திங்கள், 7 மார்ச், 2016

ஆணுக்கு கடவுள் கொடுத்த பரிசுப் பொருளா பெண்?
எஸ். பிரேமலதா

“WOMAN means
W – WONDERFUL MOTHER
O – OUTSTANDING FRIEND
M – MARVELLOUS DAUGHTER
A – ADORABLE SISTER
N – NICEST GIFT TO MEN FROM GOD”

பல வாட்ஸ்-அப் குழுக்களிலும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள ஊடகங்களிலும் இதுபோன்ற பல பதிவுகளைப் பார்க்கிறோம். பெண்ணினத்தைப் பெருமைப்படுத்துவதாகப் பறைசாற்றிக் கொண்டு, பதியப்படும் இது போன்ற பதிவுகள், எதார்த்தத்தில் எரிச்சலூட்டவே செய்கின்றன. சற்றே ஆழமாகப் பார்த்தால், ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ போன்ற பிற்போக்குத் தனமான திரைப்படப் பாடல்களின் நவீன வடிவம் தான் இது போன்ற பதிவுகள் என்பது புலப்படும்.

இப்பதிவுகளுக்கு எதிராக யாராவது மறுத்துப் பேசினால், “பெண்களைப் பற்றி பெருமையாகத் தானே பேசுகிறோம். எல்லாவற்றையும் எதிர்த்துப் பேசுவதே இந்தப் பெண்ணீயவாதிகளின் வேலையாகி விட்டது” என கங்கணம் கட்டிக் கொண்டு சச்சரவுக் களத்தில் இறங்கி விடுகிறது ஆணாதிக்கக் கும்பல். ’பெண்கள் ஆண்களுக்கு கடவுளால் அருளப்பட்ட பரிசுப் பொருள்’ என பெண்ணை ஒரு பொருளாக, அதுவும் ஆண்களுக்கு சேவகம் செய்வதற்கென்றே படைக்கப்பட்ட கருவியாக வரையறுக்கும் இந்த பழமைவாதப் பிம்பத்தை எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாதெனும் மறுப்பை ஆணித்தரமாக பதிய வேண்டியுள்ளது.
’கடவுள் முதலில் படைத்தது ஆணைத்தான். ஆணின் விலா எலும்பிலிருந்து, ஆணின் தேவைகளை நிறைவேற்ற படைக்கப்பட்டவள் தான் பெண்’ என  அறிவியலுக்குப் புறம்பாக, மதவாதிகளின் பழங்கதைகளைப் பேசி பெண்களை தொடர்ந்து அடிமைப்படுத்துவது இயலாத காரியம். எனவே தான் பெண்கள் மீதான பிற்போக்குத் தனமான தாக்குதல்கள், முற்போக்கு முகமூடிகளைத் தரித்துக் கொண்டு இவ்வாறு வலம் வருகின்றன.

பெண்களைத் தாயாகவும், தமக்கையாகவும், மனைவியாகவும், மகளாகவும் எல்லாக் கட்டங்களிலும் ஆணைச் சார்ந்தவளாகவே முன்வைக்கும் ஆணாதிக்கக் கருத்தோட்டத்தின் அப்பட்டமான நீட்சியே இவை போன்ற பதிவுகள். இந்த சார்புநிலைச் சித்தரிப்புகளில் புளகாங்கிதம் அடைந்து போகும் மடமையைத் தாண்டி, வெகுதூரம் பயணித்து வந்து விட்டனர் தற்கால நவீனயுகப் பெண்கள். பல யுகங்களாக ’நோ எண்ட்ரீ’ போர்டு போட்டு பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல துறைகளில் கால் பதித்து, வாய்ப்பு கிடைத்தால் வானமும் தொட்டு விடும் தூரம்தான் என நிரூபித்து வருகின்றனர் இன்றைய பெண்கள். இதை வைத்து ஒட்டு மொத்த பெண்குலமும் முன்னேறி விட்டது என ஆனந்தக் கூத்தாட முடியாதெனினும், பெண்குலம் ஓரளவு முன்னேற்றப் பாதையில் தடம் பதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இந்த  முன்னேற்றத்தை அடைவதற்கு பெண்குலம் கடந்து வந்த கரடுமுரடான பாதை எத்தகைய கொடியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியதாகிறது. ஆதியில் தாய் வழிச் சமூகத்தில் ஓங்கியிருந்த பெண்களின் நிலை, பிறகு உடைமைச் சமுதாயத்தில் இரண்டாம் தர நிலைக்குத் தள்ளப்பட்டு, ஒட்டுமொத்த பெண்குலமும் அடிமைப்படுத்தப் பட்டது. பெண்வழிச் சமூகமாக இயங்கி வந்த நம் சமூகம், ஆணாதிக்கச் சமூகமாக மாற முக்கியக் காரணியாக அமைந்தது அறிவு எனும் ஆயுதத்தை பெண்ணிடமிருந்து முற்றிலுமாக அபகரித்துக் கொண்ட ஆணாதிக்க சூழ்ச்சி தான்.  சுய புத்தியே இல்லாத பேதைகளாக பெண்களை மாற்றியது தான்.

’காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ, கறைச் சேற்றால் தாமரை தான் வாசம் போமோ’ என பல்வேறு தடைகளைத் தாண்டி, தன் அறிவை வென்றெடுத்து மீண்டும் வசப்படுத்தியது பெண்குலம். ஆண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப் பட்டது தான் கல்வி என்பது அனைவரும் அறிந்ததே. சர்வதேச அளவில் கூட, இன்று வரையிலும் வழக்கத்தில் இருக்கும் பேச்சிலர்ஸ் டிகிரி (இளங்கலை), மாஸ்டர்ஸ் டிகிரி (முதுகலை), பெல்லோஷிப் போன்றவை இதற்குச் சான்று. ஆண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட அறிவுத்துறையில் பெண்கள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. உதாரணத்துக்கு, 1907ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மாணவியாக முத்துலட்சுமி ரெட்டி சேர்ந்தபோது, அந்தக் கல்லூரியில் அவரைத் தவிர வேறு பெண்களே பயிலவில்லை. அவருடன் படித்த சக ஆண் மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தெரிவித்த கடும் எதிர்ப்புகளுக்கிடையேயும்,  பின்வாங்காது நின்ற முத்துலட்சுமி ரெட்டியின் மனவுறுதிதான் இறுதியில் வென்றது. பெண்ணினம் விடாது பற்றிக் கொண்ட இந்த மனவுறுதிதான், பெண்களின் இன்றைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல.

மறுபுறம், பெண்ணினத்தின் மீது தொடுக்கப்பட்ட சமூக ரீதியான தாக்குதல்களை திரும்பிப் பார்க்கும் போது குலை நடுங்குகிறது. இச்சமூகம் நிகழ்த்திப் பார்த்த பெண் சிசுக் கொலைகள் மனிதத்திற்குப் புறம்பானவை. அரேபிய நாடுகளில், பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொதிக்கும் பாலைவனத்தில் புதைத்துக் கொன்று விடும் பழக்கம் இருந்ததை  படித்த போது ஏற்பட்ட அதிர்வு விவரிக்க இயலாதது. பெண்ணுடல் மீதான தனது ஆளுமையை நிலைநிறுத்த இரும்பாலான, கற்புப் பட்டிகளை (chastity belt) பெண்ணின் இடுப்பில் மாட்டி, பிறப்புறுப்பில் நுழைத்துப் பூட்டி வைத்தது, பெண்களை தமக்கு மட்டுமே சொந்தமாக்க பெண்ணின் பிறப்புறுப்பை சிதைப்பது என காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இந்த ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் உடல் மீது நிகழ்த்திப் பார்த்தது.

பெண்கள் இன்று தடைகளைத் தாண்டி முன்னேறிக் கொண்டே இருந்தாலும், பெண்ணுடல் மீது திட்டமிட்டு தொடுக்கப்படும் வன்முறை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வன்முறையற்ற வாழ்க்கை எனும் அடிப்படை உரிமை இன்று வரையிலும் குடும்பத்திற்கு உள்ளேயும், பொது வெளியிலும் பெண்களுக்கு மறுக்கப்பட்டே வருகிறது. இந்த வன்முறை நியதிகளைச் செயல்படுத்துகிற கருவிகளாக குடும்ப அமைப்புகள், சாதி-மதங்கள், கல்விக்கூடங்கள்,  கலாச்சார விழுமியங்கள், அரசியல், ஊடகம் என போட்டி போட்டுக் கொண்டு பல காரணிகள் துணை போகின்றன.
மதத்தின் பெயரால், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கையை நுழைத்து, சிசுவை வெளியில் எடுத்து மிருகத்தனமாகக் கொல்வதும்,
சாதியின் பெயரால், தன் சொந்தப் பேத்தியின் தலையை ஆட்டை அறுப்பது போல் அறுத்து வீசுவதும்,
காதலின் பெயரால், முகத்தில் ஆசிட் ஊற்றி துடிதுடிக்கக் கொல்வதும்,
பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொன்று, புதர்களில் வீசிவிட்டுச் செல்வதும்,
கல்வி கற்க வந்த அந்நிய தேசத்துப் பெண்ணை நிர்வாணமாக்கி, நையப்புடைத்து தெருவில் துரத்தியடிப்பதும்
என பெண்கள் மீதான வன்முறையின் வடிவங்கள் கட்டுக்கடங்காது நீள்கின்றன. பெண்கள் மீதான இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக, முன்னெப்போதையும் விட வலுவாக எதிர்ப்புக் குரலை உயர்த்த வேண்டிய சூழலில் காலம் நம்மை நிறுத்தியுள்ளது. அதிலும், படித்துப் பட்டம் பெற்று, வேலைக்குச் செல்லும் பெண்கள், பொதுவெளியில் இயங்கும் பெண்கள் இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் அதிகமாக பங்கேற்பதன் மூலம்  பெண்களின் மீதான வன்முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்வர வேண்டும். வருகிற மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் இதற்கான சூளுரையை ஏற்கும் தினமாக அமையட்டும்.

அப்போது தான், ஆண்-பெண் சமத்துவம் எனும் பாதையில் இச்சமூகம் பயணிக்க இயலும். இல்லையெனில், “கடவுளால் படைக்கப்பட ஆகச் சிறந்த பரிசுப் பொருள்” எனும் அடையாளம் பெண்களுக்கு நிரந்தரமானதாகி விடும்.

நன்றி. வண்ணக்கதிர்