கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 நவம்பர், 2015


சீரழியும் சீர்திருத்தம்!!
________________________

உடன்கட்டை ஏறும் கொடுமையை
எதிர்த்த வரலாற்றை
இனி என்னவென்று சொல்வது?

விளிம்பு நிலையில் உள்ளோரைக் கைதூக்க
இடஒதுக்கீடு வேண்டும் என்றோரை
சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்தோரை
பண்ணைகள் குவித்து வைத்த
நிலங்களை விநியோகம் செய்ய வலியுறுத்தியோரை
இனி என்னவென்று அழைப்பது?

முடியைச் சிக்கெடுக்கும் சீப்பைக் கூட
இனி வால்மார்ட் தான் விற்பனை செய்யும்
வாசலைத் திறந்து வை.
சொல்கிறது தாரளமயம்.
அதற்கு பெயர் சீர்திருத்தமாம்.

எதிர்ப்பில் கவிழ்ந்துவிடும் ஆட்சி
என்று தாமதித்த மன்மோகனை.
டைம் சொன்னது நீ கையாலாகாதவன் என்று.
இல்லை இல்லை 51 சதம் சில்லரை வர்த்தகத்தில்
என்றார் வீரியத்துடன்.
கொசுறு கொடுப்பது
சில்லரை வர்த்தகத்தின் பண்பாடு என்பதால்
இன்சூரன்ஸ் லும் 49 சதத்தை தாரை வார்த்தார்.
போதாது சாட்டிங்கில் சொன்னது ஏகாதிபத்தியம்.
அரிசி, கோதுமை, டீசல், சரக்கு கட்டணங்களையும்
உயர்த்துகிறேன் என மண்டியிட்டார்.

கடையடைத்து காரித்துப்பியது போதாது 
தூக்கி எரிவதே
சீர்திருத்தம் வார்த்தை அளவிலாவது
காக்கப்படும்.
எஸ். கண்ணன்


என்ன செய்ய உன்னை வைத்து?

நான் படைத்த சுண்டலை…
உண்டதில்லை.. நீ..
எங்கள் வீட்டுக் கொழுக்கட்டையில்..
இனிப்பு… காரம்… என பல சுவைகள்…
பால் கொழுக்கட்டை… உப்பு உருண்டை…
என பல விதங்கள்…

ஒருபோதும் கேட்டதில்லை நீ…
இன்னும் ஒன்று தா என்று….
எனக்குப் பிடித்ததே… உனக்கும் பிடிக்கும்..
உரக்கச் சொல்வேன்..
இது உனக்கான படையல் என்று…
நான் மனிதன்… நீ…. கடவுள்….

விளம்பர யுகத்தில்…
இப்போது உனக்கும் கட் அவுட்டுகள்…
கீழே எனது படம்….
தெரிய வேண்டும் இல்லையா?
கடவுளுக்கு விளம்பரம் செய்தது யார் என்று?

யானை முகத்தானே!!
குளத்தங்கரையில் உட்கார்ந்திருந்த
உனக்கு இப்போது ஊர்வலங்கள்…
குளத்தில் தண்ணீர் இல்லை என்பதால் இல்லை..
குருதி மீது எங்களுக்கு ஆசை வந்ததால்..

எத்தனை பிடித்தாலும்
நீ எதுவும் உண்பதில்லை…
உன்னை வைத்து என்ன செய்ய?
கலவரங்கள் முடியும் போது
கரைத்து விடுவோம் கடலில்!!!

எஸ். கண்ணன்

வேலைநிறுத்தம் நோக்கி……

நம்பினார் கெடுவதில்லை மீண்டும் ஒருமுறை
பொய்த்துப் போனது.
மன்மோகன் பாராட்டிய வார்த்தைகளில்
மோடி உற்சாகம்…. முதலாளிகள் கொண்டாட்டம்….
காட்சி மாறாத ஆட்சி மாற்றம்.

சுதந்திர தின உரையில்
அடிமைகளின் வார்த்தைகளாய்..
நிலம் பறிப்பு.. தொழிலாளர் சட்டங்கள் முடக்கம்.
மேக் இன் இந்தியா கூடாரத்திற்குள்..
பரங்கியரின் ஆதிக்கம்.

நினைவில் வந்து போகும் வரலாறு…
ஒடுக்கப்பட்டது சிப்பாய் புரட்சி..
சிலமாதங்களில்..
சவக்குழியில் முடிந்தது
கோட்டைகளின் கலகம்..
தூக்கு மேடைகளில் முடிந்தது
பாளையக்காரர்களின் போர்….
ஆனாலும் அடங்கவில்லை விடுதலை வேட்கை.

ஆதிவாசிகளின் கலகம்..  விவசாயிகள் ஏந்திய ஆயுதம்..
தொழிலாளர்களின் கிளர்ச்சி… மாலுமிகளின் போர்…
இளைஞர்களின் எழுச்சி… எங்கும் .
ஒரே முழக்கம் விடுதலை.
அஸ்தமமானது சாம்ராஜ்ஜியம்.. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்.

போர்களில்லை இப்போது
காலனியாதிக்கம் இல்லை.
ஆனாலும் ஒப்படைக்கிறோம் நிலத்தை…
தாரைவார்க்கிறோம் தண்ணீரை…
பாதுகாப்பு, வங்கி, காப்பீடு, ரயில்வே
அனைத்தும் அந்நியர் கையில்
பெயர் …  மேக் இன் இந்தியா..

கேஸ் மான்யம் வேண்டாம் – நீ
சிறந்த குடிமகன்…
இடஒதுக்கீடு வேண்டாம் – நீ
இந்துத்துவாவின் தலைமகன்…
எதிர்த்து விட்டாலோ – நீ
பாகிஸ்தான் காரன்.
நவகாலனியாதிக்கத்திற்காக…
மோடியின் புதிய உற்பத்திகள்.

வளர்ச்சியின் வரப்பிரசாதம்..
விவசாயி தூக்குக் கயிறுடனும்..
டீ விற்றவர் 10 லட்சம் ரூபாய் சட்டையுடனும்…
எல்லாம் முதலாளிகளின் செயல்…
நம்புங்கள் வளர்ச்சி…. வளர்ச்சி…..

காந்தியும் இயேசுவும் சொன்னதாக
ஆசிரியர் சொன்னார்..
ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு – என
மாணவர் கேட்டார்..
அடித்த பின் சவப்பெட்டியைக் காட்டினால் என்ன செய்ய?
பொறுமையாய் சொன்னார்
புதிய ஆசிரியர்   போராடு…  என்று….
நடந்து சென்ற விவசாயி சொன்னார்
அது தான் உன் வரலாறு என்று..
தெருமுனையில் விளம்பரம் சொன்னது
தொழிற்சங்கம் வழிகாட்டுவதாக…
வெற்றிக்கான பயணம்…… வேலைநிறுத்தம் நோக்கி….

எஸ். கண்ணன்
தாராளமய தயாரிப்பில்…..

சாஃப்ட்வேர்..  ஹார்டுவேர்.. எதுவானாலும்
ஓய்வின் வயது முப்பதே!
குழந்தைக்கான கல்வியும்..
அடுக்குமாடி வீட்டுக்கான கடனும்..
இனி எந்தப் பெயரில்…
நொடியில் தொலைகிறது
முகவரி..

மூலதனப் பெருக்கத்திற்கான சுவாசம்…
முப்பதை வெளியேற்றி..
இருபதை உள்ளிழுப்பதே!!
மோடியின் யோகாதின வேண்டுகோளில்…
சேருமா? இதுவும்…

வேலைக்கான காலம்
பத்து ஆண்டுகள் என்றால்..
ஆயுள் காலம் எவ்வளவு?
சொல்வாரா? சித்திரகுப்தன்…

சுவரொட்டிகள் சிரிக்கிறது
முதுமையைச் சொல்லி..
22 வயதுக்குட்பட்டோர் மட்டும் விண்ணப்பிக்கவும்
விளம்பரங்கள்….

மை தீர்ந்ததால் குப்பைக்குப் போன லெட் பேனா..
டன் கணக்கில் குவிக்கப்படும்
பிளாஸ்டிக் குவளைகள்…
விதை நெல்லுக்கு கையேந்தவைக்கும்
மான்சாட்டோக்கள்…
நிலத்தை மலடாக்கும் பூச்சிக் கொள்ளிகள்..

நீளும் பட்டியலில்
இளமையும் இப்போது…
மேக் இன் இந்தியாவிற்கான அழைப்பில்
விருந்தாகிப் போனார்கள்
ஒன் யூஸ் இளைஞர்கள்…

பார்ட்டிகளில் கைமாறும் ஒப்பந்தங்கள்..
வாக்குறுதியாய்… இனி…
வேலை நிரந்தரம் இல்லை!!!

தாராளமயத் தயாரிப்பில்
எல்லாமே ஒன் யூஸ்???
ஆனாலும்…
மிஞ்சி நிற்கிறது போராட்டம்……….

எஸ்.கண்ணன்


எங்கே ஆறாம் அறிவு?

சண்டையில் வென்றவனிடம்
என்னமா சண்டை போடுகிறார், பாராட்டிய
பெண்ணை பார்த்து “ஜிப்பை”ப் போடும்மா
சொல்கிறான் சண்டையில் வென்றவன்.


பத்துப் பைசா மிட்டாயின்
வாசத்திற்கு வசப்பட்டு,
காதலனைக் கைவிடவும், மிட்டாய் தின்பவனுடன்
ஓடவும் துணிகிறாள் கிணற்றடியில்
தண்ணீர் இறைக்கும் பெண்
தொலைக் காட்சி விளம்பரங்கள்..... சொல்லும் செய்தி

சாலையா? மறைவா? பிரித்துப் பார்க்கும்
பகுத்தறிவற்ற மிருகங்கள் கூட
பாலின்பத்திற்காக பலாத்காரம் செய்வதில்லையாம்.
ஆறாம் அறிவாக பகுத்தறிவைப் பெற்ற மனிதன்
தொலைக் காட்சி விளம்பரத்தின்
உண்மையைப் பிரித்துப் பார்க்கவில்லை.

இரவு 11 மணிக்கு பஸ் ஏறும் பெண்
ஏளனமாகி விட்டாளோ!!
ஓடும் பேருந்தில் வல்லுறவு – செய்தி.
அதிர்ச்சியில் மக்கள் – ஆனால்
உறைந்திருக்கவில்லை கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.

எதிர்ப்பைக் கூர்மைப் படுத்தும் ஆவேசம்
கண்ணீர் வடிக்கும் கண்ணீர் புகைக் குண்டு
கோபாவேசத்தில் திருப்பித் தாக்குகிறது.
பீய்ச்சி அடித்த தண்ணீர்
தடியடிக்குப் பின் இறங்கி வந்து
பேச்சு வார்த்தை நடத்துகின்றார் ஆட்சியாளர்.

கொத்தாக அள்ளிச் சென்று
கலைத்து விடப்பட்ட கூட்டம்
திரும்பவும் ஒன்று சேர்வதால்
அணிவகுப்புகளில் அதிருப்தியுற்ற ராஜபாதைகளுக்கு பெருமிதம்.
ஆண் பெண் பேதமற்ற போர்க் குணத்தின் வெற்றி.
எஸ். கண்ணன்




மௌனச் சகுனிகள்……….
_______________________________________________________

தாய்மொழி தமிழ் தெரியும்….
ஆங்கிலமும் கூட கற்றுக்கொண்டோம்.
கார்ப்பரேட் முதலாளிகள்
எந்த மொழியில் பேசினாலும்
வார்த்தைகளுக்கான பொருள்
புரியவே இல்லை…
சுரண்டலைப் போல்…
.

மனிதநேயம் இருப்பதால் தான் விருப்ப ஓய்வாம்!
உருப்போட்ட வார்த்தைகளில்
ரத்த வாடை..

15வயது இளம் பெண்ணை
20வது திருமணம் செய்து கொள்ளும்
காமுகனுக்கும்..
19வயது இளைஞர்களை
வேலைக்கு அமர்த்தி 25வயதில்
தூக்கியெறியும் முதலாளித்துவத்திற்கும்
என்ன வித்தியாசம்?
முன்னது காமவெறி..
பின்னது லாபவெறி….

நேற்று நோக்கியா…
இன்று ஃபாக்ஸ்கான்..
நாளை…?

ராஜராஜனின் ஆயிரம் ஆண்டு
பிறந்த நாள் கொண்டாட்டத்தின்
வாள்(ய்) வீச்சு….. ஆட்சியாளர்கள்…
கார்ப்பரேட் ஷூக்களின் முன்
மண்டியிட்டு
மௌனம் சாதிக்கிறார்கள்…

பாண்டவர் ஐவருக்காக
மகாபாரதப் போர்…
சுற்றம் பார்க்காதே!
கிருஷ்ணனின் கீதாபதேசம்.

பல்லாயிரம் இளம் தொழிலாளர்களுக்கு
என்ன உபதேசம்?
விருப்ப ஓய்வா?
அப்படியானால்.. ஆட்சியாளர்களே…
நீங்கள்..
கார்ப்பரேட் துரியோதனன்களுக்கு
சகுனியல்லவா?...

தொழிலாளரின் மானம் காக்க
எந்த கிருஷ்ணனும் வரப்போவதில்லை…
போராட்டம்.. போராட்டம் தவிர…

எஸ். கண்ணன்

சனி, 16 ஆகஸ்ட், 2014

எத்தனை முறை தேடுவது வேலை!!!



வானம் முட்டும் கட்டிடம், பளிங்குத் தரை, வண்ணப் பூச்சுகள்,
குளு குளு அறை, ஏராளமான மனிதர்களின் நடமாட்டம்
விஷப் பூச்சிகள் அண்டாத இடம், என்று தான் எண்ணியிருந்தோம்.   
அறிவிப்பு ஒன்று பளார் என அறைந்து சொன்னது.
ஆட்கொள்ளி விஷம் பூச்சி உருவத்தில் வருவது இல்லை
புதிதாய் அவதாரம் எடுத்திருக்கிறது
விருப்ப ஓய்வு என்ற பெயரில்.

ஆசிரியருக்கு படித்தவர் சொன்னார் நோக்கியாவில் வேலை!!
அடுத்தவர் சொன்னார் ஃபாக்ஸ்கானின் நிரந்தர வேலைக்காக
7000 ஆயிரம் ரூபாய் காண்ட்ராக்ட் வேலையை இழந்த கதையை.
பெண்ணொருத்தி சொன்னாள், கருத்தரித்தால் வேலை போய்விடும் என்றதால்,
கருவையே கலைத்து விட்டதாக.  
சிசுக்களை அழிக்க இனி கள்ளிப்பால் தேவையில்லை.
கம்பெனி வேலை போதும்.

அரசு சொன்னது நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததே
வேலைக்காகத் தான் என்று.
வரிச் சலுகைகளுக்கான சீசன் முடியும் நிலையில்
பறக்கத் துவங்கி விட்டன பன்னாட்டுப் பறவைகள்.
நண்பர் கேட்டார் வேடந்தாங்கலும் இங்கு தானே இருக்கிறது என்று.

இயந்திரத்திற்குள் இருந்து அம்பிகாவின் அசரீரி சொன்னது
செத்துப் போன எனக்கு 10 லட்சம்,
கருக்கொலை செய்து எஜமான சேவகம் செய்த
உனக்கு 5 லட்சம் என்று.
எப்போதும் போல் அரசுக்கு எதுவுமே கேட்கவில்லை.

விருப்ப ஓய்வில் கிடைத்த பணம் நாள்களை எண்ணத் துவங்கின.
வாட்டும் பசியும், வேலை போச்சா? கேள்வியும் துரத்துவதால்
விருப்பமே இல்லாமல் தேடுகிறார்கள்
மீண்டும் ஒரு வேலையை.
நிரந்தர ஓய்வுக்கு முன் எத்தனை முறை தேடுவது?
நிரந்தர வேலையை.



ஞாயிறு, 18 மார்ச், 2012

கைகொடுப்பதில்லை


ஞாயிற்றுக் கிழமை…
ஆற…. அமர….
எண்ணெய் தேய்த்து
தலை குளிக்க வைத்து
ஈரம் தங்காமல் உலர்த்தி
சிணுங்க சிணுங்க சிக்கெடுத்து
’ட்ரிம்’ செய்ய
’பார்லர்’ அழைத்துப் போகையில்

”அம்மா…..    
எனக்கும்
உன்னை மாதிரியே
முதுகு வரைக்கும்
முடி வேணும்மா”

பிஞ்சு நெஞ்சம்
கரம் பற்றி கெஞ்சுகையில்
வேலைக்கு செல்லும் அம்மாவுக்கு
எந்த ’கிளினிக் ப்ளஸ்’ சும்
கைகொடுப்பதில்லை
சாக்லெட்டைத் தவிர
.
               எஸ். பிரேமலதா

செவ்வாய், 17 ஜனவரி, 2012


எது பண்டிகை?

சிறுபான்மை அடையாளம் கொண்டோர்
கொண்டாடுவதில்லை
தீபாவளியையும் பொங்கலையும்

கொண்டாட்டங்களின் அடையாளம்
மாறுபட்டு இருப்பதால்
பண்டிகை நாள்களிலும்
நிற்பதில்லை பணிகள்
வேற்றுமைகளின் ஒற்றுமை
பார்த்தீர்களா? கேட்டார் சகபயணி.

நிஜமோ எதிர் திசையில்
புகைவண்டிகளும் பேரூந்துகளும்
பயணிக்கின்றன எப்போதும் போல்
ஓட்டுனர்களின் கொண்டாட்ட இழப்பால்
குறைவான பயணிகளை வாரிக்கொண்டு.

பொருள்களின் பெயரிட்டு
கூவி அழைக்கும் அதேகுரல்
தினசரி பார்க்கும் சாலையோரத்தில்

வெறிச்சோடி இருக்கும்
ரயில் பேருந்து நிலையங்களில்
இடங்களின் பெயரிட்டு
கூவும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

தமிழ் புத்தாண்டு எந்த நாளில்?
ஓயவில்லை பட்டிமன்றம்
வாட்டர் வாட்டர் ஒலிக்கிறது
சிறுவனின் குரல்.

எத்தனை பண்டிகைகள் வந்தாலும்
வழமைப் பணிகளில்
மூழ்கிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு
எது பண்டிகை?
எது அடையாளம்?  


              எஸ். கண்ணன்

வெள்ளி, 16 டிசம்பர், 2011


தீர்ப்பு

ஒரு
விடுமுறை நாளின்
மழை ஓய்ந்த ….
மாலைப் பொழுது

நகர வாழ்வின்
நரக ஓட்டங்களற்ற ஓய்வு

சிரிப்பும் களிப்புமாய்
சிற்றுண்டி இடையே சிறு சர்ச்சை
“யார் முதலில் சாப்பிட்டது?”

நாட்டாமை செய்ய
நயமாய் முன் வந்தது
நான்கு வயது பெண் குழந்தை.

அப்பாவின் காதருகே
தளிர்க்கரம் குவித்து
செவ்விதழ் விரித்து
திருவாய் மலர்ந்தது
”அப்பா நீ தான் ஃபர்ஸ்ட்”

அதேபோல் அம்மாவிடமும்
“அம்மா நீ தான் ஃபர்ஸ்ட்”

அண்ணாவிடமும் கூட …
“அண்ணா நீ தான் ஃபர்ஸ்ட்”

இறுதியாய்…
தன் காதருகே
தளிர்க்கரம் குவித்து
தீர்ப்பைத் திருத்திச் சொன்னது
“நான் தான் ஃபர்ஸ்ட்”
         
               எஸ்.பிரேமலதா

சனி, 19 மார்ச், 2011

பெண் மட்டுமல்ல!


விழிப்புணர்ச்சிக்கு எது

அளவு கோல்

தீர்மானிக்க முயற்சித்தால்

குற்ற உணர்வே எஞ்சி நிற்கும்.

இன்பமும் துன்பமும்

இனைந்தது தான் வாழ்க்கை

துளி இன்பம் கிடைத்தால்

பேரின்பத்தின் எல்லையாக

இருக்கக் கூடும் அவளுக்கு.

தொழிலாளியாகவும் மாறிவிட்டால்

பாவம் குழந்தைகள்

என்ன செய்கிறதோ

என்பதே மனநிலை.

நடுத்தர வர்க்கம் என்பதால்

கிடைத்தது கொஞ்சம் கல்வியும்

விழிப்புணர்வும்.

தெரித்து விழுகிறது வார்த்தைகளாய்

ரணத்தின் அவஸ்த்தைகள்.

இனைந்து வாழ்வது உன்பொறுப்பு

ஏனென்றால் அவள்

பெண் மட்டுமல்ல! தொழிலாளியும் கூட.

சனி, 12 மார்ச், 2011

தொழில் நுட்பக் கூட்டணி

சம்மன்களே சம்பாஷனைகள் ஆனதால்

திரைமறைவு பேரங்கள்

முடிவுக்கு வந்தது.

உயர் மட்டக் குழுவின் முடிவினால்

இனிப்பு வழங்கியவர்கள்

முடிந்து விட்ட பேரத்தினால்

இளிப்பைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

வீரமணிகளின் வீரவசனமும்

திருமாவளவன்களின் வேண்டுகோள்களும்

நாடகங்களுக்குள் நடந்த

உபகதைகளே.

63 முடியாது என்றவர்கள்

இப்போது ஒப்புக் கொண்டதற்கு

ரகசியங்கள் ஏதுமில்லை.

ஒன்னேமுக்கால் லட்சம் கோடி தி.மு.க.வை

நிர்பந்தித்தது புரிகிறது.

பா.ம.க.வும், முஸ்லீம் லீக்கும்

குறைத்து கொண்டதன் ரகசியம் என்ன?

கூட்டணி தர்மமா?.

நாடு நஷ்ட்டப் பட்ட

ஒன்னேமுக்கால் லட்சம் கோடியை

இன்னொரு நஷ்ட்டமான

இரண்டு லட்சம் கோடி நிர்பந்திக்கிறது.

2ஜி ஐ விட எஸ் பேண்டு

தொழில் நுட்பம்

மிக நுட்பமானது என்பதாலா?

ஆனாலும் உறுதியானது

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி.

நாட்டின் கஜானாவைக் காலிசெய்ய

கற்றுக் கொண்ட தொழில் நுட்பம்

உதவி செய்வதால்.

சனி, 26 பிப்ரவரி, 2011

மலிவானவர்கள் தானா?

---------------------------
வயல் வெளிகள்,
ஏரிகள், குளங்கள் எங்களது.

படையெடுத்தது பன்னாட்டு நிறுவனங்கள்
திறந்த வீட்டிற்குள் புகுந்ததைப் போல்
வந்தவனின் வசதிக்காக
வளைத்தார்கள் சட்டங்களை
அதற்கு சலுகைகள் எனப் பெயரும்
சூட்டினார்கள்.

விரிந்து கிடந்த நிலப் பரப்பிற்கு
போதுமானதாக இருந்தது
கையளவுத் தொகை.

கடல்போல் காட்சியளித்த ஏரிகளில்
கட்டடங்கள் எழுந்ததால்
நிரம்பி வழிகிறது சாலைகள்.

ஊரெல்லாம் இருளில்
சிறுதொழில்களுக்கும் தடங்கல்
வந்தவனுக்கோ
தடையில்லா மின்சாரம்.

கல்விக் கடன் கேட்டவர் காத்துக் கிடக்க
வரிச்சலுகைகள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு.

இந்த தாரளங்களைச் சாதனைகள்
என்றார்கள் தமிழகத்து ஆட்சியாளர்கள்.

மகராஷ்ட்ராவும், குஜராத்தும்
போட்டியிட்டதால்,
வாட்(VAT) ஐயும் வெட்டிக் கொண்டதாக
பெருமையும் பேசினார்கள்.

இவ்வளவிற்குப் பின்னும்
கொசுரு கேட்ட
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
தாரை வார்த்தார்கள் தொழிலாளர்களை.

சட்டத்தைச் சாட்சிக்கு
அழைத்த தொழிற் சங்கங்களிடம்
பிதற்றினார் பிரதமர்
இந்தியத் தொழிலாளர் சந்தை
மலிவானது என்று.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

வெளிச்சத்திற்கு வரும் அர்த்தங்கள்

வாழும் கலைக்கும்
துறவுக்குமான உறவு
புரியாத புதிர்தான்
இதுவரை.

சிறப்புச் சொற்பொழிவுகள்
இசை நிகழ்வுகள் மூலம்
அவிழ்க்கத் துவங்கியுள்ள புதிர்கள்

ஆளும் கட்சியுடன் போட்டியிடும்
ஃபிளக்ஸ் விளம்பரங்கள்
5000 இசைக் கலைஞர்களுடன் நாதவைபவம்
சிரீ ராம் கேட்வே நடத்துவதாக
சிரீ சிரீ ரவிசங்கரின் சிரித்த முகத்துடன்

மந்தையில் கட்டப் பட்ட மாடுகளுக்கு
இனவிருத்தியைத் தடைசெய்யும்
நிகழ்வுநினைவுக்கு வருகிறது.

துறவிற்கும் இனவிருத்திக்கும்
தொடர்பில்லைதான்
ஆனாலும் கேள்விகள்

அண்ணா பல்கலைக் கழகம்,
நெய்வேலி நிர்வாகம், திருப்பூர் முதலாளிகள்
சிரீ ராம் கேட்வே, பெங்களூர் நிர்வாகங்கள்
தியான நிகழ்ச்சிகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும்
அரங்கம் அமைக்க என்ன காரணம்.

கேட்டதைத் தராத முதலாளிகள்
கேட்காமலேயே இதைத் தருவதற்கு
நோக்கம் இல்லாமல் இருக்குமா?

ஐ.டி போன்ற தொழில் நுட்பம் கற்ற இளைஞர்களை
அமைதிப்படுத்த முயற்சிப்பது ஏன்?

பணி நேரமான 10 மணிநேரத்தை
12 ஆக உயர்த்தினாலும் பல் காட்டி
அடங்கிப்போக வேண்டும் என்பதற்காகவா?

இப்போது புரிகிறது
வாழும் கலைக்கான அர்த்தம்




நன்றி: தீக்கதிர்