வியாழன், 30 ஜூன், 2022

அரசியல், சமூக பொறுப்பற்ற அதிமுக தலைமை… இளைஞர்களே உஷார்…

எஸ். கண்ணன்.


தமிழ்நாட்டின் எதிர் கட்சியான அதிமுக 66 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொன்டுள்ளது. கடந்த 2021 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் 33.4 சதம் வாக்குகளைப் பெற்றது. வாக்குகள் எனக்கணக்கிட்டால், அதன் எண்ணிக்கை 1,83,63,499 ( ஒருகோடியே 83 லட்சத்து 63 ஆயிரத்து 499) ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளின் மக்கள் தொகைக்கு இனையானது. இதில் 95 சதமானோர் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வளவு மக்களின் வாக்குகளை கொண்ட அதிமுக என்ன செய்கிறது. 


ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கிறது. பொதுக் குழு என்ற பெயரில், கேலிக் கூத்தினை நடத்தி, நீதிமன்றப் படிகளில் காத்துக் கிடக்கிறது.  தலைமைக்குள் போட்டி நடப்பது பிரச்சனை அல்ல. ஆனால் போட்டி என்ற பெயரில், நெடும் நாள்களாக, தன்னுடைய கட்சியின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் உள்ள, விவசாயி, தொழிலாளர் நலன் மற்றும் இளைஞர், மாணவர் நலனை புறக்கணித்து வருகிறது?


தமிழக வேலையின்மை அவலமும்… அதிமுக தலைமையும்:


இந்தியாவில் நகர்மயமாதலில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. அதற்கு ஏற்ற வகையில் உயர்கல்வி, தொழில் நுட்ப கல்வி பயின்றோர் எண்ணிக்கையும் அதிகம். அதுவும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு தமிழ்நாட்டில் உள்ள சமூகநீதி, விழிப்புணர்வு போன்றவை காரணம் என்றால் மிகை அல்ல. இந்த வேலையின்மையையும், கல்வித் திறனையும் சமதளத்தில் இணைக்க அதிமுக முயற்சி செய்ததுண்டா? நாம் மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்து கொண்டிருப்பதை விட, இன்று தலைமை யார் என போட்டியிடும், நபர்கள் என்ன செய்தனர். இத்தகைய பிரச்சனைகளை தங்கள் கட்சிக்குள் விவாதித்ததுண்டா? எனக் கேட்க வேண்டிய தேவை உள்ளது.


இந்திய அளவில் 2021-22 ஆய்வு அடிப்படையில் வேலையின்மை 8 சதம் என்றால், தமிழ்நாட்டில் 7.27 ஆகும். அதுவும் குறிப்பாக 20 முதல் 25 வயதுக்குள்ளான இளைஞர்களின் வேலையின்மை அதிகமாக உள்ளது. இந்த விவரம் மிகப்பெரிய அச்சுறுத்தல், என்பதே ஆய்வாளர்கள் பலரும் வெளிப்படுத்தும் கருத்து. ஆனால் இந்த சமூக பிரச்சனையை கையாளுவதில், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் வாய்ப்பு தருகின்றனவா? அப்படி தராத நிலையில் பாதிப்பிற்குள்ளாகும் இளைஞர்கள், தங்களை புறக்கணிக்கும் அமைப்புகளை புறக்கணிப்பதே சரியாக இருக்கும்.


அதிமுகவிற்கும் இந்த வேலையின்மைக்கும் தொடர்புண்டா? எனக் கேட்டால், நிச்சயம் ஒரு பகுதி தொடர்பு உள்ளது. குறிப்பாக அதிமுக 2011-2021 ஏப்ரல் வரை ஆட்சியில் பத்து ஆண்டுகள் இருந்தது. தற்போதைய அதிமுக தலைமையாக உள்ள எடப்பாடி, மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளனர். உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினாலும், உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் வேலைவாய்ப்பு உயரவில்லை. 


அதேபோல் அரசுத்துறையில் ஏற்பட்ட லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஊழியர், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன. சில பணியிடங்கள் குறைவான ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்கள் நியமிக்க பட்டு, சுரண்டலுக்கும், சமூக பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப் படுகின்றனர். மற்றொருபுறம், அரசுப் போக்குவரத்து போன்ற துறைகளின் ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, வழங்கப்பட வேண்டிய, தொழிலாளர்களின் சேமிப்பை வழங்கவில்லை. மாறாக அரசு ஊதாரித்தனமாக செலவிட்ட விவரங்களும், அன்று அமைச்சர் பொறுப்பில் இருந்த பலரும் குவித்த செல்வ வளங்களும் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் கடன் பல லட்சம் கோடி உயர்ந்தது. அதிமுக ஆட்சியின் ஊதரித்தனம் காரணம் என்றால் மிகையல்ல.


மேற்படி காரணங்களால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோற்கடிக்க பட்டதே, திமுக தானே ஆட்சியில் உள்ளது என கேள்வி கேட்டால், அது நல்ல விவாதமே. அண்மையில் திமுக ஆட்சி, மிகக் குறைவான ஊதியத்திற்கு ஆசிரியர் தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் உள்ளிட்ட பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளது. இதை இடதுசாரிகள் விமர்சிக்கின்றனர். போராடவும் வேண்டியுள்ளது. ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுக இதை விமர்சித்ததா? வேறு ஏதாவது வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சனைகளில் அதிமுக அறிக்கையாவது வெளியிட்டதுண்டா? மொத்தத்தில்,தனது எதிரி என சித்தரிக்கும் திமுகவின் செயல்களை விமர்சிக்கவோ, போராடவோ செய்யவில்லை. 


இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஜெ பேரவை இளம் பெண்கள் பாசறை, மாணவர் அணி என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு அக்னி பாத் திட்டத்தை ராணுவத்தில் புகுத்துகிறது. நிச்சயமற்ற வேலைவாய்ப்பை நோக்கி இளைஞர்கள் தள்ள படுகின்றனர். வடமாநிலங்கள் பெரும் போர்களமாக மாறியுள்ளது. ரயில்கள் நிறுத்தப் படும் அளவிற்கு நிலைமை செல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.. இத்தகைய கொடூர பாதிப்புகளுக்கு எதிராக அதிமுக சிறு துரும்பையும் எடுத்து போடவில்லை. அதேபோல் நீட், பல்கலைக் கழக நுழைவு தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அதிமுக பாராமுகமாகவே இருந்தது.


விவசாயி தொழிலாளர்களும் புறக்கணிப்பு.. ஆனால் கைமாறு உள்ளது:


ஓராண்டுகாலம் தலைநகர் டில்லியை முற்றுகை இட்டு விவசாயிகள் போராடிய போது, அதிமுக சிறு அளவில் கூட ஆதரவு இயக்கம் நடத்திடவில்லை. தமிழ் நாட்டில் காவிரி பிரச்சனைக்காக 2019ல் பெரும் போராட்டங்கள் நடந்த போது, தமிழ்நாட்டின் ஆளும் கட்சி ஆனால் எதுவும், செய்யவில்லை. அடுத்த பெரும் மக்கள் பிரிவினர் தொழிலாளர்கள், ஒன்றிய பாஜக அரசு அராஜகமாக நிறைவேற்றியுள்ள தொழிலாளர் சட்ட திருத்தம் குறித்து வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டில் அதற்கான விதிகள் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் மீது கருத்து சொல்லாத அரசியல் கட்சி என்றால் அது அதிமுக. மேலும் அத்தகைய திருத்தங்களை மாநில தொழிலாளர் துறை செயலாளரிடம் சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அளித்து வருகின்றன. ஆனால் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை அதற்கான முயற்சி எதுவும் செய்யவில்லை.


இந்தியா முழுவதும், பாஜகவை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் வீட்டில் சி.பி.ஐ அல்லது வேறுபல ஒன்றிய அரசின் அமைப்புகளை ஏவி ரெய்டு நடத்துவதும், மிரட்டுவதும் நடைபெற்று வருகிறது. உண்மையில் அத்தகைய ரெய்டுக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் பெருமக்கள் உள்ளனர். மாநில திமுக ஆட்சி வருமான வரித்துறை மூலம் சில சோதனைகளை நடத்தியதில் சிலர் அம்பலமாகியுள்ளனர். ஆனால் இங்கு கேள்வி பாஜக இந்த முன்னாள் அமைச்சர்களை ஏன் விட்டு வைத்திருக்கிறது. எப்படியும் பாஜகவின் படுகுழியில் அதிமுக தொண்டர்களை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கையில் தான். அதன் காரணமாகவே, மாநிலத்தில் பாஜக வின் மிக மோசமான விலைவாசி உயர்வு கொள்கைகளை கூட அம்பலப் படுத்தும் பணியில் அதிமுக தலைமை ஈடுபடவில்லை. 


காலம் காலமாக முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசியல் கட்சிகள், தனது உறுப்பினர்களின் நலனுக்காக செயல்படாமல், மிக சிறுபான்மையாக சமூகத்தில் உள்ள முதலாளிகளுக்கு சேவை செய்து வருகின்றன, என்பதற்கு அதிமுக மிகச் சிறந்த உதாரணம். இன்று மட்டுமல்ல கடந்த இரு வாரங்களாக,  தமிழக ஊடகங்களில் அதிமுகவின் உள்கட்சி பூசல் பெரும் விவாதத்தை எழுப்பி நடந்து வருகிறது. ஊடகங்களும் மக்கள் பிரச்சனைகளுக்கு அளிக்காத முக்கியத்துவத்தை அதிமுக தலைமையில் உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் என்ற நபர்களுக்காக வரிந்து கட்டி வாதாடி வருகிறது. இவ்வளவு ஊடக வெளிச்சத்தைக் கொண்டிருக்கும் இந்த தலைமை, மக்கள் பிரச்சனைகளுக்கு பேசாமல், தனது சொந்தநலனுக்கு பயன்படுத்துவதை, அதிமுகவின் உறுப்பினராகவும், ஆதரவாளராகவும் உள்ள தொழிலாளர், விவசாயி, மற்றும் இளைஞர்கள் உணர வேண்டும். 


வாக்களிக்க மட்டுமல்ல கட்சி, தான் வாக்களித்த கட்சி தலைமை, வாக்காளர்களின் நலனை புறக்கணிக்கும் போது, குரல் கொடுப்பதும் அவசியம். கட்சி உறுப்பினர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் உரிமை குரல் எழுப்ப வேண்டும். சுவரொட்டி, சுவர் எழுத்து, கட் அவுட், பேனர் என தனது உழைப்பை செலுத்தி தலைவர்களின் வண்ண புகைப் படங்களை அலங்கரிக்கும் தொண்டர்கள், தன்னை மறக்கும் தலைமையை விமர்சிக்கவும் தயங்க கூடாது. அது தானே கட்சி அரசியலில் கடைப் பிடிக்க வேண்டிய ஜனநாயகம். அதை அதிமுக தொண்டர்கள் தனது தலைமைக்கு இடித்துரைக்கவும், அதை கேட்காத போது, தூக்கி எரியவும் முன்வர வேண்டும். அதுமட்டுமல்ல வேலையின்மை என்ற கொடிய தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக்க, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிக்க முன் வர வேண்டும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக