செவ்வாய், 2 மே, 2023

சோசலிசம்

சோசலிசமே மாற்று….

 நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை, நன்றாக உணர முடிகிறது. சோசலிச சோவியத் யூனியன் புரட்சி மூலம் ஆட்சியை, பாட்டாளி வர்க்க தலைமையில் கட்டமைத்த போது, உலகில் காலினியாதிக்க நாடுகள் விடுதலை பெற்றது. இந்தியாவே இரண்டாம் உலகம் போரில் பாசிசம் வீழ்ந்து சோவியத் எழுச்சி பெற்ற நிலையிலேயே விடுதலை பெற்றது. இரண்டாம் உலகப் போருக்கு காரணமான, ஹிட்லரின் வகுப்புவாத வெறி சோசலிச சோவியத் யூனியன் மூலம் அடக்கப்பட்ட போது, உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் தங்களின் ஆட்சியில், நலத்திட்டங்களை முன்வைக்கும், சமூக அழுத்தம் உருவானது. ஜான் மொனார்டு ஹெயின்ஸ் என்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞர் இத்தகைய கொள்கைகளை, முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு உருவாக்கித் தர நியமனம் செய்யப்பட்டர். உலகம் முழுவதும் சோசலிச ஈர்ப்பு அதிகரித்த காரணத்தால், முதலாளித்துவம் அடக்கி வாசிக்க ஒப்புக் கொண்டது. சமூக பாதுகாப்பு திட்டங்களை முன் வைக்கும் சூழல் உருவானது. அந்த பின்புலத்தில் இருந்து தான் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் இன்றளவும் அனுபவிக்கும், உரிமைகள் ஆகும். சோசலிச சோவியத் உருவாக்கிய மக்கள் நலக் கொள்கைகளின் பிரதிபலிப்பே இதற்கு மூலகாரணம் என்பதை மறுக்க முடியாது. 


அதுவரையிலும் இருந்த வரம்ப்பற்ற உழைப்பு நேரம் மூலமான சுரண்டல் எட்டு மணி நேரம் என சோசலிச ஆட்சி தான் சட்டம் இயற்றியது. அதைத் தொடர்ந்தே அனைத்து முதலாளித்துவ நாடுகளும் வேலைநேர குறைப்பு குறித்து சட்டம் இயற்ற ஒப்புக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கு பின் சோவியத் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்த சூழலிலும், சில ஆண்டுகளிலேயே, வேலை நேரத்தை, வாரம் 36 மணி நேரம் என சட்டம் இயற்றியது. இது வேலை வாய்ப்பை அதிகரித்து, வேலையில்லை என்ற சூழல் உருவாவதை, சோசலிசம் தடுத்தது. இதுவும், உலகின் முதலாளித்துவ நாடுகளுக்கு அழுத்தம் அளித்தது. குறிப்பாக அமெரிக்கா வாரம், 40 மணிநேரம், ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளில் 35 அல்லது 36 மணிநேரங்கள் என சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு உழைப்பு சுரண்டல் குறைக்கப்படவில்லை எனில், தங்கள் நாட்டிலும், புரட்சி வெடிக்கும், பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்ற அச்சம் முதலாளித்துவத்திற்கு உருவானது. 


சோவியத் புரட்சி வெற்றி பெறுவதில் தொழிலாளி வர்க்கம் நகர் புறத்தில் பங்களிப்பு செய்தது போல், கிராமங்களில் முஜீக்குகள் (விவசாயி) மகத்தான பங்களிப்பு செய்தனர். நகரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தயாரித்த துண்டு பிரசுரங்களை, ஜார் ஆட்சியின் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி, கிராமங்களுக்கு எடுத்து சென்றதிலும், அதை விநியோகித்ததிலும், விவசாயிகளை மாபெரும் எழுச்சிக்கு தயார் செய்ததிலும், தொழிலாளர்களும், பெண்களும், மாணவர்களும் மகத்தான பங்களிப்பு செய்தனர். அதன் விளைவாகவே நிலமற்றவர்களுக்கு நிலம் சொந்தமாகவும், பின்னர் கூட்டுப் பண்ணை விவசாயம் செழிக்கவும், விவசாயத்தில் நவீன வளர்ச்சி ஏற்பட்டு பெரும் முன்னேற்றம் ஏற்படவும் காரணமாக அமைந்தது. வாழ்க்கை முறையிலும் வசதிகளை அனுபவிப்பதிலும் கிராமம், நகரம் என்ற வேறுபாடுகளை களைந்த ஆட்சியாக சோசலிச சோவியத் யூனியன் அமைந்தது. இந்த வளர்ச்சிப் போக்கும் உலக முதலாளித்துவ நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 


உற்பத்தி மாற்றங்கள்:


சோவியத் தொழிலாளி – விவசாயி ஒற்றுமையும், உறுதியும் இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. தமிழ் மார்க்சிஸ்ட்டில் 2005 ஆண்டு வெளிவந்த கட்டுரை சில விவரங்களை குறிப்பிடுகிறது. ஸ்டாலின் 1933ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பெருமையோடு சொன்னார். இதற்கு முன்பு இரும்பு எஃகு தொழிற்சாலை ஏதும் இல்லை. இப்போது இருக்கிறது; முன்பு ட்ராக்டர் தயாரிக்கும் ஆலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு, கார் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு ரசாயன தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது. இந்த பொருளாதார அடிப்படை தான் பின்னர் பாசிசம் தொடுத்த தாக்குதலை எதிர்கொள்ளும் பலத்தினை சோவியத் யூனியனுக்கு கொடுத்தது. மார்ஷல் ஜூகோவ் எழுதுகிறார். வரலாறு ரீதியாக சரி என்று நிரூபிக்கப்பட்ட கட்சியின் விவேகம், மதிக்கூர்மை, வளர்ச்சிக்காக தேர்ந்தெடுத்த பாதை, பணியிடத்தில் தொழிலாளிகளும் மற்ற பகுதி மக்களும் காட்டிய வீரம், தியாகம் – இவைகள் தான்இரண்டாம் உலகப் போரில் நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன.


தொழில்மயமாக்கலும் விவசாயத்தில் கூட்டுப் பண்ணை முறையும் ஒன்றோடொன்று இணைந்த பொருளாதார வளர்ச்சியினை சோவியத் யூனியன் கண்டது. கூட்டுப் பண்ணை தொழில்மய மாக்குதலுக்கு தேவையான மூலதனத்தை கொடுத்தது புதிய பொருளாதார கொள்கையிலிருந்து வேகமாக தொழில்துறை வளர்ச்சிக்கு போக வேண்டுமென்ற முடிவு, பெரிய அளவில் கூட்டுப் பண்ணை விவசாயத்தின் அடிப்படையில் தான் எடுக்க வேண்டிய நிலை எழுந்தது. 


1934ல் மொத்த விவசாயக் குடும்பங்களில் 71.4 சதம் கூட்டுப் பண்ணைக்குள்  வந்தார்கள்; பல இடங்களில் கொண்டு வரப்பட்டார்கள் என்பதும் உண்மை. 1926ம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின் படி சோவியத் யூனியனின் 82 சதம் மக்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்தார்கள். தொழில்மயமாக்கலின் வேகம் 1928லிருந்து 1939க்குள் சுமார் 25 லட்சம் மக்களை கிராமத்திலிருந்து தூக்கி நகரங்களில் வைத்தது. தொழில்மய மாக்கலும் விவசாய கூட்டுப் பண்ணை முறையும் பதிவு செய்த அளப்பரிய வெற்றி. அன்று சோவியத் சந்தித்த சவால்களை எதிர்கொள்ள கூட்டு விவசயாமே துணை கொண்டு நிறைவேற்றப் பட்ட தொழில்மயமாக்கலுக்கு மாற்று வழி ஏதேனும் இருந்ததா? ஐரோப்பாவிலேயே மிகவும் பின் தங்கிய நாடு, திரட்டப்பட்ட மூலதனம் ஏதுமில்லாத நாடு, முன் அனுபவம் ஏதுமின்றி ஒரு புதிய அமைப்பை உருவாக்க முனைந்த நாடு, பூகோள ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏகாதிபத்தியம் விரித்த சதி வலையினை எதிர்நோக்கும் நாடு – எந்த வழியினை தேர்ந்தெடுத்திருக்க முடியும்? 1929லிருந்து முதலாளித்துவ உலகம் பெரும் வீழ்ச்சியினை சந்தித்துக் கொண்டிருந்த காலம் அது; இரண்டரைக் கோடி தொழிலாளர்கள் வேலையினை இழந்து வீதிக்கு வந்தனர். இந்த பின்னணியில் சோவியத் பரிசோதனை உலக மக்களை கவ்விப் பிடிக்கத் துவங்கியது. முதலாளித்துவ உலகம் பல்வேறு வகையிலான மூலதன திரட்டலுக்கு வாய்ப்பு இருந்த நிலையிலும் தொழில் முன்னேற்றத்தை காண பல ஆண்டுகள் பிடித்தன; ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே வெளிநாட்டு மூலதனம் கடன் உதவி ஏதுமில்லாமல் 1930ம் ஆண்டிலேயே தொழில் வளர்ச்சியில் ஐரோப்பாவின் முதல் இடத்திலும் உலகின் இரண்டாவது இடத்திலும் சோவியத் யூனியனை கொண்டு வந்து நிறுத்தியது.


இன்றைய சூழலில் சோசலிசமே மாற்று:


பெரும் நோய்த் தொற்று காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவ கொள்கையே இந்த நோய்த் தொற்றை எதிர் கொள்ள முடியாமைக்கு காரணமாகும். பொதுசுகாதாரத்தை தனியாருக்கு தாரை பார்த்து அரசு வேடிக்கை பார்ப்பது, முதலாளித்துவ லாபவெறி காரணமாக இயற்கை பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவது, மூன்றாவதாக உலகமயமாக்கல் கொள்கை உணவு, உள்ளிட்ட பழக்க வழக்கங்களில் ஏறபடுத்திய மாற்றங்கள் ஆகியவையே, இந்த நோய் தொற்றை எதிர் கொள்ள முடியாமைக்கான காரணம், என கூறுவதை ஆட்சியாளர்கள் கவனிப்பதில்லை.  இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக, சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை, வேளாண் சட்டங்களில் மாற்றம், தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் ஆகியவை முதலாளித்துவத்தின் கொள்ளை லாபத்தை உயர்த்தவே. மேலும் மேலும் முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு துணை போவதை, பாஜக ஆட்சியாளர்கள் சாதனையாக குறிப்பிடும் காலத்தில், சோசலிச சோவியத் தின் சாதனைகள், பேசப்பட வேண்டியுள்ளது. 


உலகம் இந்த நோய் தொற்றை எதிர் கொண்ட வகையிலும் கூட சோசலிசமே சிறந்தது என்பதை நிரூபித்துள்ளது. சோசலிச கொள்கையை அமலாக்கு கம்யூனிச நாடுகளில் பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசு வசம் இருப்பதால், கொரானா பதிப்பில் இருந்து விரைந்து மீண்ட உண்மையை காண முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் உள்ள உலக சுகாதார மையம், சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா ஆகிய நாடுகளில் நோய்த் தொற்று விவரங்களை சரியாக அளித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் உயிர் பலியை அதிகரித்து இருப்பதையும் காண முடிகிறது. இது சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்குமான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. 


நியுஸிலாந்து நாட்டில், தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், அமெரிக்காவில் டிரெம்ப் தோல்வியை சந்திக்கும் நிலை உருவானதற்கும் நோய்த் தொற்று கட்டுப்படுத்த படுவதே காரணம். நியூசிலாந்த்து வெற்றிகரமாக கையாண்டது. அமெரிக்கா பொதுசுகாதார பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைத்து வேடிக்கை பார்த்தது. டிரெம்ப் பிரச்சாரத்தில் பங்கெடுத்தவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு ஆளானதை பிடேன், பெரும் பிரச்சாரமாக மாற்றியதையும் பார்க்க முடியும். 


மற்றொரு தேர்தல் முடிவான, பொலிவியாவில் மீண்டும் சோசலிச கட்சி வெற்றி பெற்றது. ஏற்கனவே நான்கு முறை வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஈவோமோரேல்ஸ் அமெரிக்க ராணுவ நடவடிக்கையால், ராஜினாமா செய்ய வைக்கப் பட்டு, அர்ஜெண்டைனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஆனால் அவர் அவர் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த லூயிஸ் அர்ஸ் ஓராண்டு இடைவெளியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது அமெரிக்காவிற்கு பெரும் தோல்வி என கூறப்படுகிறது. ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள லூயிஸ் அர்ஸ், தனது ஆட்சி கியூபா, வெனிசூலா, ஈரான் ஆகிய நாடுகளுடன் உறவை பலப்படுத்தும் என அறிவித்துள்ளார். நான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைபாவையாக இருக்க மாட்டேன் என்பதை தெளிவு படுத்தியுள்ளார். 


எனவே உலகம் தற்போதைய துன்பத்தில் இருந்து விடுதலை பெறவும், தொடர்ந்து முன்னேற்றகரமான வாழ்க்கைமுறையை மேம்படுத்திக் கொள்ளவும், சோசலிசமே தீர்வாக முடியும். அந்தவகையில் இந்திய மக்கள் வகுப்புவாத பாஜகவை முறியடிப்பதும், இடதுசாரி ஜனநாயக சக்திகளை ஆதரிப்பதுமே ஒரே வழியாகும். அதற்கான போராட்டத்தை விவசாயிகளும், தொழிலாளர்களும் கூட்டாக தீவிரப்படுத்துவதும் இன்றைய தேவை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக