செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தொழிற் சங்க உரிமை


 தொழிற்சங்க அங்கீகாரச்சட்டத்தின் அவசியம்
                                                                                         
தமிழகத்தில் தொழிற் சங்க அங்கீகாரம் குறித்த சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொழிற் சங்க இயக்கங்கள், குறிப்பாக சி.ஐ.டி.யு முன் வைத்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், இடது சாரிகள் தவிர, வேறு யாரும்  கவலை கொள்ள வில்லை. கடந்த தி.மு.க ஆட்சியில், தொழிற் சங்க அங்கீகாரச் சட்டம் கொணர வேண்டும், என்பதை வலியுறுத்தி சட்ட மன்றத்தில் இடது சாரிகள் கருப்பு பாட்ஜ் அணிந்து சென்றனர். விவாதத்திற்கு அனுமதி மறுக்கப் பட்ட போது, வெளிநடப்பும் செய்தனர். மேலும் அந்நேரத்தில் சி.ஐ.டி.யு தலைவர்கள் சிறையிலும் அடைக்கப் பட்டனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின், முதல்வர். ஜெ. ஜெயலலிதாவைச் சந்திந்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் தமிழக சமூக பொருளாதார முன்னேற்றம் குறித்து எழுத்து பூர்வமான அறிக்கையை அளித்த நேரத்திலும், தொழிற் சங்க அங்கீகார சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்
.
இப்போது அவசியம் என்ன?

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. இன்னும் வர இருக்கின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மூலதனம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் குவிக்கப் பட்டு வருகிறது. இதன் மூலம் சில லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்பதை மறுக்கவில்லை. ஆனால் உரிமைகளுடனான வேலை இல்லை. சுயமரியாதையை நேசிக்கும் எந்த ஒரு இளைஞனும், தொடர்ந்து மேற்படி பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய முடிவதில்லை. பணி நேரத்தில், விபத்துகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில், அம்பிகா என்ற பெண் நோக்கியா நிறுவனத்தில் இறந்ததும், போஸ் ஹூண்டாய் நிறுவனத்தில் தமிழ் செல்வன் என்ற இளைஞன் இறந்ததும், மிக சாதாரண செய்திகளாக சுருங்கிக் கொண்டு இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தில், கை துண்டிக்கப் பட்டு பணி செய்ய இயலாத இளைஞர்கள் பலர். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில், விஷ வாயு கசிவு ஏற்பட்டதில் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அநேகமாக அனைத்துத் தொழிற்சாலையிலும் கேண்டீனில் வழங்கப் படும் உணவு, ருசிப்பதில்லை என்பது கூட பரவாயில்லை. பூச்சிகள், புழுக்கள் உணவு பொருள்களில் மிதப்பது வாடிக்கை. அதனால் வாந்தி, பேதியாவது சகஜம்.

எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது எனச் சட்டம் இருந்தும், 12 மணி நேரம் வேலை வாங்கப் பட்ட கொடூரம் பி.ஒய்.டி என்ற நிறுவனத்தில் இருந்தது. தொழிலாளி ஒருவர் 240 நாள்கள் வேலை செய்தால், அவரை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். ஆனால் 4 ஆண்டுகள் கடந்த பிறகும், நிரந்தரம் செய்யப் படாமல், ஒப்பந்தம், பயிற்சி, என்ற பெயரில் வேலை வாங்கப் படும் தொழிலாளர்கள் ஏராளம். கப்பரோ என்ற தொழிற்சாலையில், தொழிலாளி ஏதேனும் ஒரு விபத்தை சந்தித்தால், உடணடியாக நிர்வாகம் தொழிலாளியினுடைய கவனக்குறைவே இதற்குக் காரணம், என்று தொழிலாளி மீதே பழி சுமத்தி, நோட்டீஸ் கொடுக்கப் படுகிறது. சிவசக்தி வுட் ஒர்க்ஸ் என்ற உள்நாட்டு முதலாளி நடத்தும் நிறுவனத்தில், பணி நேரத்தில் கைகள் பாதிப்படைவது இயல்பு. ஆனால் இ.எஸ்.ஐ இல்லை. பிடிக்கப் பட்ட பணம் இ.எஸ்.ஐ யில் செலுத்தப் படாததால், சிகிச்சைக்கு செல்ல முடிவதில்லை. பிராவிடண்ட் ஃபண்ட் பிடித்தம் செய்யப் படும். ஆனால் செலுத்தப் படாது. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை.

இதுபோன்ற பல்வேறு தொழிலாளர் விரோத அணுகு முறையை, வளர்ச்சி பெற்ற நாடுகள் என்று அழைக்கப் படும், அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டிஷ், தென் கொரியா, தைவான், பின்லாந்து, இத்தாலி என்று, மூன்று கண்டங்களில் இருந்து வருகை தந்துள்ள, நிறுவனங்கள் அமலாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியத் தொழிற்சங்க மையம் மேற்படித் தொழிலாளர்கள் மத்தியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல் பட்டதன் காரணமாகத் தான், தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள் அம்பலப்படுத்தப் பட்டது. மனித நாகரீக வளர்ச்சிக்கு அடையாளமாக, மனிதர்கள், புளூ கிராஸ் (வீட்டு விலங்குகளின் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்) அமைப்பை உருவாக்கியதையும், அரசுகள் இயற்றிய வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தையும், பெருமையாக கூறிக்கொள்வர். இது தவறில்லை. விலங்கிற்குக் கூட துன்பம் விளைவிக்கக் கூடாது, எனக் கருதும் சமூகத்தில், தொழிலாளர்களான மனிதர்களின் உரிமைகள் குறித்து பேச முன் வராதது ஏன்?. அப்படி பேசுகிற தொழிற் சங்கங்களை அங்கீகரித்துப் பேச மறுப்பது ஏன்?

கூட்டு பேர உரிமை எழுத்தளவில்தானா?

சென்னைத் தொழிலாளர் சங்கம் 1918 ஏப்ரல் 27 அன்று, திரு.வி.க, பி.பி.வாடியா போன்றோரால் உருவாக்கப்பட்டது. அன்று தேசிய போராட்டம் ஆங்கிலேயருக்கு எதிராக இருந்தது ஒரு காரணம். ஆனால் பிரதான காரணம் தொழிலாளர், மிகக் கொடிய அடக்கு முறையை எதிர் கொண்டனர். விலை உயர்வும், நோய் தாக்குதல்களும் அதிகரித்து இருந்த காலம். நிறுவனங்கள் சம்பள உயர்வுக்கும், உரிமைகளை வழங்குவதற்கும் தயாராக இல்லாததால், தொழிற் சங்கம் அமைப்பதும், அதன் கீழ் பல ஆயிரம் தொழிலாளர் அணிவகுப்பதும், தவிர்க்க இயலாததாகிப் போனது, என்று சென்னைப் பெரு நகர தொழிற்சங்க வரலாறு புத்தகம் தெரிவிக்கிறது.

இன்று நாம் விடுதலை பெற்ற நாட்டில் வாழ்ந்து வருகிறோம். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்ததை விடவும் பலமடங்கு அதிகமாக, எதிர்த்துப் போராட முடியும். அதற்கான சட்டங்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. ஆனாலும் அவைகள் பல்லில்லாத பிராணிகளைப் போல், பன்னாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட்டு நிற்பதைக் காணமுடியும். இது இந்திய சட்டத்திற்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல. இந்திய அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் இனைந்து சர்வ தேச சட்டங்களுக்கு செய்யும் துரோகமும் கூட. 1891லேயே தீவிரமாகப் பேசப்பட்ட கூட்டு பேர உரிமை, இன்று மறுக்கப் படுவது, இந்திய சமூகம், பன்னாட்டு நிறுவனங்களின், லாப வேட்கைக்காக, பின்னோக்கி பயணிப்பதற்கு சமமாகும். இப்படிப்பட்ட பின்னடைவை எதிர் கொண்டு, பன்னாட்டு முதலாளிகளை வரவேற்பது, தொழில் வளர்ச்சிக்கு அல்ல. மாறாக 2ஜி போன்ற முறைகேடுகளுக்கு, என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர், என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை..

சர்வ தேச மனித உரிமைகள் அமைப்பின் பிரிவு 23ன் படி, ஒரு தொழிலாளர், தான் வேலை செய்யும் நிறுவனத்தில், பணிபுரியும் தொழிலாளர்களுடன் இனைந்து சங்கம் அமைப்பதற்கும், அதன் மூலம் நிறுவன உரிமையாளருடன், கூட்டு பேர உரிமையின் அடிப்படையில், தனது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கும் உரிமை உண்டு.  பி.எம். டபுள்யு கார் கம்பெனி, தனது நாட்டில் தொழிற்சங்கத்தை நிராகரிக்கவில்லை. தொழிற் சங்கம் செயல்படுவது தவறில்லை, என்றும் அதன் தலைவர், அமெரிக்காவில் பேட்டி அளிக்கும் போது குறிப்பிட்டிருக்கிறார் (BMW defies union over America). அமெரிக்க கார்த் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் டான் ஸ்டில்மேன் பேசுகிற போது, அமெரிக்காவில் 95 சதமான கார் தொழிற்சாலைகளில் தொழிற் சங்கம் அமைக்கப் பட்டு, கூட்டு பேர உரிமைக்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது, என்று கூறுகிறார்.

நியூஸ் லெட்டர் ஃபார் அமெரிக்கன் ஆட்டோ ஒர்க்கர்ஸ் என்ற இனைய தளம், இரண்டாம் உலகப் போர் முடிந்த தருணத்தில், ஐரோப்பாக் கண்டத்தில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த, தொழிற் சங்க நடவடிக்கைகள் அங்கீகரிக்கப் படவேண்டும், என ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளை, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதற்காக, அமெரிக்க தொழிற் சங்கத் தலைவர்களை ஐரோப்பாக் கண்டத்திற்கு அனுப்பி, ஐரோப்பாவில் தொழிற் சஙக நடவடிக்கைகளை தீவிரப் படுத்த உதவியதாக, தெரிவிக்கிறது. அன்றைய கம்யூனிஸ்ட் அரசுகள் மீது அமெரிக்காவிற்கு இருந்த அச்சம் பிரதான காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று இந்தியாவில் உள்ள ஃபோர்டு நிறுவனம், தொழிற்சங்கம் கூடாது என்கிறது. கூடவே தனக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் காம்ஸ்டார் போன்ற நிறுவனங்களும், தொழிற் சங்கங்களை அங்கீகரிக்கக் கூடாது, என நிபந்தனை விதிக்கிறது. இப்போது தொழிற் சங்கங்கள் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் வளருவது, தனது மூலதனத்திற்கு ஆபத்து என அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகிறது.

நாடுகள்          கூட்டு பேர உரிமைக்கு ஆட்பட்ட      பொது சுகாதாரம்
                   தொழிலாளர்கள் சதம்                  அனுபவிக்கும் மக்கள்

ஆஸ்திரேலியா             50%                               100%
பிரேசில்                    36%                               80%
கனடா                      32.6%                             100%
ஃப்ரான்ஸ்                   95%                              99.9%
ஜப்பான்                     23.5%                             100%
தென் ஆப்பிரிக்கா            42%                              80%
ஸ்பெயின்                   81%                              99.8%
ஸ்வீடன்                    92%                              100%
பிரிட்டன்                    35%                              100%
அமெரிக்கா                  22%                               25%

இந்தியா குறித்து நாம் அறிந்தது, 8% தொழிலாளர் தான் அணிதிரட்டப் பட்டத் தொழிலில் உள்ளனர் என்பதாகும். அதிலும் கூட்டு பேர உரிமை உடையோர், 4% கூட இருக்காது என்பதும், நாம் அறிந்ததே. அதேபோல் அரசு பொது சுகாதாரத் திட்டத்தை அணுபவிக்கும் இந்தியர்கள், என்ற விவரத்தை பொருத்தளவில் 20%க்கு குறையாமல், 75% க்கு அதிகமாகாமல், இருக்கும் என காண கிடைக்கும் விவரம், அரசே சொல்வதற்கு வெட்கப்படுகிறதோ எனத் தோன்றுகிறது.

மேற்படி விவரம் மூலம், மருத்துவச் செலவிற்கே இந்தியாவில் பெரும் தொகையை செலவிட வேண்டியவர்களாகத் தொழிலாளர்கள் உள்ளனர். தனியார் துறையில் அணிதிரட்டப் பட்டத் தொழிலாளர்கள், மாதச் சம்பளம் பெறுவோர் எனக் கருதப் பட்டாலும், வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருப்பதில்லை. அதேபோல் வீட்டு வாடகைக்கும், குழந்தைகளின் கல்விக்கும், பெரும் தொகையை செலவிட வேண்டியவர்களாகவும், மேற்படித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த அடிப்படைத் தேவைகளை கூட்டு பேர உரிமை மூலமே பெறமுடியும். அதற்கு தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்தை கேரளத்தில் உள்ளதை முன் மாதிரியாகக் கொண்டு, மாநில அரசு நடப்புக் கூட்டத் தொடரிலேயே இயற்ற வேண்டும்.   

நன்றி: தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக