வியாழன், 16 ஜனவரி, 2020

Communist movement 100 years

எல்லா காலத்திலும் எதிர் குரல் இருந்திருக்கிறது. அந்த குரல் ஒடுக்கப்பட்டோ, அழிக்கப் பட்டோ அடக்கப்படுவது வழக்கம். வெறும் எதிர்ப்பு மட்டும் போதாது, சமூக அமைப்பு முறை மாறாமல், பாட்டாளிகளின் குரல் எதிரொலிக்காது, என்ற தன்மையில் வடிவமைத்தது, கம்யூனிஸ்ட் இயக்கம். உலகில் சோவியத் யூனியன் தொழிலாளி வர்க்க புரட்சி மூலம் ஆட்சி மாற்றமாக, கட்டமைக்கப்பட்ட போது, பெண்கள், தொழிலாளர் ஆகிய பாட்டாளிகள் சமநீதியும், அதிகாரமும் பெற முடிந்தது. அது உலகம் முழுவதும் தியாகப் பற்றி எரிந்தது, என்பதே உண்மை. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், சோவியத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை கண் கொத்தி பாம்பாக உளவு பார்த்தது. இன்று வரை இந்தியாவில், அடக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும், அவதூறு செய்யப்பட்டாலும், காட்டிக் கொடுக்கப்பட்டாலும், உயிர்த்தெழும் ஈர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது, கம்யூனிஸ்ட் இயக்கம். அதன் நூற்றாண்டு துவங்கி இருப்பதே புதிய எழுச்சியை, ஆவேசத்தை தந்திருக்கிறது, என்றால் மிகையல்ல.

சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன், காலனியாதிக்க எதிர்ப்பை இந்திய மண்ணில் நிலை நிறுத்திய பெருமை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. இது வெளிநாட்டு கருத்து அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் சுரண்டப்படும் வர்க்கம் தன்னை விடுவித்து கொள்ள நடத்தும் போராட்டத்தின் கருத்தாயுதமாக இருக்கிறது கம்யூனிஸம். இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலை போராட்டம், முதலில் அரண்மனை, மன்னர்களின் படை பட்டாளங்கள், அடுத்ததாக படித்த மேட்டுக்குடி மக்கள், பங்கேற்பாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து எளிய மக்களான விவசாயி, பழங்குடியினர், தொழிலாளி, மாணவர் மற்றும் இதர பகுதி மக்களை, விடுதலை தாகத்துடன் போராட்ட களத்தில் இறக்கியது கம்யூனிஸ்ட் கட்சி.

தோற்றம் மற்றும் தாக்கம்:

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உருவாகி நூறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் நகரில், 1920 அக்டோபர் 17 அன்று, முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவானது. எம்.என். ராய், எவ்லி ராய் டிரென்ட், அபானிராய் முகர்ஜி, ரோஸா ஃபிட்டிங்காவ், முகம்மது அலி, முகம்மது சாபி மற்றும் எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோரை கொண்ட முதல் கிளையின் செயலாளராக, முகம்மது சாபி தேர்வானார்.  கிளை உருவான தகவல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கிடைத்த உடன் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பெஷாவர் வழக்குகள் 4 முறை கம்யூனிஸ்ட்டுகள் மீது தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தலை மறைவாக செயல்பட வேண்டியிருந்தது. 

கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவான பின்னர் தான் முழு சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது. சௌக்கத் உஸ்மானி என்ற இளைஞர் மேற்படித் தீர்மானத்தை முன்மொழிய, அடிப்படையாக இருந்தது, லண்டனில் அவருக்கு ஏற்பட்ட கம்யூனிச தொடர்பாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கம், முழு விடுதலை, என்பதுடன் தொழிலாளர் உரிமைகளையும் பேச தூண்டியது.  இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது கிளையை துவக்கியது ஒரு நிகழ்வு என்றால், மற்றொரு புறம் இந்தியாவில், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) உருவானது மற்றொரு நிகழ்வு. 1920 அக்டோபர் 31 ல் உருவானது AITUC. இதை லாலா லஜபதி ராய், ஜோசப் பாப்டிஸ்டா, என்.எம். ஜோஷி, திவான் சாமன் லால், முசாபர் அகமது மற்றும் சிலரும் உருவாக்கினர். பின்னாளில் முசாபர் அகமது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவராக உருவெடுத்தவர் ஆவார். 

தமிழகத்தில், 1918, ஏப்ரல் 13ல் உருவான முதல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தை தோற்றுவித்தவர்கள், திரு.வி.கல்யாணசுந்தரம், பி.பி. வாடியா ஆகியோர். இதிலும் கம்யூனிஸ இயக்கத்தின் தாக்கம் இருப்பதை உணர முடியும். திரு.வி.க தான் நடத்திய நவசக்தி இதழில் கம்யூனிசம் குறித்தும், ரஷ்ய புரட்சி, தொழிலாளர்களுக்கு அளித்த விடுதலை மற்றும் உரிமைகள் குறித்தும் எழுதியுள்ளார். 1923ல் இந்திய கம்யூனிச இயக்கத்தின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படும், ம. சிங்காரவேலர் சென்னையில் மே தினத்தை கொண்டாடிய வரலாறு மகத்தானது. இவரும் சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமையேற்று வழி நடத்தியவர் என்பது நாம் அறிந்த உண்மை. 

விடுதலையும், தியாகமும்:

இந்திய விடுதலைப்போர், விவசாயி, தொழிலாளி, பழங்குடி மக்கள், கப்பல்படை மாலுமிகள் என்ற சாதாரண மக்களின் முழக்கமாக மாற்றப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட்டுகள் பெரும் பங்கு ஆற்றினர். இளைஞர் குழுக்கள் ஆங்காங்கு கலகங்கள் செய்தது. அவர்களுக்கு சமூக மாற்றத்தின் மீது, குறிப்பாக சோசலிசத்தின் மீது, மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் இந்திய விடுதலைப்போரில் இளைஞர்களின் அடையாளமாக உள்ளனர். அவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணையை எதிர்கொண்டவர் அஜாய்கோஷ் இவர் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அதேபோல், இவர்களுடன் இருந்த சிவவர்மா, பண்டிட் கிஷோரிலால் போன்றவர்களும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்களிப்பு செய்தனர். வங்காளத்தில் சிட்டகாங் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் பங்கெடுத்த இளைஞர்கள், கனேஷ்கோஷ், கல்பனாதத் ஆகியோரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பின்னாளில் இணைந்து போராடியவர்களே. 

பகத்சிங் போன்றோர் தூக்கிலிடப்பட்ட பின், மற்றவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ஏராளம். மிகக் கொடிய அடக்குமுறை சித்திரவதை செய்யக்கூடியதாக அந்தமான் சிறை அறியப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு இருந்து என்னை விடுவித்தால், நான் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருப்பேன் என ஒருமுறை இருமுறை அல்ல, தான் சிறையில் அடைக்கப்பட்ட 12 ஆண்டுகளில் 7 முறை மண்ணிப்புக் கேட்டு கடிதம் எழுதியவர் தான் வி.டி.சவர்க்கார். சிறையில் இருந்து, மண்ணிக்கப்பட்டு விடுதலையான பின், 1923 ல் இந்துமகாசபா அமைப்பில் இனைந்து பணியாற்றியதுடன், இந்துத்துவா அரசியல் கோட்பாடு குறித்த புத்தகத்தையும், எழுதினார். அதற்காக தான், பாஜக ஆட்சியாளர்கள் சவர்க்கருக்கு, பாரத ரத்னா விருது வழங்க துடிக்கின்றனர். ஆனால் பின்னாளில் கம்யூனிஸ்ட்டுகளாக மாறிய அந்தமான் சிறைவாசிகளான, கனேஷ்கோஷ், சதீஷ் பக்ரஷி, ஹரேகிருஷ்ண கோனார் மற்றும் சுபோத்ராய் உள்ளிட்டோர், விடுதலை போராட்டத்தை கைவிடவோ, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கருணையை எதிர்பார்க்கவோ இல்லை. மாறாக மிகக் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தனர் என்பதே வரலாறு.

அதுமட்டுமல்ல, இந்தியாவில், தேபாங்கா விவசாயிகளின் எழுச்சி, வோர்லி பழங்குடி மக்களின் எழுச்சி, புன்னப்புரா - வயலார் விவசாயிகளின் மாபெரும் போராட்டம், தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம், தமிழகத்தில், கிழக்கு தஞ்சை மாவட்டத்தில் நடந்த விவசாய மக்களின் போராட்டம், கோவை, மதுரை, நெல்லை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு காரணமாக கம்யூனிஸ்ட்டுகளே இருந்தனர். இப்போராட்டங்களே, விடுதலையை துரிதப்படுத்தியது. பிரிட்டிஷாருக்கு அச்சம் தந்தது.  தமிழகத்தில் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், பி.சீனிவாசராவ், கேடிகே தங்கமணி, வி.பி.சிந்தன், கே. ரமணி, பாப்பா உமாநாத், ஆர். உமாநாத், என்.சங்கரய்யா ஆகியோரின் பங்களிப்பை வரலாறு இருட்டடிப்பு செய்ய முடியாது. நில உரிமை, கல்வி உரிமை, சமூக உரிமை, கூலி உரிமை ஆகியற்றிற்கு இதுவே அஸ்திவாரம் என்பதையும் அறிவோம்.

காங்கிரஸ் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், வகுப்பு வாதம் ( அது இந்துமகாசபை அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கம், முஸ்லீம் லீக்) என்ற மூன்று நீரோட்டங்கள் இந்திய விடுதலைப்போரில் பிரதிபலித்தாலும், இந்திய விடுதலைக்கு பின் இந்தளவு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், காங்கிரஸ் தலைமையிலான முதலாளித்துவ ஆட்சியமைப்பும், அதற்கு எதிராக களம் கண்ட பிரதான எதிர்கட்சியுமான, கம்யூனிஸ்ட் இயக்கமும் தான். வகுப்புவாத அமைப்புகள் நாட்டை பின்னோக்கியே இழுத்தனர் என்பதே உண்மை. இன்றும் கூட வகுப்புவாதம் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆட்சி, காங்கிரஸ் காலத்தில் வழங்கிய மனித உரிமைகளையும், மக்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளையும், பறித்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி பின்பற்றிய கொள்கைகளை விடவும் வேகமாக ஜனநாயகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சவர்க்கார் குறிப்பிட்டது போல், ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக, பாஜக ஆட்சிக் கொள்கை அமைந்துள்ளது. 

நேருவும், பாஜகவும்:

நேரு இந்தியாவின் முதல் பிரதமர் பொறுப்பு வகித்தவர். கம்யூனிஸ்ட்டுகள் எதிர் கட்சியாக விளங்கினர். பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வளர்ப்பது என்ற முடிவு, அன்றைக்கு தனியாரிடம் அத்தகைய பெரும் தொகை இல்லை. எனவே அன்றைய காங்கிரஸ் ஆட்சி அரசு முதலீட்டில், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. மீண்டும் நவகாலனியாதிக்கத்திற்கு இந்திய ஆட்சியாளர்கள் இரையாகிற போது, இந்த பொதுத்துறைகளை இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு அடமானம் வைப்பதை பார்க்கிறோம். 

கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கட்சியாக இருந்ததும், தொடர் போராட்டங்களும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான உரிமை போராட்டங்களை நடத்தினர். பலசட்டங்களை உருவாக்க இந்த போராட்டம் பயன்பட்டது. இத்தகைய போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நேரு ஆட்சியால், தெலுங்கானா அடக்குமுறை, சிறைவாசம், சேலம் சிறையில் துப்பாக்கி சூடு போன்ற மிகக் கொடிய தாக்குதலுக்கும் ஆளாகி தான், சில உரிமைகள் பெற முடிந்தது. மேலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிளவு, அதைத் தொடர்ந்து வந்த இந்திரா தலைமை, அவசரகால சட்டம் மூலமான அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட்டுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் மூன்று மாநிலங்களில் ஆளும் சக்தியாக இடது ஜனநாயக முன்னணி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் உருவெடுத்தது. 

இன்று கார்ப்பரேட் ஆதரவு, தாராளவாத கொள்கை கோலோச்சியிருக்கிறது. இதில் பாட்டாளிகளும், விவசாய மக்களும், சிறு, குறு நில உடைமையாளர் மற்றும் உற்பத்தி உடைமையாளர் ஆகியோர் பெரும் பாதிப்பிற்கு ஆளாகிவருகின்றனர். இதை எதிர்த்த போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கூட்டாக நடத்தி வருகின்றன. பொருளாதார சுரணடலை மக்கள் உணர்ந்து போராடுவதை தடுப்பதற்காக, வகுப்புவாத அரசியலும் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, விடுதலை போராட்டம் முடிந்து, சுதந்திர இந்தியாவை கைப்பற்ற நினைத்த வகுப்புவாதத்திற்கு, தற்போது, ஏகாதிபத்தியமும், இந்திய பெருமுதலாளிகளும் வாய்ப்பு உருவாக்கி, ஆட்சியை பாதுகாத்து வருகிறனர். பாஜக அரசு கார்ப்பரேட் பெரு நிறுவனங்களைப் பாதுகாத்து வருகிறது. 

எனவே கம்யூனிஸ்ட்டுகளின் எழுச்சியே, இந்த மாறுபட்ட சுரண்டலுக்கும், பாட்டாளி வர்க்கத்தினைப் பாதுகாக்கவும் கூடியது ஆகும். அதற்கான அரசியல், சிந்தாந்த பயிற்சியை இன்றைய தலைமுறைக்கு வழங்குவதே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாண்டும். கற்போம், போராட்டதிற்கு புதிய உந்துவிசையை மேம்படுத்துவோம்.

Jawaharlal Nehru University

அடக்குமுறை இங்கெங்கு என இல்லாமல், திரும்பும் திடையெல்லாம், என்பதாகியுள்ளது. பாஜகவின் ஆட்சி அறிவுலக மக்கள் மீது, பெரும் கோபம் கொண்டு அடக்க முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தின் மீது இருந்த வெறுப்பு, வளர்ந்து, குறிப்பிட்ட நிறுவனங்களின் மீதான வெறுப்பாக மாறியுள்ளது. ஏற்கனவே புனேவில் இருக்கும், திரைப்படம் கல்லூரி, அடுத்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அதைத் தொடர்ந்து அலிகார் உச்லிம் பல்கலைக் கழகம் ஆகியவை இலக்காக இருந்தது. இதில் படிக்கும் மாணவிகளும் தாக்குதலுக்கு ஆளாகினர். எதிர்ப்பும் வலுத்தது. இப்போது தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் திட்டமிட்டு தாக்கப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்:

1969 ல் உருவாக்கப்பட்ட மத்தியப்பல்கலைக்கழகம். இங்கு 8500 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 5200 பேர் ஆராய்ச்சி மாணவர்கள். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக சிந்தனைகளும் கொண்ட வளாகமாக இந்தியாவில் இயங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி இந்த பல்கலைக் கழகத்தை, நேருவின் மறைவை தொடர்ந்து உருவாக்கி இருந்தாலும், இங்கு இடதுசாரி சிந்தனையாளர்களே அதிகம் இருந்தனர். பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, சுகாஷினி அலி, போன்றவர்கள் உள்ளிட்டு, எராளமான தலைவர்கள் மாணவர் இயக்கப் பணியாற்றிய வளாகம். இளம் தலைவர்களான கண்ணையா குமார், விஜுகிருஷ்ணன் ஆகியோர் அண்மை காலத்து உதாரணங்கள். புகழ் பெற்ற பேராசிரியர்களான, ரொமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், உத்சா பட்நாயக், கே. என். பணிக்கர், சி.பி. சந்திர சேகர், ஜெயதிகோஷ், இந்த வரிசை நீளமானது. அண்மையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர், அபிஜித் பானர்ஜி இந்த பல்கலைக் கழக மாணவர் தான். பொருளாதாரம், வரலாறு, அரசியல் மற்றும் சில துறைகள் உலக புகழ் பெற்ற அறிஞர்களை உருவாக்கியுள்ளன. 

பல அரசியல் கட்சிகளுக்கான தலைவர்களும், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளையும் உருவாக்கிய பெருமை, இந்த கல்வி வளாகத்திற்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள பெருமை மிகு கல்வி நிலையங்களில் இந்த பல்கலைக் கழக மாணவர்கள் பேராசிரியர்களாக உள்ளனர். ஹூகோ சாவேஸ் முதல் பல நாட்டுத் தலைவர்கள் இந்த பல்கலைக் கழகத்தில் பாராட்டு பெறுவதும், வரவேற்கப்படுவதும்  உண்டு. இங்கு நடைபெறும் மாணவர் பேரவைக் தேர்தல், ஜனநாயகத்தின் மாண்பை பறைசாற்றக் கூடியது. அனைத்து தரப்பும் விவாதிக்க வாய்ப்பு அளிக்கும் இடமாக இருக்கிறது. மிகச்சிறந்த தேர்தல் முறை இங்கு பின்பற்றப்படுவதால், இதன் முடிவை அறிவதில் இந்தியா முழுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை காணமுடியும். இதன் விளைவு தான் மாணவ, மாணவியர் நள்ளிரவிலும் நூலகத்தை பயன்படுத்த முடிகிற இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகமாக இருக்கிறது. இங்குள்ள தேனீர் கடைகளும், இதர பல இடங்களும் மாணவியருக்கு அச்சம் தருவதாக இருந்ததில்லை. கேண்டீன் மற்றும் விடுதிகளும் இருபாலரும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு என்ற வகையிலேயே, செயல்படும் ஜனநாயகத் தன்மை கொண்டுள்ளது. 

1984 ல் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டு படுகொலை செய்த போது, சீக்கியர்கள் மிகக்கடுமையாக தாக்கப்பட்டனர். அப்போது 3000க்கும் மேற்பட்ட சீக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, காங்கிரஸ் கட்சியினரின் பழி வாங்கும் உணர்ச்சியை, ஒதுக்கி தள்ளிய மாணவர் வரலாறு இந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கு உண்டு. அதேபோல் 1975-77 காலத்தில் அவசர சட்டத்தை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமலாக்கிய நேரத்தில், இன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், தோழர். சீத்தாராம் யெச்சூரி, ஜே.என்.யு மாணவர் பேரவைக் தலைவராக இருந்தார். அவர் தலைமையில், இந்திரா காந்தி வீடு முன் ஜே.என்.யு மாணவர்கள் குழுமி, இந்திரா காந்தி முன்னிலையில், அடக்கு முறையை கண்டித்து தீர்மானம் இயற்றிய பெருமை ஜே.என்.யு மாணவர்களுக்கு உண்டு.

தொடரும் முரண்பாடுகளும் ஜனநாயகத்திற்கான போராட்டமும்:

பல்வேறு வகையில் சிறப்புக்களைப் பெற்று இருந்தாலும், முரண்பாடுகளும், அடக்குமுறைகள் பலவற்றினை கொண்டதாகவும் இருந்துள்ளது. குறிப்பாக இடதுசாரிகளின் செல்வாக்கை இந்த பல்கலைக்கழகத்தில் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளும் வர்க்கம் பலவகை முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மாணவர் அமைப்பு என்.எஸ்.யு.ஐ, தற்போது பாஜகவின் ஏ.பி.வி.பி களம் கண்டு தேர்தல்களில் தோல்வியுறுவது தொடர்கிறது. 

இந்த ஆளும் வர்க்க கருத்துக்களுடன் மோதும் வலிமை ஜே.என்.யு மாணவர்களிடம் அதிகரித்து இருப்பதை பொறுத்து கொள்ள இயலாத நிலையை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து, பார்க்க முடிகிறது. குறிப்பாக டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய 377 வது சட்ட பிரிவு குறித்த தீர்ப்பு, அடிப்படை வாதிகளால் எதிர்க்க பட்ட போதும், ஜே.என்.யு மாணவர்கள் ஜனநாயக உரிமை, என்ற முறையில் ஆதரித்தனர். அடக்குமுறை அதிகரித்த போது, வானவில் பேரணி என 2015 ம் ஆண்டு நடத்தியது, பெரும் வரவேற்பை பெற்றது. 2016 ம் ஆண்டில், கண்ணையா குமார், நஜிப் ஆகிய மாணவர்கள் தே விரோத சட்டத்தின் பெயரில் தாக்குண்ட போது, இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்ததை பார்க்க முடிந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் தொட்டு, கல்வி காவிமயம் ஆவதையும், சமஸ்கிருத மொழி திணிப்பு, ஜோதிட கல்வி, பெண்களுக்கான கல்வி என பழமைவாத கண்ணோட்டம் கொண்ட பாடத்திட்ட மாற்றங்களை, அறிவியல் பூர்வமாக எதிர்த்து நின்ற வலிமை, ஜே.என்.யு மாணவர் மற்றும் பேராசிரியர்களுக்கு உண்டு. ஆக்ஸ்போர்டு, மஸாசூட்ஸ் இண்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய பல்கலைக் கழகங்கள் அதன் பேராசிரியர்கள் நோம்சோம்ஸ்கி, அமர்த்திய சென் ஆகியோர் உலக நிகழ்வு போக்குகளில் கருத்து சொல்வதில் முன்னணியில் இருப்பது போல், ஜே.என்.யூ பேராசிரியர்கள் ரொமிலா தாபர், கே.என்.பணிக்கர், பிரபாத் பட்நாயக் ஆகியோர், செயல்ப்டுகின்றனர்.

இந்த பின்னணியில் தான் மாணவர் சேர்க்கை வடிக்கட்டப்படுவதை, ஆளும் வர்க்கம் விரும்புகிறது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் ஆக்கிரமிப்பை தடுக்க விரும்புகிறது. இதில் அண்மையில் அதிகரித்து வரும் தனியார் பல்கலைக் கழகங்களின் விருப்பமும் உள்ளடங்கும். அஸிம் பிரேம்ஜியின் பல்கலைக் கழகம், சிவ் நாடார் பல்கலைக் கழகம் ஆகியவை ஜே.என்.யு அதன் வரலாற்று பின்புலத்துடன் நீடிப்பதை விரும்பவில்லை. ஜே.என்.யு வை விட தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்தது என்ற கருத்தாக்கம் தோல்வியுறுவது, ஆளும் வர்க்கத்தை நெருக்கடிக்கு தள்ளுகிறது. குறிப்பாக பாஜகவின் தொடர் முயற்சியான, பன்னாட்டு பல்கலைக் கழகங்களுக்கான அனுமதி மசோதா, அமலாக்கம், நிலுவையில் உள்ளது. இதற்கெல்லாம், ஜே.என்.யு ஒரு தடை என்றால் மிகையல்ல. 

கல்வி கட்டண உயர்வு மற்றும் உரிமை பறிப்புகள்:

பலமடங்கு கல்விகட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும், சாதாரண குடும்ப பின்புலம் கொண்ட மாணவர்கள் கல்வி பயிலும் இந்த நிறுவனத்தில் வசதி படைத்தோரின் ஆதிக்கத்தை மேம்படுத்த விரும்பும் நோக்கத்துடன், இந்த கட்டண உயர்வு திணிக்கப்பட்டு உள்ளது. விடுதிகளுக்குள் செல்லும், நேரம், ஆண்,பெண் பழகும் விதத்தில் கட்டுப்பாடு என்ற பெயரில் பழமை வாத திணிப்பு ஆகியவற்றை, பாஜகவின் கொள்கைப் பிரச்சாரகராக செயல்படும், துணைவேந்தர் அறிவிப்பு செய்துள்ளார். மேலே விவாதித்த அனைத்து பெருமைகளையும் நாசம் செய்யும் உள்நோக்கம், நீண்ட கால திட்டமிடலுடன் திணிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து தான் தற்போது மாணவர்கள் போராட்ட களத்தில் உள்ளனர்.

எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று, வழிகாட்டிய ஜே.என்.யு மாண்வர்களின் போராட்டத்தை வளாகத்திற்குள்ளேயே அடக்கி விட எடுக்கும் முயற்சியை ஒன்று பட்டு மாணவர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த வீரம் செரிந்த போராட்டம் பாராட்டுக்குரியது. தலைமை தாங்கும் மாணவர்களை குறிவைத்து, தனியாக பிரிப்பது, அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடிப்பிரயோகம் செய்வது, இதில் மாணவிகளையும் விட்டு வைப்பதில்லை என்ற மணப்போக்குடன் செயல்படுவது ஆகியவற்றை, பார்க்க முடிகிறது. இது ஒரு குறிப்பிட்ட மாணவர் போராட்டம், கல்வி கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம், என குறுக்கிவிட முடியாது. ஜனநாயக குரலை, அறிவு ஜீவிகளின் வலிமையை, மாற்றுக் கொள்கை வடிவமைத்து போராடுவதை ஒடுக்க முயற்சிக்கும், சர்வாதிகாரப் போக்கு என புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பாசிச சக்திகளுக்கு இன்று இந்தியாவில் தேவை ப்படும் ஒடுக்குமுறை.

எனவே தான் இந்தியாவின் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், ஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து, அறிக்கை வெளியிட்டு உள்ளன. ஆதரவு போராட்டத்திற்கான அழைப்பு விடுத்துள்ளன. அண்மையில், பாரிஸ், சிக்காகோ, கலிபோர்னியா, சிலி போன்ற நகரங்களிலும், மாணவர் - தொழிலாளர், ஆசிரியர் - மாணவர் ஆகியோரின் ஒன்று பட்ட போராட்டம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தலைநகர் டில்லியிலும் அத்தகைய வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த ஒன்றுபட்ட போராட்டங்கள் அணிவகுக்க வேண்டிய தேவை, அதிகரித்துள்ளது. ஜே.என்.யு மாணவர்கள் முழக்கமிடுவது போல், நாடே முழங்கட்டும், We People United Shall Always be victorious..

Strike 2020

இது 18 வது வேலைநிறுத்த அறைகூவல். தொழிலாளி வர்க்கம், வேகமாக பாய்ந்து வரும் முதலாளித்துவ தாராளவாத கொள்கைகளை எதிர்த்து நிற்கும், மற்றுமொரு அவதாரம். ஜனவரி 8 2020ல், மிரமிக்க வைக்கும் வகையில், இந்தியா முழுவதும், தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். 2019 ம் ஆண்டின் நிறைவு பகுதி, மதசார்பற்ற மக்களும், மாணவர்களும், பெரும்பான்மையான அரசியல் இயக்கங்களும் கூட்டாக போராடிவரும் களமாக மொத்த இந்தியாவும் மாறியுள்ளது. இங்கு அடையாளங்களின் பெயரில், ஒடுக்கவோ, பிரிக்கவோ அனுமதியோம் என்ற முழக்கமே விண்ணுயர்ந்து நிற்கிறது. பெரும்பான்மை மக்கள் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்திருந்தாலும், பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தொழிலாளி வர்க்கம் மோடி தலமையிலான பாஜக ஆட்சியில் நடத்தும் நான்காவது பொது வேலை நிறுத்தம் இது. பெரும்பான்மையான மக்கள் சிறுபான்மையான முதலாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் போராட்டங்களின் சங்கமம் இந்த வேலை நிறுத்தம். 

பொருளாதார சுரண்டலின் உச்சம்:

வாகண உற்பத்தி தேக்கம், மாருதி 32 சதம் உற்பத்தி குறைவு, வணிக வாகணங்கள் பெரும் தேக்கம், அசோக் லேலேண்ட், டாடா ஆகிய நிறுவனங்களில் லே ஆப், ஆட்குறைப்பு, காண்ராக்ட் தொழிலாளர் வீட்டுக்கு அனுப்பபட்டனர். டி.வி.எஸ் சுமார் 27 ஆயிரம் நீம் (NEEM) தொழிலாளர்களை உருவாக்கினாலும், வேலைப் பறிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 3 லட்சம் பேர், இப்போதைக்கு வேலை இழந்துள்ளனர். இன்னும் தொடர வாய்ப்புள்ளதாக ஆரூடங்கள். சிறு குறு தொழில்கள் முடக்கம். தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் சிறு தொழில்கள் மூடப்பட்டதாகவும், 5 லட்சம் தொழிலாளர் வேலை இழந்ததாகவும் அமைச்சரே சட்ட மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ள நிலமை. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் பெரும் சரிவு. இப்படியாக செய்திகள் நீண்டு செல்கின்றன. 

மோடியும், நிர்மலா சீத்தாராமனும் சொல்வது போல், இந்திய பொருளாதாரம் உடனடியாக, 5 டிரில்லியன் டாலராக உயர வாய்ப்பில்லை என, சர்வ தேச நிதி முனையத்தின் அதிகாரி கீதா கோபிநாத் நிலமையின் தீவிரத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அப்படி வளர வேண்டுமானால், இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி சராசரியாக 10.5% என்ற நிலையை அடைய வேண்டும். அதற்கு இந்திய மக்களின் வாங்கும் சக்தி உயர வேண்டும், என கீதா கோபிநாத் கூறியுள்ளதை கேட்கும் காதுகள் மோடி அரசில், எந்த அமைச்சருக்கும் இல்லை. 

இப்போதும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தாமல், முதலாளிகளின் பதுக்கும் சக்தியை உயர்த்தும் வேலையில், மோடி ஆட்சி ஈடுபட்டுள்ளது. சுமார் 2.20 லட்சம் கோடி ரூபாய் என்ற பிரமாண்டமான தொகையை பாஜக ஆட்சியாளர்கள், பெரு முதலாளிகளுக்கு சலுகையாக வழங்கியுள்ளனர். இதற்கு அரசின் சேமநல நிதியாக இருந்த ரிசர்வ் வங்கி பணம் ரூ 1.75 லட்சம் கோடியை தாராளமாக வழங்கியுள்ளது. வங்கிகள் மூலம் தற்போது சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளனர். விரல்விட்டு எண்ணும் முதலாளிகள் மீதே மோடி ஆட்சியின் பரிவு, பாசம் உள்ளது. 

கீதா கோபிநாத் போன்ற பொருளாதார வல்லுனர்கள் கூறுவது போல், வாங்கும் சக்தி உயர, பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரம் உயர வேண்டும். அரசு முதலாளிகளுக்கு அளித்த சலுகையை, பொதுமக்களின் நலனுக்கான பொதுச் செலவினத்தை அதிகரிப்பதன் மூலமே செய்திருக்க முடியும். கிராமப் புற வேலை உறுதிச் சட்டம் தீவிரப்படுத்தப்படுவது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பண்ப்பயன்களை விரைவு படுத்துவது, போராடும் தொழிலாளர்களின் கூலி உயர்வை ஆதரிப்பது ஆகியவை தான் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும். இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் சுழற்சி சரியான திசையில் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மோடியின் தலைமையிலான ஆட்சி இதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. 

அண்மையில் பாஜக அரசு நிறைவேற்றிய சம்பளம் குறித்த சட்டத் திருத்தம், வாங்கும் சக்தியை குறைக்கும் வகையில் உள்ளது. போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இரண்டாவது முறையாக பதவி ஏற்ற 100 நாள்களில், தனியார் மயத்தை தீவிரப்படுத்துவது, தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவது, தொழில் வளத்திற்காக நில வங்கிகளை உருவாக்குவது, என செயல்பட்டு வருகிறது பாஜக ஆட்சி. 

எழுச்சி மிக்க போராட்டங்கள்: 

திணிக்கும் விசத்தை, தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என மமதையுடன் பாஜக அரசு இருப்பதை, எதிர்த்த போராட்டங்கள் தீவிரம் பெற்று வருகிறது. தனியார் நிறுவனமான மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தி முடங்கி திணறுகிற போது, அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அதே தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன. பாரத் பெட் ரோலியம், ஏர் இந்தியா ஆகியவை தனியாருக்கு வழங்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்த வேலைநிறுத்தம் அண்மை உதாரணம். ராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு எதிரான வேலை நிறுத்தங்கள், சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்த வேலை நிறுத்தங்கள், வங்கிகள் இணைப்பிற்கு எதிரான வேலை நிறுத்தங்கள் ஆகியவை தொழிலாளி வர்க்கத்தின் வீரியத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆங்காங்கு மையம் கொண்டிருக்கும் இத்தகைய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், பெரும் புயல் காற்றாக மாறும் நாள் தான் ஜன 8. 

போராடுவோரை தேச விரோதி என்ற முத்திரை குத்தி வரும் பாஜக ஆட்சி, தேசத்தையே விற்றுக் கொண்டிருக்கிறது, என்பதை அம்பலபடுத்த வேண்டியுள்ளது. கொள்கை ரீதியிலான விவாதத்தை கார்ப்பரேட் ஊடகங்களும், அரசும் அங்கீகரிக்கவில்லை என்றாலும்,  நடக்க இருக்கும் பொது வேலை நிறுத்தம் தேசம் காக்கும் போர் என்பதை பறை சாற்ற வேண்டியுள்ளது. குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் என்பதை சட்டமாக்குவது, தேசத்தில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். ஆட்குறைப்பு தடுக்கப்பட்டு, காண்ட் ராக்ட் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவது, வேலைவாய்ப்பை பெருக்கும், வாங்கும் சக்தியை உயர்த்தும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 3000 என உயர்த்துவது சமூக பாதுகாப்பை மேம்படுத்தும், வாங்கும் சக்தியை அதிகரிக்கும். இந்த வகையில் உற்பத்தி முடக்கத்திற்காக அல்ல, உண்மையில் தேசத்தின் தலைநிமிர செய்வதற்காக, தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தம் செய்வது அவசியமாகிறது.

வேலை நிறுத்தங்களே உரிமைகளை அளித்தது:

இன்றைய தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைக்கு காரணமான மே தினம் கொண்டாடுகிறோம். குறைந்த பட்ச சட்டம் என ஏதோ ஒன்று இருக்கிறது. சில நலத்திட்டங்கள் செயல்படுகிறது என்றால் அதற்கு காரணம் வேலை நிறுத்தங்களே. தொடர் போராட்டங்களே. தொடர்ந்து போராடாமல் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக போராடி, அங்குலம் அங்குலமாக பெற்ற உரிமைகளை, சட்டம் இயற்றி, ஒரேநாளில் பலியிடுவது, பொருத்து கொள்ள முடியாதது என்பதை, அரசுக்கு பலமாக உணர்த்த வேண்டும். அதற்கு மிகச் சிறந்த வடிவம் வேலை நிறுத்தமே. 

தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் துவங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 17 வேலைநிறுத்தங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அரசுக்கு ஸ்பீட் பிராக்கராக விளங்கியுள்ளது. இப்போது பெரும் சுவராக நின்று, முன்னேற முடியாத அளவிற்கு தடுக்கும் வலிமையை தொழிலாளி வர்க்கம் உருவாக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட பொது வேலைநிறுத்தம், அதை சாதிக்கும். ஒவ்வொரு வேலைநிறுத்தத்தின் போதும் பங்கேற்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு அதை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஊற்றெடுத்துள்ள போராட்டங்களை பொதுவேலை நிறுத்தம் என்ற பெருவெள்ளம் ஒருங்கிணைக்கட்டும். அணிதிரள்வோம், வெற்றி பெறுவோம்….



Kavitha I

சலிப்பு

கூலிக்கு உழைக்கும் போது வருவதில்லை…
தனக்காக மற்றவர் உழைத்தால் வருவதில்லை…
ஆனால் மேலோங்குகிறது…
வேலைகிடைத்த பின் படிக்கும் போது…
நடத்திய யுத்தங்கள் நீடிக்கும் போது….

நினைத்துப்பார்ப்பதில்லை வரலாற்றை..
முன்னோர் சலித்திருந்தால்…
ஒன்று சேர சலித்திருந்தால்….
போராட சலித்திருந்தால்...
அடிமை நுகத்தடியில் இருந்து 
விடுதலை பெற்றிருப்போமா …. என்று…
முரண்பாடு முற்றாமலா இந்த நிலைக்கு வந்தோமென்று…

போராடு… போராடிப்பார்…
நீயே சலித்து… விரக்தியாகி…
அடங்கி விடுவாய்… உன்னில் சிலரை 
அடக்கினால்…. மிரண்டு விடுவாய்..
முடியாதெனில் கொஞ்சம் கோரிக்கைகளை நிறைவேற்றி…
அனைத்து கொள்வது...
இதுதானே முதலாளித்துவத்தின் சூத்திரம்…

சூத்திரங்கள் மாறாமல்…
சலித்துக் கொள்வதில் நியாயமில்லை...
சங்கம் அழைக்கிறது...
அடங்காமல், மிரளாமல், போராடிப்பார்…
புது ரத்தம் பாய்ந்தோடும்…
புது சூத்திரத்திற்கான படைப்பில்…
சலிப்பும் இல்லை… ஓய்வும் இல்லை…

பண்டிகைகளின் கொண்டாட்டத்தில்..
மட்டுமல்ல…
சங்கத்தின் சங்கமத்திலும்...
எழுச்சி பெறுகிறது… உறவுகள்….