நூலுக்கான முன்னுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூலுக்கான முன்னுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 அக்டோபர், 2010

விதையென வீழ்ந்தவர்கள்


ஒரு நட்சத்திரம் மடிந்து விழலாம்

ஆயினும் அதன் பிரகாசம்,

ஒருமலர் வாடி விடலாம்

ஆயினும் அதன்மணம்

எமது புரட்சி வீரர்கள்

இம்மண்ணிலே சிந்திய

செங்குறுதி காய்ந்திருக்கலாம்

ஆயினும் அதன் நினைவு....

எமது கொடிகளிலே

எமது நினைவுகளிலே

அழுத்தம் நிறைந்த

செவ்வண்ணமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.

சீன கவிதை

ஜாலியன் வாலாபாக் மைதானம் அமைந்துள்ள, அமிர்தசரஸ் நகரம், 2003ம் ஆண்டு நவம்பர் மாதம், அதுவரை இல்லாத வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 7வது மாநாடு நடைபெற்ற நேரம், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அஞ்சலியை செலுத்தி ஊர்வலமாக, மாநாட்டு அரங்கத்தை அடைந்தவுடன், அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தனர். மூன்று ஆண்டுகளில், 289 வாலிபர் சங்கத் தோழர்கள், உயிரைச் சங்கத்திற்காக அர்ப்பணித்து இருந்தனர். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும், 260 தோழர்களை இழந்திருக்கிறோம் என்ற செய்தி, சற்று அதிச்சியாக இருந்தாலும், மாற்று அரசியல், ஆதிக்க அரசியலின் வன்மங்களை, எதிர்கொள்ளாமல் சாத்தியமில்லை என்பதை புரிய வைத்தது.

1980ல் துவங்கப் பட்ட வாலிபர் சங்கம் இந்த தேச நலனுக்காக கொடுத்த விலையை, நாட்டின் எந்த ஒரு இயக்கமும் கொடுத்திருக்க முடியாது. காலிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்ற போது, இந்திய ராணுவதிற்கு இனையாக களப்பலி கொடுத்த இயக்கம், டி.ஒய்.எஃப்.ஐ, அரசியல் ராணுவமாக, தேச ஒற்றுமையை வெளிப்படுத்தியது. டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவராக இருந்த குர்னாம் சிங் உப்பல், மாநிலச் செயலாளராக இருந்த சோகன்சிங் தேஷி ஆகியோரைத் தீவிரவாத கும்பல் சுட்டுக் கொன்றதை, இன்றைய இளைய சமூகம் முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்ஸாமில், பிரிவினை கோஷத்தை எதிர்த்த காரணத்திற்காக துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட நிரஞ்சன் தாலுக்தாரின் வரலாறு, கல்லூரி மாணவிகளின் வீரமிக்க போராட்டம் போன்றவை, 1980 களில், இந்திய அரசியலில் திவீரம் செலுத்திக் கொண்டிருந்தது. தேச ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலை, எதிர்கொண்டதால், அன்றைய டி.ஒய்.எஃப்.ஐ இளைஞனை, ஹீரோவிற்குறிய மிடுக்கோடு, நடைபோடச் செய்தது.

பஞ்சாப்பில், காலிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், டி.ஒய்.எஃப்.ஐ இளைஞர்களை தற்காத்து கொள்ள வேண்டிய அளவிற்கு தாக்குதல் உச்சத்திற்கு சென்றது. எனவே சில ஆயுதங்களை வாங்கிட முடிவெடுத்து, அகில இந்திய தலைமை அறைகூவல் விட்டதும், பள்ளி மாணவனாக வசூலில் ஈடுபட்டதும், நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள். தியாகத்தில் புடம்போட்ட இயக்கம் என்பது மிகை அல்ல. இன்றைக்கும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள தங்களை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருக்கின்றனர். உயிரை அச்சுறுத்தி, இயக்கத்தை அழிக்கும் பகல் கணவில் எதிரிகள் நிச்சயம் வெற்றி பெறமுடியாது. உயிர்பயம் என்ற அழித்தொழிப்பு கொள்கை வெற்றி பெற்று இருந்தால், இந்தியா ஒரு நாடாக உருவெடுத்திருக்கவோ, விடுதலை பெற்றிருக்கவோ வாய்ப்பில்லை. மாறாக வன்முறை மட்டுமே அதிகாரம் செலுத்தியிருக்கும்.

தமிழகத்திலும், 30 ஆண்டு வரலாற்றில் 19 வீரர்களை இழந்திருக்கிறோம். திரும்பிப் பார்த்தால் அற்பமாக தெரியும் சில காரணங்கள், கொலைக்கு அடித்தளம் அமைத்திருப்பது, தமிழ் நாட்டின் நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களை, அடையாளம் காட்டுகிறது. உரிமைகள் அனைத்தும் உயிர்ப் பலி என்ற விலை கொடுத்து பெறப்பட்டது என்பதை, உரிமைகளை அனுபவிப்பவர்கள் நினைவில் கொள்வது அவசியம்.

உயிர் இழந்த யாரும் தனது சொந்த நலனை முன்னிருத்த வில்லை. கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களைக் காக்க, கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க, ரவுடிகளிடம் இருந்து, நிம்மதியான வாழ்க்கையை பொது மக்களுக்கு உருவாக்கிட, காமவெறியர்களிடம் இருந்து பெண்களைக் காத்திட, மதவெறியர்களிடம் இருந்து சிறுபான்மை மக்களைக் காத்திட, அரசியலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிட, உள்ளாட்சி தேர்தல்களில் ஊழலற்றவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, மாணவர் உரிமையை நிலப்பிரபுக்களிடம் இருந்து பாதுகாத்திட, பொதுச் சொத்தை அபகரித்ததை மீட்பதற்காக, என பொது மக்களின் தேவைக்காக, அவர்களைப் பாதுகாப்பதற்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்தவர்கள். தனி நபர் சாகசங்களாக இதைப் பார்க்காமல், இயக்க வளர்ச்சியைக் காக்க, தந்த விலைகள் என்று தான் டி.ஒய்.எஃப்.ஐ பார்க்கிறது. இனியும் தனது வன்முறையை, கள்ள சாராய வியாபாரத்தை, பெண்கள் மீதான ஆதிக்கத்தை தொடர முடியாது என்ற நிலையிலேயே, ஆதிக்க சக்திகளும், சமூக விரோதிகளும், வாலிபர் இயக்கத் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். ஸ்பார்ட்டகஸின் மரணம் அடிமை முறைக்கு முடிவு கண்டது. அது போல், நமது தோழர்களின் தியாகம், பல இடங்களில், சமூகக் கொடுமைகளை தடுத்து முன்னேற வித்திட்டது..

இன்றைய தமிழகத்தில், மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். கல்வி வர்த்தகம் கணஜோராக அரங்கேறுகிறது. தனியார் பள்ளி உரிமையாளர்கள், தங்கள் தேவைக்காக, பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவித்து, தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆள் திரட்டுகிறார்கள். கல்வி தனியார் வசம் கொடுக்கப் பட்டால், இந்த கொடுமைகள் தலைவிரித்து ஆடும் என்பதை, டி.ஒய்.எஃப்.ஐ. நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. உயிர் கொடுத்தாவது, தடுப்பது என களம் கண்டிருக்கிறது. கேரள மாநிலம், கூத்துபரம்புவில், தனியார் மருத்துவ கல்லூரி துவங்க, காங்கிரஸ் அரசு முயற்சித்த நேரத்தில், நவம்பர், 25, 1995ல், நடைபெற்ற டி. ஒய்.எஃப்.ஐ, எஸ்.எஃப்.ஐ.யின் எழுச்சிமிக்க போராட்டம் குறிப்பிடத் தக்கது. ராஜிவ், மது, ரோஷன், ஷிபுலால், பாபு ஆகிய ஐந்து தோழர்கள், காவல் துறையின், ஆட்சியாளர்களின் கொலைவெறிக்கு ஆளாகினர். அந்த போராட்டத்தில் பல ஆயிரம் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கில் தாக்குண்டனர். கன்னூர் மாவட்டம், சொக்லி பஞ்சாயத்தில், 15 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக, கழுத்திற்கு கீழ் சிதைக்கப் பட்ட உடலாக, இருந்தாலும், வரும் தோழர்களிடம், புன்னகை தவழும் முகத்துடன், இயக்கப் பணி எப்படி இருக்கிறது என்பதை அக்கறையுடன் விசாரிக்கும் தோழனாக, புஷ்பன் வாழ்ந்து வருகிறார். 15 ஆண்டுகளில், 5475 நாட்களில், இழந்திருக்கும் நேரத்தை, வாழ்வின் பல்வேறு இன்பத்தைத் தொலைத்து விட்டதை நினைத்து ஏங்கவில்லை. மாறாக தொடரும் போராட்டங்கள் காரணமாக வெற்றி மீதான நம்பிக்கையுடன், தோழர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.

இயக்கம் என்பது சம்பாதிப்பதற்கல்ல, பலரைப் பாதுக்காக்க, அந்த கவசமாக இயங்கிய குற்றத்தினால் தான், எமது தோழர்கள் கொலையுண்டார்கள். அனைவரும் 17 வயது துவங்கி, 40 ஐ, தொட்டவர்கள். அம்மா, அப்பா, மணைவி, குழந்தை ஆகிய அன்பைக் கடந்து, மக்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள். அதனாலேயே மக்கள் நிம்மதிக் காற்றை சுவாசிக்க, தாங்கள் காற்றாகி போனார்கள். இவர்கள் தியாகத்தை வரலாறு நினைவில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வளரும் புதிய தலைமுறைக்குச் சொல்லாமல் தியாகிகள் விதைக்கப் படுகிறார்கள், என்று சொல்வதில் பொருளில்லை. சொல்லும் விதத்தில், தோழர். ரமேஷ் பாபு முயற்சி எடுத்திருக்கிறார். ஓரிரு நாள் பணியில் இத்தகவல்களை சேகரிப்பது சாத்தியமற்றது. 30 ஆண்டுகளுக்கும் முந்தைய தியாகிகள் குறித்த விவரங்களை, இன்று இந்நூலுக்காக திரட்டாமல் விட்டிருந்தால், வரலாற்றின் பக்கங்களுக்குள், புதைந்து போயிருப்பார்கள். எனவே தான் இது மிகச்சிறந்த முயற்சி.

களப்பலியாகிய தோழர்களின், தோழர்கள், நன்பர்கள், குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் இத் தொகுப்பு குறித்து அறிந்தால், மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார்கள். வாலிபர் சங்கப் பணிகளுக்கிடையில், தமிழகத்தின் அனைத்து தியாகிகள் குறித்த வரலாற்றினை, சேகரித்து தொகுத்திருக்கும், டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவர். தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபு விற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற தகவல் தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.

புதன், 20 அக்டோபர், 2010

லெனின் மற்றும் பகத் சிங்





தனது விருப்பம் குறித்து ஆர்வம் கொண்டிருந்தால், அதற்காக முழுமூச்சாக உழைத்தால், அதனால் தூக்கமின்றித் தவித்தால், பின்னர் அவ்விருப்பம் நிறைவேறும் போது, உலகில் மாபெரும் பிம்பத்தைத் தான் அடைந்ததாக உணருவான் மனிதன். சோசலிசம் நமது விருப்பமா?

லெனின்.

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாகாது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. பொதுமக்கள் என்ற பெயரிலான அங்கலாய்ப்புகள் இப்படித் தான் விதைக்கப் படுகிறது. கல்லூரிகளில் பயிலும் மாணவர் கூட்டமோ, பொதுவான இளைஞர்களோ, அரசியலுக்கு வர விரும்பவில்லை. காரணம் அது ஒரு சாக்கடை, விழுந்தால் எழுந்திருக்க இயலாது, என ஏற்கனவே குறிப்பிட்ட முன்முடிவை பின் தொடருவதனால் உருவானது. மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் போது மட்டுமே சாக்கடை சுத்தமாகிறது. மழை பொய்த்துப் போனால், சாக்கடையின் துர்நாற்றமும், தேங்கிய சாக்கடையினால், நிலத்தடி நீரும் சேர்ந்து கெட்டுப்போவதும் இயற்கை. மனித உடலிலும் பழைய செல்கள் அழிந்து புது செல்கள் உருவாவதும் இயற்கையாக நடைபெற்று வருகிறது. இயற்கை ஒருவேளை நின்று போனால், நிலமும் உடலும் பாதிக்கப் படும். அரசியலும் இளைஞர்களின் பங்கேற்பு இல்லை என்றால், மிகச் சிறந்த அரசியலாக இருந்தாலும், எதிர்காலத்தை இழந்து விடும்.

உலகில் இளைஞர்களிடம் அரசியல் பேசிய தலைவர்கள் பலர். அரசியல் உரைகள் உலகப் புகழ் பெற்றது, லெனின், மா சே துங், சேகுவேரா, ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மட்டுமே. இத் தலைவர்கள் தங்கள் நாடுகளில் புரட்சி வெற்றி பெற்ற பிறகே அதிகளவில் இளைஞர்களிடம் பேசினார்கள். இளைஞர்களின் பங்களிப்பு அதிகார மாற்றத்துடன் நின்று விடக்கூடாது. இளைஞர்கள் சமூக ஆக்கத்தில் முன்நிற்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்து தங்கள் சம்பாசனைகளை அமைத்துக் கொண்டனர்.

அக்டோபர் 2, 1920ல் லெனின், கம்யூனிஸ்ட் இளைஞர் கழக ஊழியர்களிடம் நிகழ்த்திய உரை, வரலாற்றின் எல்லாக் காலங்களிலும், இளைஞர்களிடம் என்ன விவாதிக்க வேண்டும் என்பதற்கான, நிரந்தர சான்று. மார்க்சீயம் என்பது கடந்த காலத்தில் இருந்த அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறையையும் கற்றதன் அடிப்படையில் உருவானது. எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டு பிடிப்புகளை, தொழில் நுட்பத்தை, நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும், இளைஞர்கள் கற்றுத் தேர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி பிரசுரம், ஆய்வுக்கட்டுரைகள், மட்டும் கற்பது போதும், என்று இருந்தால் கம்யூனிஸம் என்பது வறட்டு சூத்திரம் ஆகிவிடும். அத்தகைய கம்யூனிஸ்டுகள் தற்பெருமை நிறைந்தவர்களாக மாறிவிடுவர். பழைய முதலாளித்துவ கல்வி முறையில் நாம் அமைக்க விரும்பும் சமூகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் அம்சங்களை விலக்கி விட்டு, கம்யூனிஸத்திற்கு பலனளிக்கும் அனைத்தையும், பழைய பள்ளியில் இருந்து கற்பது அவசியம், என்பதை இன்றைய சமூகத்திற்கும் பயன் படும் வகையில் குறிப்பிட்டு இருக்கிறார். சோசலிசம் என்பது முதலாளித்துவத்தை விடவும் சிறந்தது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் சிறந்தவற்றையும், அதன் கெட்ட அம்சங்களை களைந்து புதிய உருவாக்கமும் இனைந்து எல்லாமே மொத்த சமூகத்திற்கும் பொதுவானது, என்பதை நிலைநாட்டுகிறது. அப்பணியில் கம்யூனிஸ்டுகள் முழு ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற லெனின் விடுத்த வேண்டுகோள், அரசியல் சாக்கடை என்பவராலும் மறுக்க இயலாது.

ஒரு நாடு வளர்ச்சி பெற இளைஞர்களிடம் முதலீடு செய்ய, அரசுகள் முன்வர வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.. இந்தியா உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்டிருக்கும் நாடு. இங்கிருக்கும் அரசியல் இயக்கங்களோ, முதலாளித்துவ இளைஞர் இயக்கங்களோ, இளைஞர்களைத் தொலை நோக்குப் பார்வையுடன் அனுகுவதில்லை. மாறாக இளைஞர்களின் உணர்ச்சி வேகத்தை மட்டும் பயன் படுத்துகின்றனர். காஷ்மீரத்து போராட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களின் போராட்டங்கள், மாவோயிஸ்டுகள் என சொல்லிக் கொள்பவர்களின் போராட்டங்கள் ஆகிய அனைத்தும், இளமையின் வேகத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் சிந்தனையில் கருக் கொண்டதே.

இன்றைய இந்திய சூழ்நிலையில், இளைஞர்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்? என்ற பகத்சிங் எழுதிய கட்டுரை, சில விளக்கங்களை முன் வைக்கிறது. இன்றைய அரசியலில் புரட்சி புரட்சி என்று பேசுவோர்க்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும், சமூக மாற்றம் குறித்த கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்குமான வித்தியாசத்தினை தெளிவுபடுத்துகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பணத்தை விதைத்து, நாற்காலிகளுடன், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வதோ எளிது, என்ற அரசியல் வியாபாரம் கண்டு, அதிருப்தி கொள்வது நியாயமே. அதிருப்தி காரணமாக அரசியல் வனவாசம் கொள்ள முடியாது. புதிய சமூகத்தை உருவாக்கும் போராட்டம் எளிதானதல்ல. இளம் அரசியல் தொண்டர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அக்கட்சியை வலுப்படுத்துவதன் மூலமே, விவசாயி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க முடியும், என்ற விவாதத்தை பகத்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் சேராமலேயே முன்வைத்துள்ளார்.

இந்தியா விடுதலை பெற்றால், இர்வின் பிரபுவின் இடத்தில், சர். தேஜ் பகதூர் சாப்ரு வைக்கப்படலாம். இதனால் இந்திய விவசாயிக்கு என்ன பலன் கிடைக்கும்? என்ற கேள்வி முக்காலத்திற்க்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. பிரிட்டிஷாருக்கு அன்றைய இந்திய மக்களை ஏமாற்ற, மண்டோ மார்லி சீர்திருத்தம், செம்ஸ் போர்டு சீர்திருத்தம் போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் போதுமானதாக இருந்தது. இன்றைய ஆட்சியாளர்களிடம் நலத்திட்டங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறது.

23 வயதில் கொல்லப்பட்ட பகத்சிங், 1929களில், எழுதியிருக்கிறார், எனது கருத்துப் படி மேலவை என்பது முதலாளித்துவ ஆட்சியின் போலித்தனம் அல்லது சூழ்ச்சி, ஒரே ஒரு அவையைக் கொண்ட அரசாங்கமே சிறந்த ஒன்றாக செயல்பட முடியும். சட்ட மன்றத்திற்கும் விடவும், உயர்ந்த அதிகாரங்களுடன் மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர் ஒரு கொடுங்கோலர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இந்த விவாதம் இன்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் மட்டுமே முன் வைக்கப்படுகிறது. மாநில சுயாட்சி முழக்கங்கள் அரியணைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை என்பதாகி விட்டது. பகத்சிங்கின் தீர்க்க தரிசன உணர்வு தெளிவாக இருக்கிறது. பொருளாதார சுந்திரத்திற்கு சோசலிசம் மட்டுமே தீர்வு, என பகத்சிங் குறிப்பிட்ட நிலையில் தற்போது அரசியல் சுதந்திரத்தை பாதுகாக்கவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உலகமயம், நவீன தாராளமயம் என்பது வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், இந்திய ஆட்சியைத் தீர்மானிக்கிற சர்வ சக்தி படைத்ததாக அதிகாரம் செலுத்துகிறது. ஊழல் பெருக்கத்திற்கு பன்னாட்டு நிதி மூலதனத்தின் வருகை ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. காமன் வெல்த் போட்டிகளுக்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல ஆயிரம் கோடி ஊழல் அம்பலப்பட்டுள்ளது. இது போன்ற திட்ட அமலாக்கத்தில், 10 சதம் கமிஷன் பேரம் பேசப்படுவது தவிர்க்க இயலாது என அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிடுகிறார். இப்படி லஞ்சம் மற்றும் ஊழல் நியாயப்படுத்தப் படுகிறது.

இதற்கு காரணம் இந்த முதலாளித்துவ அமைப்பு முறையும், அது பாதுகாக்கும் வர்க்கமும் ஆகும். இதற்கு மாற்று பகத்சிங் குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் அரசியலும், லெனின் வலியுறுத்திய இளைஞர்கள் கற்றுத் தேர வேண்டிய சமூகமும் முன் நிறுத்தப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அரசியல் இதற்கு வலுப்பெறுவதும், இளைஞர்கள் அதை நோக்கி வருவதும் காலத்தின் கட்டாயம். இக்கட்டுரை தொகுப்பு வெளிவர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல.

திங்கள், 18 அக்டோபர், 2010

உலக இளைஞர் இயக்கம் குறித்து


உலக வரலாறு அனைத்தும், யுவ,யுவதிகளின் ரத்தத்தால் எழுதப் பட்டது.

-பகத்சிங்

ரோமாபுரியில் அடிமைகளைத் திரட்டி உரிமைக்கான கழகம் விளைவித்த ஸ்பார்ட்டகஸ் துவங்கி, ரத்தவாடையும், தூக்கிலிடப்பட்ட, புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, இளைஞர்களின் பிணங்கள் வரலாற்றுப் பாதைகளை நிரப்பியிருப்பதும், புதிய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய உலகம் எந்த எதிர்ப்பு அர்சியலும் இல்லாமல், பலருடைய வாழ்வை சூறையாடிய அதிகாரங்கள் ஆட்சி செலுத்தாமலும், கட்டமைக்கப் பட்டிருக்க முடியாது, என்பதற்கு, ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஏழு தலைமுறைகள் நாவல் சொல்லும் கதை, மனிதனை மனிதன் சுரண்டி, பிரமாண்டங்களை கட்டமைப்பதாகும். குண்டா கிண்டே, என்ற கருப்பினத்தவனின் மீது பின் மண்டையில் தாக்குதல் தொடுத்து கடத்தியதையும், அவன் அமெரிக்க வீதிகளில் அடிமையாக ஏலம் விடப்படுவதும், அடக்குமுறைக்கு ஆளாவதும், தாக்கப்படுவதும், பின்னர் அவன் வாழ்வில் உருவாகும் திருமணம், வாரிசு, பேத்தி, பேரன், என அனைவருக்கும் தான் ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து கடத்தப் பட்ட வரலாற்றை போதிப்பதாகவும், நாவல் வடிவமைக்கப் பட்டு இருக்கும். ஏழாவது தலைமுறையான, சிந்த்தியா என்கிற பெண் குழந்தைக்கும் அந்த வரலாறு போதிக்கப் படும்.

இந்த வரலாறு தாழ்வு மனப்பான்மையை உருவாக்க வில்லை, மாறாக எமது முன்னோர் அடைந்த ஏமாற்றத்தை நாம் அடையாமல் எச்சரிக்கையாக இருப்பதற்கும், முன்னோர் மீதான சுரண்டலுக்கு, காரணமான சமூக அமைப்பை, மாற்றும் வலிமையை, அடுத்த தலைமுறையான நாம் பெற்றிடவும், பயன்படுகிறது. அது போன்ற வலிமையை இளைஞர் அமைப்புகள் பெறுவதற்கு, கடந்த கால இளைஞர்களின் செயல்களையும், அந்த சமூக இளைஞர் கூட்டத்தின் வரலாறையும், பெறத்தக்க வகையில், ஏ,பாக்கியம் எழுதியுள்ள, உலக இளைஞர் எழுச்சிகளும் - இயக்கங்களும் என்ற சிறு நூல் சரியான பங்களிப்பைச் செய்யும். சுமார் 300 ஆண்டு காலத்தின், இரண்டு கண்டங்களின், வரலாற்றுத் தகவல்களை, சேகரித்து இருப்பது, இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததாக அமையும்.

நமக்கு இன்று கிடைக்கும் வரலாறு அனைத்தும், ஆளும் வர்க்கத்தினரால் எழுதப் பட்டது என்பதை, மறந்து விடலாகாது. கரிபால்டி, மாஜினி ஆகிய இத்தாலி நாட்டு இளைஞர்கள் பற்றி படிக்கிற போது, கடந்த காலங்களில், திரைப்படங்களில் கதாநாயகர்கள் தோன்றுவதைப் போன்ற உணர்வு உருவாக்கப் பட்டு இருந்தது. அப்புரிதலை இந்நூல், புரட்டி புது அர்த்தம் கற்பிக்கிறது. அவை தனி நபர்களின் சாதனை அல்ல, அங்கே பின்னிப் பினைந்திருந்த கூட்டு உழைப்பை, இருட்டடிப்பு செய்துவிட முடியாது. இரண்டாவது, போராட்டங்களுக்கு காரணமாக அரசியலும், அதை பின்பற்றும் சமூகமும் அமைந்திருந்தது. இதைத் தான் காரல் மார்க்ஸ்,நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிதான் தீர்மானிக்கிறார்என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் இத்தாலியில் மட்டும் அல்ல, ஐரோப்பா கண்டம் முழுவதும், 1700 துவங்கி, 1900ன் இறுதி வரையிலும், சுமார் 200 ஆண்டுகள் நிலபிரபுத்துவத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் வீறு கொண்டு நடைபெற்று உள்ளது.

முதலாளித்துவம் ஐரோப்பாக் கண்டத்தில், நிலபிரபுத்துவத்தின் அழிவில் இருந்தே வளர முடிந்தது, என்பதை இடதுசாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதை இந் நூல் தெளிவாக வரையறுக்கிறது. சுமார் 200 ஆண்டுகள் மன்னராட்சி மற்றும் ஜனநாயகத் தேவைக்கான போராட்டங்களை இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்திட, அன்றைய சமூகம் காத்திருந்ததோ, என சந்தேக கண் கொண்டு பாராமல், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமை சொல்லொன்னா துயரம் நிறைந்ததாக இருந்தது என புரிந்து கொள்வதே சரியானது. எல்லையற்ற அரக்கத் தனத்தை எதிர்க்கும் துணிவு இளைஞர்களுக்கு மற்ற அனைவரையும் விட அதிகமாக இருந்ததை வரலாறு பல தகவல்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.

நாங்கள் யதார்த்த வாதிகள், ஆனால் அசாத்தியங்களை கனவு கான்கிறோம், என குறிப்பிட்டார் சே. அவர் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களைக் கொண்டு மட்டும் குறிப்பிடவில்லை. முந்தைய நூற்றாண்டில் தடம் பதித்த போராட்ட வரலாற்றின் தொகுப்பில் இருந்தே, அதை ஆய்வு செய்த அனுபவத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்டதாக கூறலாம். ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும், வேகம், துணிவு, சமூக அக்கறை ஆகியவை இருக்கிறது. அவற்றை வெளிக்கொண்டு வருவதில் தான் இயக்கங்கள் பங்களிப்பு செய்கிறது. அந்த பங்களிப்பை, ஐரோப்பா கண்டத்தில், நிலப்பிரபுத்துவத்திற்கும், அன்றைய நிலையில் புதிதாக துளிர்விட்ட முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டை, அன்றிருந்த இயக்கங்கள் மிகச் சரியாக செய்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து இன்றைய முதலாளித்துவத்தை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது விவாதத்திற்கு உட்படுத்தப் பட வேண்டும். இன்றைய உலக முதலாளித்துவத்தை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா?, என்ற முடிவெடுக்கத் தெரியாத சமூகத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு காரணம் நேற்றைய நிலப்பிரபுத்துவத்தை அறிந்திருக்காதது எனச் சொல்லலாம். ஏனென்றால் நிலபிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தில், முதலாளித்துவம் வெற்றி பெற துணை புரிந்தது, நிலபிரபுத்துவத்தின் கொடுமை. அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற தொழிலாளர் நல உரிமையை வலியுறுத்தி இளைஞர்களைத் திரட்ட முடிந்தது. இன்று அந்த உரிமை பறிபோயிருக்கிறது. முதலாளித்துவம் துளிர்விட்ட காலத்தில், கிடைத்த சில உரிமைகள் கூட, இன்று பறிக்கப்பட்டு வருகிறது. இளைய த்லைமுறைக்கு இது குறித்த உணர்த்துதலை, அதிகப் படுத்தும் போது, நவீன சுரண்டலுக்கு எதிரான, நம்பிக்கையுடன் கூடிய போராட்டம் தீவிரம் பெறும்.

ஒன்றுபட்ட ஜெர்மனி, ஒன்றுபட்ட இத்தாலி, மன்னராட்சிக்கு எதிரான ப்ரெஞ்சு மாணவர் போராட்டம், போன்றவை இளைஞர்களுக்கு இருந்த, சுரண்டும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் உணர்வை வெளிப் படுத்துகிறது. இந்தியாவிலும் கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல், ஒன்றுபட்ட இந்தியாவிற்கான தேவையையும், போராட்ட அலைகளையும் உருவாக்கியது. இந்தியாவில் இருந்த மன்னர்களும், பின்னர் வளர்ந்த முதலாளிகளும், அத்தகைய போராட்டங்களுக்குத் தடையாக இல்லை. நூல் இந்தியாவில் நடைபெற்ற, இளைஞர்கள் தலைமை தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் குறித்து, புதிய மற்றும் எழுச்சி மிக்க தகவல்களைக் கொடுத்துள்ளது. இத் தகவல்கள் இன்றைய இளைஞர் இயக்கங்களுக்கு சரியான வரலாற்றை பின்பற்றுவதற்கு உதவி செய்யும்.

இந்தியாவில் முதலாளித்துவம், நிலபிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதே அல்லாமல், அழித்து முன்னேற முயற்சிக்கவில்லை. அதன் காரணமாகவே, இன்றைய இளைஞர்களிடம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையோ, புதிய சமூகம் குறித்த கருத்துக்களோ தீவிர ஆதிக்கம் செலுத்த வில்லை. எனவே வரலாறு கற்போம், தீவிர அரசியல், சமூக மாற்றத்திற்கு விதையிடுவோம், என்பதே இன்றைய இளைஞர் இயக்கத்திற்கான இப்போதைய முழக்கமாக இருக்க முடியும்.

இன்றைய தேவை கருதி நூல் வெளிவரக் காரணமாக இருந்த அனைவருக்கும், எப்போதும் நன்றிகள் உரித்தாகும்.