புதன், 11 செப்டம்பர், 2024

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை

 

சமூக பாது காப்பு… தேச வளர்ச்சியின் அடையாளம்..

 

வேலை கிடைப்பதே பெரிய விஷயம், அதிலென்ன சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை? இப்படி ஒரு கேள்வியை சிலர் எதிரொலிப்பதாக உள்ளது. வேலைக்கு சேரும் போதே, வெளியேறும் தேதியும் சான்றிதழ் பார்த்து குறித்தால், அது ஓய்வு பெறும் வயது, தேதி சார்ந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தி பின் வெளியேற்றும் விதமாக, நாள் குறிக்கப்பட்டால், அது பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட். இன்று நவதாராளமய கொள்கை அளித்திருக்கும் வேலை வாய்ப்பின் தன்மை, பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட் என்ற வடிவில் உள்ளது. நிரந்தர வேலை இல்லை என்பதை தெளிவாக அரசும், தனியாரும் கூட்டாக சொல்கின்றனர்.

உழைப்பு சக்திக்கு நியாய விலை எப்போது?

தக்காளி அதிகம் விளைந்தால், விலை படுமோசமாக சரியும். தக்காளிக்கு கிராக்கி அதிகம் என்றால், விலை ஏறுகிறது. இப்போது நாம் காணும் அத்தியாவசிய பொருள்களுக்கான விலை அதைக் தான் குறிப்பிடுகிறது. அதேபோல் முதலாளித்துவ உற்பத்தியில், வீடுகள் அல்லது கார் போன்றவை மிக அதிகமாக உற்பத்தியாகி விற்பனைச் சந்தையில் காத்திருந்தாலும், விலை குறைவதில்லை. முதலாளி எதிர் பார்க்கும் விலைக்காக காத்திருக்கின்றனர். ஏனென்றால் குறுகிய காலத்தில் கெட்டுப் போகபோவதில்லை. எனவே முதலாளியால், தனது உற்பத்தி பொருளின் விலையை தீர்மானிக்கவும், அதற்கேற்ப விற்பனையை ஒத்தி வைக்கவும் முடிகிறது. ஆனால் விவசாயி அல்லது சிறு வணிகரால் அது முடிவதில்லை.

அதேபோல் தான் வேலை இல்லா இளைஞர் தான் விரும்பும் அல்லது தனது கல்வி தகுதிக்கான வேலை கிடைக்கும் வரை காத்திருக்க முடிவதில்லை. மாறாக ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக உழைப்பு சந்தையில் பெரும் கூட்டம் இருப்பதால், உழைப்பு சக்தி மலிவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தொழிலாளர் ஆளாகிறார்.  ஒரு வேளை படித்து முடித்தவர் தான் விரும்பும் வேலைக்காக காத்திருக்க வசதியாக வேலையில்லா கால நிவாரணம் கிடைக்கும் என்றால், போட்டி இருக்காது. அது மலிவு விலைக்கு உழைப்பு சக்தியை விற்கும் சூழலை உருவாக்காது. இந்த பின்னணியில் தான் வேலை உரிமை அடிப்படை உரிமைக்கான சட்டமாக்கபட வேண்டும். வேலை கிடைக்கும் வரை நிவாரணம் கிடைப்பது இதன் மூலம் உறுதியாகும்.  எனவே இந்த கோரிக்கையை வலுவாக முன் வைக்க வேண்டியுள்ளது.

வேலை இல்லா கால நிவாரணம் இன்று:

சோசலிச கொள்கையை பின்பற்றும் நாடுகள் எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போர் முடியும் போது அதிகரித்தது. சோசலிச நாடுகள் வேலை அல்லது நிவாரணம் என்பதை உத்தரவாதம் செய்தது. வேறு பல்வேறு சமூக பாதுகாப்பு கொள்கைகளை கொண்டிருந்தது. இதன் காரணமாக, முதலாளித்துவ நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் விளைவு, உலகின் பல நாடுகள் தங்களை, நலத்திட்ட அரசுகள் என பிரகடனம் செய்யும் நிலை உருவானது. வேலை அல்லது வேலை இல்லா கால நிவாரணம் என்ற கொள்கையை பின்பற்றின. இன்றும் பல வளர்ந்த நாடுகளில் இந்த சமூக பாதுகாப்பு கொள்கை அமலில் உள்ளது.

ஆனால் சோசலிச நாடுகள் சோவியத் உள்ளிட்டவை, பின்னடைவை சந்த்தித்த போது, முதலாளித்துவ நாடுகள், கூடுதல் லைசன்ஸ் வழங்கப்பட்டதைப் போல், அதி வேகமாக, தனது உழைப்பு சுரண்டல் கொள்கைகளை தீவிர படுத்தியது. வேலையின்மையை பராமரிப்பதும், போட்டியை அதிகப்படுத்துவதும், நவீன இயந்திரங்கள், ஆட்டோமேசன், ரோபோட்டைசேசன் மூலம் வேலை வாய்ப்பை சுருக்குவதும் இன்று அதிகமாகி உள்ளது. இது சுரண்டல் மற்றும் மூலதன குவிப்பிற்கு பெரும் உதவியாக உள்ளது. குறிப்பாக வேலை இல்லா கால நிவாரணம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் 2022 கணக்குபடி, மசாசூட்ஸ் மாநிலம் ஒரு வாரத்திற்கு1015 டாலர் என அதிகபட்சமாகவும், மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் 235 டாலர் என குறைந்த பட்சமாகவும் வேலை இல்லா கால நிவாரணம் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்குவதாக, விக்கிபீடியா தெரிவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 4.01 யூரோ ஒரு நாளைக்கு என்ற முறையில், வயதுக்கு ஏற்ப, வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம் லக்சம்பர்க் நாட்டில் 12 மாதம் துவங்கி ஸ்பெயின் 72 மாதங்கள் வரையிலும் வேலை இல்லா கால நிவாரணம் வழங்கப்படுகிறது. பரவலான முறையில் 24 மாதங்கள் பின்பற்றபடுகிறது. இது இளைஞர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.

சீனாவில் 1585 யுவான் ஒரு மாதத்திற்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஒரு மாத சம்பளத்தில் 60 சதம் வேலை இல்லா கால நிவாரணமாக அரசு வழங்குகிறது. வடகொரியாவில், 50சதம் வழங்கப்படுகிறது. கியூபாவில் உணவு பொருள்கள் முழுமையாக வழங்கும் ஏற்பாடு உள்ளது. இவை சமூக பாது காப்பு நடவடிக்கைகளுக்கான உதாரணமாக உள்ளன.

இந்தியாவில் வேலை இல்லா கால நிவாரணம்:

இந்தியாவில் இன்னும் பெரும்பாலான மக்களிடம் நிலப்பிரபுத்துவ சிந்தனையே மேலோங்கி உள்ளது. வேலை இல்லா கால நிவாரணம் வழங்கினால் அது மனிதர்களை சோம்பேறி ஆக்கி விடாதா? அரசிடம் அவ்வளவு பணம் எங்கிருக்கிறது? போன்ற பிற்போக்குதனமான கேள்விகள் முன்வைக்கப்படுவது நீடிக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளே இந்த பிற்போக்கு வாதத்தை பொது சமூகத்தில் தீவிரமாக முன் வைக்கின்றனர்.

இந்தியாவில் ஒன்றிய அரசு, வேலை இல்லா கால நிவாரணம் வழங்க முன் வராத காரணத்தால், சில மாநிலங்களே வேலை இல்லா கால நிவாரணம் வழங்குகின்றன. 2018 விவரத்தின் படி, திரிபுராவில் ரூ 1000 வழங்கப்படுகிறது. அரியானா மாநிலத்தில் 1000ரூ முதல் 2000ரூ வரை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ரூ 350 துவங்கி 450ரூ வழங்கப்படுகிறது. இந்த குறைந்த பட்ச தொகைக்காக, ஏராளமான பிரச்சார இயக்கங்களும், போராட்டங்களும் முன் எடுக்கப்பட்டதை உலகறியும்.

கேரளாவில் கிராமப்புற வேலை உறுதி சட்டம் அடிப்படையில், வருத்திற்கு சராசரியாக 62 நாள்கள் ஒரு நபருக்கு வேலை வழங்கப்பட்டு, ரூ310 சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் 204 ரூ, குஜராத்தில் 239ரூ என்பதாக உள்ளது, இந்த மாநிலங்கள் வேலை நாள்கள் குறைவாக வழங்குகின்றன. இதை 200 நாள்களாகவும், ரூ 600 சம்பளமாகவும் வழங்கப்படுவதன் மூலமே வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா முன்னேற முடியும்.

இந்தியாவில் 2004 ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த பின்னணியில், அதில் இடதுசாரி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக இருந்த சூழலில், குறைந்த பட்ச பொதுத் திட்டம் அடிப்படையிலான ஆட்சி, மேற்குறிப்பிட்ட 100 நாள் வேலைதிட்டம் சட்டமானது. ஆனால் இன்றைய பாஜக ஆட்சியில், இந்த சட்டத்தை அமலாக்குவதற்கான நிதியை வெட்டி சுருக்கி உள்ளது. இதன் மூலம் சராசரியாக இந்தியாவில் 42 நாள்களாக குறைந்துள்ளது. பாஜக ஆட்சியில் படிப்படியாக 2019 முதல் குறைந்து வருகிறது. பாஜக ஆட்சி சமூக பாதுகாப்பு திட்டங்களை அழித்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

அய்யங்காளி நகர்புற வேலை உறுதி திட்டம் தனியாக கேரளாவில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ரூ 331 தினக்கூலி என்ற முறையில் அமலாகிறது.  இதை தமிழ்நாடும் அமலாக்க வேண்டும். இதன்மூலம் கல்வித் தகுதி குறைவானவர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதேநேரம், தமிழ்நாட்டிலும், வேலை இல்லா கால நிவாரணத்தை அதிகப்படுத்த வேண்டும்.

நிவாரணத்தை விடவும், காண்ட்ராக்ட் பரவாயில்லையா?

வேலை இல்லா கால நிவாரணத்தை விடவும், காண்ட்ராக்ட் அல்லது, அவுட்சோர்ஸ் முலமான வேலை வாய்ப்பை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. அரசின் சமூக பாதுகாப்பு நடவடிக்கை இல்லை என்பதாலேயே இளைஞர்கள் இந்த வேலைத் திட்டத்திற்குள் தள்ளப் படுகின்றனர். சமூக பாதுகாப்பிற்கு மாற்றாக காண்ட்ராக்ட் வேலை வாய்ப்பு இருக்க முடியாது. அது தனியார் கொள்ளை லாபத்திற்கு மட்டுமே வழி வகுக்கும்.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமை காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட, இந்தியா முழுவதும், ஏதாவது ஒரு வேலைக்கு செல்லும் நிலை, வரம்பற்ற வேலைநேரம், குறைந்த பட்ச ஊதிய சட்டம் பின்பற்றபடாதது, போன்றவை காரணமாக, ரத்த அழுத்தம், உடல் சோர்வு, சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு இளைஞர்கள் ஆட்படுவதை காணமுடிகிறது. இது சரியான திசையில் இந்திய மனிதவள குறியீடு பயணிப்பதற்கு மிகப் பெரிய தடை என்பதை அரசுகள் உணர வேண்டும்.

சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்:

கடந்த காலங்களில், வேலையின்மைக்கு எதிரான நடவடிக்கை குழு என்ற பெயரில் தீவிரமாக வேலையின்மையை எதிர்த்த கூட்டு பிரச்சாரம் போராட்டம் நடைபெற்றது. இன்று சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் உள்ள பல்வேறு வெகுமக்கள் அமைப்புகள், கூட்டாக முன்னெடுக்கும் பிரச்சாரமும், போராட்டங்களும் ஆளும் அரசுகளை நிர்பந்திப்பதாக மாறும் வாய்ப்பு உள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில், ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் சிறப்பு மாநாடு தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறைக்கு கட்டியம் கூறும் வகையில் எழுச்சி நடை போட அழைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக