புதன், 11 செப்டம்பர், 2024

கல்வி

 

 

கல்வி உரிமையை பாதுகாப்போம்

 

அதிகார குவிப்பை விரும்பும் சமூகத்தை இன்றைய முதலாளித்துவம் கட்டமைக்கிறது. அதற்கு நவ தாராளமய கொள்கை பாதை அமைக்கிறது. இந்த பாதையில் மட்டுமே அரசுகள் பயணிக்க முடியும் என்ற நிலையை, முதலாளித்துவ கட்சிகள் மீது வலிந்து திணிப்பது அதிகரிக்கிறது. குறிப்பாக பாஜகவின், வகுப்புவாத அரசியலும், தாராளமய கொள்கைகளும் கை கோர்த்து நடத்தும் தாக்குதல்களில் மாநில அரசுகளின் உரிமையும் பறி போகும் அபாயம் அரங்கேறுகிறது. இதை தடுப்பதும், மாநில உரிமைகளை வலுப்படுத்துவதும், அதிகார பரவலை மேம்படுத்துவதும் அவசியம். இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ள மூன்றடுக்கு முறை மிக சிறந்த பங்களிப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செய்திருக்கிறது. ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள். இவை மூன்றுக்கும் வளர்ச்சி குறித்த வாதத்தில், பங்கிருப்பதை உணராமல், வளர்ச்சியின் பரிமானத்தை முன்னெடுக்க முடியாது.

அதிகார பரவலில் மார்க்சிஸ்ட் கட்சி:

அதிகார குவிப்பிற்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கட்சி அதிகார பரவலை முன் வைக்கிறது. வளர்ச்சி என்பது உள்ளூர் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து, வருவாய்  உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை, மேலும் மேலும் பரவாலாக்க உதவுவது என, மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. அண்மையில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி, மக்கள் திட்டம் உருவாக்கப் பட்ட 25 ஆவது ஆண்டு நிகழ்வை கொண்டாடியது. தோழர். இ.எம்.எஸ் அவர்கள் முன் முயற்சியில் மேலும் மேலும் அதிகாரப் பரவலுக்கான விவாதத்திற்கு வடிவம் கொடுக்கப் பட்டதை விழா நினைவு கூர்ந்துள்ளது.

அரசு நடத்திய பொது சுகாதார நிறுவனங்களை, 1991ல் மக்கள் 28 சதம் பயன்படுத்தினர், 2014ல் 38 சதமாகவும், கோவிட் காலத்தில் 48 சதமாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் தனியார் பள்ளிகளை கைவிட்டு, அரசு பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றோர் எண்ணிக்கை 6 லட்சம் ஆகும். இது கட்டணம் செலுத்த முடியாமை காரணமாக அல்ல. அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்த காரணத்தால் ஆகும். இதற்கு அடிப்படையாக மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில், உள்ளாட்சிகள் மூலமான திட்ட செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட 36 சதம் நிதி ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்வதால் அதிகாரப் பரவல், உள்ளூர் மட்ட செயல்பாடு, வளர்ச்சி ஆகியவை பிரதிபலிப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு உள்ளிட்ட இதழ்கள் கூறுகின்றன.

கல்வியில் அதிகார குவிப்பு:

சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது கல்வி முறை. இளம் தலைமுறைக்கு வளர்ச்சியை, வரலாற்றின் அடிப்படையிலும், மேலும் முன்னேறி அடைய வேண்டிய இலக்கையும் கற்றுத் தருவது மிக அவசியத் தேவையாக உள்ளது. ஆனால் இந்திய கல்வி முறை, படிப்படியாக மையப்படுத்தப் பட்டு வருகிறது. பாஜக ஆட்சி அதை முழுநேர வேலையாக செய்து வருகிறது. முதலாளித்துவம் கல்வியை வணிகமயமாக்க, ஒரு சரக்காக மாற்றி உள்ளது. சிந்தாந்த ரீதியில் அதிகார குவிப்பிற்கான ஒரு கருவியாக கல்வியை கைப்பற்றும் பணியை பாஜக செய்துள்ளது. கள்ளும் குரங்கும் இணைந்ததைப் போல், முதலாளித்துவமும், பாஜக வகுப்புவாதமும் இணைந்துள்ளது. கல்வி பாஜக ஆட்சியில், வணிகம், காவி, மையப் படுத்தல் என்ற மும்முனைத் தாக்குதலுக்கு இரையாகி உள்ளது.

உண்மையில் விடுதலை பெறும் போது டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான கல்விக்குழு தொடர்ந்து வரிசையாக, கோத்தாரி, ராமமூர்த்தி, யஷ்பால் வரை சொல்லும் அம்சம், விடுதலைக்கு பின் இந்திய வளர்ச்சிக்கான அடித்தளத்தை மேம்படுத்தும் வகையில் இருந்தது. அரசு கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், ஜனநாயக ரீதியில் சில வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

தாராளமயமாக்கல் கொள்கை அமலாக்கம் துவங்கிய பின், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களின் மூலதனக்குவிப்புக்கு தேவையான டெக்னோகிராட்ஸ் களை ( தொழில் நுட்ப பணியாளர்களை) உருவாக்கும் வேலையை கல்வித் துறை செய்ய வேண்டும் என்பதாக மாற்றப் பட்டது. இத்தகைய மாற்றத்திற்கு, பிர்லா - அம்பானி தலைமையிலான கல்விக்குழு வழிவகுத்தது. இந்த குழுவை வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி 2000 ஆண்டில் அமைத்தது. இன்று நாம் எதிர்க்கும் தேசிய கல்விக் கொள்கைக்கான அடித்தளமாக அது அமைந்தது.

நீட், க்யூட், நெக்ஸ்ட், என்.டி.ஏ:

மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாக நீட் (National Eligibility cum Entrance Test) ஒன்றிய பாஜக அரசினால் அமல் படுத்தப் பட்டு வருகிறது. இது அகில இந்திய அளவில் நடத்தப் பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேர்வு மற்றும் மாநிலங்கள் நடத்திய தேர்வு முறைகளை ரத்து செய்து, ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு எடுத்து கொண்டது. இதை தமிழகத்தில் அமலாக்க வேண்டாம் என்பதற்கான குழு அமைக்கப்பட்டு ஒரு அறிக்கையும் பெற பட்டது.  அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்றும், மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உரிய தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு, ஆளுநர் மற்றும் ஒன்றிய பாஜக அரசு காரணமாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது மாநில அரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பறிப்பது மட்டுமல்ல. கல்வி பொதுப்பட்டியலில் இருந்து, ஒன்றிய அரசின் பட்டியலுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அபகரிப்பதை வெளிப்படுத்துகிறது.

நெக்ஸ்ட் ( The National Exit Test) மருத்துவ கல்வியின் முதுகலைப் படிப்பிற்கான நுழைவு தேர்வு என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நீட் அல்லது நெக்ஸ்ட் இரண்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கையில், பணம் படைத்தவருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. 2006 ல், இந்தியா முழுவதும், மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு 27 சதம் அமலான போது, பெரும் எதிர்ப்பை பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தூண்டி விட்டனர். அப்போது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென், தென் மாநிலங்களில், ஏராளமான பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் மருத்துவர்களாக பணி புரிவதையும், மக்களுக்கு நெருக்கமாக மருத்துவம் செய்ய அவர்களால் முடிகிறது என்றும் கூறி இட ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்தினார். ஆனால் தற்போது, ஒன்றிய பாஜக அரசின் செயல்கள் காரணமாக, மீண்டும் மருத்துவ கல்வியை, மருத்துவர்களை, மக்களிடம் இருந்து விலக்கி வைக்கும், கார்ப்பரேட்மயமான சிந்தனையை கொண்டிருக்கிறது. இந்த செயல்பாடுகளை மாநில அரசு வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை உருவாக்குகிறது.

பல்கலைக் கழக மாணவர் சேர்க்கைக்கு, க்யூட் (Common University Entrance Test) இது 2022 முதல் அமலாகிறது. பல்வேறு தேர்வுகள் எழுதும் சிரமத்தை மாணவர்களுக்கு குறைக்க இந்த தேர்வு முறை உதவும் என்ற பொய் காரணத்தை ஒன்றிய பாஜக கூறுகிறது. உண்மையில் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்காக சமூகத்தைப் பதப்படுத்தும் திட்டம் இதற்குள் அடங்கி இருக்கிறது. 80 பல்கலைக் கழகங்களுக்கான தேர்வாக இது அமையும். இதில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு கிடைத்து வந்த வாய்ப்புகள் சுருங்கி, தேசம் முழுவதுமான மாணவர்கள் போட்டியிடுவதும், பெரும் தொலைவு சென்று பயிலும் சூழல் உருவாவதும், அதிகரிக்கும். இது உயர் கல்வி பரவலையும், ஏழை மாணவர்களின் வாய்ப்பை பறிப்பதாக உள்ளதை உணர வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக மேற்படி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்கு செல்லவும், அதற்காக பெரும் பொருள் செலவு செய்ய வேண்டிய தேவையும் அதிகரிக்கிறது. இது மேலும் மேலும் வசதியானவர்களுக்கான வாய்ப்பாகவும், அதிகார குவிப்பின் வெளிப்பாடாகவும் உள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் உரிமை இழப்பதும், மாநில மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதும், மாநில அரசுகளின் சமூக நீதி கொள்கைகளை முடக்குவதும் நடைபெறுகிறது.

என்.டி.ஏ (National Testing Agency) இதுவும் இன்றைய பாஜக ஆட்சியினால் 2017 முதல் அமலாக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு கீழ், தன்னாட்சி அந்தஸ்து கொண்ட அமைப்பாக உள்ளது. இது நடத்தும் தேர்வுகளும் அதன் முடிவுகளுமே, உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. பாஜக வழக்கம் போல் சொல்லும் வியாக்கியானம், உலக தரத்தில் உள்ள பல்வேறு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இந்த தேர்வு முகமை பயன்படும் என்பதாகும். முழுக்க முழுக்க தனியார் கோச்சிங் நிறுவனங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. இந்த 5 ஆண்டுகளில், பைஜு, ஆகாஷ், போன்ற பெயர்களில் பல நூறு கோச்சிங் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. இவை அனைத்தும் கார்ப்பரேட் தன்மை கொண்டு செய்ல்படுவதையும் காண முடிகிறது. இதிலிருந்தே பாஜக ஆட்சியாளர்கள் முன் வைத்துள்ள நோக்கத்தை அறிய முடியும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மக்கள் ஜனநாயக திட்டம் பள்ளிக்கல்வி வரை இலவச, கட்டாய கல்வி வழங்கப்படும் என்றும், மாநில மொழிகளில் பயிலும் வாய்ப்பை அதிகப்படுத்தப்படும் என்றும், கூறுகிறது. அரசு கட்டமைப்பு துறையில் அனைத்து தேசிய இனங்களுக்குமான சமத்துவம், மாநில சுயாட்சி ஆகியவை உறுதி செய்யப்படும் என கூறுகிறது. அனைத்து நிர்வாகப் பணிகளும் சம்மந்தப் பட்ட மாநிலம் அல்லது உள்ளாட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். இவ்வாறு பல்வேறு வகையில் அதிகார பரவலை வலியுறுத்துகிறது. ஜூலை 23 அன்று மதுரையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு இந்த நோக்கத்தை வலுப்படுத்தவும், ஒன்றிய பாஜகவின் அதிகார குவிப்பை தகர்க்கவும் நடத்தப் படுகிறது. வெல்லட்டும் மாநில உரிமைகளுக்கான இயக்கம்.    

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை

 

சமூக பாது காப்பு… தேச வளர்ச்சியின் அடையாளம்..

 

வேலை கிடைப்பதே பெரிய விஷயம், அதிலென்ன சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை? இப்படி ஒரு கேள்வியை சிலர் எதிரொலிப்பதாக உள்ளது. வேலைக்கு சேரும் போதே, வெளியேறும் தேதியும் சான்றிதழ் பார்த்து குறித்தால், அது ஓய்வு பெறும் வயது, தேதி சார்ந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தி பின் வெளியேற்றும் விதமாக, நாள் குறிக்கப்பட்டால், அது பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட். இன்று நவதாராளமய கொள்கை அளித்திருக்கும் வேலை வாய்ப்பின் தன்மை, பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட் என்ற வடிவில் உள்ளது. நிரந்தர வேலை இல்லை என்பதை தெளிவாக அரசும், தனியாரும் கூட்டாக சொல்கின்றனர்.

உழைப்பு சக்திக்கு நியாய விலை எப்போது?

தக்காளி அதிகம் விளைந்தால், விலை படுமோசமாக சரியும். தக்காளிக்கு கிராக்கி அதிகம் என்றால், விலை ஏறுகிறது. இப்போது நாம் காணும் அத்தியாவசிய பொருள்களுக்கான விலை அதைக் தான் குறிப்பிடுகிறது. அதேபோல் முதலாளித்துவ உற்பத்தியில், வீடுகள் அல்லது கார் போன்றவை மிக அதிகமாக உற்பத்தியாகி விற்பனைச் சந்தையில் காத்திருந்தாலும், விலை குறைவதில்லை. முதலாளி எதிர் பார்க்கும் விலைக்காக காத்திருக்கின்றனர். ஏனென்றால் குறுகிய காலத்தில் கெட்டுப் போகபோவதில்லை. எனவே முதலாளியால், தனது உற்பத்தி பொருளின் விலையை தீர்மானிக்கவும், அதற்கேற்ப விற்பனையை ஒத்தி வைக்கவும் முடிகிறது. ஆனால் விவசாயி அல்லது சிறு வணிகரால் அது முடிவதில்லை.

அதேபோல் தான் வேலை இல்லா இளைஞர் தான் விரும்பும் அல்லது தனது கல்வி தகுதிக்கான வேலை கிடைக்கும் வரை காத்திருக்க முடிவதில்லை. மாறாக ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக உழைப்பு சந்தையில் பெரும் கூட்டம் இருப்பதால், உழைப்பு சக்தி மலிவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தொழிலாளர் ஆளாகிறார்.  ஒரு வேளை படித்து முடித்தவர் தான் விரும்பும் வேலைக்காக காத்திருக்க வசதியாக வேலையில்லா கால நிவாரணம் கிடைக்கும் என்றால், போட்டி இருக்காது. அது மலிவு விலைக்கு உழைப்பு சக்தியை விற்கும் சூழலை உருவாக்காது. இந்த பின்னணியில் தான் வேலை உரிமை அடிப்படை உரிமைக்கான சட்டமாக்கபட வேண்டும். வேலை கிடைக்கும் வரை நிவாரணம் கிடைப்பது இதன் மூலம் உறுதியாகும்.  எனவே இந்த கோரிக்கையை வலுவாக முன் வைக்க வேண்டியுள்ளது.

வேலை இல்லா கால நிவாரணம் இன்று:

சோசலிச கொள்கையை பின்பற்றும் நாடுகள் எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போர் முடியும் போது அதிகரித்தது. சோசலிச நாடுகள் வேலை அல்லது நிவாரணம் என்பதை உத்தரவாதம் செய்தது. வேறு பல்வேறு சமூக பாதுகாப்பு கொள்கைகளை கொண்டிருந்தது. இதன் காரணமாக, முதலாளித்துவ நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் விளைவு, உலகின் பல நாடுகள் தங்களை, நலத்திட்ட அரசுகள் என பிரகடனம் செய்யும் நிலை உருவானது. வேலை அல்லது வேலை இல்லா கால நிவாரணம் என்ற கொள்கையை பின்பற்றின. இன்றும் பல வளர்ந்த நாடுகளில் இந்த சமூக பாதுகாப்பு கொள்கை அமலில் உள்ளது.

ஆனால் சோசலிச நாடுகள் சோவியத் உள்ளிட்டவை, பின்னடைவை சந்த்தித்த போது, முதலாளித்துவ நாடுகள், கூடுதல் லைசன்ஸ் வழங்கப்பட்டதைப் போல், அதி வேகமாக, தனது உழைப்பு சுரண்டல் கொள்கைகளை தீவிர படுத்தியது. வேலையின்மையை பராமரிப்பதும், போட்டியை அதிகப்படுத்துவதும், நவீன இயந்திரங்கள், ஆட்டோமேசன், ரோபோட்டைசேசன் மூலம் வேலை வாய்ப்பை சுருக்குவதும் இன்று அதிகமாகி உள்ளது. இது சுரண்டல் மற்றும் மூலதன குவிப்பிற்கு பெரும் உதவியாக உள்ளது. குறிப்பாக வேலை இல்லா கால நிவாரணம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் 2022 கணக்குபடி, மசாசூட்ஸ் மாநிலம் ஒரு வாரத்திற்கு1015 டாலர் என அதிகபட்சமாகவும், மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் 235 டாலர் என குறைந்த பட்சமாகவும் வேலை இல்லா கால நிவாரணம் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்குவதாக, விக்கிபீடியா தெரிவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 4.01 யூரோ ஒரு நாளைக்கு என்ற முறையில், வயதுக்கு ஏற்ப, வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம் லக்சம்பர்க் நாட்டில் 12 மாதம் துவங்கி ஸ்பெயின் 72 மாதங்கள் வரையிலும் வேலை இல்லா கால நிவாரணம் வழங்கப்படுகிறது. பரவலான முறையில் 24 மாதங்கள் பின்பற்றபடுகிறது. இது இளைஞர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.

சீனாவில் 1585 யுவான் ஒரு மாதத்திற்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஒரு மாத சம்பளத்தில் 60 சதம் வேலை இல்லா கால நிவாரணமாக அரசு வழங்குகிறது. வடகொரியாவில், 50சதம் வழங்கப்படுகிறது. கியூபாவில் உணவு பொருள்கள் முழுமையாக வழங்கும் ஏற்பாடு உள்ளது. இவை சமூக பாது காப்பு நடவடிக்கைகளுக்கான உதாரணமாக உள்ளன.

இந்தியாவில் வேலை இல்லா கால நிவாரணம்:

இந்தியாவில் இன்னும் பெரும்பாலான மக்களிடம் நிலப்பிரபுத்துவ சிந்தனையே மேலோங்கி உள்ளது. வேலை இல்லா கால நிவாரணம் வழங்கினால் அது மனிதர்களை சோம்பேறி ஆக்கி விடாதா? அரசிடம் அவ்வளவு பணம் எங்கிருக்கிறது? போன்ற பிற்போக்குதனமான கேள்விகள் முன்வைக்கப்படுவது நீடிக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளே இந்த பிற்போக்கு வாதத்தை பொது சமூகத்தில் தீவிரமாக முன் வைக்கின்றனர்.

இந்தியாவில் ஒன்றிய அரசு, வேலை இல்லா கால நிவாரணம் வழங்க முன் வராத காரணத்தால், சில மாநிலங்களே வேலை இல்லா கால நிவாரணம் வழங்குகின்றன. 2018 விவரத்தின் படி, திரிபுராவில் ரூ 1000 வழங்கப்படுகிறது. அரியானா மாநிலத்தில் 1000ரூ முதல் 2000ரூ வரை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ரூ 350 துவங்கி 450ரூ வழங்கப்படுகிறது. இந்த குறைந்த பட்ச தொகைக்காக, ஏராளமான பிரச்சார இயக்கங்களும், போராட்டங்களும் முன் எடுக்கப்பட்டதை உலகறியும்.

கேரளாவில் கிராமப்புற வேலை உறுதி சட்டம் அடிப்படையில், வருத்திற்கு சராசரியாக 62 நாள்கள் ஒரு நபருக்கு வேலை வழங்கப்பட்டு, ரூ310 சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் 204 ரூ, குஜராத்தில் 239ரூ என்பதாக உள்ளது, இந்த மாநிலங்கள் வேலை நாள்கள் குறைவாக வழங்குகின்றன. இதை 200 நாள்களாகவும், ரூ 600 சம்பளமாகவும் வழங்கப்படுவதன் மூலமே வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா முன்னேற முடியும்.

இந்தியாவில் 2004 ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த பின்னணியில், அதில் இடதுசாரி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக இருந்த சூழலில், குறைந்த பட்ச பொதுத் திட்டம் அடிப்படையிலான ஆட்சி, மேற்குறிப்பிட்ட 100 நாள் வேலைதிட்டம் சட்டமானது. ஆனால் இன்றைய பாஜக ஆட்சியில், இந்த சட்டத்தை அமலாக்குவதற்கான நிதியை வெட்டி சுருக்கி உள்ளது. இதன் மூலம் சராசரியாக இந்தியாவில் 42 நாள்களாக குறைந்துள்ளது. பாஜக ஆட்சியில் படிப்படியாக 2019 முதல் குறைந்து வருகிறது. பாஜக ஆட்சி சமூக பாதுகாப்பு திட்டங்களை அழித்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

அய்யங்காளி நகர்புற வேலை உறுதி திட்டம் தனியாக கேரளாவில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ரூ 331 தினக்கூலி என்ற முறையில் அமலாகிறது.  இதை தமிழ்நாடும் அமலாக்க வேண்டும். இதன்மூலம் கல்வித் தகுதி குறைவானவர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதேநேரம், தமிழ்நாட்டிலும், வேலை இல்லா கால நிவாரணத்தை அதிகப்படுத்த வேண்டும்.

நிவாரணத்தை விடவும், காண்ட்ராக்ட் பரவாயில்லையா?

வேலை இல்லா கால நிவாரணத்தை விடவும், காண்ட்ராக்ட் அல்லது, அவுட்சோர்ஸ் முலமான வேலை வாய்ப்பை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. அரசின் சமூக பாதுகாப்பு நடவடிக்கை இல்லை என்பதாலேயே இளைஞர்கள் இந்த வேலைத் திட்டத்திற்குள் தள்ளப் படுகின்றனர். சமூக பாதுகாப்பிற்கு மாற்றாக காண்ட்ராக்ட் வேலை வாய்ப்பு இருக்க முடியாது. அது தனியார் கொள்ளை லாபத்திற்கு மட்டுமே வழி வகுக்கும்.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமை காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட, இந்தியா முழுவதும், ஏதாவது ஒரு வேலைக்கு செல்லும் நிலை, வரம்பற்ற வேலைநேரம், குறைந்த பட்ச ஊதிய சட்டம் பின்பற்றபடாதது, போன்றவை காரணமாக, ரத்த அழுத்தம், உடல் சோர்வு, சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு இளைஞர்கள் ஆட்படுவதை காணமுடிகிறது. இது சரியான திசையில் இந்திய மனிதவள குறியீடு பயணிப்பதற்கு மிகப் பெரிய தடை என்பதை அரசுகள் உணர வேண்டும்.

சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்:

கடந்த காலங்களில், வேலையின்மைக்கு எதிரான நடவடிக்கை குழு என்ற பெயரில் தீவிரமாக வேலையின்மையை எதிர்த்த கூட்டு பிரச்சாரம் போராட்டம் நடைபெற்றது. இன்று சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் உள்ள பல்வேறு வெகுமக்கள் அமைப்புகள், கூட்டாக முன்னெடுக்கும் பிரச்சாரமும், போராட்டங்களும் ஆளும் அரசுகளை நிர்பந்திப்பதாக மாறும் வாய்ப்பு உள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில், ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் சிறப்பு மாநாடு தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறைக்கு கட்டியம் கூறும் வகையில் எழுச்சி நடை போட அழைக்கிறது.