புதன், 7 டிசம்பர், 2011



   அங்காடித் தெருவில் அல்லாடும் தொழிலாளர்!!

தீபாவளி கொண்டாட்டம் முடிந்த இரண்டு நாளில், நீதிமன்றத் தலையீடு காரணமாக, சி.எம்.டி.எ கட்டுமான வரம்பு மீறுதல் குற்றச்சாட்டுக்கு ஆளான, 25 கடைகளை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சீல் வைத்து உள்ளனர். ஆட்சியாளர்கள் எந்த நோக்கத்தில், யார் நலனில் அக்கறை கொண்டு செயல் படுகிறார்கள் என்பதெல்லாம், நாம் அறிந்த செய்தி. இருந்த போதும் முன்னுக்கு வந்துள்ள கேள்விகள் குறித்து தொழிற் சங்க இயக்கங்கள் மட்டுமே கூடுதலாக விவாதிக்க முடியும்.

முதல் கேள்வி நீதிமன்றம் தலையீடு செய்து இருக்காவிட்டால், மாநில அரசு, சி.எம்.டி.எ, மின்வாரியம், குடிநீர் வாரியம் ஆகியோர் என்ன செய்திருப்பார்கள்? நிச்சயமாக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், விருப்பத்திற்கு கொள்ளையடிக்க, மேற்படிக் கடைக் காரர்களுக்கு அனுமதியளித்து இருப்பார்கள். இரண்டு, அங்கு விதிமீறல் நடந்த உண்மையை ஏன் இவ்வளவு நாட்களாக கண்டு கொள்ளவில்லை. பல அடுக்கு மாடி, உரிய காற்றோட்டம் இல்லாமை, விபத்து நடந்தால் நெரிசல் ஏற்படாமல் மக்களை காக்கும் ஏற்பாடு  போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? குறிப்பாக பண்டிகை நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுக்க என்ன கண்காணிப்பு வசதி செய்யப் பட்டிருந்தது? மூன்று அங்கு, அளவிற்கு அதிகமான கூட்டம் சேருகிறது, இதன் காரணமாக, பொருள் வாங்க வருகிற பெண்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர், எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போராட்ட குரல்களை, ஒரு போதும் கண்டு கொள்ளவில்லை. நுகர்வோரின் பாதுகாப்பு கருதி அரசு ஏன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வில்லை?

நான்கு, மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் அனைத்தும், ஏறத்தாழ ஒரு கொத்தடிமை முறை கொண்ட தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது, என்ற குற்றச்சாட்டாகும். 6 கடைகளில் மட்டும் சுமார் 9 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர், என்ற செய்தி அரசுக்குத் தெரியுமா? தெரியாதா? இது இன்றைய பெரும் தொழிற்சாலைகளுக்கு இணையான எண்ணிக்கை. இத்தகைய தொழிலாளர்கள் மீது, உழைப்புச் உரண்டலையும், பாலியல் சுரண்டலையும் இக்கடை உரிமையாளர்கள் நிகழ்த்துகிறார்கள் என்பதைப் புகாராக அளித்த போதும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப் பட வில்லை. அங்காடித் தெரு திரைப் படம் வெளிவந்த நாட்களில் தொழிலாளர் நிலை குறித்து பல்வேறு விவாதங்கள் தலைதூக்கியது. ஆனாலும் ஒரு சோதனை நடவடிக்கையைக் கூட அரசோ அல்லது தொழிலாளர் துறையோ ஏன் மேற்கொள்ளவில்லை?

ஐந்து, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947ன் படி, தமிழ் நாடு அரசு நியமித்த ஆய்வாளர் மேற்படி கடைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தியது உண்டா? ஆம் எனில் அதன் மீது ஏதாவது நடவடிக்கைகளை தொழிலாளர் துறை மேற்கொண்டுள்ளதா? இந்த சட்டத்தின் படி மாலை 7 மணிக்கு மேல் தொழிலாளர்கள் பணிபுரியக் கூடாது என இருந்தாலும், சட்ட விதி பின்பற்றப் படுவதில்லை என்பது மாநில அரசுக்கும் தொழிலாளர் துறைக்கும் தெரியுமா? ஒருவேளை 7 மணிக்கு மேல் தொழிலாளியின் தேவை இருக்கிறது எனில், வேலை வாங்கப்படும் தொழிலாளிக்கு கூடுதல் பணி நேரம் என்ற முறையில் இரட்டிப்பு சம்பளம் தரப் படுகிறதா? இது போன்ற விவரங்கள் சேகரிக்கப் பட்டிருக்க வாய்ப்பே இல்லை. அப்படி சேகரித்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப் பட்டதில்லை.

ஆறு, இக்கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நோய்க்கால விடுப்பு, ஆண்டு விடுமுறை போன்ற சட்டத்தின் படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டதா? என்பது தெரியாது. அப்படித் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பான தொழிற்சங்கம் அமைக்கும் சூழல் மேற்படித் தொழிலாளர்களுக்கு இல்லை. வரம்பை மீறுகிற போது வேடிக்கை பார்த்த அரசு, அந்த நிறுவனங்களில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்ட விதத்தையும் வேடிக்கை பார்த்தது. நீதிமன்ற உத்தரவு மூலம் தெருவில் நிற்கும் தொழிலாளர்களையும் வேடிக்கைப் பார்க்கிறது. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல், தொழிலாளர்கள் அவலத்தை அனுபவித்து வருகின்றனர்.

வரம்பு மீறிய கட்டிடங்களில் தொழிலாளர்கள் லிஃப்ட் வசதியை அனுபவிக்க முடியாது. படிகளில் பலமுறை மேலும் கீழுமாக நடக்க வேண்டும். இன்று கடைகள் மூடப்பட்டு வாழ்க்கைத் தேவைக்காக, வேலை வேண்டுமே என்ற முறையில், கடை கடையாக நடக்கின்றனர். வேலையில் இருந்த போதும் நடை. வேலையில்லாத நிலையிலும் நடை. தொழிலாளர்களில் பெரும் பான்மையோரின் குடும்பப் பின்னனியை அங்காடித் தெரு திரைப்படம் அப்படியே வெளிப்படுத்தி இருந்தது. குடிக்கு அடிமையான அப்பா, அப்பா கைவிட்ட குடும்பம், அப்பா மறைந்த நிலையில் குடும்பத்தின் வறுமை, இரண்டுக்கும் மேல் பெண் குழந்தைகள் உள்ள குடும்பம், தொழில் நொடிந்து பிழைக்க வழி இல்லாத குடும்பம், விவசாய நஷ்டத்தினால் வறுமைக்கு ஆளான குடும்பம் என பலவகைகளில் தங்களின் இளமைப் பருவத்தை தொலைத்தவர்கள் தான் தொழிலாளர்களாக, சீல் வைக்கப் பட்டக் கடைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். வறுமை மற்றும் சாதி அடையாளங்களைக் காட்டி உழைப்பைக் கொள்ளையடிக்கும் சூழல் இந்தியாவில் அதிகம் என்றாலும், சென்னை தி. நகரில் மிக அதிகமாக இருந்தது.

இன்று கடைகள் மூடப்பட்ட நிலையில் கடை உரிமையாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள், கடைகளை மீண்டும் திறக்காமல் சம்பளப் பட்டுவாடா செய்ய இயலாது என்கின்றனர். இவர்கள் தான் சட்டத்தின் காரணமாக “பிரதி மாதம் 5 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப் படும்” என எழுதி வைப்பவர்கள். கடை மூடலுக்கும் கொடுக்கப் படவேண்டிய சம்பளத்திற்கும் என்ன சம்மந்தம்?. தொழிலாளர்களின் உழைப்பு இல்லாமல், மேற்படிக் கடைகளின் விஸ்தரிப்பு இந்த அளவிற்கு நடைபெற்றிருக்குமா? பல ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போதுமான விடுமுறை கூட கொடுக்காத நிலை இருந்தது. சீல் வைக்கப் பட்ட இந்த காலத்தினை விடுமுறையில் ஏன் கழித்துக் கொள்ளக் கூடாது. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் அத்தியாயம் 7 பிரிவு 34ல் என்னென்ன காரணங்களுக்காக சம்பளம் பிடித்தம் செய்யலாம் என்பது குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதில் சொல்லப் பட்ட எந்த காரணங்களும் பொருந்தாத நிலையில், தொழிலாளருக்கான கடந்த மாதச் சம்பளம் உடணடியாக, கொடுக்கப் படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சீல் வைக்கச் சென்ற அதிகாரிகள், நுகர்வோர் வருவதற்குள் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனத்திட்டமிட்டு செயல் பட்டதாக தெரிவித்தனர். கடைகளை மூடினால், 20 ஆயிரம் தொழிலாளர்கள் என்ன ஆவார்கள் என்பது பற்றி ஏன் சிந்திக்கவோ, செயல்படவோ இல்லை. இந்தியாவில் டன்லப் டயர் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், ஆலைமூடலை சந்தித்த போது, மேற்கு வங்கத்தில் இருந்த இடது முன்னணி அரசு, இந்தியாவில் முதல் முறையாக தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உத்திரவிட்டது. தமிழ்நாடு அரசு அது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பெண் தையல் தொழிலாளி கடை மூடப்பட்டதால், தனக்கு ஒரு நாளைக்கு கிடைத்து வந்த 450 ரூபாய் சம்பளம் நின்று விட்டது. குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தும் காலம் வந்து விட்டது என்ன செய்வது எனத் தெரியவில்லை என்று புலம்பியிருக்கிறார். இது போல் முகம் தெரியாத தொழிலாளர் கூட்டம் வாடிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், சீல் வைக்கப் பட இருக்கும் விவரம் தெரியாமல் தைக்கக் கொடுத்த துணியை வாங்க இயல வில்லையே என நுகர்வோரின் ஒரு பகுதியினர் புலம்புகின்றனர்.      

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும். முதலில் சீல் வைக்கப் பட்ட கடைகள் திறக்க இயலாது என்பதை நீதி மன்ற தீர்ப்பு தெளிவு படுத்தி இருக்கிறது. திறக்க வேண்டுமானால் வரம்பு மீறல்களை, இடிப்பதன் மூலம் சரி செய்யப் பட வேண்டும். இது குறித்து அரசு காலதாமதம் செய்யாமல் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காண வேண்டும். அடுத்து இதுவரை சென்னையில் கோயம்பேடு, மூர் மார்க்கட் தவிர வேறு எதுவும், சிஎம்டிஎ திட்டமிடலால் உருவாக்கப் படவில்லை. இன்றைய தி. நகரோ, புரசைவாக்கமோ, எம்.சி.ரோடு ராயபுரமோ, தானாக உருவானது தான். மேல் நடுத்தர வர்க்கத்திற்கான ஸ்பென்ஸர், சிட்டி செண்டர், ஸ்கை வாக், எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற பிரமாண்ட மால்கள் அளவுக்கு இல்லை யெனினும், மாநில அரசு திட்டமிட்ட மார்க்கட் பகுதிகளை உருவாக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நுகர்வோரின் துணிகள் உள்ளிட்ட பொருள்களைத் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப் படவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தின் தலையீடு என்ற பெயரில் தொழிலாளர் மீது நடத்தும் மற்றும் ஒரு தாக்குதலாக மட்டுமே சீல் வைப்பு கருதப் படும்.

நன்றீ: சிஐடியு செய்தி. டிசம்பர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக