புதன், 14 டிசம்பர், 2011

சேமிப்புக்குப் பரிசு சயனைடு குப்பியா?


        
தேர்பவனியின் போது தேர்ச் சக்கரங்களுக்கு அருகில், சிலர் கட்டைகளுடன் சேர்ந்தே வருவதைக் கவனிக்க முடியும். தேரின் வேகத்தைக் கட்டுப் படுத்துவதற்காகத் தான் அந்த ஏற்பாடு. இல்லையென்றால் தேர் கட்டுப் பாட்டை இழந்து, வீதியில் இருப்போருக்கும், மேலே இருப்பவர்களுக்கும் பெரும் சேதாரத்தை விளைவிக்கும். அது போலத் தான் மக்களை முழுமையாக நேசிக்காத ஆட்சியாளர்கள், தங்களை சேமநல அரசு என்று சொல்லிக் கொண்டாலும், அந்த அரசைக் கட்டுப் படுத்தும் ஏற்பாடுகள் மிக அவசியம். தற்போதைய மத்திய அரசை ஆளும் ஐ.மு.கூ 2 அரசினைக் கட்டுப் படுத்தும் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. அதன் விளைவு தான் இரக்கமற்ற முறையில், பெட்ரோல் மற்றும் உணவுப் பொருள் விலை உயர்வுகள், தொடர்ந்து அரங்கேறுகிறது. வருங்கால வைப்பு நிதியைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கவும், அந்நிய மூலதனத்தை இத்துறையில் அனுமதிக்கும் மசோதாவை முன்மொழியப் போவதாக தற்போதைய அறிவிப்பும் இருக்கிறது
.
முன்னாள் நிதியமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, ப. சிதம்பரம் ஆகியோர் முயற்சித்து செய்ய முடியாது போன விஷயத்தை, பிரனாப் முகர்ஜி செய்து முடிக்க எத்தனிக்கிறார். இந்தியாவைப் பொருத்த வரை 1952 ல் இருந்து வருங்கால வைப்பு நிதி திட்டம் அமலாகி வருகிறது. உலகின் பல நாடுகளில் நூற்றாண்டு காலமாக அமலாகி வந்தாலும், இந்தியாவில் 60 ஆண்டுகால பாரம்பரியம் தான் இந்த துறைக்கு இருக்கிறது. வளர்ந்த பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவான சதத்திலான மக்கள் பிரிவினரே ஓய்வூதியம் பெறும் வாய்ப்புக் கொண்டோராக உள்ளனர்.

சுமார் 5 கோடி தொழிலாளர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின், சேமிப்புத் தொகையாக வருங்கால வைப்பு நிதி இருக்கிறது. பல கோடிக்கணக்கில் உள்ள அணிதிரட்டப் படாத தொழிலாளருக்கு சொந்தமான நிதியும் வைப்பு நிதி கணக்கில் உள்ளது. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் தொகை தொழிலாளர்களின் பணமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. இத் தொகை வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், மிகப்பெரியதாகும். தாரளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தினால், மேற்படி தொழிலாளர் மற்றும் நடுத்தர மக்களின் பணத்தின் மீது அந்நிய முதலீட்டாளர்கள் கண் வைத்து ஆக்கிரமிக்க காத்திருக்கின்றனர். இதை உலக வங்கி மற்றும் பல கமிட்டிகளின் செயல் பாடுகள், அறிவிப்புகள் மூலம் அறியமுடியும்.

பொது மக்களின் சராசரி ஆயுட் காலம் அதிகரிக்கிற போது, வருங்கால வைப்பு நிதி மூலமான ஓய்வூதியம் வழங்குவதன் காலமும் நீடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இது குறித்து ஆய்வு செய்யத் துவங்கிய உலக வங்கி, ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான ஆலோசனையை வடிவமைத்தது. அதில் மூன்று முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

ஒன்று ஏழ்மையைப் போக்குவதற்காக வரி வருவாயில் இருந்து அரசு நிர்வகிக்கும் கட்டாய ஓய்வூதியத் திட்டம். இரண்டு ஓய்வு காலத்திற்கான சம்பள சேமிப்புகளைத் தனியார் நிர்வாகத்திற்கு  உட்படுத்தும் கட்டாய ஓய்வூதியத் திட்டம். மூன்று வயது முதிர்ந்த காலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பெறுவதற்கான ஆவல் கொண்டவர்களுக்கான சுய விருப்ப கூடுதல் ஓய்வூதியத் திட்டம்.

முதல் பரிந்துரையைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, தனியார் மற்றும் அந்நிய முதலீட்டிற்கான ஏற்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள், வருங்கால வைப்பு நிதியை அரசே பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒன்று அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் மிகப் பெரும் சரிவை ஏற்படுத்திய பங்குச் சந்தை வணிகம். இதன் மூலம் உலகமே மிகப் பெரும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து அதிலிருந்து மீள இயலாது நீடித்து நிற்கும் நிலை. 

இரண்டு கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனம். இந்திய பொதுத் துறையைச் சார்ந்த 13 வங்கிகளில் 5630 கோடி ரூபாயையும், தனியார் துறையைச் சார்ந்த 4 வங்கிகளில் 582 கோடி ரூபாயும் கிங்ஃபிஷர் நிறுவனம் கடன் பெற்றுள்ளது. திவால் கணக்கு காட்டியுள்ள நிலையில் இது வராக் கடனாக பராமரிக்கப்படலாம். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திற்கும், இதர பல நிறுவனங்களுக்கும் இதுபோல் கடன் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரவேண்டிய கடனை, வராக்கடன் பட்டியலில் வைத்து, சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர்கள் பலமுறை அறிக்கை வாசித்து இருக்கிறார்கள்.

ஆனாலும் கூட இந்திய வங்கிகள் 2008 உலக பொருளாதார நெருக்கடி காரணமாக, எந்த சேதாரத்தையும் சந்திக்க வில்லை. இதற்கு காரணமாக பிரதமரும், அன்றைய நிதி அமைச்சரும், திட்டக் கமிஷன் துணைத்தலைவரும், சோனியா காந்தியும் குறிப்பிட்டது, ”இந்திய வங்கித் துறை பொதுத்துறை வசம் இருப்பதே” என்பதாகும்.  அமெரிக்க வங்கிகளே திவால் என்கிற கடலில் தத்தளிக்கிற போது, தடுமாற்றமே இல்லாமல் சென்றது இந்திய பொதுத்துறை வங்கிகள் என்ற பெருமை, நமது நாட்டிற்கு இருக்கிறது. கடந்த காலத்தில் வங்கித்துறையில், அந்நிய முதலீட்டிற்கு முயற்சி செய்ததும், அதை இடதுசாரிகள் தடுத்ததும் மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்க வங்கிகள் பொருளாதார மந்தத்திற்கு வழிவகுக்க பிரதான காரணம், அந்த நாட்டில் வங்கிகள் பங்குச்சந்தையில் மட்டும் தீவிரம் காட்டியதாகும். வருங்கால வைப்பு நிதியை, அடமான கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, பங்குச்சந்தை வர்த்தகத்தில் பயன் படுத்தியதே ஆகும். விளைவு அந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார இழப்பிற்கு ஆளாகினர். அவர்களின் முதிய வயதில் கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்திற்கு பெரும் தடங்கல் வந்து சேர்ந்தது. எனவே தான் அவர்கள் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்தை இரண்டு மாத காலமாக நடத்தி வருகின்றனர்.

இதன் பாதிப்பு ஐரோப்பாக் கண்டத்திலும் தீவிரம் பெறுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும். இப்போராட்டத்தில் இன்னொரு பகுதியினரும் இணைந்திருப்பது கவணிக்கத் தக்கது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்தவர்கள் தான் அந்தப் பகுதியினர். அமெரிக்க காப்பீட்டு குழுமம் என்ற நிறுவனம் உள்ளிட்ட, காப்பீட்டு நிறுவனங்களிலும் காப்பீட்டுத் தொகை செலுத்தியவர்கள் ஆவர். காப்பீடு இருந்தும் மருத்துவச் சிகிச்சைக்கு பலமாதங்கள் காத்திருக்க வேண்டிய அவலம் உருவானதே அவர்களும் போராட்டத்தில் இணைவதற்குக் காரணம். காப்பீட்டுப் பத்திரங்களைக் கூட பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தியவர்கள் தான், உலக நிதி சந்தையில் கோலோச்சும் தனியார்கள்.

இவ்வளவிற்குப் பிறகும், இந்திய அரசு, ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை முன்வைக்கப் போவதாக அறிவித்து இருப்பது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பானது. கொடிய நோய்களில் இருந்தும், இயற்கை இடர்பாடுகளில் இருந்தும் தப்பிய இந்திய முதியோர்களுக்கு சயனைடு குப்பியைப் பரிசாகத் தருவது போன்றது. இதற்கான துணிச்சல்  மத்திய அரசுக்கு வரக் காரணம், ஆட்சிக்  கூட்டணியில் இருப்போர் பலவீனமானவர்களாக இருப்பது என்றால் தவறல்ல.

தி.மு.க தலைவர்கள் 2ஜி வழக்குகளில் தடுமாறுகின்றனர். சி.பி.ஐ சோதனைகளில் இருந்து தப்புவதற்காக ஆதரிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கும் உ.பி  மாநிலக் கட்சிகள். அமைச்சரவையில் இடம் இருந்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் தேசீய மாநாட்டுக் கட்சி மற்றும் தேசிய வாத காங்கிரஸ். மிரட்டுவதற்கு வசதியானதாக காங்கிரஸ் இருப்பதைப் பயன்படுத்தும் திரிணாமுல் காங்கிரஸ். பொருளாதாரக் கொள்கைகளில் இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இருந்ததில்லை. எனவே ஐ.மு.கூ 2 என்கிற அரசை எந்த பொருளாதாரக் கொள்கைகளின் மீதும் கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. குறைந்த பட்ச பொதுத் திட்டம் கூட தேவைப் பட்டிருக்கவில்லை.

எனவே மேற்படிக் கட்சிகள் ஓய்வூதியத் துறையில் அந்நிய முதலீடு என்ற மசோதாவை எதிர்ப்பார்கள் என்று, இந்திய நடுத்தர வர்க்கமும், தொழிலாளர்களும் எதிர்பார்ப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. 2004 ல் இருந்து 2009 வரை இருந்த ஐ.மு.கூ 1  அரசு ஓய்வூதிய தாரர்கள் மீது அல்லது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் கடுமையான  பொருளாதாரக் கொள்கைகளை எளிதாக பின்பற்ற இயலவில்லை. காரணம் இடது சாரிகள் 63 பேர் வெளியில் இருந்து ஆதரவு என்பதன் மூலம் செய்த கண்காணிப்பாகும்..

பிரதமர் மன்மோகன் சிங் தான் நினைக்கிற பொருளாதார கொள்கைகளை இடதுசாரிகளிடம் விவாதிக்காமல் முன்வைக்க முடியாத நிலை இருந்தது. ஒருகட்டத்தில் நான் அடிமையைப் போல் நடத்தப் பட்டேன் என்று புலம்புகிற அளவிற்கு மன்மோகன் சிங் தள்ளப் பட்டார். எந்த இடத்திலும் இடதுசாரிகள் தங்களின் குடும்ப உறுப்பினர் அல்லது கட்சிக் காரரின் தேவைக்காக பிரதமரை நிர்பந்திக்க வில்லை. அப்படி பிரதமரும் குற்றம் சாட்ட முடியாது.

எனவே இன்றைய இந்திய பொருளாதாரக் கொள்கைகளை மக்களுக்கு சாதகமாக மாற்றாவிட்டாலும், தாக்குதல் தொடுக்காமல் இருக்க வேண்டுமானால் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துகிற சக்திகள் பாராளுமன்றத்தில் வலுப்பெற வேண்டும். இல்லையெனில் நம் கழுத்துகளில் கட்டப்படும் சயனைடு குப்பிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நன்றி: தீக்கதிர் 10 நவம்பர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக