சனி, 5 நவம்பர், 2016

உலக வங்கி அறிக்கையும்! இந்தியாவின் மார்தட்டும் அரசியலும்!!!
எஸ். கண்ணன்

உலகவங்கி இந்தியாவை, தொழில் புரிய ஏற்ற நாடுகள் வரிசையில் 130 வது இடத்தில் வைத்து வெறுப்பேற்றியுள்ளது. வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உலகவங்கியின் செயலை விமர்சனம் செய்துள்ளார். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் டைம் இதழ் அதன் முகப்பு அட்டையில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் படத்தை அச்சிட்டு கையாளாகதவர் ( Impotent) என அச்சிட்டு இருந்தது. அன்றைய பிரதமரோ, காங்கிரஸ் கட்சியோ அந்த வாசகத்தையும், டைம் இதழையும் விமர்சிக்கவோ, அவதூறு வழக்குப் பதிவு செய்யவோ முயற்சிக்கவில்லை. மாறாக டைம் இதழ் மற்றும் அமெரிக்காவின் நோக்கமான, தொழில் துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்தி, தனது தீவிரமான முதலாளித்துவ தாராளமயமாக்கல் கொள்கை கொண்டு மக்களைக் தாக்கியது.

இன்று மோடி தலைமையிலான மத்திய அரசை உலக வங்கி தனது பட்டியல் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறது. அதாவது  தொழில் புரிய ஏற்ற நாடுகளில் இந்தியா மிகவும் பின் தங்கி இருப்பதாகக் கூறியுள்ளது. இது தற்போது மோடி அரசு செய்து வரும், வளர்ச்சி குறித்த பிரச்சாரத்திற்கு எதிரானது என்பதால், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், உலகவங்கி மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். "உலக வங்கி அறிக்கையை நான் விமர்சிக்கவில்லை. இந்தியாவின் தரவரிசையை உயர்த்துவதற்கு ஏற்ப புதிய வழிகளில் முனைப்புக் காட்டுவதும், அதை வேகப்படுத்துவதும் வேண்டும்", என நிர்மலா சீத்தாராமன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதை எதிர்பார்த்து தான் உலக வங்கி தொழில் துவங்குவதற்கான நாடுகளின் பட்டியலை வெளியிட்டதோ என்ற ஐயம் தானாகவே முடிவுக்கு வந்து விடுகிற அளவிற்கு மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

முரண்பாடுகளின் உருவமான உலக வங்கி அறிக்கை:

ஜூன் 2016 ல் உலக வங்கி, தொழில்புரிய ஏற்ற சூழல் கொண்டநாடுகள் 2017 எனும் பெயரில் , சில அடிப்படைகளை மையமாகக் கொண்டு ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. இது 56 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. 1. மின்சாரம், 2. கடன் 3. சிறுபான்மை நிறுவனங்களுக்கான பாதுகாப்பு, 4. வரிகள், 5. எல்லை கடந்த வர்த்தகம் ஆகிய ஐந்து விதமான செயல்பாடுகளில் இருந்து, நாட்டின் தன்மையை ஆய்வு செய்ததாகவும், அதில் இருந்து பட்டியல் தயாரித்து வெளியிட்டதாகவும் உலக வங்கி சொல்கிறது.

190 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 130 வது இடத்தில் இருக்கிறது.  அனைத்து நாடுகளுமே கடந்த 2015 ம் ஆண்டு நிலையில் இருந்து முன்னேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த எண்ணிக்கைப் பட்டியலில் 150க்கு மேலான எண்ணிக்கையில் இருந்து 144 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேபாள் 107 வது இடத்திலும், இலங்கை 110 வது இடத்திலுமிருப்பதாக சொல்லியிருப்பது நம்பும் படியாக இல்லை.

மிக முக்கியமாக இது ஒரு ஏமாற்று கணக்கு என்பதற்கு வேலையின்மையை உதாரணமாகக் கொள்ள வேண்டும். உலகவங்கி தொழில் துவங்க ஏற்ற நாடு என்பதைப் பட்டியலிடும்போது, அந்த நாட்டின் வாங்கும் சக்தியைக் கணக்கில் கொள்ள வேண்டும். வாங்கும் சக்தியின் உயர்வு வேலைவாய்ப்பைப் பொருத்தே அதிகரிக்க முடியும். உள்நாட்டுச்சந்தை,  நெருக்கடியில் சிக்கி இருக்கும் போது, தொழில் புரிய ஏற்ற நாடுகள் பட்டியலில் போர்ச்சுக்கல், ஸ்பெய்ன், இத்தாலி மற்றும் கிரிஸ் ஆகியவை முறையே 25, 32, 50 மற்றும் 61 வது இடத்தில் இருப்பதாக கூறியிருப்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கிற கதை.

ஸ்பெயின் நாட்டின் தேசீயக் கடன் அதன் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட பல மடங்கு அதிகம். அதேபோல், ஐரோப்பிய யூனியனின் உதவி என்ற பெயரில் கிரிஸ் நாட்டைப் பாடாய்ப் படுத்தும் நிலை உள்ளது. 2016 ம் ஆண்டில் கிரிஸ் நாட்டின் வேலையின்மை 24 சதம். இளைஞர்களிடையேயான வேலையின்மை 50 சதத்திற்கும் மேல், என மார்க்ஸிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறிக்கை குறிப்பிடுகிறது.  எனவே இந்த உலகவங்கி அறிக்கை மீது நம்பகத்தன்மை ஏற்படவில்லை.

 வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படும் நெருக்கடி:

உலகப் பொருளாதார செயல்பாடு மிக மெதுவாகவே நகர்ந்து வருகிறது என ஐ.எம்.எஃப் குறிப்பிடுகிறது. ஜனவரி 2016 ல் 2.9 சத உலகளாவிய வளர்ச்சி, ஜூன் 2016 ல் 2.4 ஆக குறைந்துள்ளது. என உலக வங்கி சொல்லியதை உலக வங்கிக்கே நினைவூட்ட வேண்டியுள்ளது. உலக வங்கி போன்ற அமைப்புகள், முதலாளித்துவம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைக் களைய நடவடிக்கை எடுக்காமல், அதன் தவறான செய்கைகளைப் பாதுகாக்கும் அறிக்கைகளையே அதிகமாக வெளியிடுகிறது. அதன் ஒரு பகுதி தான், இந்தியா குறித்த மதிப்பீடு ஆகும்.

அமெரிக்காவின் 81 சத மக்களின் வருவாய் உயராமல் தேங்கி நிற்கிறது.  இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவையும் இந்த முடக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. இந்நிலையில் உலக வங்கி பிந்தங்கியதாக குறிப்பிட்ட நாடுகளின் வருவாய் உயர்ந்துள்ளது. சீனா அதில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் தொழில் புரிய உகந்த நாடுகள் பட்டியலில் சீனாவிற்கு உலக வங்கி 78 வது இடத்தை வழங்கியுள்ளது. இதைத் தான் மொத்தத்தில் ஏமாற்று வித்தை என சொல்ல வேண்டியுள்ளது. உலக எண்ணெய் வளத்தில் 5 வது இடத்தில் உள்ள வெனிசுவேலா 187 வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக நாடுகளை திட்டமிட்டு தரம் தாழ்த்துகிற நோக்கம் கொண்டது. அதன் மூலம் அந்த நாட்டு அரசை நிபந்தனைகளுக்கு அடிபணியச் செய்யும் ஏற்பாடு ஆகும்.

மற்றும் ஒரு உதாரணத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அந்நிய நேரடி முதலீட்டை நாடுகள் பெற்ற விவரத்தை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாகத் துவங்கிய 25 ஆண்டுகளில் உள்ள வேறுபாடைக் புரிந்து கொள்வதற்காக இந்த அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது.

1990 ல் இந்தியா 236. 69 பில்லியன் டாலர் அந்நிய முதலீட்டையும், 2015 ல் 44208.019 பில்லியன் டாலர் முதலீட்டையும் ஈர்த்துள்ளது. சீனா 3487 பில்லியன் டாலரில் இருந்து, 2015 ல் 1,35,610 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய நாடுகள் தேங்கியுள்ளதை ஐ.நா அறிக்கை சுட்டுகிறது. கிரிஸ் 1005 பில்லியன் டாலரில் இருந்து - 289 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால் உலக வங்கி தொழில் புரிவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில், சீனாவை 78 வது இடத்திலும், இத்தாலியை 50 வது இடத்திலும் வைத்துள்ளது.

ஐ.நா வின் அறிக்கையை உலக வங்கி மறுத்துள்ளது சாதாரண நிகழ்வு அல்ல. உலக வங்கியின் அறிக்கை திட்டமிட்டு இந்தியாபோன்ற நாடுகளுக்குத் தரப்படுகின்ற நெருக்கடியாகவே புரிந்து கொள்ள முடியும். ஒட்டு மொத்தமாக அன்றைய மன்மோகன் சிங்கிற்கு தந்த நெருக்கடியை வேறு வகையில் இந்தியாவிற்கு உலக வங்கி தருகிறது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் நலன் காக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முடியும். குறிப்பாக சலுகைகளை கூடுதலாகப் பெறமுடியும்.

மோடி அரசின் தகிடு தத்தம்:

இப்போது இந்தியா சீனாவை விட தொழிலாளர் உரிமைகளில், பன்னாட்டு நிறுவனங்களுக்காக சமரசம் செய்து கொண்டுள்ளது. கூடுதலாக சட்டங்களைத் திருத்த தொடர் முயற்சி மேற்கொள்கிறது. உள்நாட்டு சந்தை விரிவாக்கத்தில் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு முக்கியப் பங்கு ஆற்றுகிறது. இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம், நிறுவனங்களின் லாபத்துடன் ஒப்பிட்டால் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கூட்டுபேர உரிமை சட்டமாக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை உறுதி செய்யும் கூட்டு பேர உரிமை சட்டம், சர்வ தேசத் தொழிலாளர் அமைப்பினால் 1948 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டது. இந்தியா உள்ளிட்டு 24 நாடுகள் மட்டுமே ஒப்புதல் தரவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற பின்தங்கிய  நாடுகள் கூட ஒப்புதல் தந்துள்ளன. ஆனால் இந்தியா அத்தகைய ஜனநாயக உரிமையை தொழிலாளர்களுக்காக சட்டமாக்க மறுத்து வருகிறது. மாறாக இருக்கிற சட்ட உரிமைகளைப் பறித்து வருகிறது, மோடி அரசு.

வரிவருவாய் இழப்பு உலகில் இந்தியாவிற்கே அதிகமாகும். காரணம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கான சலுகை ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடியாகும். இது ஆண்டு வரவு செலவில் சுமார் 20 சதம் ஆகும். இவ்வளவு பெரிய தொகையை விட்டுக் கொடுக்காது இருந்தால், இந்தியாவிற்கான உள்கட்டமைப்பு வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். அதே போல் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பில் உள்ள நேர்மை மற்ற நாடுகளை விட அதிகம் இதை அனைத்து வளர்ந்த நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. உழைப்புக் திறன் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. உலகில் அதிகமான தொழில் நுட்ப கல்வி பெற்ற இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

தொழில் துவங்குவதற்கு இதை விட சிறந்த கட்டமைப்பு வேறு இருக்க முடியாது. ஆனால் உலக வங்கி மேலும் இந்திய சட்டங்களை சிதைப்பதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டதாகக் கருத முடியும். வழக்கமாக மார்தட்டி அரசியல் செய்யும் பாஜக இதிலும் மார்தட்டி, பின்னர் பணிந்து செல்லும் வார்த்தை விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறது. கியூபா 1990 ல் இருந்து அந்நிய முதலீடு பெறவில்லை, என ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது. காரணம் அமெரிக்கா விதித்த பொருளாதார தடை. ஆனாலும் அந்த நாடு தனது பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சீனா அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. காரணம் அங்குள்ள மக்கள் தொகை உள்நாட்டு சந்தையின் விரிவாக்கம். அதற்காக தொழிலாளர், உரிமை பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்தியா பாடம் கற்காமல் மார்தட்டுவது பலனளிக்காது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக