வெள்ளி, 13 நவம்பர், 2015

நாகரீகமான வேலை – உண்மை ஊதியம் எப்போது?

உலகின் பல பகுதிகளில் தொழிலாளி வர்க்கம் தனது உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. நெருக்கடியில் இருந்து மீள்வது என்ற பெயரில், இரக்கமற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கு சலுகைகள் தந்து பாதுகாக்கும் அரசுகள் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, உழைக்கும் மக்களைக் கொள்ளை அடிப்பதில் தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தொழிற் சங்க ஊழியர்களுடனான ஆய்வுப் பட்டறையை, மக்கள் சீனத்தில், மே 13 முதல் 17 வரை, ஐந்து தினங்கள் நடத்தியது.

10 நாடுகளில் உள்ள 16 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளாக 24 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 11 பெண் தொழிற்சங்கத் தலைவர்களும் அடங்குவர். இந்தியாவில் இருந்து ஐ.என்.டி.யு.சி சார்பில் ஒருவரும், சி.ஐ.டி.யு சார்பில் நானும் கலந்து கொண்டோம். ஐ.எல்.ஓ அமைப்பு அரசு, தொழில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் ஆகிய மூன்று பிரிவினரையும் உள்ளடக்கியதாக செயல் பட்டு வருகிறது. தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவது குறித்து இந்த முத்தரப்பினரிடத்திலும் விவாதங்களை நடத்தி வருகிறது.

மக்கள் சீனத்தின் தொழிற் சங்கமான, அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (ஏ.சி.எஃப்.டி.யு), மேற்படி ஆய்வுப் பட்டறையை நடத்தித் தரும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தது. துவக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு நிகழ்ச்சி ஆகியவற்றையும் சேர்த்து 13 அமர்வுகள் நடத்தப் பட்டன. ”சம்பள உயர்வு – வேலை வாய்ப்பு அதிகரிப்பு – நெருக்கடியில் இருந்து மீள்தல்” என்பது பொதுவான தலைப்பு. நாகரீகமான ஊதியத்திற்கான தேவை மற்றும் சமூக நீதி குறித்த ஐ.எல்.ஓ வின் 2008 பிரகடனத்தை அமலாக்குவது குறித்து பயிற்சியின் அடித்தளம் அமைந்திருந்தது. ஊதியப் பங்கினை அதிகப் படுத்துவது, தொழிலாளர் மற்றும் முதலாளிக்கான வருவாய் இடைவெளி மிக அதிகமாக இருப்பதை குறைக்க நடவடிக்கை எடுப்பது, ஆசிய மற்றும் உலக அளவில் ஊதியம் குறித்த கொள்கைகள், அவை பொருளாதார நிலைகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை பிரதான விவாதப் பொருளாக அமைந்தது.

ஏற்றத் தாழ்வின் அடிப்படை:

கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள், அசமத்துவத்தை மிகப் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.  அசமத்துவத்தின் அளவு உயர்வதை கட்டுக்குள் வைக்க பெருமுதலாளிகள் மீதான வரிவிதிப்பில் சலுகைகள் கூடாது என்பது, மிகமுக்கியமான, ஒரு அணுகுமுறை, ஆனால் வளர்ந்த நாடுகளில் இந்த அணுகுமுறை தொடர்ந்து மீறப்பட்டுள்ளது. இதன் விளைவு பில்லியன் டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் உயர்ந்தது. குறிப்பாக தொழிலாளர் உழைத்துக் கொடுக்கும் உற்பத்தி அளவு கடந்த 1999 காலத்தில் இருந்து 2011 காலம் வரை மிகப்பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது. ஆனால் ஊதிய விகிதாச்சாரம் உயரவில்லை. உதாரணத்திற்கு அமெரிக்காவில் உற்பத்தி அளவு 85 சதம் உயர்ந்துள்ளது. ஆனால் தொழிலாளி தான் பெற்ற சம்பளத்தில் 35 சதம் தான் உயர்வைப் பெற முடிந்துள்ளது. அதேபோல் ஜெர்மனியில் சுமார் 25 சதம் உயர்வு உற்பத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளி தான் 20 ஆண்டுகளுக்கு முன் பெற்ற அதே ஊதியத்தைத் தான் பெற்று வருகிறார். இது வருவாய் இடைவெளியை அதிகரித்திடப் பயன்பட்டுள்ளது.

 சர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஐ.எல்.ஓ தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு. பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகள் என்று குறிப்பிடப்படுகிற, 16 ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்கான வருவாய் சராசரி 1970 களில் 70 என்ற அளவில் இருந்து 1980 காலம் வரையிலும், சராசரி 80 என்ற அளவை நோக்கி உயர்ந்தது. ஆனால் 1980 களில் சரியத் துவங்கியது. 2010ம் ஆண்டில் தொழிலாளர்களின் வருவாய் சராசரி 60 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தொழிலாளர் வருவாய் சராசரி 1970 களில் 70 என்பதில் இருந்து 1980களில் 75 என உயர்ந்து பின்னர் 2010ல், 55 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 70 ஆக இருந்த வருவாய் சராசரி, படிப்படியாகக் குறைந்து 2010ல் 53 என குறைந்துள்ளது. அதாவது, வளரும் நாடுகளின் தொழிலாளர் வருவாய் 1970 காலத்தில் இருந்து படிப்படியாகக் குறைய மட்டுமே செய்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் போல் 1970 முதல் 80 காலத்தில் ஏற்பட்ட உயர்வையும் அனுபவிக்கவில்லை என்பது துயரம் தரும் செய்தியாகும்.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கரீபியன் நாடுகளிலும் இந்தக் காலத்தில் தொழிலாளருக்கான ஊதியப் பங்கு குறையவில்லை. மாறாக ஓரளவு உண்மை ஊதியத்தின் தன்மையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசியாவில் பெரும் மாற்றத்தை சந்திக்க வில்லை என்றாலும், சீனாவில் உண்மை ஊதியத்தின் தன்மையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரிகள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் வளர்ச்சி காரணம் என்றால் மிகை அல்ல.

ஆனால் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதே போல் அமைப்பு ரீதியில் திரட்டப் பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பலமடங்கு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்தினை மிகப் பெரிய அளவில் தாக்கியுள்ளது. 2008 ல் 6.9% மாக இருந்த வேலையின்மை, 2013 மார்ச் வரையில் மட்டும் 10.9% மாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை 23.5 சதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. காண்ட்ராக்ட் முறையின் மூலமான வேலை வாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு என்று சொல்லிக் கொள்கிற வேலை வாய்ப்பும் அதிகரிக்கவும், கூட்டு பேர உரிமையைப் பறிக்கிற நிலையும் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது. 

மக்கள் சீனத்தில் ஊதிய வளர்ச்சி:

சீனா மனிதவளம் நிறைந்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ள நாடு என்பது அறிந்த ஒன்று. ஆண்டு ஒன்றுக்கு, 55.4 சதமான பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்துள்ளது. 23 சதமான பட்டதாரிகள், தாங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இல்லாததால், தற்போது வேலை செய்ய விரும்பவில்லை என்பதையும், 21 சதமான பட்டதாரிகள் வேலையற்றவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். இது 2009 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தரும் தகவலாகும். மற்றொரு புறம், கடலோர மாகாணங்களிலும், புதிய தொழில் வளர்ச்சி உருவாகும் நகரப் பகுதிகளிலும் வேலைக்கான ஆள் பற்றாக்குறை உருவானது. அதேபோல் தொழில் வளர்ச்சி பகுதிகளை நோக்கி இடம் பெயர்வது அதிகரிப்பதும் இக்காலத்தில் முன்னுக்கு வந்த பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஃபாக்ஸ்கான் போன்ற மின்னனு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவானது, அரசுக்கும், ஏ.சி.எஃப்.டி.யு விற்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கியது.

இவைகளை எதிர் கொள்ள அரசு மற்றும் ஏ.சி.எஃப்.டி.யு ஆகியவை இணைந்து எடுத்த சில முயற்சிகள் பலன் தந்துள்ளன. வேலையாள் பற்றாக்குறை தனியார் துறையின் பெரும் நிறுவனங்களில் உருவாக அடிப்படைக் காரணம், பிழைப்பு ஊதியம் மட்டும் வழங்கும் நிலையை மாற்றி, உண்மை ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், என்பதைத் தனியார் நிறுவனங்களுக்கு சுட்டிக் காட்டின. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு 147 அமெரிக்க டாலர் (900 யுவான்) அளவிற்கு வழங்கப் பட்ட ஊதியம் 2010ல் 197 டாலராகவும் (1200 யுவான்), அடுத்த ஆண்டில், 328 டாலராகவும் (2000 யுவான்) உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதேபோல் ஹோண்டா நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து, மாதாந்திர ஊதியம் ஆண்டுக்கு 500 யுவான் (82 டாலர்) அளவிற்கு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இது இளம் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் அரசு சட்டரீதியில் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கவும் அதன் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்ததால் முன்னேற்றம் உருவானது. அதாவது, குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு 1200 யுவான் (197 டாலர்), (11520 ரூபாய்) என்பதாகத் தீர்மானிக்கப் பட்டது.

மேற்படி நடவடிக்கை, இளம் தொழிலாளர்களிடம் தனியார் துறையில் வேலையில் சேரும் ஆர்வத்தை உருவாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும் பெருமளவில் பயன்பட்டுள்ளது. ஆசியக் கண்டத்தில் ஆண்டு சராசரி ஊதிய உயர்வு 2008ல் 2.8 ஆக இருந்தது, 2009ல் 1.5 ஆக குறைந்தது. இதில் சீனாவின் பங்களிப்பான 0.8 சதத்தை கழித்து விட்டால், ஆசியா கண்டத்தின் ஊதிய உயர்வு வளர்ச்சி விகிதம் 0.7 சதமாக மட்டுமே இருக்கும். அதாவது மக்கள் சீனத்தில் ஊதிய உயர்வு விகிதம், ஒட்டு மொத்த ஆசிய நாடுகளின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கிறது. இதற்கு சீனாவில் உள்ள தொழிற் சங்க நடவடிக்கையும் ஒரு காரணம் என்பது மிக முக்கியமானது ஆகும்.

சீனாவில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. மெட்ரோ ரயிலில் 40 கி.மீ பயணம் செய்கிற ஒரு தொழிலாளி 2 யுவான் கொடுத்தால் போதுமானது. இது இந்தியாவில் 6 மடங்கு அதிகம் ஆகும். அங்குள்ள இதர உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருக்கிறது. எனவே பெரும் பகுதி உணவுக்கு செலவிடும் நிலை இல்லை. அதே போல் வீட்டு வாடகை என்பது குறைவான தொழிலாளர்களின் செலவினமாக இருக்கிறது. பெரும்பாலும் சொந்த வீடு கொண்டவர்களாக பீஜிங் நகரவாசிகள் உள்ளனர். நகரம் முழுவதும் பரவலாகக் காணப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகள் நகர பரப்பின் மீது குறைவான ஆக்கிரமிப்பையும், இதர பயன்பாடுகளை அதிகரிக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது. குறிப்பாக நீர்நிலைப் பயன்பாடுகள் புறநகர் பகுதியில் காணக் கூடியதாக இருக்கிறது. குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கும் செலவு செய்ய வேண்டிய தேவையற்றவர்களாக, சீன நாட்டுத் தொழிலாளர்கள் உள்ளதைக் கவணிக்க வேண்டியுள்ளது.

ஆக இவை அனைத்தும் சேர்ந்து சீனத் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் தொகையை சந்தையில் இதர தேவைகளுக்காக செலவிடும் வாய்ப்பைத் தருவதாக அமைந்துள்ளது. இது பொருளாதாரக் கொள்கையின் விதிப்படி, உள்நாட்டுச் சந்தை மற்றும் நுகர்வை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரப் பெருமந்தம் ஏற்படுத்திய ஏற்றுமதி வர்த்தகத்திலான சில பாதிப்பு, சீனாவின் உற்பத்தியையோ, நுகர்வையோ பாதிக்கவில்லை என்பது, ஐ. எல்.ஓ சுட்டிக்காட்டுகிற சிறப்பு அம்சமாகும்.

மக்கள் சீனத்தில் 76.4 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஏ.சி.எஃப்.டி.யு என்ற அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில், 28.9 கோடித் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சீனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1992ல் 14.2 ஆக இருந்த போது, ஊதிய வளர்ச்சி விகிதம் 6.5 ஆக இருந்தது. 2012ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.1 இருக்கும் நிலையில், ஊதிய வளர்ச்சி விகிதம் 10.2 ஆக இருக்கிறது. வேறு நாடுகளில் காணக் கிடைக்காத விவரமாக இவை அமைந்துள்ளது. இது தொழிற் சங்கத்தின் நடவடிக்கை என்பதாக இருந்தாலும், சீனாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது. அதாவது கூட்டு பேர உரிமை பெற்றுத் தந்த பரிசாகவே இந்த ஊதிய உயர்வு கருதப் படுகிறது. அனைத்து சீனத் தொழிலாளர் கூட்டமைப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மூலமான கூட்டு பேர உரிமையை பாதுகாத்து வருகிறது.

காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது, இது மிக முக்கியமானதாக ஐ.எல்.ஓ உள்ளிட்ட அமைப்புகள் பார்க்கின்றன.. வயோதிகர் பராமரிப்பு, பொதுமருத்துவச் சிகிச்சை, வேலையற்றோர் பராமரிப்பு, பணியின் போதான விபத்து, மகப்பேறு ஆகிய ஐந்து காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், அக்காலத்திற்குரிய வருவாய் ஏற்பாடும் இதற்குள் அடங்கும். வேலையற்றோர் நிவாரணம் வேலையற்றோரைப் பராமரிக்கும் காப்பீடு திட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ளது. சீனாவில் நுகர்வுத் தன்மை அதிகரித்து இருந்தாலும் அது வேலை இல்லா இளைஞர்களை நுகர்வு வெறியை நோக்கித் தள்ளிடவோ அல்லது திருட்டு போன்ற குற்றச் செயல்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கவோ செய்யவில்லை. அரசு பின்பற்றுகிற கொள்கையின் வெளிப்பாடாகவே இதைக் கருத வேண்டியுள்ளது.

சீனாவின் அனுபவத்தில் இருந்து கூட்டுபேர உரிமையைப் பலப்படுத்துவதும், அதற்கான முயற்சியைத் தொழிற்சங்கங்கள் மேற்கொள்வதும் உடணடித் தேவை. இதில் உடணடி மாற்றம் காண குறைந்த பட்ச சம்பளம் குறித்த நிர்ணயிப்பில் மாற்றம் வேண்டும், என்பதை ஐ.எல்.ஓ சுட்டிக்காட்டுகிறது.

சி.ஐ.டி.யு தரப்பில் முன்வைக்கப் பட்டவை:


இந்தியாவில் பின்பற்றப் பட்டு வரும் உலகமய தாரளமயக் கொள்கைகளின் விளைவாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாதிப்புகளை இந்திய தொழிலாளி வர்க்கம் சந்தித்து வருகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து, அமைப்பு சாராத் தொழிலாளர் எண்ணிக்கை உயர்வு, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையை பாதிக்கிறது. அதேபோல், தொழிலாளர்களின் ஒன்று கூடும் சுதந்திரத்தையும், கூட்டு பேர உரிமையையும் பாதித்துள்ளது. போராட்டங்கள் மட்டுமே சில தீர்வுகளைப் பெற்றுத் தந்துள்ளது. சமீபத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற 48 மணிநேர வேலை நிறுத்தம் மற்றும் கோரிக்கைகள் முக்கியமானதாகும். குறைந்த பட்ச ஊதியத்தை 10 ஆயிரமாக உயர்த்துதல், தொழிற்சங்க அங்கீகாரம், நிரந்தரத் தொழிலில் பணிபுரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரம் செய்தல், அமைப்பு சாரா தொழிலாளருக்கான சமூக பாதுகாப்பு நிதியத்தை உருவாக்குதல் ஆகிய கோரிக்கைகளுக்கான போராட்டம் பெருமளவு தொழிலாளர்களை ஈர்க்கத் துவங்கியுள்ளது. சி.ஐ.டி.யு தனது அகில இந்திய மாநாடு ஏப்ரலில் நடைபெற்ற போது, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தனியாகவும் கூட்டாகவும் போராடத் தீர்மானித்துள்ளது. அதே நேரத்தில் அரசுகளின் கொள்கைகளை மாற்றிட தீவிரமான கூட்டு முயற்சி தேவை என்பதையும் வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக