தினமணியில் இருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணியில் இருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 நவம்பர், 2015

           நேர்மை இனி மெல்ல சாகுமோ?

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றார் கம்பர். இன்றைய நிலையோ “அரசியல் பிழைத்தோருக்கு அறம் வெற்றுப் பேச்சாகும்” எனக் கொள்ளப் படுகிறது. நேர்மை எங்கே இருக்கிறது? தேடினாலும் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இப்போது நாம் பார்க்கிற மூன்று செய்திகள், மேற்படி விவாதத்தை வலுப்படுத்துகின்றன. ஒன்று சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குறித்தது. இரண்டு மத்திய அமைச்சராக இருக்கும் ப. சிதம்பரம் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் பற்றிய நீதிமன்ற விவாதம் குறித்தது. மூன்று உ.பி.யில் டிம்பிள் என்ற பெண்மணி போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டது.

ராசா சென்னை, கோவை, நீலகிரிக்கு வந்திறங்கிய போது ஆயிரக் கணக்கில் தொண்டர்களைத் திரட்டி வரவேற்றது அவரின் தனிமனித உரிமை  என்ற போதிலும், அதன் மூலம் மக்கள் ஆதரவு இருப்பதாகவும், தான் குற்றமற்றவர் என்பதாகவும் நிருவுவதற்கும் முயற்சிக்கிற ஏற்பாடாக கருத வேண்டியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்களெல்லாம் குற்றவாளிகள் ஆவதில்லை என்ற போதிலும், ராசா போன்றோர் மீது, நீதிமன்றம் கொடுத்துள்ள நிபந்தனைகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

ப.சிதம்பரத்தின் விண்ணப்பத்தை மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதே, குற்றம் நிரூபிக்கப் பட்டதற்கான ஆதாரம் எனக் கருதவில்லை. ஆனால் கடந்த ஒருமாத கால அவகாசத்தில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் சிதம்பரம் சர்ச்சைக்கு உள்ளாகிறார். முதலில் ஏர்செல் விற்பனை விவகாரத்தில், அவரது புதல்வரின் நடவடிக்கையும் இருக்கிறது, என்பது நாடாளுமன்றத்தில் சர்ச்சையானது. இரண்டாவது, அவர் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் குறித்து தற்போது முன்னுக்கு வந்துள்ள சர்ச்சை. இவைகளின் மீது முறையான விவாதம் நடைபெறுவதற்கு, அவரின் உள்துறை அமைச்சர் பதவி தடையாக இருக்குமோ என்ற ஐயம் நியாயமானதே.

அடுத்ததாக உத்திரப் பிரதேச அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் நுழைந்துள்ள டிம்பிள் என்னும் பெண்மணி. இவர் முதல்வர் அகிலேஷின் மணைவி. ஏற்கனவே இவர்களின் குடும்பத்தில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ், முலாயமின் தம்பி, மைத்துனர், என்று நெடும் பட்டியல் கொண்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டிம்பிளின் தேர்வு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறதோ? என்ற எண்ணம் உருவாகாமல் இருக்காது.

இந்திய அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர், லால் பகதூர் சாஸ்த்திரி. இவர் அரியலூர் ரயில் விபத்தில் 144 நபர்கள் மரணம் அடைந்ததற்கு பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விபத்திற்கு ஒரு துரும்பளவும் தொடர்பில்லாத அமைச்சரின் ராஜினாமா நிகழ்வு அதிகாரிகளை பெரும் அளவில் பொறுப்புடன் செயல்பட நிர்பந்திக்கும் ஏற்பாடு என்று புரிந்து கொள்வது அவசியம். ஒரு குழுவின் செயல் பாட்டில் எங்கேயோ நடந்த தவறை சரி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் அன்றைக்குத் தேவைப்பட்டிருக்கலாம். இன்று மனித இழப்புகளும் பொருள் இழப்புகளும் மிக சாதாரணமாகி, மலிந்து விட்டன. இன்றைய சூழலில், அதிகமான வளர்ச்சித் திட்டங்களும், சர்வ தேச அளவில் இந்தியாவின் மனித வள மேம்பாடு குறித்த முன்னேற்றமும் அதிக அளவில் எதிர்பார்க்கப் படுகிறது. எனவே இன்றைய  அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சிகளில் உயரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கடந்த காலத்தை விட கூடுதல் பொறுப்புணர்ச்சி தேவை. ஆனால் குற்றச்சாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற பிறகும் தன் மீது நடைபெறும் விசாரணைக்கும், வகிக்கும் பதவிக்கும் தொடர்பில்லை, என விளக்கம் அளிப்பது ஏற்புடையதல்ல.

நேர்மையாக நிர்வகித்தல் குறைந்து வருகிறது, என்பதற்கு, விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் பட்டியலை உதாரணமாகக் கொள்ளலாம். இந்திய அரசியலில் ஊழல் குற்றச்சாட்டு பல இருந்தாலும் சில தீவிர சர்ச்சைக்கு உரியதாக மாறியது. ஒன்று 1958ல் 1.2 கோடி சம்மந்தப்பட்ட முந்த்ரா ஊழல். இரண்டு 1971 ல், 65 லட்சம் சம்மந்தப் பட்ட நகர்வாலா ஊழல். மூன்று 1987ல் 65 கோடி சம்மந்தப்பட்ட ஃபோபர்ஸ் ஊழல். நான்கு 1996ல் 900 கோடி மாட்டுத் தீவன ஊழல்.  ஐந்து 1999ல் சில ஆயிரம் கோடி சம்மந்தப் சவப்பெட்டி ஊழல். ஆறு 1 லட்சத்து 75 ஆயிரம் சம்மந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல்.  இவை இல்லாமல் கழிப்பிடம், சுடுகாடு ஆகிய அடிப்படைத் தேவைகளிலும், நாட்டைக் காக்கும் பணியில் உயிர் துறந்த, ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்குவதிலும் என எல்லா கொள்முதல்களிலும் ஊழல் அரங்கேறியுள்ளது.

1948ல் ஒரு ஊழலில் துவங்கிய முறைகேடு, இப்போது 2012 ன் எட்டு மாத அவகாசத்திற்குள்ளேயே 89 ஊழல்கள் எனப் பெருகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிகழ்த்தப் பட்டதாக, சிஏஜி குறிப்பிட்டது என்பதனால், வழக்குகள் பதிவு செய்யப் பட்டு அம்பலமாகியுள்ளது. இதில் சுரங்கம் ஒதுக்கீடு மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பாக 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் தற்போது முன்னுக்கு வந்துள்ளது. 2012 ல் மட்டும் 19 வகையான ஊழல்களில் 14 லட்சத்து 41 ஆயிரத்து 319 கோடி அரசுப் பணம் முறைகேடு செய்யப் பட்டுள்ளது அல்லது அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது ( ஆதாரம் விக்கிப் பீடியா).

இந்தியாவில் ஆளும் அரசியல்வாதிகளாக பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் இருந்தவர்கள் சம்மந்தப் பட்ட ஊழல் 24. இதில் 4 நபர்கள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 4 நபர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணையில் இருவரின் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. கடுமையான குற்றச்சாட்டின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டவர்கள் 3 நபர்கள். குற்றப்பத்திரிக்கை மட்டும் தாக்கல் செய்யப் பட்டவர்கள் 11. தண்டிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப் பட்டாலும், அடுத்து வருபவர், மேற்படித் தவறை செய்யாமல் இருப்பதில்லை.  1990 களுக்குப் பிறகு நவீன தாராளமயமாக்கல் கொள்கை பிரதான காரணம், என்பதை 1990க்குப் பின் நடைபெற்ற ஊழல்களே அதிகம் என்பதிலிருந்து அறியலாம்.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக நேர்மை யின்மை இருந்தாலும், அது உயர் பொறுப்பில் உள்ளவர்களால் தான் அரங்கேறுகிறது. உயர் பொறுப்பிற்கு வருவதற்கு தகுதியாக கல்வியும், நிர்வாக அறிவும் இருப்பதுடன் நேர்மையின்மையும் தேவைப்படுவதாக புரிந்து கொள்ளப் படுகிறது. தகுதி இல்லாதவர்களுக்கு அதிக சலுகை கொடுத்தல் துவங்கிய காலத்தில் தான் ஊழல்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. மத்திய ஆட்சி அமைப்பில் கூட்டணிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், சலுகைசார் (favouratism) நடவடிக்கைகளுக்கு கூட்டணி ஆட்சி முறையும் ஒருவகையில் பங்களிப்பு செய்கிறது.

இந்தப் பின்னணியில் தான் குடும்ப அரசியல், பதவி விலக மறுத்தல், சிறையில் இருந்து வெளி வரும் போது கொடுக்கிற பிரமாண்ட வரவேற்புகள் அரசியல் அரங்கில் அரங்கேறி வருகிறது. லால் பகதூர் சாஸ்த்திரி உள்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு சொந்தமாக வீடு இருந்ததில்லை. அதை அன்றைய சக அமைச்சர்கள் ஹோம்லெஸ் ஹோம் மினிஸ்ட்டர் என நையாண்டி செய்ததாக, சொல்லப் படுகிறது. 1988 ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னணியில், வெளி வந்த தினமணி செய்தி இன்று மிகமுக்கியமானது. அந்த செய்தி, ”அதிசயம் ஆனால் உண்மை”, என்று தலைப்பிடப் பட்டு இருந்தது. முதல்வராக இருந்த நிருபன் சக்கரவர்த்தி, முதல்வருக்கு ஒதுக்கப் பட்ட இல்லத்தில் இருந்து, வெளியேறி, சைக்கிள் ரிக்க்ஷாவில் ஏறி கட்சி அலுவலகத்திற்கு குடியிருக்கச் சென்றார், என்பது பிரசுரிக்கப் பட்டிருந்தது. மாநில அமைச்சராக இருந்த கக்கன் தனது இறுதி நாள்களில் அரசு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதி கூட இல்லாமல், சிகிச்சைப் பெற்று வந்தார்.

மேற்படி உதாரணங்கள் பல இருந்தாலும், அவை இன்றைய தலைமுறைக்கு சென்றடையும் ஏற்பாடு இல்லை. பாடப்புத்தகங்கள் இத்தகைய தகவல்களை முழுமையாக சொல்வதில்லை. நேர்மை குறித்து சில விவாதங்களை முன் வைக்கிறது. இருந்தாலும் தொலைக்காட்சி அல்லது நாளிதழ் செய்திகளை இனைத்து பார்க்கிற எந்த மாணவருக்கும், அதைப் பின்பற்றும் சூழலை உருவாக்காது. அநேகமாக ஆவணக்காப்பகத்தில், ஆய்வு மாணவர்கள் மட்டும் படிக்கும் செய்தியாக, மேலே குறிப்பிட்ட நல்ல உதாரணங்கள், சுருங்கி விடும் அபாயம் இருக்கிறது. எனவே இன்றைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகிற போது, கடந்த கால அல்லது நிகழ்கால முன் உதாரணங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இல்லையென்றால் நேர்மை ஏட்டளவில் மட்டும் காட்சி தரும். நேர்மை பின்பற்றப் படாவிடில், சட்டம், ஒழுங்கு, நீதி என்ற வார்த்தைகள் நகைச்சுவை காட்சிகளாகவோ, சிரிப்பு போலீஸ்களாகவோ மாறி விடும்.


பாதுகாக்கப் பட வேண்டிய உயிர்காக்கும் தொழில்

நோய்நாடி நோய்முதல்நாடி அது தனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற வள்ளுவரின் வரிகள், சமூகம் ஒரு பிரச்சனை குறித்து தீர ஆய்ந்து முடிவெடுப்பதற்கான சூத்திரம், என்ற பொருள் தருவதனால் தான் புகழ் பெற்ற குறளாக அமைந்துள்ளது. இதை மத்திய அரசு கணக்கில் கொள்ள வெண்ண்டும். ஒருமுறை தவறு நிகழலாம், அடுத்தடுத்து நிகழ்ந்தால், அதற்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்க்க வேண்டும். இப்போது மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியில் தனியார் கல்லூரி நிறுவனங்கள், ஈடுபடுகிற போது, லஞ்சம் கொடுத்தார்கள். கைது செய்யப் பட்டார்கள், என்ற செய்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கேதன் தேசாய் என்பவர் 2010ல் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த போது, அவர் மீதான புகாரை, இந்த தேசம் மறந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டின் சுவர்களில் கிலோ கணக்கில் தங்கம் அடுக்கப் பட்டு இருந்தது, என்ற செய்தி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. அவர் கைது செய்யப்பட்டது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிச்சயிக்கப் பட்ட இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலித்து அனுமதித்தார். அப்படி அனுமதிப்பதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்பதே அடிப்படைக் குற்றச்சாட்டு.

2010 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேதன் தேசாய் கைது செய்யப் பட்டார் என்பது மட்டுமல்ல. அதற்கு முன் 2001 ஆண்டில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் பொறுப்பில் இருந்த போதே கைது செய்யப் பட்டுள்ளார். 65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சி.பி.ஐ யினால் கைது செய்யப் பட்டு, பின் 2009 ல் அதே சி.பி.ஐ யினால் அந்தப் பணம் நியாயப் பூர்வமானது, எனக் குறிப்பிடப் பட்டதால், கேதன் தேசாய், விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அதே நபர் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக பொறுப்பெடுத்தார் என்பதைக் கூட்டுக் கொள்ளையின் பகுதியாகவே புரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல, இந்திய மருத்துவக் கவுன்சில் பெரும் லாபம் ஈட்டித் தருகிற அமைப்பாகவே, கேதன் தேசாய் போன்ற நபர்களால் பார்க்கப் பட்டு வந்துள்ளது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப் பட்ட பின்னணியில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்தோர், 30 முதல் 35 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், லஞ்சம் கொடுத்ததன் மூலம் துவக்கப் பட்டவையே, எனக் கூறியுள்ளனர். அன்று சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தவர், ”தற்போதைய இந்திய மருத்துவக் கழகம் களைக்கப் படும், புதிதாக 7 நபர்கள் கொண்ட குழு அமைத்து செயல்பட வழிவகை உருவாக்கப் படும், பல் மருத்துவக் கவுன்சில், மருந்தாளுனர் கவுன்சில் உள்ளிட்டு எல்லாவற்றையும் ஒன்றாக பராமரிக்கும் எண்ணமும் இருக்கிறது”, என்றார். உண்மையில் இந்த மாற்றம் அதிகாரத்தை வேண்டுமானால் மாற்றலாமே தவிர, பிரச்சனையைத் தீர்க்க உதவாது.

ஏனென்றால், பெரும்பான்மையான மருத்துவக் கல்லூரிகள், மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளை நடத்துபவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆவர். தற்போதைய மத்திய அமைச்சரவையிலும் கூட, மருத்துவக் கல்லூரி உரிமையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெரும் லாபம் தரும் தொழிற்கூடங்களாக மாறியிருப்பதே இதற்குக் காரணம். தற்போது தமிழகத்தை சார்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளது, பல் மருத்துவம் சார்ந்தது. பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்புத் துவங்குவதற்கு அங்கீகாரம் பெற, கொடுக்கப் பட்ட லஞ்சம், ஒரு கோடி என பேரம் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில், சி.பி.ஐ ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.

சிலர் கைது செய்யப் படுவது கண் துடைப்பு நடவடிக்கைகளாகவே முடிவுறுகின்றன. உண்மையான தீவிர நடவடிக்கைத் தேவைப் படுகிறது. மருத்துவர், மனிதர்களால், உயிரைக் காக்கும் கடவுள் என்ற அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப் படுகிறார். அத்தகைய மருத்துவர் உருவாகும் கல்வி நிலையம், லஞ்சம் கொடுக்கப் பட்டதால், உருவானது என்பதும், அதற்காக அவர் குறைந்தது 35 லட்சம் ரூபாயும், முதுகலைப் படிப்பாக இருந்தால் ஒரு கோடிக்கும் மேல் சேர்க்கைக்காக செலவிட வேண்டியுள்ளது, என்பதும் பெரும் அதிர்ச்சி தரும் உண்மை. நன்கொடைத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் செயலிழந்து நிற்கின்றன, என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

இத்தைகைய வாய்ப்புகள் மூலம்தான் கேதன் தேசாய் போன்றவர்கள், 3000 கோடிக்கும் அதிகமான ரூபாய் பெறுமான சொத்துக்களைச் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விமான டிக்கட்டிற்கும், 20 லட்சம் ரூபாய் வரையிலும், 5 அல்லது 7 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும் தனிப்பட்ட முறையில் செலவிட முடிந்துள்ளது. மருத்துவத் துறையின் ஒரு பொறுப்பில் இருக்கும் நபர் இந்த அளவிற்கு சொத்து சேர்த்தது, மருத்துவம் கற்பது, உயிர் காக்கும் பணிக்கானத்  தொழில் என்ற கருத்தை மறுத்து வருகின்றனர், என்பதைத் தெளிவுப் படுத்துகிறது.

தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரிகள், ஒரே ஒரு அரசு கல்லூரி உள்ளிட்டு 19 உள்ளன. அதில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்குச் சேர்க்கப் படுகின்றனர். ஒற்றைச் சாரள முறை என்ற மாணவர் சேர்க்கை வடிவங்கள் தகுதிப் படியை முறைப் படுத்த உதவியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதேவேளையில், மாணவர் சேர்க்கைக்கான, கட்டணத்தைக் குறைக்க உதவவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும், பல் மருத்துவத்திற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பல் போனால் சொல் போகும் என்பது ஆழமாக மனதில் பதிந்துள்ள ஒன்று. எனவே இதற்கான சிகிச்சையும் முக்கியத்துவம் பெறுகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர், திறமையுடன் மனிதநேயமும் கொண்டவராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் உயிர் காக்கும் பணி செய்யும் மருத்துவரை மக்கள் எளிதில் அனுக முடியாது. இன்று மருத்துவக் கவுன்சில் தலைவர் பொறுப்பில் இருந்தவர் கைது செய்யப் பட்டிருப்பதும், பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் கைது செய்யப் பட்டிருப்பதும், இந்தத் துறைகள் தனது, தார்மீக குணத்தை இழந்து கொண்டிருக்கிறது, என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை, கல்வி நிலையங்களைத் தகுதி கொண்டவையாக இருப்பதை உறுதி செய்வது, பட்டம் பெற்று மருத்துவர்களாக பதிவு செய்தோரின் தொழில் நேர்த்தியைக் கண்காணிப்பது, ஆகிய பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய அமைப்புகளாகும். கைது அரங்கேற்றங்கள் உருவாக்கியுள்ள கேள்விகள்  உடணடியாகத் தீர்க்கப் பட முடியாதவை. தாராளமயக் கொள்கைகளை அனுமதிப்பதாகக் கூறும் மத்திய அரசு மற்றும் பிரதமர், தனி மனித வளர்ச்சியையும், சமூக வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவே, இத்தகைய கொள்கைகள் என்று நியாயப் படுத்துகின்றனர்.

விளைவு அதற்கு எதிர் திசையில் இருப்பதைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு இந்தியாவைப் பொறுத்தளவில் 2000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரம் உள்ளது. கிராமங்களில் மருத்துவர் மக்கள் ஆகியோரின் விகிதாச்சாரம் 1:2500 என இருப்பது மிக மோசமானது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகச்சொற்பமான முன்னேற்றம். ஆனால் கிராமங்களில் முன்னேற்றமே இல்லை, என்பதை மேற்படி விவரம் மூலம் அறியலாம். 2011 ஜூலை 31 கணக்குப்படி, 8.5 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்திருந்தாலும், 6 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர், என்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

அதே மருத்துவக் கவுன்சில் அதிகபட்சமாக சேர்க்கப் படும் மாணவர் எண்ணிக்கையை 150 ல் இருந்து 250 ஆக உயர்த்த வேண்டும். அதன் மூலம் மருத்துவர் மற்றும் மக்களுக்கான விகிதாச்சாரத்தைக் குறைக்க முடியும் என்று கூறுகிறது. மருத்துவக் கவுன்சிலின் இந்தக் கருத்து ஏற்கப் பட்டு கண்காணிப்புடன் அமலானால் உடணடியாக பெரும் அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தமிழகம் போன்ற மாநிலங்களின் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இருக்கிறது. உயிர் காக்கும் பணி என்பதனால், அடிப்படைக் கட்டமைப்புகளிலும், பயிற்சியிலும் அக்கறை மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்து, கூடுதல் மாணவர் சேர்க்கையை அனுமதிக்கலாம். அது கேதன் தேசாய் போன்றவர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும். உயிர் காக்கும் பணியை மேம்படுத்தும்.

கொள்கையைத் தொலைத்த சுயவிளம்பரங்கள்!

தனிநபரின் கொண்டாட்டங்களைப் பார்த்து ஆத்திரப்பட்டு  எழுதவில்லை. அதே நேரத்தில் தனிநபர்களின் கொண்டாட்டங்களில், அப்பாவி உழைப்பாளி மக்களை உள்ளடக்குகிற போது, அமைதியாகவும் இருக்க முடியவில்லை. மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கார் ஆகியோரின் பிறந்த தினங்களுக்கு விடுமுறை விடப்படுகிற, காரணத்தால், ஓரளவு நினைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. மகாகவி பாரதி, பெரியார், பகத்சிங் போன்றவர்களுக்கு விடுமுறையும் இல்லை, கட் அவுட் வைத்து நினைவூட்டுவதற்கு, பணம் மற்றும் படைபலமும் இல்லை. மேற்குறிப்பிட்ட தியாகிகளுக்கு இல்லாத பணம் மற்றும் படைபலம், இன்றைய அரசியல் வாதிகளில் பலருக்கும் இருப்பதால், அவர்களின் பிறந்த தினத்தை நினைவில் வைக்க கட்டாயப் படுத்தப் படுகிறோம். சாலையைக் கடக்கும் ஒவ்வொரு, சராசரி குடிமகனும், பார்த்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில், இந்த விளம்பரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. பிறமாநிலங்களை விட தமிழகம், இக்கொண்டாட்டத்தில் முன்னனியில் இருக்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. அருகில் இருக்கும் புதுச்சேரி செல்வோர், அப்பிரதேசத் தலைவர்களின், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லாத நாளைப் பார்ப்பது அரிது. நண்பர் ஒருவர், நமது தலைவர்களின் பிறந்த நாள் நிகழ்வுகளை கட் அவுட் மற்றும் சுவரெழுத்துக்களில் தொடர்ந்து பார்த்த காரணத்தால், வரிசையாக பட்டியலிடுகிற அளவிற்குப் பழகிப்போனார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கொண்டாட்டம் அந்தளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேசியக் கட்சி காங்கிரஸ் பேரியக்கம் எனச் சொல்லப் பட்டதன் விளைவாக, நிறைய தலைவர்கள், எனவே நிறையக் கொண்டாட்டங்கள். காங்கிரஸ் தலைவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு, நாட்குறிப்பில் நாள்கள் போதாது, அத்தனை கொண்டாட்டங்கள்.

இது ஒரு நாள் கொண்டாட்டமாக இருந்தால், நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாதக் கணக்கில் நடைபெறும், பிரச்சாரங்களாக மாறிவருவதால், பொது மக்கள் அக்கறை கொள்ள வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. சுவர் எழுத்துப் பிரச்சாரம் துவங்கி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள், திரும்பும் திசை எங்கும் கட் அவுட்கள் ஆகியவை ஒருபுறம். மற்றொரு புறம் வாரக்கணக்கில், கிரிக்கட் அல்லது வேறு போட்டிகள், நகரமாக இருந்தால் குத்தாட்டம், கிராமமாக இருந்தால் கரகாட்டம் போன்ற உற்சாகமூட்டும் ஏற்பாடுகள். இவை போதாது என்று, தெருக்கள் தோரும் ஒலி மற்றும் ஒளி அமைப்புகளும், போதை வஸ்துகளும் ஏற்படுத்தும் தாக்கம்.

மதுரை கடந்த சில வருடங்களாக சிறப்புச் செய்தியாக மாறி வருவது கண் கூடு. 2008, ஜனவரி 30 ம் தேதி மதுரையில், விடுதலைப் போராட்ட வீரராக அடையாளம் காணப்பட்ட, வீரபாண்டிய கட்ட பொம்மனின் சிலையை கட் அவுட்கள் கொண்டு வெளியில் தெரியாத அளவிற்கு, மறைத்து விட்டனர், மதுரை மாநகரத்து உடன்பிறப்புகள். 2010, ஜூலை 15 காமராஜரின் பிறந்த தினம், நகர மக்கள் தொகைக்கு விஞ்சுகிற அளவிற்கு விளம்பரங்கள். ஆனால் அதில் காமராஜரைத்தான் காணவில்லை. அன்று விருதுநகருக்கு வருகை தந்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர், புரந்தேஸ்வரியின் புகைப் படத்திற்கு கொடுத்த முக்கியத்துவம், காமராஜருக்குத் துளியும் தரப்படவில்லை. எளிமையின் அடையாளமே என்ற வாசகங்களை, இது போன்ற வாழ்த்துச் செய்திக்கான விளம்பரப் பலகைகளில் பார்க்கிற போது, நடமாடும் நகைச்சுவைத் தொலைக்காட்சிகள் வந்து விட்டனவோ, என சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியாது. தங்கள் தலைவர்களாக போற்றப் பட வேண்டிய மறைந்த வீரர்கள், இருட்டடிப்புச் செய்யப் படுவதும், ஆடம்பரங்கள் தலைவிரித்து ஆடுவதும், பொது மக்களுக்கு, வேடிக்கைப் பொருளாக மாறுவது, சமுக அக்கறையின்மையின், வெளிப்பாடு. எனவே இது குறித்த கவலை பொதுமக்களிடம் உருவாக வேண்டியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, உயர் நீதிமன்றம் சென்னை நகரில், குறிப்பாக விமான நிலையத்திற்கு அருகில், உள்ள விளம்பரப் பலகைகளுக்கு சில கட்டு பாடுகளை விதித்தது. அதற்குக் காரணம் விமான ஓட்டிகளின் பார்வையைக் கூச்சமுறச் செய்கிற வகையில் வண்ண விளக்குகளைக் கொண்டதாக விளம்பரம் அமைந்தது ஆகும். அது போல் பொது மக்களை, தேசத் தலைவர்களைக் களங்கப்படுத்தாமல், பொது இடங்களின் அமைதியை பாதிக்காத தனி நபர் விழாக்களாக அமைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பொதுக் கூட்டங்களுக்கும், போராட்டம் நடத்தும் இடங்களுக்கும் கட்டுப் பாடுகளை விதிக்கும், அரசும், நீதித்துறையும் இது போன்ற தனி நபர்கள் செய்யும் இடயூறுகளைப் பொருத்துக் கொள்வது ஏன்? என்பது பொதுவான அரசியல் நோக்கர்களின் கேள்வி. அதுமட்டுமல்ல, தனி நபர்கள் முன்னிலைப் படுத்தப் படும் போக்கு, கொள்கையற்ற நிலையிலேயே மேலோங்குகிறது. கொள்கைக்கு இடம் இன்றி தலைவரின் புகைப்படங்கள் விளம்பரங்கள் ஆக்கிரமிக்கிறது. விமர்சனக் கண்ணோட்டம் இல்லாத, விவாதமற்ற, துதிபாடுகிற அரசியலுக்கு வழிவகுக்கும். இதன் மூலமான திசை திருப்பல் ஏற்பாடுகள், ஜனநாயகத்தைக் கீழ்நோக்கி தள்ளும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இத்தகைய விளம்பரப் பலகைகளை அமைப்பவர்கள், தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல இடங்களில், பல்வேறு சமூக விரோத செயல்களைச் செய்பவர்களும் இடம் பெறுவதைக் கண்ணுற முடிகிறது. இத்தகைய நபர்களின் விளம்பர நோக்கம், தலைவரின் வீட்டு விழாவிற்கானதாக மட்டும் இருப்பதில்லை. கூடவே, தான் இந்த தலைவருக்கு வேண்டியவர் என்பதையும், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, சுட்டிக் காட்டும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இத்தகைய தனிநபர் கொண்டாட்டங்களில், சமூக விரோதிகளில் பலர் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள், என்பதை, சம்மந்தப் பட்ட தலைவர்களும், அப்பாவி பொது மக்களும் உணர வேண்டும். இதனோடு வரி கட்டப்படாத கருப்புப் பணம் மற்றும் ஊழல் பணம் போன்றவை புழக்கத்திற்கு வருவதன் காரணமாக, மக்களுக்கான பணம் இப்படி வாரி இரைக்கப்படுவதைக் கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது.     

பிறந்த தினங்களை அல்லது தங்கள் வீட்டு விழாக்களை கொண்டாடக் கூடாது என அராஜகமான வாதத்தை முன்வைக்க விரும்பவில்லை. அது தனி மனித உரிமை. மூத்த அரசியல் தலைவர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவரும் கூட வாழ்த்துச் சொல்லும் மாண்பு வளர வேண்டும். அது பத்திரிக்கைச் செய்தியாக உருப்பெற வேண்டும். அந்த அளவிலான நிகழ்வுகள் சமூகத்தை பண்படுத்தும். ஆனால் ஒரு நாட்டில், 20 ரூபாய் மட்டுமே செலவிடும் நிலையில் 83.4 சதமான மக்கள் உள்ள நிலையில், அத்தகைய உழைப்பாளி மக்களை, தலைவரின் வீட்டு விஷேசத்திற்காக சுவரெழுத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதகுலம் போதுமான நாகரீக வளர்ச்சியடையாத, பின்தங்கிய சமூகத்தின் பண்பாடு இல்லையா?. எனவே சமூகம் தொடர்ந்து வளர்ச்சி பெற, இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் குறுக்கீடாக அமைகிறதோ, என்ற ஐயப்பாட்டில் இருந்தே இந்த விவாதத்தை முன் வைக்க வேண்டியுள்ளது. மக்களை அவர்களின் உரிமை குறித்த சிந்தனைக்குத் தூண்டுவதில், தலைவர்களுக்குப் பங்கு இருக்கிறது, என்கிற ஆதங்கத்தில் இருந்தே இந்த விவாதத்தை தூண்ட வேண்டியுள்ளது. இத்தகைய விவாதங்களில் உலக மற்றும் தமிழக முற்போக்கு இயக்கங்களுக்குப் பங்கு இருக்கிறது.

ஒரு சிலர் இது போன்ற கொண்டாட்டங்களின் போது, இலவசத் திருமணங்கள், அன்னதானம் ஆகிய நற்பணிகள் நடைபெறுவதைக் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில், நிறைய கொண்டாட்டங்கள அரங்கேறுவதால், இலவசங்களில் மக்கள் வாழ்ந்து விடலாம், என்று கருதினால், சுயமரியாதை இயக்கம் வளர்ந்த தமிழ்நாடு, என வரலாறு கற்பிப்பதில் பொருளில்லை. மகாபாரதக் கதையில், பாண்டவர்களின் தலைவன் தருமனுக்கு ஏழு உலகத்தையும் சுற்றிக்காட்ட, கிருஷ்ணன் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றாராம். ஒரு உலகத்தில், யாரும் யாருக்கும் தருமம் செய்யாத தன்மையும், மக்கள் எங்குமே கையேந்தாத நிலையும், இருப்பதையும் தர்மன் கண்டுள்ளார். இவ்வூரில், தருமம் செய்வோரே இல்லையே. இவ்வூரின் மன்னனும், தர்ம காரியங்களில் ஈடுபடவில்லையே, என கிருஷ்ணனிடம், தருமன் கேட்டதாகவும்,  அதற்கு கிருஷ்ணன், இவ்வூரில் யாருக்கும் தர்மம் தேவைப்படாத நிலையை மன்னன் ஏற்படுத்தியுள்ளான், என்று புரிந்து கொள்ளச் சொல்லி, விளக்கம் அளித்ததாகவும், பள்ளி ஆசிரியர் நீதிபோதனை வகுப்பில் குறிப்பிட்டதை, மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. ஆம் மக்களை யாசகராக வைத்திருப்பதை விடவும், யாசகர் இல்லாத ஆட்சியை உருவாக்குவது, சாலச் சிறந்தது. நற்பணிகள் என்பது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில், அனைவரும் இணைந்து, செய்வது. நமது நாட்டில் ஒருவர் கொடுப்பதையும், மற்றொருவர், யாசகம் செய்வதையும், நற்பணி என சுருக்கிக் கொள்ளக் கூடாது.

தினமணியின் தலைப்புச் செய்தியில், ஒருமுறை கல்பாக்கம் அணுபுறத்தைச் சார்ந்த தம்பதியினர் இடம் பிடித்தனர். தொடர்ந்து 25 ஆண்டுகளாக இலவச டியூசன் கற்றுக் கொடுத்து வந்தனர் என்பதே செய்திக்கு அடிப்படை. அந்த செய்திக்கு முன் அந்த தம்பதிகளுக்கு, வேறு எந்த வகையிலான விளம்பரங்களும் ஏற்பாடு செய்யப் பட்டதில்லை. அது போல் ஓசையின்றி பிறருக்கு உதவுவதே சிறந்த பண்பாடாகக் கொள்ள முடியும். ஒரு கை தருவதை இன்னொரு கை அறியக் கூடாது என்ற பழமொழி, இத்தகைய பொருளில் தான் சொல்லப் பட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யும் தவறுகளைப் பிறர் அறிந்து விடக் கூடாது என்ற பொருளில் தான், இப்போது விளக்கங்களைக் கேட்க முடிகிறது.

இவை அனைத்தும் தனிநபர்களை மட்டும் பாதுகாக்கும் கொள்கைத் திணிப்பன்றி வேறில்லை. தனிமனித உரிமையைப் பாதுகாப்பதற்கும், தனிநபர்களைப் பாதுகாப்பதற்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாததன் விளைவே இத்தகைய சமூக பிறழ்வுக்கான காரணமாகும். எனவே கொண்டாட்டங்கள், பிறந்த தினமாக இருந்தாலும், வேறு நிகழ்வுகளாக இருந்தாலும், அதைப் பொது வெளிக்கு கொணர்ந்து மக்கள் உணர்வுகளை, மழுங்கச் செய்வதைத் தவிர்க்க முன்வர வேண்டும். நம் தேசத்தில் விவாதிக்க நிறைய கருத்துக்களும், கொள்கைகளும் இருக்கிறது. அவற்றைத் திசை திருப்ப வேண்டாம் என்பதே வேண்டுகோள்..




விளம்பர உலகில் சிதைவுறும் பெண்!!

ஒருவயது குழந்தையும், மனநலம் பாதிக்கப் பட்ட பெண்ணும், 80 வயது மூதாட்டியும் கூட பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்ப முடியவில்லை. பள்ளியில் வைத்து 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப் படுகிறாள். கதவு கூட இல்லாத வீட்டைச் சார்ந்த பெண்குழந்தை, தூங்கிக் கொண்டு இருக்கும் போது, கடத்தப் பட்டு, பலாத்காரத்திற்குள்ளாகி, தூக்கிலிட்டு சாகடிக்கப் படுகிறாள். முந்தைய நாள் செய்தியை விட அதிர்வுகளை அதிகப்படுத்தும் தன்மை கொண்ட, பெண் மீதான தாக்குதல் குறித்த செய்தி வராத நாளில்லை.

2013 ம் ஆண்டு தேசீய குற்றப் பதிவு அமைப்பு தெரிவித்துள்ள தகவல் அடிப்படையில், தமிழகத்தில் 7475 பாலியல் தாக்குதல்கள் பெண்கள் மீது நடந்துள்ளது. இதில் 853 பாலியல் வல்லுறவுக் கொடுமைகள். 1188 குற்றச் செயல்கள் குழந்தைகளுக்கு எதிரானது. தமிழகத்தில் 2012ல் 737 ஆக இருந்த பாலியல் பலாத்கார குற்றம் குறித்த வழக்கு, 2013ல் 853 ஆக உயர்ந்துள்ளது.

2012 டிசம்பரில் டில்லி மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, இறந்த பின், பல்லாயிரம் மக்கள் போராட்டங்களில் பங்கேற்ற பின், அச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான தண்டனை உறுதி செய்யப் பட்ட நிலையில், 2013ல் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. தண்டனைகள் குறித்தோ, சமூகத்தின் எதிர்ப்பு குறித்தோ, எவ்வித உணர்வும் இல்லாமல், குற்றவாளிகள் உலாவருகின்றனர்.

பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகும் இளைஞர்களின் வயது தண்டனைக்குத் தடையாக இருக்கக் கூடாது, என்ற விவாதமும் அதிகரித்து வருகிறது. மிகச் சமீபத்தில் பெங்களூரில் பந்த் நடைபெற்றுள்ளது, இருந்த போதிலும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் போலவே, வன்முறைக் குற்றங்களும் ஒரு சேர 
அதிகரிப்பதன் காரணத்தை ஏன் சமூகம் இன்னும், ஆராய முற்படவில்லை?

உடைக்கப் பட வேண்டிய கருத்தாக்கங்கள்:

போராட்டங்கள் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைத் தடுப்பது, குறித்த விழிப்புணர்வை ஓரளவு உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் பெண் மீதான நுகர்வு வேட்கையையும், தூண்டி விடுகிற செயல்களும் அதிகரித்துள்ளது. ஆம் சமூகத்தில் பெண் ஒரு சக மனுசி என்று கருதப் படாமல், நுகர் பொருள் என்ற கருத்தே வலுவாக பதிவாக்கப் பட்டுள்ளது. எனவே தான் போராட்டங்களை விடவும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பெருகி உள்ளன. இந்நிலையில் கருத்தாக்கங்களை மாற்றுவதும் மிக அவசியமாகும்.

யுனிசெஃப் 2012ல் வெளியிட்டு இருக்கும் ஆய்வறிக்கை, ”இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்கு உள்பட்ட ஆண்களில் 57 சதமும், பெண்களில் 53 சதமும், கணவனால் மணைவிகள் அடித்து துன்புறுத்தப் படுவது நியாயம் என்றே புரிந்து கொண்டுள்ளனர். ஏனென்றால் பெண் மீது ஆணுக்கு இருக்கும் ஆதிக்க உரிமை ஆகும்”, என்று கூறுகிறது. இளைஞர்களில் பலரும் இன்று கூட்டாக பாலியல் பலாத்கார செயலில் ஈடுபடுவதற்கு மேற்படி புரிதலும் ஒரு காரணமாக இருக்கிறது.

புராணங்களில், காப்பியங்களில் பெண்கள் இரண்டாம் பாலினம் தான், என்னும் கருத்துக்கள் ஏராளமாக முன்வைக்கப் பட்டுள்ளன. அதிக மக்களைக் கவர்ந்த ஊடகமான, வண்ணத்திரை கதைகள் பலவும், பெண்ணை தாழ்வாகவே வடிவமைத்துள்ளது. ஒருவேளை ஒரு பெண் சுயமரியாதை உணர்வுடன் செயல் பட்டாலும், அவள் கட்டுப்படாதவள் அல்லது அவள் ஒரு மாதிரி, என்ற கருத்து, கதையின் நீதியாக முன்வைக்கப்பட்டு, வணக்கம் சொல்லி முடிந்துவிடும்.

இதன் தொடர்ச்சியே இன்றைய அரசியல் தலைவர்களின் கருத்தாக நீள்கிறது. சமீபத்தில் முலாயம் சிங் யாதவ் ஆண்கள் என்றால் அப்படித் தான், இதைப் பெரிது படுத்தலாமா?, என்று கவலைப் பட்டுள்ளார். மற்றொரு புறம், மார்க்சிஸ்ட்டுகளின் வீட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய, எங்கள் பையன்களை அனுப்புவேன், என நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள, தபஸ்பால் என்ற திருணாமுல் காங்கிரஸ் பிரமுகர் பேசியுள்ளார்.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் எனக் கருதக் கூடிய அவர்களின் வீடுகளிலும் பாதுகாப்பில்லை, எனவே பாலியல் குற்றங்கள் பற்றி பேச என்ன இருக்கிறது? என வினா எழுப்பி, எல்லோரும் மோசம் தான் என பதிலும் உரைத்து, அமைதிப்படுத்த முயற்சிக்கிறார். தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பெண்கள் படிப்பு காரணமாக, புகார் அளிப்பது அதிகரித்து வருகிறது. மற்றபடி பெண்கள் மீதான குற்ற எண்ணிக்கை உயரவில்லை, என பேசியுள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அருண்ஜேட்லி, 2012 டிசம்பரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா பிரச்சனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை என பேசி, கடும் கண்டனம் காரணமாக, வருத்தம் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசியல் வாதிகள், சினிமா கதைகளை உருவாக்கும் அறிவு ஜீவிகள், காப்பியங்களை மறுவாசிப்பு செய்யத் தூண்டும், எழுத்தாளர்கள் போன்ற முதல் தர குடிமக்கள் என அழைக்கப் படுபவர்களிடம் இருந்தே பெண்கள் குறித்த பார்வையை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிலையில் கொடூர காமஉணர்வு படைத்தவர்களின் குற்றச் செயல்களை எந்த வகை மக்களைக் கொண்டு  தடுக்க  போகிறோம்?.

கேள்விக்குள்ளாகும் காட்சி விளம்பரங்கள்:

சென்னையில் 1998ல் சரிகாஷா என்ற மாணவி ஈவ்டீசிங் காரணமாக இறந்து போனார். அப்போது, தமிழ் சமூகம் பல்வேறு எதிர்ப்புகளை வெளிப்படுத்தியது. அன்று சென்னைப் பல்கலைக் கழக மாணவிகள் சிலர், பேருந்துகளில் ஈவ்டீசிங் செய்யும் ஆண்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அதில் பெண்களைச் சீண்டுதல், கூட்ட நெரிசலைப் பயன் படுத்தி, உரசுதல் அல்லது வரம்பு மீறுதல் ஆகிய செயல்களைச் செய்தோர், பெரும்பாலும் 35 வயதைக் கடந்தோர், என்பது கண்டறியப் பட்டது.

சிரித்தல், நகைப்புக்காக நையாண்டி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட மாணவர் அல்லது வளர் இளம் பருவத்தினர், இன்று மாறி உள்ளனர். பெண்களை நுகர்ந்தே தீர வேண்டும் என்கிற அளவிற்கு வெறியூட்டப்பட்டு உள்ளனர்.  தொலைக்காட்சி விளம்பரங்கள், எந்த தணிக்கைக்கும் உள்ளாவதில்லை. விளம்பரம் மட்டுமே குறியாக இருக்கிறது. அது ஏற்படுத்தும் கருத்து மீது எந்த ஒரு விவாதமும் நடைபெறுவதில்லை.

உதாரணத்திற்கு டியோடரண்ட் குறித்த விளம்பத்தில், ”வெறும் டியோடரண்ட் பயன்படுத்துவதன் மூலம் பெண்களைக் கவர முடியாது”, எனக் கூறுவது பெண்களுக்கு எதிரான பயங்கரமான வாசகம். மற்றொரு நிறுவனம், இரண்டு இளைஞர்களில் யார் அதிகப் பெண்களை ஈர்த்தவர்கள் என்பது குறித்து தன் கையில் இருக்கும் மானிட்டரில் பார்த்து பூரித்துக் கொள்ளும் காட்சியை விளம்பரம் செய்கிறது. இங்கு டியோடரண்ட்டின் தேவை, வியர்வை, துர்நாற்றம் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க, என்பதை விட பெண்களை ஈர்க்க, என்ற கருத்தே மேலோங்குகிறது. இது சமூகத்தில் நேர்மறை தாக்கத்தை எப்படி ஏற்படுத்தும்?

கைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமான சேவைகளைச் செய்வது, சில கேள்விகளை எழுப்புகின்றன. நர்மதா 25, விரிவுரையாளர், ரஷ்மி 21, மாணவி, பிந்து 23, பிபிஓவில் பணி ஆகியோர் தற்போது நேரடி சாட்டிங்கிற்காக தயார், இலவச பதிவு, சாட்டிங்கைத் துவக்கிட, 12630066 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும், கட்டணம் ரூ.5 மட்டுமே. இப்படி ஒரு குறுஞ்செய்தி பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

நிறுவனங்களின் விளம்பரத்திற்காக என்றாலும், ”நயன்தாராவின் வீடியோ கலெக்‌ஷன் வேண்டுமா? பின்வரும் இணைய தளத்தினைத் தொடர்பு கொள்ளவும். உங்களின் கனவு தேவதை அல்லது தேவனை கண்டறிய, இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். நல்ல அழகான வடிவம் கொண்ட பிக்னி உடை மாடல்களுக்கு, ரூ 29 மாதக் கட்டணம் செலுத்தி, கிளிக் செய்யவும். 18 வயதுக்கு மேலான ஆண்கள் வேடிக்கையான நகைச்சுவைக்கு இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்” என்ற அளவிற்கு வாடிக்கையாளர்களைப் பெண்கள் மீதான நுகரும் வேட்கையைத் தூண்டும் வகையிலான, சேவைகளைச் செய்யத் தான் வேண்டுமா?

இது போன்ற விளம்பரங்கள் தடுக்கப்படுவது, அரசின் கடமையாக இருத்தல் வேண்டும். மீன் விற்ற காசு வேண்டுமானால் நாறாமல் இருக்கலாம். அதில் உழைப்பும், உணவும் இருக்கிறது, என பெருமை கொள்ளும் நியாயம் இருக்கிறது. ஆனால் மேற்கூறிய தன்மையிலான குறுஞ்செய்தி மூலமான விளம்பரம், பெண்ணை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, பால் இச்சையைத் தூண்டி, சமூகத்தைச் நாறடிக்கவும் செய்கிறது.

கைபேசி மற்றும் இணையதளங்களின் வளர்ச்சி சிறந்த அம்சம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் அவைகள் அறிவு மற்றும் ஆற்றல் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப் படுவதை விட, நுகர்வு உணர்வையும், பாலினக் கவர்ச்சி மீதான நாட்டத்தை அதிகப்படுத்தவுமே உதவுகிறது. சில கூட்டான பாலியல் பலாத்கார நிகழ்வுகள் செல்ஃபோன் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே நடைபெறுகிறது, என்கின்றனர்.

எனவே கருத்தாக்கங்களை உடைத்து, பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய தேவையை சமூகம் உணர வேண்டும். சிறுவயது முதலே தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும் சூழல் வளர்ச்சி பெற்றுள்ளதைக் கணக்கில் கொண்டு, தனிமனிதனின் அறிவு மற்றும் ஆற்றல் வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் பயன்படுத்தத் தூண்டுவது  அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக விளம்பரம் மற்றும் கதைகளில் பெண் குறித்த சித்தரிப்புகளை சமூக கண்ணோட்டத்தில் மாற்றி அமைத்திட வேண்டும். அதுவே பெண்ணை ஒரு சக மனுசியாக மதிக்கத் தூண்டும்.


ஞாயிறு, 18 மார்ச், 2012

சமூகவயமாதலின் தாக்கங்கள்


      சமூகவயமாதலின் தாக்கங்கள்!!

தமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியூட்டும் செய்தியாக, அதிகரித்து வரும் விவாகரத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் 25 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் இடையிலான திருமண உறவில், விரிசல்கள் அதிகரித்து வருவதாக நாளிதல்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தன. கவலையும் அதிர்ச்சியும் மட்டும் மேற்படிப் பிரச்சனையைத் தீர்த்து விடுவதில்லை. அதற்கான மூலகாரணத்தை அறிந்து கொள்ளாமல் தீர்வை எட்ட முயற்சிப்பது பலவீனமான சிந்தனையின் வெளிப்பாடு எனபதையும் கணக்கில் கொண்டு தீர்வு காணமுயற்சிக்க வேண்டும்.

இந்த சமூகப் பிரச்சனைக்கு இரண்டு முக்கிய வளர்ச்சிப் போக்கு காரணமாக இருப்பதைக் கணக்கில் எடுப்பதும் அவசியம். ஒன்று குடும்ப அமைப்பு முறைக்கும், திருமண பந்தத்திற்கும் நெருங்கிய உறவிருப்பதை அறிவது மிக அவசியம். அதாவது 20 ஆண்டுகளாக பின்பற்றப் பட்டு வரும், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய கொள்கைகளுக்குப் பின்னர் குடும்ப உறவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் இருந்து கிடைக்கும் விவரங்கள். இரண்டு, 20 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண் கல்வி குறித்து ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு அதிகரிப்பின் காரணமாக உருவாகும் பெண்ணுரிமை குறித்த கருத்தாக்கத்திற்கும் மதிப்பளிக்கிற போது குடும்ப உறவில் ஏற்படும் முன்னேற்றம்.
 
இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, குடும்பத்தின் கணவன் மற்றும் மணைவி ஆகிய இருவரும் பணிக்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கிராமங்களில் படித்தவர்கள் எதிர்பார்க்கிற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் கிராமங்களில் கிடைப்பதில்லை. எனவே நகரங்களுக்கு இடம் பெயருகின்றனர்.  நகரத்தில் வீட்டு வாடகை துவங்கி பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கான அதிகரிப்பும், அதற்கான வருவாய் தேவையும், கணவன், மணைவி இருவரையும் பணிக்கு செல்ல வேண்டியவர்களாக நிர்பந்திக்கிறது.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை, தனிகுடும்ப வாழ்க்கையை நோக்கி இடம்பெயர்தல் காரணமாக தீவிரம் பெற்று இருக்கிறது. கூட்டுக் குடும்ப வாழ்வில் கிடைத்து வந்த, வேலைப் பகிர்வு, குழந்தைப் பராமரிப்பு, நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினரைப் பராமரித்தல் ஆகியவை தனிக்குடும்ப வாழ்வில் சுமையாக மாறுவதைக் காணலாம்.

இருவரும் வேலை முடிந்து திரும்பும் போது, வீட்டில் இருவருக்குமே யாராவது உதவி செய்தால் பரவாயில்லை என்ற மனநிலையிலேயே வீட்டிற்கு வருகின்றனர். அந்த உதவி கிடைக்காத நிலையில், விரக்தியுறுகின்றனர். தாய், தந்தையரிடம் பெற்று வந்த அன்பை தன் வாழ்க்கைத் துணையிடம் பெற சாத்தியம் இல்லை என்ற சூழலில் மேற்படி விரக்தி இன்னும் அதிகமாகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், வேலைக்குச் செல்லும் பெண்களில் 60 சதமானோர், விவாகரத்து பெறுகின்றனர் என்ற ஆய்வுடன் இதைப் பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது.

இந்தியாவில் சமீப காலங்களில் தான் பெண்கள் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் சூழல் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளிலோ நீண்ட காலமாக பெண்கள் வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. ஒருபுறம் இந்தியப் பெண்களுக்குக் கிடைத்துள்ள வேலைக்குச் செல்லும் உரிமையைப் பாதுக்காக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது. அதே நேரத்தில் மாறியுள்ள சூழலுக்கு ஏற்ப குடும்ப வாழ்வியல் முறைகளையும் அமைத்துக் கொள்ள இளம் தலைமுறை பயிற்றுவிக்கப் படவேண்டும்.

குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை சமூக ரீதியில் மேற்கொள்வதன் மூலம் ஒரு புரிதலை இளம் தலைமுறைக்கு உருவாக்க முடியும். விவாகரத்து அரிதிலும் அரிதாக இருக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது.  தமிழ்ச் சமூகத்தில் “அறுத்துக் கட்டும் சாதி” என்னும் சொல் வழக்கு உண்டு. முழுக்க சாதி ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக மேற்படி சொல்வழக்கைக் குறிப்பிடுவர். இருந்த போதிலும், இனைந்து வாழ முடியாத சூழலில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள், பிரிந்தோ, வேறு மனமொத்த துணையுடனோ வாழ்வதை பழக்கமாக கொண்ட சமூகம், கடந்த காலத்தில் தன் பண்பாடாக கொண்டிருந்திருக்கிறது, என்பதை விளங்கிக் கொள்ள மேற்படி சொல்வழக்கைப் புரிந்து கொள்ளலாம். இன்னுமொரு விதத்தில், மறுமணம் செய்து கொள்ள சமூகம் அனுமதித்த அடையாளமாகவும் இந்த சொல்வழக்கைக் கருதலாம்.

இது இன்றைய தலைமுறைக்கு தேவையில்லை என்ற போதும், பல்வேறு பண்பாடுகளை நமக்கு முந்தைய சமூகம் பின்பற்றி இருக்கிறது, என்பதற்கான உதாரணமாக கொள்ளலாம். அன்பும், பாசமும், கல்விக்கான வாய்ப்பும் குழந்தைகளின் இதர பல தேவைகளும் பெற்றோர் மூலமாக மட்டும் தான் கிடைக்கும் என்ற உடமை சமூகத்தில், முன் குறிப்பிட்ட சொல்வழக்கு, புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும். எல்லாக் காலங்களுக்கும் பொருந்த கூடிய குடும்ப உறவு முறையோ, பண்பாட்டு செயல் திட்டமோ இருக்க முடியாது. எனவே காலமாற்றம் மற்றும் வாழ்க்கைச் சூழலைப் புரிந்து கொண்டு சில செயல் திட்டங்கள் உருவாக்கப் படுவது அவசியம்.

கூட்டுக் குடும்ப வாழ்வில் கிடைத்து வந்த நல்ல அம்சங்களில், எதைத் தனிக்குடும்பம் தவற விட்டுள்ளது? தனிக்குடும்ப வாழ்க்கையில் உள்ள இடைவெளிக்குக் காரணம் என்ன? என்பது அடிப்படைக் கேள்வி. இரண்டாவது மானுடவியலாளர்களும், சமூகவியலாளர்களும் குறிப்பிடுகிற, சமூகவயமாதல் நடவடிக்கை குறித்தது. பழமைச் சமூகம் தன் ஆதித் தலைமை உருவாக்கிக் கொடுத்தவற்றை விதியாகக் கொண்டு பின்பற்றியது. நவீன சமூகம் தனி நபர் வாழ்க்கையில் தலையிடுவதில்லை என்ற நாகரீக நடவடிக்கையின் பெயரால் அன்பு துவங்கி அனைத்தையும் வணிகமாக்கி வருகிறது.

குழந்தையின் சமூகவயமாதலில் குடும்பம், கல்விக்கூடம், அவர் குடும்பம் இருக்கும் பகுதி ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகிறது. பெற்றோர்களிடம் பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளின் போது, ஆசிரியர், “ உங்கள் குழந்தையிடம் பேசுவதே இல்லையா? எனக் கேட்கின்றனர். இக்கேள்வியின் பொருள், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் இயந்திரத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதாகும். குழந்தை கேட்பதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே பிரதானப் பணி என நம்மில் பலர் புரிந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகளுடன் பெற்றோர் நடத்தும் உரையாடல், மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், குழந்தைகளை ஆற்றல் படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது, என்பதை பெற்றோர்களாக இருக்கும் இன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை.

இதுபோன்ற இடைவெளியை தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. தொலைக்காட்சிகள் சில நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுத்தாலும், அந்த நிகழ்ச்சிகள் மீதான கருத்துப் பரிமாற்றம், குழந்தைகளுடன் நடத்தப் படாத காரணத்தால், குழந்தைக்கு முடிந்த அளவில் புரிந்து கொள்கிற போக்கிற்கு விட்டு விடுகிறோம். இரண்டாவதாக குழந்தையின் விளையாட்டு அல்லது முழு உடலியக்கம் ஆகியவைத் தடைபடுகிறது. இதன் காரணமாக இம்பொடன்சி அதிகரிக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதைக் காரணமாகக் கொண்ட விவாகரத்து எண்ணிக்கை குறைவு, ஆனால் மனரீதியிலான கர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது, என்று பத்மாசினி எனும் பத்திரிக்கையாளர், இந்தியாவில் வளர்ந்து வரும் விவாகரத்து விகிதாச்சாரம் எனும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இது குறித்து பேசும் மனதைரியம் நமது பெண்களிடம் இல்லை என்பது ஒருவேளை காரணமாக இருக்கலாம்.

இத்தகைய குடும்ப இடைவெளியைத் தவிர்ப்பதற்கும், ஆரோக்கிய வளர்ச்சிக்கு வழி காணவும் நமது பள்ளிகளில் ஆலோசனைக்கான கவுன்சிலர்கள் நியமனம் அவசியம். ஆசிரியர் நியமனத்திற்கே வழி இல்லாத போது, கவுன்சிலர் நியமனம் சாத்தியமா? என்ற கேள்விக்கு இடம் தராமல், வளர்ச்சிக்குத் தேவையான ஒன்று என்ற முக்கியத்துவம் தரப்பட வேண்டும். கல்வி என்பது வேலைக்கான தகுதி என்று மட்டும் பார்க்காமல், மனிதனுக்கான முழுத்தகுதியையும் உருவாக்கும் திறவுகோல் என்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

நமது பாடத்திட்டத்தில் ஆண், பெண் பாலின சமத்துவம் குறித்த போதனை மிக அவசியம். இன்று கல்வியில் பெண்கள் முன்னேறியுள்ளனர். குறிப்பாக தமிழ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக பட்டம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகம். இன்று சுமார் 58 சதம் இளங்கலைப் பட்டப் படிப்பு படிப்பவர்களாக உள்ளனர். இது பாராட்டுக்குறிய ஒன்று. ஆனால் ஆண், பெண் சமத்துவம் குறித்த புரிதல் பலவீனமாக இருக்கிறது. 2005-06 ஆய்வுப்படி குடும்ப வன்முறைகளால் பாதிக்கப் பட்டவர்கள் 41.9 சதம் என்பதை தமிழ் நாடு சமூக வளர்ச்சி குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதேபோல் குடும்பத்தில் எடுக்கப் படும் முடிவுகளில் தங்களுக்கும் பங்கிருப்பதாக 69.2 சதம் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விவரம் அகில இந்திய சராசரியை விட முன்னேற்றம் என்றாலும், உயர் கல்வி விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இல்லை என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

எனவே குடும்பம் என்பது கூட்டாக சேர்ந்து வாழ்தலின் அடையாளமாக இருப்பதை உணர்ந்து, ஆண், பெண் சமத்துவம், உரிமை ஆகியவை குறித்த புரிதலை சமூகத்தில் அதிகப் படுத்தவும், அதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப் படுத்துவதும், வேண்டும். சமூகவயமாதலில் பெற்றோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகம் ஆகியவற்றிற்கான பொறுப்பு உயர்த்தப் படுவதும், தமிழ் சமூகத்தில் சிறந்த தலைமுறை உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.

நன்றி: தினமணி 


செவ்வாய், 1 நவம்பர், 2011


                   நேர்மை உறங்கும் நேரம்

தமிழ் நாடு தேர்வானையக் குழு உறுப்பினர்கள் வீடுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர், நடத்திய திடீர் சோதனைகள் மக்களிடையே எந்த வித சலனத்தையும் ஏற்படுத்த வில்லை என ஒரு சிலர் வாதிடுவது, விரக்தி சார்ந்தது. சோதனைகள் நடந்து என்ன செய்ய? என்பது போன்ற உணர்வுகள் தலையெடுக்காமல், ஊழல் மற்றும் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிரான சமூக உணர்வை அதிகரிக்க வேண்டியுள்ளது. வேலை தேடும் இளம் தலை முறை மேற்படி முறைகேடுகளால் தீவிரமாகப் பாதிக்கப் பட்டிருப்பதைக் கணக்கில் கொண்டு, விவாதிக்க வேண்டிய ஒன்று.

தமிழகத்திலும், இந்திய அளவிலும் ஏராளமான அனுபவங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு துறையில் சிறிய அளவில் முறைகேடு வெளிப்படுவதும் பின்னர் அதுவே கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, பெறும் ஊழல் குற்றச்சாட்டாக மாறுவதுமே, மேற்படி அனுபவம். அந்தப் பட்டியலில் தமிழ் நாடு தேர்வாணையமும் சேருமா? அல்லது திடீர் சோதனைகளுடன் முடிந்து விடுமா? என்பதை பொறுமையாக கவணிக்க வேண்டியுள்ளது.

தேர்வாணையத்தின் தலைவர் உள்ளிட்டு தேர்வுக்குழு உறுப்பினர்கள் 13 பேர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தியதில், ஒருவர் வீட்டில் 26 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. மற்றொருவர் வீட்டில், 9.6 லட்சம் ரூபாயுடன், இந்தியாவில் தயாரிக்கப் பட்ட வெளிநாட்டு மது புட்டிகள் 23ம் கைப்பற்றப் பட்டதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் ஒரு வீட்டில் சோதனையிடுகிற போது, இரண்டு பிளாஸ்டிக் பைகளில் 17 லட்சம் ரூபாய், அருகில் உள்ள வீட்டில் வீசி எறியப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
TNPSC குரூப் 1 க்கான தேர்வு முடிந்து பல் மருத்துவர் நியமனம் நடைபெற உள்ள நிலையில் இந்த சோதனைகளும் செய்திகளும் வெளி வந்திருப்பதில் இருந்து, சோதனையில் பிடிபட்ட பணம், பல்மருத்துவர் நியமனத்துடன் இனைந்தது என்பதை மறுக்க முடியாது. கடந்த காலத்தில் இரண்டாம் பிரிவு மோட்டார் வாகண ஆய்வாளர் நியமனத்திலும் லஞ்சம் பெறப் பட்டிருக்கலாம், என்றும் காவல் துறை சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

மிக அதிக அளவில் தேவைப்படும் பணியிடங்களுக்கு குறைவான மருத்துவர்களை நியமனம் செய்வது என, கடந்த காலங்களில் அரசுகள் எடுத்த முடிவு, போட்டியைத் தீவிரப் படுத்தியுள்ளது. ஏற்கனவே  பல் மருத்துவம் படிப்பதற்காக, தனியார் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக பல லட்சம் செலவிட்ட ஒரு இளம் மருத்துவர்,  வேலைக்காக சிறிது காலம் காத்திருப்பதற்கான பொறுமை கொண்டவராக இருக்க வேண்டும், என எதிர்பார்க்க முடியாது. படிப்பிற்காக செலவிட்டதை தொழில் முதலீடாகப் பார்ப்பதும், அதை வட்டியுடன் திருப்பி எடுப்பது குறித்த கவலையும் அதிகரித்துள்ள காலம் இது. எனவே குறுக்கு வழி தேடும் மருத்துவர்களை தரகர்கள் அணுகுவதும், அதன் ஏற்பாட்டில் பல லட்சங்கள் கைமாறுவதும், போட்டித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றோர் தேர்வாவதும் நடந்தேறுகிறது.

கடந்த 2010 ம் ஆண்டில் கேத்தன் தேசாய், என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கைது செய்யப் பட்டு, அவருடைய வீட்டை சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்த போது, 1800 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டது. பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவு துவங்குவதற்கான அனுமதியை, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பெறுவதற்காக, தேசாயிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த போது, கையும் களவுமாக பிடிபட்டார்.

இதைவிட சிறந்த காட்சிகளும், சாட்சிகளும் இனி விசாரணையில் கிடைக்குமா? என்பது தெரிய வில்லை. ஆனாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பயணிக்கிறது. 18 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்த வழக்கு நடவடிக்கைகள் மக்கள் கவணத்திற்கு செல்வதில்லை. ஏனென்றால், நாட்டில் அதை விடவும் பெரிய, ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து உள்ளன. CWG, 2G மற்றும் KG ஆகியவை, கேத்தன் தேசாயை சின்ன ஊழல் செய்தவராக மாற்றி விட்டது. கார்கில் போரில் மாண்டு போன தியாகிகளின் பெயரில் கட்டப் பட்ட ஆதர்ஷ் அமைப்பு வீடுகளிலும், ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. தியாகங்களின் ஆணிவேரையும் அசைத்துப் பார்க்கும், இந்த மனிதர்கள், மண்ணில் தலைக் குணிவு இல்லாமல் வாழ்வது, ஆசை வெட்கம் அறியாது என்ற முது மொழியை நினைவூட்டுகிறது.

இப்படி இரக்கமற்ற ஊழல்கள் ஒருபுறம், தீவிரம் பெறுகிறது. மற்றொரு புறம், ஊழல் குற்றச்சாட்டு குறித்த விவரங்கள் யதேட்சையாக நடந்த தீ விபத்துகளில் அழிக்கப் படுகிறது. ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நடந்த தீ விபத்து, சமீபத்திய உதாரணம் ஆகும். இச்சம்பவங்களை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், தமிழ் நாட்டில் இப்போது முன்னுக்கு வந்துள்ள, TNPSC முறைகேடுகள் விசாரணை நடைபெறும் போது, அந்த அலுவலகத்தில் தீ விபத்து எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதே ஆகும்.

இத்தகைய தொடர் ஊழல்கள் குறிப்பாக, கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள், நேர்மை குறித்த கருத்தாக்கத்தை, கேலிப் பொருளாக மாற்றி வருகிறது. இளம் தலைமுறையை மிகவும் பாதிக்கக் கூடியதாக வளர்ந்து வருகிறது, என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை. தங்கள் குடும்பத்திற்குப் பதவி, வீடு, நிலம் ஒதுக்கீடு செய்வது, ஆகிய துர்குணங்களால் அலங்கரித்துக் கொண்டுள்ள ஆட்சியாளர்களுக்கு, உடந்தையாக அதிகாரிகளில் பலரும் இருப்பதன் விளைவு தானே, மேற்படி உதாரணங்கள். இவர்கள் எப்படி எதிர்கால சந்ததியினருக்கு, நேர்மையைக் கற்றுக் கொடுப்பார்கள். எனவே சொல்லகராதியில் நேர்மை என்ற வார்த்தையைக் காப்பாற்றும் பொறுப்பும் சமூகத்திற்கு அதிகரித்துள்ளது.

இந்தியா போன்ற நாட்டில், கொள்ளை, தீவிரவாதம், சாதி, மதக் கல்வரங்கள் அதிகரித்ததற்கு அடிப்படைக் காரணம் வேலையின்மை என்பதை, அரசு அமைத்த பல்வேறு குழுக்கள், பல கட்டங்களில் சுட்டிக்காட்டியுள்ளன. பிரதமர், ஒவ்வொரு தேசிய வளர்ச்சிக் மன்றக் கூட்டத்திலும் குறிப்பிடும் வார்த்தையாக, அதிதீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் இருக்கிறது. ஆனால் செயல் வடிவம் எதுவும் இடம் பெறுவதில்லை.

கடந்த காலத்தில் வங்கிகளுக்கான தேர்வாணையம் கலைக்கப் பட்டது. பா.ஜ.க தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2002 பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆண்டுக்கு 2 சதம் அரசு வேலைகள் வெட்டப் படும் என்று அறிவிக்கப் பட்டது. விளைவு சுமார் 34 லட்சம் பணியிடங்கள் அரசுத் துறையில் நாடு முழுவதும் காலியாக இருக்கிறது. இதன் காரணமாக அரசு வேலை என்பது குதிரை கொம்பு போன்று கனவானது. விளைவு படித்தவர்கள் செய்கிற, குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இக்காலத்தில் கூடுதல் விகிதாச்சாரத்தில் இருப்பதை, காவல் துறை விவரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் வாராது வந்த மாமழை என்பது போன்ற வேலை வாய்ப்பிற்காக, தமிழ்நாடு தேர்வாணயம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது, என்ற செய்தி, மேலும் நிலமையை மோசமாக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த மனநல மருத்துவம் குறித்த ஆய்வு, நமது நாட்டிற்கும் பொருந்துவதாக இருப்பதைக் காணமுடியும். மனநிலை  பாதிக்கப் பட்டவர்களில், வேலையில்லாதவர் அல்லது சம்பளம் இல்லாமல் உழைக்க கட்டாயப் படுத்தப் படுபவர்கள் 26 சதமானம் என்பதைக் கணக்கிட்டு உள்ளனர்.

வாராந்திர வருமானம் 580 டாலருக்கு குறைவாக உள்ள குடும்பங்களிலும் மனநலம் பாதிக்கப் படுகிறது. குறிப்பாக 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவினரே இந்த பாதிப்பில் மிக அதிகமாக உள்ளனர், என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது நாட்டில் அதிதீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களில், ஈடுபடுவோரின் வயதும் 18 முதல் 24 தான். இவர்களே அதிக அளவில் படித்து முடித்து வேலை வாய்ப்பை எதிர் பார்த்திருப்போராக உள்ளனர். வேலைக்கான வாய்ப்பு இல்லாததும், கிடைப்பதாக எதிர்பார்க்கும் வேலையை முறைகேடு மூலம், வேறொருவர் தட்டிப்பறிப்பதும், உளவியல் ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்திகளாகும்.

தமிழ்நாடு தேர்வாணையத்தில் நேர்மை குறித்து, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்த சோதனைகள் நடந்ததாக சொல்லப் படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அப்போது தான் விரக்தி காரணமாக, சமூகத்திடம் இருந்து அந்நியப் படும் இளைஞர் கூட்டத்தைத் தடுக்க முடியும்.

விடுதலைக்கு முன், இன்று பாகிஸ்தனில் உள்ள நகரமான குவெட்டா என்ற ஊரில், சவுக்கத் அலி என்பவருக்கு 1941 செப்- 8 அன்று 6 மாத காலம் கடும் தண்டனையும் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டிருக்கிறார். காரணம் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, கையும் களவுமாக பிடிபட்டார், என்பதாகும்.  
தற்போது தமிழ்நாடு தேர்வாணைய அதிகாரிகள் மீது, ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் படி, 13(2)r/w, 13(1)(d), மற்றும் 15 ஆகிய பிரிவுகளிலும், IPC படி 120(B), 175, 186 பிரிவுகளிலும் பதிவாகியுள்ள வழக்குகள், சரியான தீர்ப்பை பெறுவதன் மூலம், தமிழக இளைஞர்களுக்கு நாட்டுப் பற்றையும், நம்பிக்கையையும் அளிப்பதாக அமையட்டும்.

நன்றி தினமணி

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அரசு வருவாய் இழப்பின் மற்றொரு முகம்

நகரங்களை நோக்கிய முடிவில்லா வளர்ச்சி குறிப்பிடத் தகுந்த அளவிற்கு மக்கள் தொகை மற்றும் செல்வ வளம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பை, வருகிற 50 ஆண்டுகளில் ஏற்படுத்தும், என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு குறிப்பிடுகிறது. எட்வர்ட் லோபஸ் மோரினோ என்ற ஆய்வாளர், உலக வளர்ச்சி குறித்து பேசுகிற போது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சி,1975-90 காலத்தில் 45 சதமாக இருந்தது என்றும், ஆனால் நகரின் சுற்று வட்டாரத்தில் இதைவிட 3 மடங்கு கூடுதலான மக்கள் தொகை வளர்ச்சி இருந்தது என்றும் தெரிவிக்கிறார்.

இதே நிலை தற்போது வளர்ந்து வரும் நாடுகளின் நகர்ப் புறங்களிலும் உருவாகி வருகிறது. பாரம்பரியமான நகர்ப்புறத்திற்கு வெளியே, உலகத்தரத்திலான வாழ்க்கை முறை, என்ற கற்பனையோடு ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், பல கருத்துக்களை விதைத்து வருகின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும், என்பதையும் லோபஸ் மோரினோ தெரிவிப்பது கவனிக்கத் தக்கது. இக்கற்பனைக் கருத்துக்கு இரையாவாது பெரும்பாலும் நகர்புறத்தில் வீடு வாங்கி செட்டில் ஆக நினைக்கும் நடுத்தர மக்களே. மற்றொரு புறம் சாதாரண உழைப்பாளர்கள், நகரின் மையப் பகுதியில் வாடகை கொடுத்து குடியிருக்க வழியில்லை, ஆகவே புறநகர் பகுதி விரைந்து விரிவாக்கம் பெறுகிறது. இது மிகமுக்கியப் பிரச்சனையாகும். இந்த நிலைக்கு உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தவிர வேறில்லை.

இந்தியாவில் பல நகரங்கள் மேற்படித் தன்மையில் வளர்ச்சி பெறுவதை நாம் பார்க்க முடியும். தமிழகத்தில் சென்னை மட்டுமல்ல, பல்வேறு நகரங்களில் இந்த நிலை இருப்பது பாகுபாடற்ற உண்மை. இது குறித்த விவாதம் நெடியது என்பதால், எல்லா பரிமானங்களிலும் விவாதிக்காமல் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து மட்டும் விவாதிப்பது உடனடித் தேவையாக உணருகிறோம். ரியல் எஸ்டேட் தொழில் முறையில் அரசு எதிர் கொள்ளும் இழப்பு என்பது யாரும் அறியாதது அல்ல. அரசு மட்டுமல்லாமல் நடுத்தர மக்கள் துவங்கி, எல்லாத்தரப்பு மக்களும் இதில் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சந்தைப் பொருளாதரக் கொள்கை அமலாக்கத்தில், எந்த ஒரு பொருளின் விலையும், சந்தையில் ஒரே விலையாகத் தான் இருக்கும். ஆனால் நில விற்பனை விவகாரத்தில் மட்டும், அரசு நிர்ணயித்த வழிகாட்டும் விலை, சந்தை விலை என, இரண்டு விதமான விலை கொண்டதாக இருக்கிறது.

அரசு பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப் படுகிற போது, வழிகாட்டும் விலையில் பத்திரப் பதிவு செய்யப் படுகிறது. அரசு விலையைத் தீர்மானித்த பிறகு, சந்தை விலை என்ற தேவையை யார் நிர்ணயிக்கிறார்கள்?. நகர்மயமாதலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்றாக இதைக் கருத வேண்டும். ஏனென்றால், சென்னை போன்ற பெரு நகரங்களை மையப் படுத்தி, பன்னாட்டு நிறுவனங்கள் வருவதும், அவர்களுக்காக பல நூறு அல்லது பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தேவைப் படுவதும் அதிகரித்து உள்ளது. இவை தவிர கல்லூரிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் நகரங்களைச் சுற்றி அமைவதால், நிலம் குறித்த சொத்துப் பதிவு செய்வது அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 2010ல் 12.04 லட்சம் சொத்துக்கள் பத்திரப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் 2.35 லட்சம் சொத்துக்கள் பெங்களூரு நகரத்திற்குள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மாநில அரசின் மொத்த வருமானம் 3795 கோடி ரூபாய், பெங்களூருவின் பங்களிப்பு, 2584 கோடி ரூபாய். தமிழகத்தில் நிச்சயமாக கர்நாடகத்தை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. 2008 ம் ஆண்டில் 4800 கோடி அளவிற்கு இருந்த அரசு வருவாய், தற்போது தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்ப்பதாக மாநில நிதித்துறை செயலாளர் கூறியிருக்கிறார். இதன் பொருள் மாநில அரசுக்கான வருமான வரவில், பத்திரப் பதிவின் மூலம் கிடைத்த 2008ம் ஆண்டு வரவை விடவும், சுமார் 60 சதம் கூடுதலாக கிடைக்க உள்ளது என்பதாகும். தமிழகத்தைப் பொருத்தளவில் வருவாய் பங்களிப்பில் மூன்றாம் இடத்தில் இருப்பது, பத்திரப் பதிவுத் துறையாகும். 135 ஆண்டுகளாக வருவாய் ஈட்டித் தருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இது வழிகாட்டும் விலைக்கானப் பத்திரப் பதிவு மட்டுமே. சந்தை விலைக்கு சம்மந்தம் இல்லை என்பது அரசு அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் தொழில் புரிவோரும் நன்கு அறிந்த ஒன்று..

தற்போது சென்னை பெரு நகரைச் சுற்றி ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொறியியல் துறைகள் சார்ந்த ஏராளமான தொழிற்சாலைகள், ஐ.டி அலுவலகங்கள் ஆகியவை வருகின்றன. இதன் காரணமாக மார்க்கெட் தேவை மற்றும் குடியிருப்பு தேவைகளுக்கான, நில விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், வீடுகள் குறித்த சந்தைத் தேவையை 3 பிரிவுகளாகப் பிரித்து உள்ளனர். அதாவது ஆடம்பரமானது, ஓரளவு வசதியானது, பட்ஜெட்டுக்குள் வரக் கூடியது, என்பதாகும். 2010 ம் ஆண்டில் பட்ஜெட்டிற்குள் வரக்கூடிய வீடுகளின் விற்பனை சென்னையில் மட்டும் 13 ஆயிரம். இந்த ஆண்டு 18 ஆயிரமாக உயரலாம் என எதிர்பார்க்கின்றனர்.

மேற்படி வகையிலான வீடுகள் அதிகம் விற்பனையானது, அம்பத்தூர், ஆவடி ,முகப்பேர், தாம்பரம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் ஆகும். ஒரு சதுர அடியின் விலை சந்தை அடிப்படையில், 3500 ரூபாய் முதல் 4000 எனத் தீர்மானிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால் வழிகாட்டப் பட்ட விலை அடிப்படையில் 400 ரூபாய் துவங்கி 500 வரைதான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு வரவேண்டிய ஸ்டாம்ப் கட்டணம் குறைத்து மதிப்பிடப் படுவதால், அரசு வருவாய் பல ஆயிரம் கோடி இழப்பிற்கு தள்ளப் படுகிறது. மறுபுறம் நடுத்தர மக்கள் பல ஆயிரம் கோடி தொகை கூடுதலாக செலுத்தக் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். எனவே அரசு சந்தை விலை என்ற மோசடியைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காலமாக இன்றைய நிலை இருக்கிறது.

ரியல் எஸ்டேட் தொழில் மீது அரசு சில சமூகக் கட்டுப்பாடுகளை விதிக்கா விடில், சொந்தமாக வீடு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வில், வங்கிகளில் கடன் வாங்கும் சாதாரண மக்களிடம் நடைபெறும் மோசடி தீவிரமாகும். பெரும் நிறுவனங்கள் பெற்றுள்ள நிலங்களுக்கு வழிகாட்டி விலையை நிர்ணயித்து, அவர்களின் இழப்பை தடுக்கும் அரசு ஏன் பொது மக்கள் பயன்பாட்டிற்கான, வீடுகளுக்கான நிலங்களையும் அவ்வாறு விற்க வழிவகை செய்யவில்லை, என்ற கேள்வி தவிர்க்க இயலாதது. கடந்த ஆட்சியாளர்கள் நில அபகரிப்பு செய்த குற்றங்களை விசாரிக்க அரசு தனிப்பிரிவை உருவாக்கியதும், 2500க்கும் அதிகமான புகார்களை பொது மக்கள் கொடுத்திருப்பதும், பாராட்டுக்குரியதாக, நடுத்தர மக்களால் பார்க்கப் படுகிறது.

முன்னாள் முதல்வரின் குடும்பத்தினர் துவங்கி, அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், தி.மு.க பிரமுகர்கள் என பல்வேறு பட்ட மக்கள் புகார்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு நிலம் கோவில் நிலம், ஏழை மக்களின் நிலம், தலித் சமூகத்திற்கு ஒதுக்கப் பட்ட பஞ்சமி நிலம் என்ற பாகுபாடின்றி, கடந்த ஆட்சியின் போது கைமாறி இருக்கலாம். இது போன்ற விவரங்களை புகார்களின் சாரம்சத்தில் இருந்து அறிய முடிகிறது. வழக்கை விரைந்து முடிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டிருப்பதும், வரவேற்பிற்கு உரியதாக உணரப் படுகிறது. இருந்த போதிலும், பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை அரசுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்துகிற ரியல் எஸ்டேட் தொழில் மீது சமூகக் கட்டுப்பாட்டை உறுதி செய்யாமல், தமிழக அரசு, முந்தைய திமுக பிரமுகர்கள் மீதான மோசடி வழக்குகளை நியாயப் படுத்த முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன், முத்திரைத்தாள் மோசடி என்ற பெயரில் அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப் பட்டார். அகில இந்திய அளவில் பல அதிகாரிகள், ஆளும் கட்சிப் பிரமுகர்கள் என வரிசையாக தெல்கியுடன் இனைத்துப் பேசப் பட்டனர். தெல்கியுடன் சேர்ந்து 13 நபர்கள் 10 ஆண்டுகாலம் கடும்காவல் தண்டனை வழங்கப் பட்டனர். மக்கள் தெல்கி மீதான குற்றச்சாட்டையும் வழக்கையும் மறந்து விட்டார்கள் என்பதே, இன்றைய நிலை. புதிய மோசடிகள், பழைய மோசடிகளை மறக்கடிக்கும் என்ற நம்பிக்கையே, பிரமுகர்கள் செய்யும் தொடர் தவறுகளுக்கு அடிப்படைக் காரணம். தவறு செய்தவர் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது, என்ற நிலை உருவாக்கப் படாமல், இது போன்ற இழப்புகளில் இருந்து மக்களைக் காக்க இயலாது.

நன்றி: தினமணி 23.08.2011

புதன், 10 ஆகஸ்ட், 2011

உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?

விழிப்புணர்வு மிக அவசியமாக இருக்கிறது. குடிநீர், ஆரோக்கியம், காற்று ஆகியவற்றைப் பெறுவதில், நோய் அற்ற வாழ்க்கை வாழ்வதில், விழிப்புணர்வு பெரும் பங்கு வகிக்கிறது. உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதில், ஆடைகள் வாங்குவதற்கான தயாரிப்புகளில் எந்த கடைக்கு செல்வது, என்பதை விளம்பரங்கள் தீர்மாணித்தாலும், அந்த கடை பற்றிய தனது ஞானமே பிரதானக் காரணம் என்ற கற்பனையில் தான், பலரின் உற்சாகம் உயிர் வாழ்கிறது. 1996ல் ஒரு சமையல் எண்ணை நிறுவனம், ”ஆரோக்கியமானது, குறைவான கொலஸ்ட்ரால் கொண்டது, எனவே இதய நோய் குறித்த உபாதையில் இருந்து பாதுகாக்க வல்லது”, என்று விளம்பரம் செயததாம். அதன் காரணமாக அந்த நிறுவனத் தயாரிப்பு இன்று வரை சந்தையில் செல்வாக்கு செலுத்துவதாக, மார்க்கட்டிங் துறையில் பணிபுரியும் நண்பர் குறிப்பிட்டார். மேற்படி விளம்பரம் நம்மை வாங்கத் தூண்டுகிறது. சந்தையில் கிடைக்கும் எண்ணை வகைகளில் ஒன்று என்று மட்டும் புரிந்து கொண்டால், நமது மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள் என முடிவுக்கு வரலாம். ஆனால் விளம்பரம் குறிப்பிடுவதைப் போல் அந்த எண்ணைப் பயன்பாட்டுக்குப் பின் தன் குடும்பத்தினர், இதய நோய் தொல்லைகளில் இருந்து விடுபட்டதாக உணர்வது, விழிப்புணர்வல்ல. அது மனநலம் சார்ந்தது. விளம்பரம் ஏதோ ஒருவகையில் அக்குடும்பத்தினரை ரிலாக்ஸ் செய்திருக்கலாம். ஆனால் தீர்க்காது, ஏனென்றால் இதய நோய் எண்ணையுடன் மட்டும் சம்மந்தப் பட்டதல்ல. மன அழுத்தம், சுற்றுச் சூழல், பணிச்சூழல், குடும்ப பாரம்பரியம் உள்ளிட்ட எத்தனையோ விதமான காரணங்களை உள்ளடக்கியது என்ற புரிதலே, விழிப்புணர்வு.

விழிப்புணர்வின் அடிப்படை கல்வியறிவுடன் இனைந்தது. இந்தியாவோ கல்வி அறிவைப் பெறுவதிலும், படித்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்ட முறையிலும் பின் தங்கி உள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின், 2009 ஆகஸ்டில் மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் இந்தியா கல்வி பெறும் உரிமையை அடிப்படை சட்டமாக்கிய 135 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது இந்தியாவுக்கு முன் 134 நாடுகள் இச்சட்டத்தை இயற்றி, நமக்கு வழிகாட்டியுள்ளது. மத்திய அரசின் இச் செய்தி, பெருமைக்கு உரியதா? என்பது, ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். 2010ல் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியது. மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளில் கல்வியாளர்கள் பல விமர்சனங்களை சுமத்தி வருகின்றனர். குறிப்பாக இலவசக் கட்டாயக் கல்வி என்று அறிவித்த பின் தனியார் பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு பள்ளி இருக்கும் பகுதியைச் சார்ந்த சாதாரண குடிமக்களின் குழந்தைகள் சேர்க்கப் பட வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டிருப்பது சரியா? என்பது சீரிய விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.

அனைவருக்கும் இலவச கல்வி என்ற முழக்கத்தை முன் வைத்துள்ள கல்வியாளர்களும் இதை எதிர்க்கிறார்கள். பணம் கொடுத்துப் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களில் சிலரும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்க்கின்றனர். முன்னவரின் எதிர்ப்பு புரிந்து கொள்ளக் கூடியது. பின்னவர்களில் குறிப்பாக பெற்றோர் எதிர்ப்பு புரியவில்லை. ஒரு பள்ளியில் எப்படி இரண்டு விதமான மாணவர்களைப் பராமரிப்பது. பணம் கொடுத்து பயிலும் மாணவர் மீது ஆசிரியர் கவணம் செலுத்துவது தானே சரி. 25 சத ஒதுக்கீட்டில் வரும் மாணவர், வசதியான பிற மாணவரின் நோட்டு மற்றும் புத்தகங்களைத் திருடிவிட்டால் என்ன செய்வது? என பலவாறு பெற்றோர்கள் கேட்டதாக தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல 2011 ஃபிப்ரவரியில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் மேற்படிப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி, “நாட்டின் நலன் கருதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்கான, முதலீடு எனக் கருதப் படும், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு என்ற கொள்கை குறித்து, யாரும் புகார் கொடுக்க முடியாதுஎன தெளிவுபடுத்தியுள்ளார்.

மகிழ்வுக்குரியத் தீர்ப்பாக இதைக் கருதலாம். உச்சநீதிமன்றம் கடந்த 1993 உண்ணிகிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கும் போதும், கல்வி பெறுவது, உயிர் வாழும் அடிப்படை உரிமையுடன் இனைந்தது எனக் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ளலாம். இந்திய அரசியல் சட்டம் துவக்கத்தில் இருந்தே, பிரிவு 21 அடிப்படையில் கல்வி பெறும் உரிமை, ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு, என்பதை வலியுறுத்தி உள்ளது. இங்கு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என சட்டம் இயற்றிய பின் தனியாரை நாட வேண்டிய அவசியம் என்ன?. சட்டம் மிக மிகத் தாமதமானது. தாமதமான நீதி மறுக்கப் படும் நீதிக்கு ஒப்பாகும் என சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் ஆட்சியாளர்கள் தாமதப் படுத்துகிறார்கள். விடுதலை இந்தியாவில், சுமார் 53 ஆண்டுகள், மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியே, மேற்படித் தாமதத்திற்கு காரணம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சத நிதியைத் தொடர்ந்து ஒதுக்கீடு செய்து வந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே, அரசே இலவச கட்டாயக் கல்வியை வழங்க முடியும், என காங்கிரஸ் அரசு அமைத்த குழுக்கள் கோத்தாரி துவங்கி, ஆச்சார்யா ராமமூர்த்தி வரை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளன. ஆனாலும் அதிக பட்சமாக 4 சதமானம் தான் பட்ஜெட்களின் போது ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கியூபா 18.7%. மலேசியா 8.1%, கென்யா 7%, தென் ஆப்பிரிக்கா 5.3%, தாய்லாந்து 5.2%, எத்தியோப்பியா 4.6%, உலக நாடுகளின் சராசரி 4.9%, என கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிய முடிகிறது. ஆனால் இந்தியா 4% மட்டுமே மொத்த உற்பத்தியில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியாவில் தான் தேவை அதிகம். ஆனால் செயல் எதிர் மறையாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் இந்தியாவை விட, பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் அல்ல என்பது முக்கியமானது.

2009ல் சட்டம் முன் மொழியப் பட்ட போது, 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி தேவைப் படுவதாகக் குறிப்பிட்டனர். சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கும் போது, 2 லட்சத்து 31 ஆயிரம் கோடிகளாக உயர்ந்தது என்பதையும் அரசு விவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் குறிப்பிட்ட நிலையில், எவ்வளவு தேவைப் படும், எவ்வளவு ஒதுக்கப் பட்டுள்ளது, என்பதை அரசு தெரிவிக்கவில்லை. சி.டபுள்யு.ஜி (காமன் வெல்த் கேம்ஸ்), 2ஜி (ஸ்பெக்ட்ரம்), கே.ஜி ( கோதாவரி ஆற்றுப் படுகை கேஸ்) என்ற ஜிவரிசை ஊழல்களுடன் ஒப்பிடும்போது, கல்வி பெறும் உரிமையை நிலை நாட்ட, நம் நாட்டில் பணம் ஒரு பிரச்சனை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யத் தேவையான பணம், ஊழல்களில் கரைகிறது, என்பதைப் புரிந்து கொள்வதும் கூட விழிப்புணர்வு சார்ந்ததே. மேற்படி ஊழல் குறித்த விசாரணைக்கு, நமது சி.பி. மொரிஷியஸ் சென்றதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது. 1994 காலத்திலேயே, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து குறுகிய நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வரி இல்லை, என்ற முடிவை அரசு மேற் கொண்டுள்ளது. இதற்காக மொரிஷியஸ் நாட்டுடன், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது, என்கிறார் டாக்டர். தர்மேந்திர பண்டாரி. இக்காலத்தில் மன்மோகன் சிங் அவர்கள் நிதி அமைச்சர், அவர் வழிகாட்டுதல் இல்லாமல், மேற்படி உடன்பாட்டுக்கான நெறிமுறைகளை உருவாக்கிய செபி, ஆர்.பி., ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி இருக்க முடியாது. கல்வி உரிமைக்காக தொலை நோக்குப் பார்வையுடன் செயல் பட்டார்களோ இல்லையோ, ஊழல் பணத்தை முதலீடு செய்ய, கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, தொலை நோக்குப் பார்வையுடன் செயல் பட்டு உள்ளனர், என்பதை அறிய முடிகிறது.

நெடுங்காலமாக அரசு சொல்லும் நிதியாதாரம் இல்லை என்ற செய்தி பொய் என்பதை, இது போன்ற தகவல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த நிதி ஆதரங்களையும், இதர பல முயற்சிகளினாலும் அருகமைப் பொது பள்ளிகளை அரசு ஈடுபட வேண்டும். அருகமைப் பொதுப்பள்ளி என்பது, சமூக, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வீட்டுக் குழந்தைகளும் கல்வி கற்கும் பள்ளிகள் ஆகும். இந்த முறைதான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப் படுகிறது. டாக்டர். அணில் சடகோபால் என்ற கல்வியாளர், ”அருகமைப் பள்ளி முறை அமலுக்கு வந்தால், மிகப் பெரிய அளவில் எரிபொருள் சேமிக்கப் படும். ஏனென்றால், அருகமைப் பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்று வர, பேருந்துகள் தேவை இருக்காது, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதுகாக்கப் படும்என்று கூறுகிறார். தமிழ் நாட்டில் கூட, இலவச பஸ் பாஸ் வழங்க அரசு செய்யும் செலவினமும் குறையும். பஸ் நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் நம் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளும் குறையும்.

சட்டத்தின் விதி குறிப்பிட்டுள்ள 25% ஒதுக்கீட்டைத் தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பது தேவையற்றது, என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்பில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் கவணம் செலுத்துகின்றனர். இது பாராட்டுக்குரியதே. ஓட்டலில் அமர்ந்தவுடன் குடிநீர் பாட்டிலுக்கு ஆர்டர் செய்த பின் தான், உணவு வகைகளுக்கு ஆர்டர் செய்யும் குடும்பத்தினர், அதிகரித்து வருவதைக் காணலாம். குடிக்கும் தண்ணீர் என்ற வெளிப்படையாக தெரியும் பொருள் மீது மட்டுமே நமது பராமரிப்பு அக்கரை இருக்கிறது. சமையல் பகுதியில் உள்ள சுகாதாரப் பராமரிப்புகள் குறித்து நாம் கவலை கொள்வதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால், உணவுக்கு விலை தருவது நியாயம், சுகாதாரமான குடி தண்ணீருக்கும் விலை தருவது எந்த வகையில் நியாயம், என கேள்வி எழுப்பும் மனநிலை ஏன் உருவாக்கப் படவில்லை. இப்படி அடிப்படை உரிமை என்ற பட்டியலுக்குள் வரும் பொருள்களை, விலை பேசி விற்பதை அங்கீகரிப்பது, விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் இருக்காது. மாறாக படித்தவர்களே அறியாமையில் இருக்கிறோமோ, என எண்ணத் தோன்றுகிறது..

அதுபோல் தான், 25 சத ஒதுக்கீடு பற்றியும் மேலோட்டமாக புரிந்து கொள்ளப் படுகிறது. மனிதன் தனது குடும்ப சூழலினால் மட்டும் தன்னை சமூகவயமாதலுக்கு உட்படுத்திக் கொள்வதில்லை. சுற்றுப் புறம், பள்ளி, சக மனிதர்கள், நண்பர்கள் ஆகியவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாகவும் ஒரு மனிதனுக்குள் சமூகவயமாதல் கட்டமைக்கப் படுகிறது. இக்கருத்தை மானுடவியல் மற்றும் சமூகவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மைரான் வின்னர் என்ற அமெரிக்கவைச் சார்ந்த கல்வி மற்றும் உளவியல் வல்லுனர், தனது ஆய்வுகளின் அடிப்படையில், நாம் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கிறார். அதாவது, அனைவருக்குமான கல்வி உத்திரவாதம் உள்ள சமூக அமைப்பில் தான், சுகாதாரம் குறித்து முழுமையான விழிப்புணர்வு இருக்க முடியும். அதுவும் அவர்கள் சார்ந்த பண்பாட்டு சூழலில், கல்வி திட்டங்கள் அமையும் என்றால், விரைவான புரிதலும், விழிப்புணர்வும் செழிப்பான முறையில் ஊற்றெடுக்கும், என்று கூறுகிறார். மேற்படி அறிஞர்களின் விளக்கம், நமது அரசினால் இன்னும் முழுமையாகப் பின்பற்றப் படவில்லை. ஒரு நல்ல சமூகம் உருவாக்கப் படுவதில், அனைவருக்குமான சம வாய்ப்புள்ள கல்வி என்ற முறை மூலமே இதை சாதிக்க முடியும்.

தங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக நடுத்தர மக்கள், தனியார் பள்ளிகளை நாட வேண்டியதில்லை. அரசுப் பள்ளிகள், சிறந்தமுறையில் பராமரிக்கப் பட்டாலே, அரசு பள்ளிகள் சிறந்ததாக மாறமுடியும். நமது விழிப்புணர்வு மத்திய அரசின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கும் வலிமை கொண்டதாக மாற வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா ஓரளவு நல்ல பாடத்திட்டத்துடன், சிறந்த முறையில் செயல் படும் போது, நவோதயா வித்தியாலயா என்ற கூடுதல் வசதியான பள்ளிகளை, மத்திய அரசு ஏன் உருவாக்கியது. ஜவஹர் நவோதயா பள்ளிகள் ராஜீவ்காந்தி பிரதமராக இருக்கும் போதே உருவாக்கப் பட்டது. இந்தியாவில் 593 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இப்பள்ளிகள் இருப்பதாக இணையதள செய்தி தெரிவிக்கிறது. இங்கு பயிலும் மாணவர் ஒருவருக்கு, 15000 ரூபாய் வரையிலும் ஆண்டு ஒன்றுக்கு செலவிடப் படுகிறது. கட்டணம் என்ற பெயரில் ரூ200 ஒரு மாதத்திற்கு பெறப் படுகிறது. எல்லா விதமான வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த உறைவிடப் பள்ளிகளை, குறைவான எண்ணிக்கையில் நடத்திட என்ன காரணம்? மத்திய அரசு ஒரு ஆண்டுக்கு ரூ688 மட்டுமே மாணவர் ஒருவருக்கு செலவிடுகையில், ஜவஹர் நவோதயா பள்ளி மாணவருக்கு மட்டும் ரூ15000 செலவிடுவது ஏன்? ஏன் மத்திய அரசு இரண்டு விதமான பிரிவினரை அரசு செலவில் உருவாக்குகிறது. இத்தகைய கேள்விகளை கேட்கும் ஆற்றல் இன்றைக்கு நடுத்தர மக்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும் இருப்பதாக உணர முடிகிறது. எப்போது வெளிப்படும்? இது போன்ற கேள்விகள் உரிமைகளுடன் இணைந்தது.

Courtesy Dinamanai