக வேலை நேரம் உயர்த்துவதை பெரிய செய்தியாக படம்பிடிக்கவோ, விவாதிக்கவோ செய்யவில்லை. 


தாராளமயத்தின் ஆதிக்கமும், வரலாற்று பின்னடைவும்:


வேலைநேரம் உலகத்தில் வளர்ந்த நாடுகள் என சொல்லிக்கொள்ளும் நாடுகள் அனைத்திலும், குறைக்கப்பட்டது. இதற்கு அழுத்தம் தந்தது, சோவியத் யூனியன் என்ற மகத்தான சோசலிஸ நாடு ஆகும். லெனின் தலைமையில் அரசமைத்த பாட்டாளி வர்க்கம், எட்டுமணி நேரம் ஒரு நாளைக்கு வேலை நேரம், என்பதை முதலில் சட்டமாக்கியது. அதன்பின்னர் தான் பிற நாடுகள் இவ்வாறுசட்டம் இயற்றின. அதன் பின் சோவியத் சோசலிச அரசு, வேலை நேரத்தை ஆறு மணிநேரமாக குறைத்தது, அதுவும் இதர முதலாளித்துவ நாடுகளுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. குறிப்பாக ஐ.எல்.ஓ என்ற சர்வ தேச தொழிலாளர் அமைப்பு, வாரம் 40 மணிநேரம் வேலைநேரம் என வழி காட்டியது. இதைத் தொடர்ந்தே பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் வேலைநேரத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. அவ்வாறு குறைக்கவில்லை எனில், தங்கள் நாட்டு இளைஞர்கள் சோசலிச சோவியத் யூனியனைப் போல் புரட்சி செய்வர், என்ற அச்சம் இருந்தது. எனவே வேலை நேர குறைப்புக்கு போராட்டம் ஒரு காரணம் எனில், கருத்தியல் ரீதியில் மாற்று அரசு ஒன்றின் இருப்பும் முக்கிய பங்கு அளித்தது.


சோசலிச சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறுண்டு, அரசியல் பின்னடைவை சந்தித்த நிகழ்வும், உலகை தாராளமய பொருளாதரக் கொள்கை மேலாதிக்கம் செய்வதும் ஒன்றாக நடந்தது. அநேகமாக 1990 க்குப் பின் தொழிலாளர் இயக்கம் பெரும் பான்மையான நாடுகளில் தங்களுக்கான புதிய சட்ட உரிமைகளைப் பெற முடியவில்லை. நிரந்தர வேலை வாய்ப்பே கேள்விக்கு உள்ளான நிலையில், வேலை நேர குறைப்புக்கான போராட்டங்களோ, வேலையின்மையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளோ, தாராளமய கொள்கை கொண்ட அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அமர்த்து பின் துரத்து போன்ற நிரந்தரமற்ற வேலைத் தன்மை, அவுட் சோர்சிங் என்ற அயல்பணி ஒப்படைப்பு போன்றவை அதிகரித்து, வேலையில் இருப்போரின் உரிமைகளை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கிறது, முதலாளித்துவம். இதன் தொடர்ச்சியாக அன்மையில் ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜெண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், தானியங்கி இயந்திரங்கள போன்றவையும் சவாலாக நவீன தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ளது.


மேலே குறிப்பிட்ட தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்தை, எதிர்க்க வேண்டிய மக்கள் அரசியல் ரீதியில் அல்லது வர்க்க ரீதியில் ஒன்று சேர சில தடைகள் முன்னுக்கு வருகின்றன. இதை நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஏற்கனவே இருக்கக் கூடிய சமூக முரண்பாடுகள் இக்காலத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கூடுதலாக வெளிப்படுகின்றன. குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சி இருந்தாலும், உழைப்பு சுரண்டல், சமூக சுரண்டலுக்கு பழகி போன ஆளும் வர்க்கம், தாராளமய காலத்தில், வேகமாக வளர்ச்சி பெற்றதும், தொழிலாளி வர்க்கத்திற்கு கடுமையான சவாலை உருவாக்கியுள்ளது.

சாதிரீதியில் அணி சேர்ந்து, 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் அடுத்த தலைமுறையை மதரீதியில் ஒருங்கிணைக்கும் பணிக்கு தாராளமய பொருளாதார கொள்கை உத்வேகம் அளிக்றது. 


இந்தியாவில் பாஜக “வளர்ச்சி” என்ற முழக்கத்தை முன்வைத்து வரலாறை பின்னோக்கி நகர்த்துகிறது. போராடி பெற்ற ஜனநாயக உரிமைகளையும், தொழிலாளர் உரிமைகளையும் மெல்ல பறித்து வருகிறது. கொரானா பொது முடக்க காலத்தை பயன்படுத்தி, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவது, ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம் தர மறுக்கும் நிர்வாகங்களை மறைமுகமாக ஆதரிப்பது போன்றவை உதாரணங்கள் ஆகும். கொரானா பாதிப்பிற்கான காரணத்தை அமெரிக்கா சீனா மீது சுமத்துவது போல், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது சங்கிகள் கூட்டம் சுமத்தியது. ஒட்டு மொத்தமாக வலது சாரி திருப்பம் இத்தகைய திசை திருப்பும் அரசியலுக்கு பங்களிக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் உழைக்கும் மக்களுக்கு, வெளியில் செல்வது குறித்த அச்சத்தை ஊட்டும் வகையில், டிரோன் கேமராமூலம் விளையாடுபவர்களை விரட்டுவதை காணமுடிகிறது. விளையாடுவது அவ்வளவு குற்றமாக கருதப்படும் நாட்டில், உழைப்பு நேரத்தை அதிகரிப்பது, தொழிலாளர் விரோத மசோதாக்களை சட்டம் ஆக்குவது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 


சவால்களை முறியடிக்கும் வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு:


சவால்களை எதிர்ப்பது, சுரண்டலின் அளவைத் தக்கவைக்க அல்லது மேலும் அதிகரிக்கும் அதிகாரத் திணிப்பை எதிர்த்த போராட்டத்தின் பகுதியாகும். எந்தவிதமான கல்வி, சமூக மாற்றத்திற்கான வழிகாட்டுதல் ஆகியவை இல்லாத நிலையில், மக்கள் எழுச்சியை, சில நபர்களே உருவாக்கினர். அதற்காக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. சிறை வாழ்க்கை கூட பரவாயில்லை, ஆனால் சிரச்சேதங்கள் அதிகம் இருந்தன. ஜூலியஸ் பூசிக் என்ற பத்திரிக்கையாளன், தனது 40 வயதில் முதலாளித்துவ சமூகத்திற்கு எதிராக அணி திரட்டிய காரணத்திற்காக தூக்கிலிடப்பட்டார். சிறைசாலையில், மே தினக் கொடியேற்றும் நிகழ்வையும் பதிவு செய்துள்ளனர். பகத்சிங், லெனின் பிறந்தநாளுக்கு சிறையில் இருந்து தந்தி அனுப்பிய வரலாறு, தூக்கு தண்டனைக்கு முந்தைய நாளில் அரசும் புரட்சியும் புத்தகம் படித்ததுதும், உலக இளைஞர்களுக்கு எழுச்சியை தந்தது. சே குவேரா உலகம் முழுவதும் ஒரு கலகக்காரனின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்ல முயற்சித்த காவல் அதிகாரியிடம், நில் எழுந்து நிற்கிறேன், அதன் பின் சுடு, எனக் கூறியதாக நாம் படிப்பது, நமது மனவலிமைகளை அதிகரித்து கொள்ள மட்டுமல்ல. முதலாளித்துவத்திற்கான சிம்ம சொப்பனம், தொழிலாளி வர்க்கம் என்பதை, சுட்டிக் காட்ட. 


இதெல்லாம், கருத்தியல் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. மார்க்ஸ் சொன்னவைகளுடன் பொருந்தி போக கூடியதே. முதலாளித்துவம், தனக்கான சவக்குழியைத் தானே தோண்டுகிறது, என்பதே அது. ஆலைக்குள் குவிந்து இருக்கும் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக ஒன்று சேர்வது தவிர்க்க முடியாதது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம், முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு, எதிரான வலுவான கருத்தாயுதம் என்பதையும் பார்க்கிறோம். ஆனால் இந்த முழக்கங்கள் உண்மையாவது கள செயல்பாடுகளும், அமைப்பின் முயற்சிகளுமாகும். எனவே மே தின சூளுரையோ, உழைப்பு சுரண்டலுக்கு எதிரான நடவடிக்கைகளோ, எதுவானாலும், பாதிப்புக்கு ஆளானோரைத் திரட்டுவதில் இருந்தே வெளிப்பட முடியும். 


இன்று ஆலைகளில் ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்கள், படித்த வல்லுநர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். நவீன இயந்திரங்கள், மற்றும் தொழில் நுட்பம் காரணமாக அதிகரித்து வரும் வேலை இழப்புகள் அல்லது அதிகரித்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவை கலகத்திற்கான, பெரும்படையாக உள்ளது. ஆனால் இந்த பெரும் படை ஆளும் வர்க்கத்தின் சமூக காரணிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. பொருளாதார சுரண்டலையும், சமூக சுரண்டலையும் இணைந்து நடத்த, திட்டமிட்ட முயற்சிகள் போதுமான அளவிற்கு சாதகமாக அமையவில்லை, இருந்த போதும் அதை சலிப்பில்லாமல் தொடர்வதும், ஒன்றுபட்ட முயற்சிகளை அதிகப்படுத்துவதும் இன்றைய தேவையாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நடந்த போராட்டங்கள் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இப்போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதே, இந்த 135 வது மே தினத்தின் உறுதி ஏற்பாக இருக்க முடியும்.

மே தின கட்டுரைகள்

 கொள்ளை நோயில் முடங்கி இருக்கும் தொழிலாளியை கொள்ளையடிக்கும் 12 மணிநேர வேலை


எரியும் வீட்டில் பிடுங்கியது மிஞ்சம் என்ற பழமொழி உண்டு. அதுபோல் தான் மத்திய அரசு, இந்தியா-வில் எரிந்து கொண்டிருக்கும் கோவிட் 19 வைரஸ் காரணமான கொள்ளை நோயை, தடுப்பதற்கு செயல்படுவது போல் ஒரு பாவனையை செய்து கொண்டே, தொழிலாளர்களை மேலும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தினக்கூலித் தொழிலாளிக்கு, 36 நாள்கள் வீட்டில் இருப்பது, வேலையற்று இருப்பது, வருமானத்தை முடக்கிய அரசிடம் இருந்து, ஓராயிரம் ரூபாய், கொஞ்சம் அரிசி, பருப்பு ஆகியவற்றை, வரிசையில் நின்று பெறுவது போன்றவை, மிகப்பெரிய மன உலைச்சல் தரும் துயரம் ஆகும். இந்த துயரத்தை, 40 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் அனுபவித்து வருகின்றனர். 


தொழிலாளர்களில் யாருக்கு சட்டம்?


மீன் பிடிக்க இயலாத கையறு நிலை, கட்டுமானத்திற்கு, தையல் தொழில செய்ய, சலவை செய்ய, சலவை செய்த துணிகளுக்கு இஸ்த்திரி செய்ய, வீட்டு வேலை செய்ய, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகணங்களை ஓட்ட இயலாமை காரணமாக, பெரும் துயரம் மற்றும் மன உலைச்சலை அனுபவித்து வருகின்றனர். பாரம்பரியத் தொழில்களான, விவசாயம், தறி நெசவு போன்றவை முடங்கி போயுள்ளன. இந்த தொழில் செய்யும் மக்கள், பெரும் வருமானம் கொண்டவர்களோ, வங்கி இருப்பு கொண்டவர்களோ அல்லது, நகைகள் இருக்கிறது பின்னர் அடமானம் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளவர்களோ அல்ல. மாறாக ஏற்கனவே இருக்கும் கடனுக்கு வட்டி செலுத்திக் கொண்டும், அரை வயிறுமாக வாழ்க்கை நடத்தும் மனிதர்கள். இவர்களுக்கு சட்ட வழி காட்டுதல்களோ, விதிமுறைகளோ இல்லை. 18 வயதில் வேலைக்கு சேரமுடியும், 58 அல்லது 60 வயதில் ஓய்வு போன்ற எந்த ஒழுங்கும் இல்லை. முதுகெழும்பு நிமிர்ந்து நிற்கும் வரை கடினமான வேலை, கூன் விழுந்தாலும், ஏதாவது ஒரு வேலை என்று தான் ஓடிக் கொண்டிருகின்றனர். 


இவர்களுடன் இணைந்து சுமார் 8 கோடிப்பேர் ஆலை மற்றும் சேவைத் துறைகளில், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகளுக்கு உள்பட்டு வேலை செய்து வருகின்றனர். வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த என்ணிக்கை, விகிதாச்சார அடிப்படையில் அதிகம்.  சங்கம் வைக்கும் உரிமை அல்லது ஒன்று கூடும் உரிமை, ஊதியம் உள்ளிட்ட தனது தேவைகளை நிறுவனம் அல்லது முதலாளிகளுடன் பேரம் பேசி பெறுகிற, கூட்டு பேர உரிமை போன்றவை இன்றைக்கும் கூட, இந்தியாவில் இல்லை. இத்தகைய அடிப்படை ஜனநாயக உரிமைகளில் நாம் பின் தங்கி தான் இருக்கிறோம். 


இந்தியா விடுதலை பெற்றபோது, படிப்படியாக பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் இந்தியத் தொழிலாளி வர்க்கம் மற்றும் இடதுசாரிகளின் போராட்டம் காரணமாக, மத்திய அரசினால் எடுத்துவரப் பட்டது. பிரிட்டிஷாரின் காலனியாதிக்க காலத்தில், இந்தியாவில், தொழிலாளர்கள் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டனர். சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அன்று தீவிரம் பெறத் துவங்கியது. 1901 முதல் 1929 வரை சென்னை, செங்கல்ப்பட்டு பகுதியில் நடைபெற்ற ஆலை விபத்துகள் குறித்து, சென்னைப் பெரு நகர தொழிற்சங்க வரலாறு எனும் புத்தகத்தில், பேரா. தே. வீரராகவன் குறிப்பிட்டது முக்கியமானது. மேற்படி கால கட்டத்தில் “சென்னை பெருநகர மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த ஆலைகளில் நடைபெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது ஒவ்வொரு 10000 தொழிலாளர்களில் 159 பேர் அன்று ஆலைக்குள் நடந்த விபத்துகளில் மரணத்தை தழுவியுள்ளனர். இவையன்றி பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகள் குறித்து புள்ளி விவரங்கள் இல்லை”, எனக் கூறியுள்ளார். 


விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்த, பிரிட்டிஷ் அதிகாரிகள் தொழிலாளர்கள் மீதே குற்றம் சுமத்தினர். ஆம்ஸ்ட் ராங், என்ற சென்னை துறைமுக மேலாளர், மிகக் கடினமான சரக்குகளை சென்னை கூலிகள் சாதாரணமாக கையாளுவதாகவும், ஓடும் ரயில் பெட்டிகளில் சரக்குகளை ஏற்றி இறக்குவது கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறி இருக்கிறார். அதாவது தனக்கு தேவை என்றால், இந்தியத் தொழிலாளியை இப்படியெல்லாம் வேலை வாங்க முடியும், அதுவே சட்டத்திற்கு முன் கேள்வியாகிவிட்டால், தொழிலாளி மீதே பழி சுமத்துவது, எல்லா காலத்திலும் இருந்துள்ளது. இத்தகைய பின்னணியில் தான் வேலை ஆள் இழப்பீட்டு சட்டம் 1923 ல் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஒன்று கூடுவது போராடுவது நீடிக்கவே 1926 ல் தொழிற்சங்க சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 


சம்பளம் தராமல் இருப்பது, ஆலைகளில் 1850 களில் பயிற்சியாளர் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை உருவாக்கி, ஊதியமில்லாத ஊழியத்தை, கிழக்கு இந்திய கம்பெனியின், பின்னர் பிரிட்டிஷ் அரசு, வெள்ளைக் கார முதலாளிகளும் செய்து வந்துள்ளனர். திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் பீடி சுற்றி வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி தொழிலாளர்களும், சென்னை மட்டுமல்லாமல், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகள் முன்னெழுந்த போது, சம்பளப்பட்டு வாடா சட்டம் 1936 ல் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்கள் முன் வைத்த கோரிக்கை, போராட்டம், உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு ஆகியவை காரணமாக, வாரவிடுப்பு சட்டம் 1942 ஆகியவை பிரிட்டிஷார் காலத்தில் உருவானது. 


ஆனால் விடுதலை இந்தியாவில் 36 சட்டங்கள் மட்டுமே உருவாகியுள்ளன. பிரிட்டிஷார் காலத்தில் 22 ஆண்டுகளில் 4 சட்டங்களை இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்றுக் கொள்ள முடிந்தது. விடுதலை இந்தியாவின் வயது 73 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், ஆலைகள் மற்றும் வேலை நேரம், குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை திருத்தி அமைப்பது போன்ற தொழிலாளர்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் போதாது. உருவாக்கப்பட்ட 36 சட்டங்களின் தோற்றமும் கூட, இடதுசாரிகள் தொடர்ந்து நடத்திய போராட்டம் மற்றும் நிர்பந்தம் ஒரு காரணம் என்றாலும், சர்வதேச சமூகத்தின் நிர்பந்தமும் மற்றொரு காரணம். 1990 களுக்கு பின் சோசலிச நாடுகளின் அரசியல் தோல்வி காரணமாக, சர்வதேச சமூகமும், உழைப்பு சுரண்டலுக்கான புதிய வடிவங்களை கண்டறிந்து அமலாக்க துவங்கிய நிலையில் இந்தியாவில் எந்த ஒரு புதிய சட்டமும் உருவாக்கப்பட வில்லை. இடதுசாரிகள் ஆதரவில் 1996 ல் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சி, கட்டுமானத் தொழிலாளர் செஸ் சட்டம் 1996 ஐ உருவாக்கியது. அதேபோல் இடதுசாரிகள் ஆதரவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது, அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான சமூகபாதுகாப்பு சட்டம் 2008 ல் உருவாக்கப்பட்டது. குறிப்பாக சர்வ தேச மூலதனக் குவிப்பு நடந்து வரும் நிலையில், சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் உள்ளிட்ட பல முதலீட்டாளர் ஆதரவு சட்டங்கள் உருவானதே தவிர, ஆலை தொழிலாளர்களுக்கான சட்டத்தில் முன்னேற்றமோ, புதிய சட்டங்களோ உருவாகவில்லை. 


தொழிலாளருக்கான வேலை நேரம்:


உலகின் தொழிலாளர்கள் தங்களுக்கான வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடத் துவங்கிய போது, இந்தியாவில் ஆலைகள் பெரும் எண்ணிக்கையில் உருவாகி இருக்க வில்லை. 19 ம்நூற்றாண்டின் இறுதி பகுதியில் தான் பஞ்சாலைகள் பம்பாய், சென்னை, கல்கத்தா பகுதிகளில் உருவாகி வளர்ச்சி பெற்றது. வேலைநேரம் சூரிய உதயம் துவங்கி மறையும் வரையானதாக தீர்மனிக்கப்பட்டது. பின் மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்த பின், வேலை நேரமும் அதிகரித்தது. எனவே வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்ற போராட்டமும் தவிர்க்க முடியாததாக மாறியது. அதாவது இந்தியாவில், குழந்தைகளையும், பெண்களையும் அதிக எண்ணிக்கையில், பஞ்சாலை உற்பத்தியில் நேரம் காலம் இல்லாமல் ஈடுபடுத்தியதால், இந்தியாவின் ஆலைகள், இங்கிலாந்தின் லங்காஷயர் ஆலைகளை விடவும் மலிவாக உற்பத்தி செய்து தர முடிந்தது. 


அதேநேரம் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 1891 ல் தொழிற்சாலைகள் சட்டம் 12 வயதுக்கு கீழ் இருந்த சிறுவர்களின் உழைப்பு நேரத்தை, 9 மணிநேரமாகவும், பெண்களுக்கான வேலை நேரத்தை 12 மணி நேரமாகவும், இரவு வேலை செய்வதில் இருந்து பெண்களுக்கு விலக்களிப்பது என்றும், திருத்தி சட்டம் இயற்றப்பட்டது. மற்ற ஆண் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் 14 அல்லது 16 மணி நேரமாக இருப்பது நீடிக்கும் என்றும் வரையறை செய்யப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நீடிக்கவே, 1908 ல் வேலைநேரம் குறித்து விசாரணை நடத்த மாரிசன் என்பவர் தலைமையில் ஒரு குழு வந்தது. அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பின்னணியிலேயே, 1911 ல் 12 மணி நேரம் வேலை நேரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1922 ல் தொழிலாளர்கள் வேலைநேரம் மற்றும் ஓய்வு, இடைவேளை ஆகியவை குறித்த பிரச்சனைகள் முன்னுக்கு வந்தது. சென்னையில் 1923 ல் இந்திய வரலாற்றில் முதல் முறையாக சிங்காரவேலர் மே தினக் கொடியேற்றினார். அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டிஷ் அரசு ராயல் கமிஷன் என்ற குழு மூலம் 1929 ல் விசாரணை நடத்தியது. அதன் பரிந்துரைப்படி, 1934 ல் வேலைநேரம் 9 மணிநேரமாக குறைக்கப்பட்டது. 


அதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக குரலின் அதிகரிப்பு ஆகியவை வேலைநேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகப்படுத்தியது. அம்பேத்கார், 1942 நவம்பர் 7 ல் அரசு நடத்திய, தொழிலாளர் மாநாட்டில், வேலைநேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து பேசினார். “வேலைநேரத்தைக் குறைப்பது என்பது, வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் செய்யும், அதேநேரத்தில் இக்கோரிக்கையை அரசு ஏற்கும் நிலையில், அவர்களின் அடிப்படை சம்பளத்தையோ, பஞ்சப்படியையோ குறைப்பது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது”, என தெளிவாக அம்பேத்கர் அவர்கள் பேசியுள்ளார். இப்படி பல்வேறு நிர்பந்தங்களைத் தொடர்ந்தே, பிரிட்டிஷ் அரசு 8 மணி நேர வேலைக்கு ஒப்புக் கொண்டது. இந்தியாவில் 8 மணிநேர வேலை வாரம் 48 மணி நேரம் என்பது அமலாக துவங்கி 80 ஆண்டுகள் ஆகிறது. 80 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், வேலை நேரத்தை 12 ஆக உயர்த்துவதை இந்த ஊடங்கு காலத்தில் அமலாக்க பாஜக அரசு எல்லா வேலைகளையும் செய்து வருகிறது.


7 மணி நேரமாக குறைப்பதே இன்றைய தேவை:


இப்போது இந்திய பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 23% பேர் வேலை இழந்துள்ளனர். அல்லது வேலையின்றி உள்ளனர். இதன் எண்ணிக்கை சுமார் 10 கோடி. இவர்கள் கையிலும் வாங்கும் சக்தி ஏற்படும் போது தான், பொருளாதாரம் மேம்படும். உற்பத்தி பெருகும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இந்த சூழல் உருவாக வேலை நேரத்தை குறைப்பதே அவசியம், அது தொழிலாளர்களுக்கான ஓய்வு அல்லது நிவாரணமாக பார்க்கப்பட கூடாது. 


ஆனால் மத்திய பாஜக ஆட்சி, கொரானா கால ஊரடங்கிற்கு, வாய் சவடால் நிவாரணம் வழங்கியது போல், வேலைநேரத்தை 8 ல் இருந்து 12 மணி நேரமாகஅதிகரித்து, அதிக உற்பத்திக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது உற்பத்தி தேக்கத்திற்கே வழிவகுக்கும், உற்பத்தியை தூண்டும், குறைவான தொழிலாளர்களின் வருவாயை மட்டும் உயர்த்துவதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்காது. மாறாக வேலை நேரத்தை குறைப்பது, மூலதனக் குவிப்பை கட்டுப்படுத்தும். பரவலான வருவாய் உயர்வுக்கு வழி வகுக்கும். கடந்த 80 ஆண்டுகளில் பெரும் பணக்காரர்களின்  செல்வ மதிப்பு பல்லாயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. புதிய பெரும் பணக்காரர்கள் தலையெடுத்துள்ளனர். முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர் (1.26 லட்சம் கோடி) கடந்த ஓராண்டில் உயர்ந்துள்ளது. அலிபாபா அல்லது அமேசான் அதிபர்களின் சொத்து மதிப்பு கூட இந்த அளவு உயரவில்லை என எக்னாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது. 


கோவிட் 19 பாதிப்பு, லாகடவுன் 1இன் போது, 21 நாள்களும், லக்டவுன் இரண்டின் போது19 என மொத்தமாக, 40 நாள்கள் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் வீட்டுக்குள் பூட்டி விட்டு, மறைமுகமாக, தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 51 ஐ, 12 மணிநேரமாக உயர்த்தும் வகையில் திருத்துகிறது. இத்தகைய திருத்தத்திற்காக, முன்மொழியப்பட்ட தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலைதன்மை2019 மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இடம் பெற்றுள்ள எளமரம். கரீம், தனது திருத்தங்களை 7 பக்கங்களில் முன்மொழிந்துள்ளார். குறிப்பாக வேலை நேரத்தை வரையறை செய்துள்ள, தற்போதைய பிரிவுகள், 51,54 ஆகியவற்றை திருத்தல் கூடாது. ஜப்பான் ஆய்வு சுட்டிக் காட்டியது போல், வேலை நேரத்தை குறைப்பதன் மூலம் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதையும் இணைத்து கூறியுள்ளார். 


அன்மையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு 16 வது அகில இந்திய மாநாடு, வேலை நேரத்தை ஒருநாளைக்கு 7 மணிநேரம் எனவும், வாரம் 35 மணிநேரமாகவும் குறைக்க வேண்டும். இதன் மூலம் வாரம் இருநாள்கள் விடுமுறை உருவாகும். அதேபோல் கணிசமான வேலையின்மையை இதன் மூலம் குறைக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக, வாரம் 35 அல்லது 36 மணிநேரம் என்ற தன்மையில் வேலை நேரத்தை வரையறை செய்து, பல பத்தாண்டுகளாக அமலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாரம் 40 மணிநேரம் என்பது 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையாகும். எனவே அனைத்துவிதமான ஜனநாயக சக்திகளும், தற்போதைய வேலைநேரத்தை, மேலும் சுரண்டலுக்கு வழிசெய்யும் வகையில் திருத்த அனுமதிக்க கூடாது..


வரலாற்றில் இருந்தும், இந்திய ஆட்சியாளர்கள் பாடம் கற்க வேண்டும், உலகப் பொருளாதார பெருமந்தம், 1930 களில் உருவான போது, உலகப்போர் மூண்டது, போர் முடிவுக்கு வந்த போது, முதலாளித்துவ வளர்ச்சி கொண்ட நாடுகள் பலவும் வேலைநேரத்தை குறைப்பது குறித்த அழுத்தத்திற்கு ஆளாகின. குறிப்பாக 1935, ஜூன்4 அன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) முன் மொழிந்த தீர்மானமான, வாரம் 40 மணி நேரமாக வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது, முக்கிய பங்களிப்பைச் செய்தது. பொருளாதார பெருமந்தத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான ஒன்று வேலையின்மை ஆகும். வேலை நேரத்தை குறைப்பதன் மூலம், வேலையின்மையை குறைக்க முடியும், பெருமந்தத்திற்கு தீர்வு காண முடியும், என்பதையும் தீர்மானம் தெளிவு படுத்துகிறது. 


அதேபோல் 1962 ஜூனில், ஐ.எல்.ஓ மீண்டும் ஒரு தீர்மானத்தின் மூலம், மேலும் வேலை நேரத்தை ஒவ்வொரு நாடும் தற்போதைய நிலையில் இருந்து குறைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 2000 ல் இருந்து, ஃபிரான்ஸ் வேலை நேரத்தை வாரத்திற்கு 35 மணி நேரமாக குறைத்தது. பல நாடுகள் இதை பின்பற்றின. ஆனால் இந்தியா, உலக வளர்ச்சியின் இந்த பாதையை, இருட்டடிப்பு செய்கிறது. இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் இது குறித்து அவ்வப்போது, வலியுறுத்துகின்றன. ஆனால் இது பெரும் ஜனநாயக எழுச்சிக்கான குரலாக மாறவில்லை. இப்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் முயற்சியை எதிர்த்து அத்தகைய பெரும் குரல் எழுப்பப்படுவதும், வீச்சாக பரவுவதும் பற்றி எரிவதும் அவசியம். தொழிலாளர்களும், அவர் தம் குடும்பங்களும், வேலைக்காக போராடும் இளைஞர்களும் இந்த முழக்கத்தில் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம்.