வியாழன், 20 ஜூன், 2013

சீனப் பயணம்


கூட்டு பேர உரிமையும் – பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும்!!

உலகின் பல பகுதிகளில் தொழிலாளி வர்க்கம் தனது உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. நெருக்கடியில் இருந்து மீள்வது என்ற பெயரில், இரக்கமற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கு சலுகைகள் தந்து பாதுகாக்கும் அரசுகள் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தொழிற் சங்க ஊழியர்களுடனான ஆய்வுப் பட்டறையை, மக்கள் சீனத்தில் ஐந்து தினங்கள் நடத்தியது. 10 நாடுகளில் உள்ள 16 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளாக 24 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 11 பெண் தொழிற்சங்கத் தலைவர்களும் அடங்குவர். இந்தியாவில் இருந்து ஐ.என்.டி.யு.சி சார்பில் ஒருவரும், சி.ஐ.டி.யு சார்பில் நானும் கலந்து கொண்டோம்.

மக்கள் சீனத்தின் தொழிற் சங்கமான, அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, மேற்படி ஆய்வுப் பட்டறையை நடத்தித் தரும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தது. துவக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு நிகழ்ச்சி ஆகியவற்றையும் சேர்த்து 13 அமர்வுகள் நடத்தப் பட்டன. ”சம்பள உயர்வு – வேலை வாய்ப்பு அதிகரிப்பு – நெருக்கடியில் இருந்து மீள்தல்” என்பது பொதுவான தலைப்பாக இருந்தது. 2008 ல் வெளிப்பட்ட பொருளாதார நெருக்கடி, நீடித்து நிற்கிற நிலையில், பலமானத் தொழிற்சங்க அமைப்புகளும், அதன் மூலம் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு பேர உரிமைகளும் பலம் பெற வேண்டிய தேவை உலக அளவில் உருவாகியுள்ளது. மனிதவளம் நிறைந்த ஆசியா கண்டம் மூலதனத்தை பெருமளவில் ஈர்த்து வருகிறது. ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில், வலுவான கூட்டு பேர உரிமை மூலம், நாகரீகமான ஊதியத்தையும், வேலையையும் பெற முடியும், என்பதை நிறுவுவதே ஆய்வுப் பட்டறையின் பிரதான நோக்கமாகும்
.
பல்வேறு நாடுகளின் அனுபவங்கள்:

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட இரண்டு ஆண்டுகள் காலத்தில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் தெருவில் நாங்கள் 99 சதம் என்ற முழக்கத்துடன் நீடித்து நடைபெற்ற போராட்டம் மிக முக்கியமாக கவணிக்கப் பட வேண்டிய ஒன்று. செல்வ வளம் மிகக்குறைவான நபர்களின் கைகளில் சிக்குண்டுள்ளது. அதேநேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அரசுகள் தொழிலாளர் உரிமைகளில் கை வைப்பதை ஏற்க முடியாது என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்
.
மேற்படிக் கோரிக்கைக்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள் பின்பற்றிய கொள்கைகள், அசமத்துவத்தை மிகப் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது ஆகும். அசமத்துவத்தின் அளவு உயர்வதை கட்டுக்குள் வைக்க பெருமுதலாளிகள் மீதான வரிவிதிப்பில் சலுகைகள் கூடாது என்பது, மிகமுக்கியமான, ஒரு அணுகுமுறை, ஆனால் வளர்ந்த நாடுகளில் இந்த அணுகுமுறை தொடர்ந்து மீறப்பட்டுள்ளது. இதன் விளைவு பில்லியன் டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் உயர்ந்தது.

 சர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஐ.எல்.ஓ தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு. பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகள் என்று குறிப்பிடப்படுகிற, 16 ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்கான வருவாய் சராசரி 1970 களில் 70 என்ற அளவில் இருந்து 1980 காலம் வரையிலும், சராசரி 80 என்ற அளவை நோக்கி உயர்ந்தது. ஆனால் 1980 களில் சரியத் துவங்கியது. 2010ம் ஆண்டில் தொழிலாளர்களின் வருவாய் சராசரி 60 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தொழிலாளர் வருவாய் சராசரி 1970 களில் 70 என்பதில் இருந்து 1980களில் 75 என உயர்ந்து பின்னர் 2010ல், 55 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 70 ஆக இருந்த வருவாய் சராசரி, படிப்படியாகக் குறைந்து 2010ல் 53என குறைந்துள்ளது. அதாவது, வளரும் நாடுகளின் தொழிலாளர் வருவாய் 1970 காலத்தில் இருந்து படிப்படியாகக் குறைய மட்டுமே செய்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் போல் 1970 முதல் 80 காலத்தில் ஏற்பட்ட உயர்வையும் அனுபவிக்கவில்லை என்பது துயரம் தரும் செய்தியாகும்.

அனால் உற்பத்தித் துறையில் 1999ன் போது இருந்த உற்பத்தி அளவு 2010ன் போது, 15 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. தொழிலாளர் ஊதியமோ, கடந்த காலங்களை விட மிகக் குறைவாகவே உயர்வு பெற்றுள்ளது. தொழிலாளர்களுக்கான வருவாயில் ஏற்பட்டுள்ள குறைபாடு, உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை நுகர்வதிலும்  குறைபாட்டை உருவாக்குகிறது. இது மொத்தத்தில் உற்பத்தித் துறையைப் பாதிக்கவும், வேலை வாய்ப்பின் மீது உறுதியற்ற நிலையையும் ஏற்படுத்தவும் செய்கிறது. இதன் காரணமாக நெருக்கடியில் இருந்து மீள்வதற்குப் பதிலாக, மேலும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் தன்மை 
அதிகரித்து வருகிறது.

மேற்படி நிலைமைகளின் தாக்கம் தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதே போல் அமைப்பு ரீதியில் திரட்டப் பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பலமடங்கு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்தினை மிகப் பெரிய அளவில் தாக்கியுள்ளது. 2008 ல் 6.9% மாக இருந்த வேலையின்மை, 2013 மார்ச் வரையில் மட்டும் 10.9% மாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை 23.5 சதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. காண்ட்ராக்ட் முறையின் மூலமான வேலை வாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு என்று சொல்லிக் கொள்கிற வேலை வாய்ப்பும் அதிகரிக்கவும், கூட்டு பேர உரிமையைப் பறிக்கிற நிலையும் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது.  

மக்கள் சீனத்தின் அனுபவம்:

சீனா மனிதவளம் நிறைந்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ள நாடு என்பது அறிந்த ஒன்று. ஆண்டு ஒன்றுக்கு, 55.4 சதமான பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்துள்ளது. 23 சதமான பட்டதாரிகள், தாங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இல்லாததால், தற்போது வேலை செய்ய விரும்பவில்லை என்பதையும், 21 சதமான பட்டதாரிகள் வேலையற்றவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். இது 2009 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தரும் தகவலாகும். மற்றொரு புறம், கடலோர மாகாணங்களிலும், புதிய தொழில் வளர்ச்சி உருவாகும் நகரப் பகுதிகளிலும் வேலைக்கான ஆள் பற்றாக்குறை உருவானது. அதேபோல் தொழில் வளர்ச்சி பகுதிகளை நோக்கி இடம் பெயர்வது அதிகரிப்பதும் இக்காலத்தில் முன்னுக்கு வந்த பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஃபாக்ஸ்கான் போன்ற மின்னனு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவானது, அரசுக்கும், ஏ.சி.எஃப்.டி.யு விற்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கியது.

இவைகளை எதிர் கொள்ள அரசு மற்றும் ஏ.சி.எஃப்.டி.யு ஆகியவை இணைந்து எடுத்த சில முயற்சிகள் பலன் தந்துள்ளன. வேலையாள் பற்றாக்குறை தனியார் நடத்தும் பெரும் நிறுவனங்களில் உருவாக அடிப்படைக் காரணம், போதுமான ஊதியம் வழங்கப் படாதது என்பதைத் தனியார் நிறுவனங்களுக்கு சுட்டிக் காட்டின. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு 147 அமெரிக்க டாலர் (900 யுவான்) அளவிற்கு வழங்கப் பட்ட ஊதியம் 2010ல் 197 டாலராகவும் (1200 யுவான்), அடுத்த ஆண்டில், 328 டாலராகவும் (2000 யுவான்) உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதேபோல் ஹோண்டா நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து, மாதாந்திர ஊதியம் ஆண்டுக்கு 500 யுவான் (82 டாலர்) அளவிற்கு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இது இளம் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் அரசு சட்டரீதியில் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கவும் அதன் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்ததால் முன்னேற்றம் உருவானது. அதாவது, குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு 1200 யுவான் (197 டாலர்), (11520 ரூபாய்) என்பதாகத் தீர்மானிக்கப் பட்டது.

மேற்படி நடவடிக்கை, இளம் தொழிலாளர்களிடம் தனியார் துறையில் வேலையில் சேரும் ஆர்வத்தை உருவாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும் பெருமளவில் பயன்பட்டுள்ளது. ஆசியக் கண்டத்தில் ஆண்டு சராசரி ஊதிய உயர்வு 2008ல் 2.8 ஆக இருந்தது, 2009ல் 1.5 ஆக குறைந்தது. இதில் சீனாவின் பங்களிப்பான 0.8 சதத்தை கழித்து விட்டால், ஆசியா கண்டத்தின் ஊதிய உயர்வு வளர்ச்சி விகிதம் 0.7 சதமாக மட்டுமே இருக்கும். அதாவது மக்கள் சீனத்தில் ஊதிய உயர்வு விகிதம், ஒட்டு மொத்த ஆசிய நாடுகளின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கிறது. இதற்கு சீனாவில் உள்ள தொழிற் சங்க நடவடிக்கையும் ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள்.

மக்கள் சீனத்தில் 76.4 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஏ.சி.எஃப்.டி.யு என்ற அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில், 28.9 கோடித் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சீனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1992ல் 14.2 ஆக இருந்த போது, ஊதிய வளர்ச்சி விகிதம் 6.5 ஆக இருந்தது. 2012ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.1 இருக்கும் நிலையில், ஊதிய வளர்ச்சி விகிதம் 10.2 ஆக இருக்கிறது. இது தொழிற் சங்கத்தின் நடவடிக்கை என்பதாக இருந்தாலும், சீனாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது.

காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. வயோதிகர் பராமரிப்பு, சுகாதாரத் திட்டம், வேலையற்றோர் பராமரிப்பு, பணியின் போதான விபத்து, மகப்பேறு ஆகிய ஐந்து காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், அக்காலத்திற்குரிய வருவாய் ஏற்பாடும் இதற்குள் அடங்கும். பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்திலும் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமையும், கூட்டு பேர உரிமையும் உறுதி செய்யப் பட்டு உள்ளதால், தனியார் நிறுவனங்களிலும், தொழிலாளர் ஊதியத்திற்கும் இதர சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. இவைகளின் விளைவாக மக்களின் நுகர்வுத் தன்மையில் மேம்பாட்டை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்திக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் சீனாவின் நடவடிக்கை இருப்பதாலும், சீனாவின் ஏற்றுமதி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாலும் தான், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார நெருக்கடி சீனத்தைப் பாதிக்கவில்லை.

ஐ.எல்.ஓவின் ஆலோசனைகள்:


உலகப் பொருளாதார நெருக்கடி தீர்வது வேலை வாய்ப்பை அதிகரிப்பதிலும், ஊதிய உயர்வை மேம்படுத்துவதிலும் இனைந்து இருக்கிறது. ஊதிய உயர்வை பெறுவதற்கு கூட்டு பேர உரிமைகளை அரசுகள் உறுதி செய்வதும், அதன் மூலம் நுகர்வு சக்தி அதிகரிப்பதும், உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி அதிகரிப்பும் ஏற்படும். அமைப்பு சாராத் தொழிலாளர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய, குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்காண்டு பரிசீலித்து, பெருமளவில் உயர்வு காண வேண்டும். நாட்டின் ஊதிய பங்கீட்டில் உள்ள அசமத்துவத்தை குறைக்கும் ஏற்பாடு இல்லாமல், முதலாளித்துவம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள முடியாது. இதே கோரிக்கைகளை முன் வைத்து இந்தியாவில் சி.ஐ.டி.யு உள்ளிட்ட அனைத்துத் தொழிற் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு முன் வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சி.ஐ.டி.யு அகில இந்திய மாநாடும் இக்கோரிக்கைகளை முன்வைத்து விவாதித்தது முக்கிய அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக