செவ்வாய், 2 மே, 2023

 இரக்கம் அற்ற கொடிய மிருகங்களின் நரவேட்டைக்கு, பலியான மக்கள் நூற்றாண்டைக் கடந்து, நினைக்கப்படுகிறார்கள். அவர்கள் சிந்திய ரத்தத்தின் 28 ஆண்டுகள் கடந்து, இந்தியாவிற்கு பிரிட்டிஷாரிடம் இருந்து, விடுதலை கிடைத்தது. ஆம் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், பொது மக்கள் 400 பேர் வரையிலும்  படுகொலையான நாள், 1100 க்கும் மேலானோரை, குற்றுயிரும், கொலை உயிருமாக துப்பாக்கி குண்டுகள் துளைத்த நாள். ஏப் 13, 1919. மைதானத்தின் உள்ளே இருந்த கிணற்றில் இருந்து மட்டும் 200 க்கும் அதிகமானோர் சடலமாக எடுக்கப்பட்டனர்.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நிகழ்த்திய பல நரவேட்டைகளில் ஒன்று ஜாலியன் வாலா பாக் படுகொலை. ஒன்று பட்ட பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் மைக்கேல் டயர் பிறப்பித்த ரௌலட் சட்டம், இந்த படுகொலைக்கு காரணமாக அமைந்தது. காவல் அதிகாரி, டையர் சுட்டேன் சுட்டேன் துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுட்டேன் என கொக்கரித்தான். இன்றும் நினைவு சின்னமாக, பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அமிர்தசரஸ் நகரில், சீக்கியர்களின் பொற்கோவில் அருகில் உள்ள ஜாலியன்வாலா பாக். இந்தியாவின் பொன்விழா சுதந்திரம் கொண்டாட பட்ட போது, ஜாலியன் வாலா பாக்கிற்கு வருகை தந்த, பிரிட்டிஷ் அரசி எலிசபத், இந்திய மக்களிடம் ஜாலியன் வாலாபக் நிகழ்வுக்காக, மண்ணிப்பு கோரினார்.

 

ஏன் மேற்படி கொலைவெறி:

 

இன்றைய பாகிஸ்தானில் இருக்கும், பஞ்சாப் உள்ளிட்டது, ஒன்றுபட்ட பஞ்சாப். இந்த பஞ்சாப் கதர் இயக்கத்தை சார்ந்தோரால், பெருமளவில் ஈர்க்கப்பட்டு இருந்தது. முதலாம் உலகப்போர் முடிவுற்ற நிலையில் இந்தியாவின் சார்பில் ஏராளமான ராணுவ வீர்ர்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் போரிட்டனர். குறிப்பாக ஐரோப்பாவின் பல பகுதிகளில் போரிட்டதன் விளைவாக, அவர்கள் தங்கள் சொந்த மண்ணின் விடுதலைக்காக போர் செய்யும் உணர்வை பெற்றனர். எனவே முதலாம் உலக போர் நிறைவு பெற்ற நிலையில், இந்தியாவிற்கு திரும்பிய போது, தீவிரப் போராட்டங்களில் பங்கெடுத்தது, பிரிட்டிஷாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான புரட்சி வெற்றி பெற்று, சமூக மாற்றத்தைக் கண்டு இருந்த து. இதுவும் இந்தியவில் விடுதலைக்கான போராட்டத்தை நடத்தி வந்த இளைஞர்களிடம் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த பின்னணியில் கதர் இயக்கத்தினர் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை மிக் கொடிய முறையில் பிரிட்டிஷ் ராணுவம் ஒடுக்கியது. பலநூறு பேர் தூக்கிலிடப்பட்டனர்.

 

இந்த கொடிய அடக்குமுறையும், ரஷ்யப்புரட்சியின் தாக்கமும், சத்யபால்சிங் மற்றும் சைபுதீன் கிட்ஜூ ஆகிய தேசிய தலைவர்களை கைது செய்த அடக்குமுறையும் மக்களிடையே கடும்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏதாவது சிறு துரும்பு கிடைத்தாலும் பெரும் போராட்டம் வெடிக்கும் என பிரிட்டிஷார் எதிர் பார்த்திருந்தனர். எனவே தான் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநர் ரௌலட் சட்டத்தை அமலாக்கியிருந்தார். கூட்டம் நடத்த தடை, மக்கள் கூடும் விழாக்களுக்கும் தடை இருந்தது.

 

பைசாகி என்பது சீக்கியர்கள் 1669 ல் இருந்து குருகோவிந்த் சிங் கொண்டாட துவங்கிய அறுவடை திருவிழா. இந்த விழா ஏப் 13 அன்று கொண்டாட பட இருந்தது. ரௌலட் சட்டம் காரணமாக, இந்த விழாவிற்கும், அதைத் தொடர்ந்து மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மற்றொருபுறம் விடுதலைப் போராட்டக்காரர்கள் தீவிரமான திரட்டுதலுடன் ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டனர். அதன் விளைவாக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர்.

 

ஆனால் அச்சத்தில் இருந்த ஆட்சியாளர்கள், ஜெனரல் டயர் தலைமையிலான காவலர்களை அனுப்பி, ஒரு வழி மட்டுமே இருந்த மைதானத்தின் வாயிலில் நின்று கொண்டு களைந்து செல்ல அறிவிப்பு வெளியிடாமல், மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. 1650 ரவுண்டுகள் சுட்டதாக டயர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.

 

ஹன்டர் விசாரணைக்குழுவும், முடிவும்:

 

பலநூறு பேர் மிக கொடியமுறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தீவிரமானது. ஏப்ரல் 13.1919 ல் நடந்த இந்த படுகொலையைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் வீசிய போராட்ட அலை, 1921 ல் ஒத்துழையாமை இயக்கமாக உருவெடுத்தது.

ஆங்கிலேய அரசு ஹன்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை நியமித்து விசாரிக்க சொன்னது. மேற்படி குழுவில், 6 பேர் ஆங்கிலேயர், 3 பேர் இந்தியர். இவர்கள் பலதுறையின் அறிவாளிகள் என்ற போதும், ஜனநாயக குரலை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு இருந்தனர் என்பதை மறுக்க முடியாது. விசாரணை முடிவில், மக்களை களைந்து செல்ல சொல்லியிருக்க வேண்டும், முன் அனுமதி இன்றி மக்கள் கூடினர், அனுமதி மறுக்க பட்ட விவரத்தை மக்களுக்கு கொண்டு சேர்திருக்க வேண்டும், நீண்ட நேரம் துப்பாக்கி சூடு நடத்தியிருக்க கூடாது போன்ற வார்த்தைகளுடன் விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்பித்தது.

 

துப்பாக்கி சூடு நடத்திய டயர், 1927 ம் ஆண்டில் இயற்கை மரணம் அடைந்தான். ஆனால் இதற்கு மூலகாரணமான மைக்கேல் டையர், பஞ்சாப் மாகாண கவர்னர், ஓய்வு பெற்று லண்டனுக்கு சென்ற பிறகு, 1940 ஆண்டில், மார்ச் 13 அன்று, உத்தம்சிங்கினால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

 

இன்றைக்கும் அரசுகளின் துப்பாக்கி சூடுகளும் விசாரணைக் குழுக்களும் எப்படி உள்ளது, என்பதற்கு ஜாலியன் வாலாபாக் ஒரு உதாரணம். ஷாஹின் பாக் போராட்டங்கள் அடக்கப்படுவதும் உதாரணம். நூறு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தியாகிகளை போற்றுவதும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களை வலுப்படுத்துவதும், ஜனநாயக குரலை பாதுகாப்பதும், தியாகிகளுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக