வெள்ளி, 19 நவம்பர், 2010

கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ!




லைசன்ஸ் கொடுத்து கொள்ளை அடிக்கும் முறைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயர் சூட்டினால் தவறில்லை. ஆம் இந்தியாவைப் பொருத்தளவில், இக்கொள்கை, 1965 காலத்திலேயே, ஏற்றுமதி வளாகங்கள் என்ற பெயரில், உருவாகியிருந்தாலும், 2000ன் இறுதியில் இருந்தே வேகம் பெறத் துவங்கியது. அதுவும் குறிப்பாக, 2005, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான, சிறப்பு சட்டத்தினை உருவாக்கி அமலாக்கத் துவங்கிய பிறகு, இடது சாரிகளால் மட்டும் பேசப்பட்டு வந்த, வாழ்வாதாரம் மற்றும் தொழிலாளர் குறித்த பாதிப்புகளை, வேறு சிலரும் பேசுகின்றனர். 2007-08 ல் டில்லிக்கு அருகில் உள்ள கோர்க்கான் பகுதியில் நடந்த மிகக் கொடுரமான அடக்கு முறையைத் தொடர்ந்தே பல அரசியல் கட்சிகள் சிறப்புப் பொருளாதார மண்டல பகுதிகளுக்குள் தங்களால் நுழைந்து அரசியல் செய்ய இயலாது என்பதை உணர்ந்தனர். நாடாளுமன்றத்தில், இந்த சிறப்பு சட்டத்தை மே 2005 ல் முன்மொழிந்த போது, இடதுசாரி கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கொடுக்கப்படும், வரி உள்ளிட்ட சலுகைகளைத் திரும்பப் பெற வேண்டும், சட்டத்தில், நிலம் கையக படுத்துவதில் பல்வேறு மாற்றங்கள் தேவை என்பதை எழுத்து பூர்வமாக முன்வைத்தது.

மத்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான சிறப்பு சலுகைகளை, அறிவிக்கிற நேரத்தில், அ) பொருளாதார சுழற்சியை கூடுதலாக்குவது, ஆ). ஏற்றுமதி பொருள்களையும், சேவையையும் அதிகரிப்பது, இ). உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, ஈ). வேலை வாய்ப்புகளைப் பெறுக்குவது, உ). உள்கட்டமைப்புகளை வளர்ப்பது, ஊ). நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பராமரிப்பது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளி நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவது, என்ற ஆறு முக்கியமான கருத்துகளை, அத்தியாயம் 2ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெரிவித்துள்ளது. மாநிலத் தி.மு.க அரசு, இது போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதன் மூலம், 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கப் போவதாக அறிவித்தது. இதை யொட்டியே, தமிழ் நாட்டில் மாநில அரசு தொழில்கொள்கை ஒன்றையும் வெளியிட்டது. அறிவித்து 4 ஆண்டுகளாகும் நிலையில், எத்தனை லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

சி.பொ.ம விற்கான, நிறைய சட்ட சலுகைகள் குறித்த விவாதம் இன்றய தேவை என்றாலும்,. அந்நிய செலாவணி, வேலை, வேலைச் சூழல் ஆகியவை மட்டுமே இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உருவாக்கப் பட்ட சி.பொ.ம க்கள் எண்ணிக்கை 2008 ல் அனுமதி பெற்றவை, 400க்கும் மேல், செயல் பாட்டை துவக்கியவை, 300க்குள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 10 மாநிலங்களில் தீவிர ஆர்வம் காட்டப்படுகிறது. சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தவிர்த்து, அதிக முதலீடு தொலைபேசி அல்லது செல்ஃபோன் உற்பத்தியில் செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த, சோமா என்ற அமைப்பு இந்தியாவை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. 182,042.72 மில்லியன் ரூபாய் தொகையானது கடந்த 15 ஆண்டுகளில், 43 நாடுகள் மூலம் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொலைபேசி ஒழுங்காற்று ஆணையம் (ட்ராய்), தெரிவித்துள்ள தகவல்படி, மாதம் தோறும் செல்ஃபோன் பயன் படுத்துவோர் எண்ணிக்கை, 60 லட்சம் பேர் அதிகரிப்பதாக சொல்கிறது. 2008 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 25 கோடியாக உயரும் என கூறப்பட்டது. தற்போது செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 36 கோடி என மதிப்பிடப்படுகிறது. உலக உற்பத்தியாளர்கள் உள்ளூரிலேயே உற்பத்தியும், சந்தையும் இருந்தால் மிகவும் நல்லது என எதிர்பார்க்கிறார்கள். அப்படி அமைந்து விட்டால் உடனடியாக தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய பெரு முயற்சி மேற்கொள்கிறார்கள். இந்த வர்த்தக அடிப்படையிலேயே, இந்தியாவில் செல்ஃபோன் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எல்.ஜி, மோட்டோரோலா, சாம்சங், நோக்கியா, சோனி எரிக்சன், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், எல்கோடெக், ஃபாக்ஸ்கான், அஸ்கோகாம்ப், பெர்லோஸ், சால்காம்ப், இன்கேப், வின்கேட் டெக்னாலஜி, லாயிர்டு, பி.ஒய்.டி, சான்மினா-ஐ.சி.ஏ ஆகிய 16 செல்ஃபோன் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நோக்கமான ஏற்றுமதியை அதிகப்படுத்த வில்லை, என்பதை இப்போதாவது மத்திய அரசு புரிந்து கொண்டதா? என்பது தெரியவில்லை. எனவே ஏற்றுமதி பெருகும் அந்நிய செலாவணி கையிருப்பு உயரும் என அரசு சொன்னது, நடைமுறைக்கு வரவில்லை மாறாக அரசு ஏமாற்றம் அடைந்துள்ளது. 2008ல் உலகம் முழுவதும், பொருளாதார பெருமந்தம் ஏற்பட்ட போது, இந்தியாவில் செல்ஃபோன் வாங்குவோர் எண்ணிக்கை, 8 சதம் சரிந்தது, என்பது கூடுதல் தகவல்.

அரசின் மற்றொரு அறிவிப்பு, வேலை வாய்ப்பை பெருக்குவது என்பதாகும். இந்திய மொபைல் ஃபோன் சந்தையில் 50 சதத்தைக் கொண்டிருக்கும் நிறுவனம் நோக்கியா. இந்தியாவில் இருக்கும் என கருதப்படுகிறது. சென்னைக்கு அருகில் இருக்கும் திருப்பெரும் புதூரில் மட்டுமே இயங்கும் நோக்கியா, இதுவரை 285 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்பைத் தரவில்லை. நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிவோர் எண்ணிக்கை தற்போது 4700 பேர். அதில் 70 சதமானம் பெண்கள். நோக்கியாவிற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களான, சால்காம்ப், அஸ்கோகாம்ப், ஃபாக்ஸ்கான், பெர்லோஸ், ஜாபில், லாயிர்ட், விண்கேட் ஆகிய அனைத்தும் சேர்ந்து, நோக்கியா அமைந்துள்ள வளாகத்திலேயே செயல்படுகின்றன. சில இன்னும் கட்டுமான பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. ஆனால் மொத்தமாக வளாகம் முழுவதும் உள்ள தொழிலாளர் எண்ணிக்கை, 30 ஆயிரம் மட்டுமே (ஆதாரம் சோமோ செப்-2009). சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், அரசு சொன்ன வேலை வாய்ப்பு என்பதும் அதிகரிக்கும் ஏற்பாடு இல்லை.

ஒட்டு மொத்த திருப் பெரும்புதூரில் ஆட்டோமொபைல், மற்றும் மின்னனு சாதன உற்பத்தி என சுமார் 1 லட்சம் தொழிலாளர் பணிபுரிவதாக மதிப்பிடப் படுகிறது. தி.மு.க. அரசு சொன்ன 20 லட்சம் வேலை வாய்ப்பு எப்போது உருவாகும் என தெரியவில்லை. சமீபத்தில் தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை, என அவசரச் சட்டத்தினை முன் மொழிந்திருக்கிறது, மாநில அரசு. ஆனால், ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்தை முன் வைத்து மேற்படி நிறுவனங்கள், உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு எடுப்பதில்லை, என்ற புகார், திருப்பெரும்புதூர் பகுதி இளைஞர்களிடம் இருப்பதாக சோமோ அமைப்பு தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வேலை, அந்நிய செலாவணி ஆகிய தனது இரண்டு பிரதான இலக்குகள் குறி தவறிப்போவது குறித்தே, கவலை கொள்ளாத அரசு, தொழிலாளர் நலன் பற்றி அக்கறை கொள்ளுமா? 53 பக்கங்களில், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான விதிமுறைகளை, உருவாக்கிய அரசு, தொழிலாளர் நலன் குறித்து, எதுவும் குறிப்பிட வில்லை. சி.பொ.ம வில் ஏதாவது பிரச்சனை முன்னெழுந்தால், அங்கு மத்திய அரசால் நியமிக்கப் பட்டிருக்கும் ஆணையர், அப்பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார், எனச் சொல்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி, இந்த சிறப்பு ஆணையர் தேவையில்லை. மாறாக, சர்வ தேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டதைப் போல், வளர்ச்சி ஆணையருக்கும், குறை தீர்க்கும் அதிகாரிக்குமான அதிகாரங்கள் வேறுபடுத்தி காட்டப்பட வேண்டும். மேலும் தற்போது, பிரிவு 5ல் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்குப் பதிலாக, பிரதான விதிகளிலேயே தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும் எனவும், கூட்டு பேர உரிமை மற்றும் தொழிற்சங்க உரிமைகள் உத்திரவாதம் செய்யப் பட வெண்டும் எனவும் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் எந்த ஏற்பாடும், மேற்படி மண்டலங்களில் இல்லை. கடந்த அக். 31 இரவு ஷிப்டுக்குச் சென்ற அம்பிகா என்ற பெண், பணி நேரத்தில் இயந்திரத்தில் சிக்கி இறந்துள்ளார். இயந்திரத்தை உடைத்து, உயிரைக்காப்பாற்றி இருக்கலாம். விலை மதிப்பு மிக்கது உயிரா? இயந்திரமா? என்ற பட்டிமன்ற விவாதத்தில் அம்பிகா இறந்து போனார். இது நடந்தது, நோக்கியா நிறுவனத்தில், அங்கு தொ.மு.ச. என்ற தி.மு.க.வின் தொழிற்சங்கம் தான் இருக்கிறது. திமு.க யார் பக்கம் நின்று வாதாடும் என்பதை, நெய்வேலி போராட்டமும், ஃபாக்ஸ்கான் போராட்டமும் தமிழ் கூறும் நல் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், பணி புரியும் தொழிலாளர்களில், பெரும் பாண்மையினர் பெண்கள். திட்டமிட்டு சேர்க்கப்படுகின்றனர். ஏனென்றால், திருமணமாகாத இளம்பெண்கள், இது போன்ற பணிகளில், ஈடுபடும் போது, தொழிற்சங்கம் உள்ளிட்ட, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்பது, முதலாளிகளின் கணக்கு. உழைப்புச் சுரண்டலுடன், பாலியல் சுரண்டலையும் சில வேலைகளில் அரங்கேற்று கின்றனர். ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களில், பெண்களை வார்த்தைகளால், கொடுமைப் படுத்தும் நிகழ்வுகள் இருப்பதாக சோமாவும் குறிப்பிட்டுள்ளது. பெண் தொழிலாளர் என்றால் சம்பளம் குறைத்து கொடுக்கலாம் என்பது, நீண்ட நாள்களாக இந்திய சமூகத்தில் பின்பற்றப் பட்டு வரும் சுரண்டல் நடைமுறை. இதை உலக முதலாளிகளுக்கும், ஆள்வோர் பட்டுக்கம்பளம் விரித்து அறிமுகம் செய்கிறார்கள்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர் யார் என்பதை, ஐ.நா சபை தீர்மானிக்கிற போது, நாளொன்றுக்கு 2 டாலருக்கும், குறைவான வருமானம் உடையவர் என வரையரை செய்துள்ளது. இந்த வரையரைக்கு எந்த விதமான வலியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சம்பளத்தை தீர்மாணிக்கிற போது, 2.1 டாலர், அதாவது 3000ல் இருந்து 4500 ரூபாய் என நிர்ணயிக்கின்றனர். மூன்றாண்டுகளுக்கும் மேலாக சம்பள உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடத்தாமல், தொழிலாளர்களை சுரண்ட மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கின்றன. பிரிட்டிஷார் அல்லது இதர ஐரோப்பியர்கள், இந்தியாவில் இருந்து, கணிம வளங்களையும், செல்வங்களையும் சுருட்டி எடுத்து சென்றதால், இப்போது உலக முதலாளிகளுக்கு, மனித வளத்தைச் சுரண்டும் வேட்டைகாடாக இந்தியா அனுமதிக்கப் படுகிறார்களா?. என்ற கேள்வி தவிர்க்க இயலாததாக இருக்கிறது. அனுமதிக்கக் கூடாது என்பதே, தொழிலாளர் ஆதரவு இயக்கங்களின் நோக்கமாகும்.. எனவே தான் போராட்டம் தவிர்க்க முடியாததாக உள்ளது. போராட்டத்திற்குப் பின்னர் தான், தொழிலாளி மீது தொடுக்கப் படும் தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிட்டதைப் போல், தொழிலாளர்களைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளுடன், தொழிற்சாலைகள் துவங்கப் படுவதே சரியானது. கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ என்பதை நினைவில் கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக