சனி, 26 பிப்ரவரி, 2011

கொள்கையைத் தொலைத்த சுயவிளம்பரங்கள் F

தனி நபரின் கொண்டாட்டங்களைப் பார்த்து ஆத்திரப்படவில்லை. அதே நேரத்தில் தனிநபர்களின் கொண்டாட்டங்களில், அப்பாவி உழைப்பாளி மக்களை உள்ளடக்குகிறபோது, அமைதியாகவும் இருக்க முடியவில்லை. மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்த தினங்களுக்கு விடுமுறை விடப்படுகிற காரணத்தால், ஓரளவு நினைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. மகாகவி பாரதியார், தந்தை பெரியார், மாவீரன் பகத்சிங் போன்றவர்களுக்கு விடுமுறையும் இல்லை, "கட் அவுட்' வைத்து நினைவூட்டுவதற்குப் பணம் மற்றும் படைபலமும் இல்லை. மேற்குறிப்பிட்ட தியாகிகளுக்கு இல்லாத பணம் மற்றும் படைபலம், இன்றைய அரசியல் வாதிகளில் பலருக்கும் இருப்பதால், அவர்களின் பிறந்த தினத்தை நினைவில் வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறோம். சாலையைக் கடக்கும் ஒவ்வொரு, சராசரி குடிமகனும், பார்த்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில், இந்த விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன. பிறமாநிலங்களை விட தமிழகம், இக்கொண்டாட்டத்தில் முன்னணியில் இருக்கிறது.
இது ஒரு நாள் கொண்டாட்டமாக இருந்தால், நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாதக் கணக்கில் நடைபெறும், பிரசாரங்களாக மாறிவருவதால், பொதுமக்கள் அக்கறை கொள்ள வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. சுவர் எழுத்துப் பிரசாரம் துவங்கி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்கள், திரும்பும் திசை எங்கும் "கட் அவுட்'கள் ஆகியவை ஒருபுறம். மற்றொரு புறம் வாரக்கணக்கில், கிரிக்கெட் அல்லது வேறு போட்டிகள், நகரமாக இருந்தால் குத்தாட்டம், கிராமமாக இருந்தால் கரகாட்டம் போன்ற உற்சாகமூட்டும் ஏற்பாடுகள். இவை போதாது என்று, தெருக்கள் தோறும் ஒலி மற்றும் ஒளி அமைப்புகளும், போதை வஸ்துகளும் ஏற்படுத்தும் தாக்கம்.
மதுரை, கடந்த சில ஆண்டுகளாக சிறப்புச் செய்தியாக மாறி வருவது கண்கூடு. 2008, ஜனவரி 30-ம் தேதி மதுரையில், விடுதலைப் போராட்ட வீரராக அடையாளம் காணப்பட்ட, வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலையை "கட் அவுட்'கள் கொண்டு வெளியில் தெரியாத அளவுக்கு மறைத்து விட்டனர், மதுரை மாநகரத்து உடன்பிறப்புகள். 2010, ஜூலை 15 காமராஜின் பிறந்தநாள், நகரமக்கள் தொகையை விஞ்சும் அளவுக்கு விளம்பரங்கள். ஆனால் அதில் காமராஜைத்தான் காணவில்லை. அன்று விருதுநகருக்கு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரியின் புகைப்படத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம், காமராஜுக்குத் துளியும் தரப்படவில்லை. "எளிமையின் அடையாளமே' என்ற வாசகங்களை, இது போன்ற வாழ்த்துச் செய்திக்கான விளம்பரப் பலகைகளில் பார்க்கிறபோது, நடமாடும் நகைச்சுவைத் தொலைக்காட்சிகள் வந்து விட்டனவோ என சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியாது. தங்கள் தலைவர்களாக போற்றப்பட வேண்டிய மறைந்த வீரர்கள், இருட்டடிப்புச் செய்யப்படுவதும், ஆடம்பரங்கள் தலைவிரித்து ஆடுவதும், பொது மக்களுக்கு, வேடிக்கைப் பொருளாக மாறுவதும், சமூக அக்கறையின்மையின் வெளிப்பாடு. எனவே, இது குறித்த கவலை பொதுமக்களிடம் உருவாக வேண்டியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, உயர் நீதிமன்றம், சென்னை நகரில், குறிப்பாக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விளம்பரப் பலகைகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதற்குக் காரணம் விமான ஓட்டிகளின் பார்வையைக் கூச்சமுறச் செய்கிற வகையில் வண்ண விளக்குகளைக் கொண்டதாக விளம்பரம் அமைந்ததாகும். அதுபோல் பொதுமக்களை, தேசத் தலைவர்களைக் களங்கப்படுத்தாமல், பொதுஇடங்களின் அமைதியைப் பாதிக்காத தனிநபர் விழாக்களாக அமைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பொதுக் கூட்டங்களுக்கும், போராட்டம் நடத்தும் இடங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசும், நீதித்துறையும், இது போன்ற தனி நபர்கள் செய்யும் இடையூறுகளைப் பொறுத்துக் கொள்வது ஏன் என்பது பொதுவான அரசியல் நோக்கர்களின் கேள்வி. அதுமட்டுமல்ல, தனிநபர்கள் முன்னிலைப்படுத்தப்படும் போக்கு, கொள்கையற்ற நிலையிலேயே மேலோங்குகிறது. கொள்கைக்கு இடமின்றித் தலைவரின் புகைப்படங்கள், விளம்பரங்கள் ஆக்கிரமிக்கின்றன. விமர்சனக் கண்ணோட்டம் இல்லாத, விவாதமற்ற, துதிபாடுகிற அரசியலுக்கு வழிவகுக்கும் இதன் மூலமான திசைதிருப்பல் ஏற்பாடுகள், ஜனநாயகத்தைக் கீழ்நோக்கித் தள்ளும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இத்தகைய விளம்பரப் பலகைகளை அமைப்பவர்கள், தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல இடங்களில், பல்வேறு சமூகவிரோதச் செயல்களைச் செய்பவர்களும் இடம்பெறுவதைக் காண முடிகிறது. இத்தகைய நபர்களின் விளம்பர நோக்கம், தலைவரின் வீட்டு விழாவுக்கானதாக மட்டும் இருப்பதில்லை. கூடவே, தான் இந்தத் தலைவருக்கு வேண்டியவர் என்பதையும், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது. இத்தகைய தனிநபர் கொண்டாட்டங்களில், சமூக விரோதிகளில் பலர் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட தலைவர்களும், அப்பாவிப் பொதுமக்களும் உணர வேண்டும். இதோடு வரி கட்டப்படாத கருப்புப் பணம், ஊழல் பணம் போன்றவை புழக்கத்துக்கு வருவதன் காரணமாக, மக்களுக்கான பணம் இப்படி வாரி இரைக்கப்படுவதைக் கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
பிறந்தநாள்களை அல்லது தங்கள் வீட்டு விழாக்களை கொண்டாடக்கூடாது என அராஜகமான வாதத்தை முன்வைக்க விரும்பவில்லை. அது தனிமனித உரிமை. மூத்த அரசியல் தலைவர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும்கூட வாழ்த்துச் சொல்லும் மாண்பு வளர வேண்டும். அது பத்திரிகைச் செய்தியாக உருப்பெற வேண்டும். அந்த அளவிலான நிகழ்வுகள் சமூகத்தைப் பண்படுத்தும். ஆனால் ஒரு நாட்டில், 20 ரூபாய் மட்டுமே செலவிடும் நிலையில் 83.4 சதவீத மக்கள் உள்ள நிலையில், அத்தகைய உழைப்பாளி மக்களை, தலைவரின் வீட்டு விசேஷத்துக்காக சுவரெழுத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதகுலம் போதுமான நாகரிக வளர்ச்சியடையாத, பின்தங்கிய சமூகத்தின் பண்பாடு இல்லையா? எனவே சமூகம் தொடர்ந்து வளர்ச்சிபெற, இதுபோன்ற சின்னச்சின்ன நிகழ்வுகள் குறுக்கீடாக அமைகிறதோ என்ற ஐயப்பாட்டில் இருந்தே இந்த விவாதத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. மக்களை அவர்களின் உரிமை குறித்த சிந்தனைக்குத் தூண்டுவதில், தலைவர்களுக்குப் பங்கு இருக்கிறது என்கிற ஆதங்கத்தில் இருந்தே இந்த விவாதத்தைத் தூண்ட வேண்டியுள்ளது. இத்தகைய விவாதங்களில் உலக மற்றும் தமிழக முற்போக்கு இயக்கங்களுக்குப் பங்கு இருக்கிறது.
ஒரு சிலர் இதுபோன்ற கொண்டாட்டங்களின்போது, இலவசத் திருமணங்கள், அன்னதானம் ஆகிய நற்பணிகள் நடைபெறுவதைக் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில், நிறையக் கொண்டாட்டங்கள அரங்கேறுவதால், இலவசங்களில் மக்கள் வாழ்ந்து விடலாம் என்று கருதினால், சுயமரியாதை இயக்கம் வளர்ந்த தமிழ்நாடு என வரலாறு கற்பிப்பதில் பொருளில்லை. மகாபாரதக் கதையில், பாண்டவர்களின் தலைவன் தருமனுக்கு ஏழு உலகத்தையும் சுற்றிக்காட்ட, கிருஷ்ணன் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றாராம். ஓர் உலகத்தில், யாரும் யாருக்கும் தருமம் செய்யாத தன்மையும், மக்கள் எங்குமே கையேந்தாத நிலையும், இருப்பதையும் தர்மன் கண்டுள்ளார். இவ்வூரில், தருமம் செய்வோரே இல்லையே! இவ்வூரின் மன்னனும், தர்மகாரியங்களில் ஈடுபடவில்லையே என கிருஷ்ணனிடம், தருமன் கேட்டதாகவும், அதற்கு கிருஷ்ணன், இவ்வூரில் யாருக்கும் தர்மம் தேவைப்படாத நிலையை மன்னன் ஏற்படுத்தியுள்ளான் என்று விளக்கம் அளித்ததாகவும், பள்ளி ஆசிரியர் நீதிபோதனை வகுப்பில் குறிப்பிட்டதை, மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. ஆம் மக்களை யாசகராக வைத்திருப்பதை விடவும், யாசகர் இல்லாத ஆட்சியை உருவாக்குவது, சாலச் சிறந்தது. நற்பணிகள் என்பது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில், அனைவரும் இணைந்து செய்வது. நமது நாட்டில் ஒருவர் கொடுப்பதையும், மற்றொருவர் யாசகம் செய்வதையும், நற்பணி என சுருக்கிக் கொள்ளக் கூடாது.
தினமணியின் தலைப்புச் செய்தியில், ஒருமுறை கல்பாக்கத்தைச் சார்ந்த தம்பதி இடம் பிடித்தனர். தொடர்ந்து 25 ஆண்டுகளாக இலவச டியூஷன் கற்றுக் கொடுத்து வந்தனர் என்பதே செய்திக்கு அடிப்படை. அந்தச் செய்திக்கு முன் அந்தத் தம்பதிக்கு, வேறு எந்த வகையிலான விளம்பரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டதில்லை. அதுபோல் ஓசையின்றிப் பிறருக்கு உதவுவதே சிறந்த பண்பாடாகக் கொள்ள முடியும். ஒரு கை தருவதை இன்னொரு கை அறியக் கூடாது என்ற பழமொழி, இத்தகைய பொருளில் தான் சொல்லப் பட்டிருக்க வேண்டும்.
எனவே கொண்டாட்டங்கள், பிறந்த தினமாக இருந்தாலும், வேறு நிகழ்வுகளாக இருந்தாலும், அதைப் பொதுவெளிக்குக் கொணர்ந்து மக்கள் உணர்வுகளை, மழுங்கச் செய்வதைத் தவிர்க்க முன்வர வேண்டும். நம் தேசத்தில் விவாதிக்க நிறையக் கருத்துகளும், கொள்கைகளும் இருக்கின்றன. அவற்றைத் திசைதிருப்ப வேண்டாம் என்பதே வேண்டுகோள்.

நன்றி: தினமணி ஜனவ்ரி 3 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக